அத்தியாயம் 8
அலுவலகத்திற்குள் நுழைந்த சித்தார்த்துக்கு ஏனோ பரபரவென இருந்தது. வழக்கமாக வரும் அதே அலுவலகம், ஊழியர்கள். ஆனால், மனத்தின் சந்தோஷம் அவனது முகத்திலும் பிரதிபலித்தது.
மதுமிதா இன்னும் வந்திருக்கவில்லை என்று அறிந்திருந்தவன், அவளது வருகைக்காக ஜன்னலருகில் காத்திருந்தான். நேரம் தான் ஓடியதே தவிர அவள் வரவில்லை. ஓரிடத்தில் நிற்க முடியாமல் இங்கும் அங்குமாக நடந்தவன், இருக்கையில் அமர்ந்து இடமும், வலமுமாக சுழன்று கொண்டிருந்தான்.
அறைக்குள் வந்த ஜீவா, மென்சிரிப்புடன் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றிருக்க, எதையோ எண்ணிச் சிரிப்புடன் நிமிர்ந்தவன், நண்பனைக் கண்டதும் சுழல்வதை நிறுத்திவிட்டு, “குட் மார்னிங்டா!” என்றான் மலர்ச்சியுடன்.
பதிலுக்குக் காலை வணக்கம் சொல்லியபடி, அவனெதிரில் வந்து அமர்ந்த ஜீவா,
“என்னை யாரோ ஆஃபிஸுக்கு வந்தா, வேலையைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க. அந்த ஆளை, ரெண்டு நாளா காணோம்” என்றான் கிண்டலாக.
“போதும்டா! நான் இங்கே தான். இப்போ வேலையைப் பத்திப் பேசுவோமா!” என்றான்.
“அதுக்குத் தானே வந்திருக்கோம்” என்றவன் மடிக்கணினியைத் திறந்தபடி, “நேத்து ப்ராஜெக்ட் பத்தி ஒர்க் அவுட் பண்ணி, உனக்கு ஒரு மெயில் அனுப்பினேனே பார்த்தியா?” என்றான் குறும்புடன்.
“பார்த்தேன்டா! ரொம்ப ஓட்டாதே” என்று சிரித்துக்கொண்டே, “ம்ம், மது வந்தாச்சா?” என்று கேட்டான்.
“இன்னும் வரல. வந்திடுவா” என்ற ஜீவாவிற்குச் சிரிப்பாக வந்தது.
“டேய்! போதும். நான் ஜென்ரலா கேட்டேன்” என்றான் சித்தார்த்.
“சரிப்பா! நான் எதுவும் சொல்லல” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, முடியவில்லை என்பதைப் போலத் தலையை ஆட்டியவன், வேலையில் கவனத்தைத் திருப்பினான்.
அலுவலகத்திற்குள் நுழைந்த கீதா, “குட் மார்னிங் தல!” என்றாள் உற்சாகத்துடன்.
சிவாவும், “குட்மார்னிங்!” என்றான் முறுவலுடன்.
“பஸ் லேட்டு, சரியான கூட்டம்” என்று அவள் சலிப்புடன் சொல்ல, “பஸ் இல்ல; நீ லேட்டு” என்றான் அவன் கிண்டலாக.
“ஹய்யோ! முடியல. ரொம்ப முன்னேறிட்டீங்க பாஸ்!” என்றவள் தங்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல், தனது வேலையில் கவனமாக இருந்த லதாவை திரும்பிப் பார்த்தாள்.
திரும்பிச் சிவாவைப் பார்த்துப் புருவங்களை உயர்த்த, அவன் மௌனமாக தனது வேலையைக் கவனிக்கத் துவங்கினான்.
சிறிது நேரம் செல்ல, “என்ன? மதுவை இன்னைக்குக் காணோம்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஜீவா அவர்களை நோக்கி வந்தான்.
“சிவா! மணி பத்தரை ஆகுது. மது வரலையா?” என்று கேட்டான்.
“எனக்கும் எதுவும் இன்ஃபார்ம் பண்ணல ஜீவா!” என்றான்.
ஜீவா, கீதாவைப் பார்க்க, “நான் கால் பண்ணிப் பார்க்கிறேன்” என்று மொபைலை எடுக்க, மதுமிதா வேகமாக வந்துகொண்டிருந்தாள்.
மேல் மூச்சு வாங்க, “சாரி! கொஞ்சம் லேட் ஆகிடுச்சி” என்றாள் தாழ்மையான குரலில்.
செவ்வரியோடிய விழிகளுடன், களைத்த முகமுமாக நின்றிருந்தவளைப் பார்த்தவன், “ஆர் யூ ஓகே?” என்றான் ஜீவா.
“ம்ம்” என்றாள் முறுவலுடன்.
ஆனால், அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கவனித்தபடியே, “டீ பிரேக் முடிஞ்சதும், நாலு பேரும் சித்தார்த்தோட ரூமுக்கு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
சித்தார்த்தின் பெயரைக் கேட்டதும் மதுமிதாவின் முகத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டதை ஜீவா மட்டுமல்ல, சிவாவும் கவனித்தான். ஜீவா அங்கிருந்து நகர்ந்தபின் அவரவர் தங்களது வேலைகளைக் கவனிக்க சிவா, கீதாவின் இருக்கையைத் தட்டி அழைத்தான்.
‘என்ன?’ என்று செய்கையிலேயே கேட்டவள், இருக்கையை அவனருகில் நகர்த்தினாள்.
“அன்னைக்கு நான் கேட்டப்போ ரெண்டு பேருக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லன்னு சொன்ன. ஆனா, எனக்கு டௌட்டாவே இருக்கு. மதுவும்…” என்று இழுத்தவனை ஆயாசத்துடன் பார்த்தவள், “உங்க நிலைமையே இங்கே திரிசங்கு சொர்க்கமா அந்தரத்துல ஆடிட்டு இருக்கு. இதுல எதுக்கு சார் உங்களுக்கு அடுத்தவங்க கதை?” என்றாள் கிண்டலாக.
அவளை முறைத்தவன், “மது மேல இருக்கற அக்கறைல மட்டும்தான் பேசறேன். அதுக்காக, அடுத்தவங்க பிரைவசியில நிச்சயமா நுழையமாட்டேன்” என்று எரிச்சலுடன் சொன்னவன், தனது இடத்திற்கு நகர்ந்தான்.
வெளியே சாதாரணமாகக் காண்பித்துக் கொண்டாலும், கீதாவின் மனம் தோழிக்காக தவித்தது. இது எதுவும் அறியாமல், கணினியை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மதுமிதா.
உள்ளே சென்ற ஜீவா, கணினியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்த சித்தார்த்தின் எதிரில் அமர்ந்தான்.
நிமிர்ந்து பார்த்தவன், “என்னடா? என் முகத்தையே பார்த்துட்டு இருக்க.” என்று கேட்டுக்கொண்டே கணினி திரையில் பார்வையைப் பதித்தான்.
“மச்சான்! நேத்து மதுகிட்ட ஏதாவது பேசினியா?” என்று கேட்டான்.
கூர்ந்து நோக்கியவன், “ஏன்?” என்றான் கேள்வியாக.
“அவளைப் பார்த்தா, நைட்டெல்லாம் சரியா தூங்கியிருக்க மாட்டா போல…” என்றான்.
இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், “சரி, நான் பார்த்துக்கறேன்” என்றான் நிதானமாக.
“அதைத் தான் சொல்ல வந்தேன். ஆர்வக்கோளாறுல, அநாவசியமா எதுவும் பேசிடாதே. சொல்லணுன்னு தோணுச்சி; சொல்லிட்டேன்” என்றவன், ‘மகனே இனி, உன் சமர்த்து’ என எண்ணிக்கொண்டான்.
“அதான் நான் பார்த்துக்கறேன்னு சொன்னேனே…” என்றவன் யோசனையுடன் பின்னங் கழுத்தைத் தடவிக்கொண்டான்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, சித்தார்த்தின் அறைக்குச் சென்றனர். சித்தார்த் அவர்களுக்கு இருக்கையைக் காண்பிக்க, நால்வரும் அமர்ந்தனர். மதுமிதா மறந்தும் அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.
ஜீவா அவர்களுக்குப் ப்ராஜெக்ட் பற்றி விளக்க, அனைவரும் ஆழ்ந்து கேட்டுக் கொண்டனர். சித்தார்த்தின் காதுகள் அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டாலும், கண்கள் அவளது காதோரம் புரண்ட சுருள் முடியிலும், நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த விழிகளிலும் படிந்தன.
அவனை நேராகப் பார்க்காவிட்டாலும், அவனது பார்வை தன்னை ஆராய்வதை அவளால் உணரமுடிந்தது. அவனைப் பார்க்கத் துடித்த விழிகளைச் சிரமப்பட்டுக் கட்டுப்பாட்டில் வைக்க முயன்றாள்.
ஆனாலும், மனமோ தனது எண்ணத்தைக் கைவிடாமல் மீண்டும் மீண்டும் தனது இலக்கினை நோக்கித் திரும்ப முயன்றது.
“இதுதான் நம்மோட ப்ராஜெக்ட். நாம ரெண்டு பேட்சா பிரிஞ்சி அனிமேஷன் ஒர்க்கை முடிக்கணும். சிவா அண்ட் மது சித்தார்த் டீம்லயும், கீதா அண்ட் லதா என்னோட டீம்லயும் இருக்கப் போறீங்க” என்ற ஜீவா சொன்னதும், மதுமிதாவிற்கு உள்ளுக்குள் தவிப்பாக இருந்தது.
‘இவனுடனா! என்ன சொல்லி மறுப்பது? மறுத்தாலும், ஏன் என்ற கேள்வி வருமே!’ என்ற தவிப்புடன் நிமிர்ந்தவளுக்கு திக்கென்று இருந்தது.
இருக்கையின் கைப்பிடியில் கையை ஊன்றி அதில் முகவாயைத் தாங்கியபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த். அவனது விழிகளின் கூர்மையில் அவளது இதயம் முரசாக கொட்டியது. பொட்டுப் பொட்டாக வியர்த்த நெற்றியை கைக்குட்டையால் துடைத்தாள்.
சித்தார்த், அவளது உணர்வுகளைப் படித்ததைப் போல, தண்ணீர் பாட்டிலை அவளருகில் நகர்த்தினான். அந்த நேரத்திற்கு அவளுக்கும் தேவையாக இருக்க, மளமளவென தொண்டையில் சரித்துக்கொண்டாள்.
ஆழ்ந்த பார்வையுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன் கரத்தை, ஜீவா யாரும் அறியாமல் மெல்ல தட்ட, சுதாரித்தவன் தனது பார்வையை விலக்கிக் கொண்டான்.
“மது! ரிலாக்ஸ் ஆகிட்டீங்களா?” என்றான் மென்குரலில்.
அவளுக்குத் தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
“தட்ஸ் குட்!” என்றவன் மற்றவர்களை நோக்கி, “புதுப் ப்ராஜெக்ட். பெரிய கம்பெனி… நமக்கு நல்ல ஆப்பர்சூனிட்டி. உங்க கோ-ஆபரேஷனோட அவங்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துடுவோம்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்மோட பெஸ்டைக் கொடுப்போம்” என்று சித்தார்த்தும் சொல்ல, அனைவரும் புன்னகையுடன் அதை ஆமோதித்தனர்.
“ஓகே கைஸ்! ஆல் த பெஸ்ட்!” என்ற ஜீவா, அவர்களை அனுப்பி வைத்தான்.
“டேய்! என்னடா நீ?” என மென்குரலில் கேட்ட ஜீவாவிற்கு புன்னகையையே பதிலாகக் கொடுத்தான் சித்தார்த்.
“உனக்கு, ரொமான்ஸ் பண்ண இடமா இல்ல? இப்படி அத்தனைப் பேருக்கும் நடுவில... என்னை வம்புல மாட்டிவைக்காம விடப்போறதில்லை நீ!” என்று அலுத்துக் கொண்டவனது வார்த்தைகள், அவனது செவிகளில் விழவே இல்லை.
வெளியே வந்த கீதா, ‘நீ சொன்னது அனைத்தும் உண்மை’ என்பதைப் போலச் சிவாவைப் பார்த்தாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கணினித் திரையை வெறித்துக் கொண்டிருந்த மதுவின் தோற்றம், அவளது மனத்தைப் பிசைந்தது.