அத்தியாயம் – 2
“காஃபின்னா, அது ராஜீஸ் காஃபிதான்…” காஃபி கப்பை உயர்த்திக் காட்டி, தனது அத்தையைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினாள் மதுமிதா.
“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. நேர்ல பார்த்தா அத்தை, சொத்தைங்க வேண்டியது. மத்த நேரத்துல, எங்க நினைப்பே உனக்கு வர்றதில்ல” நொடித்துக் கொண்டே காஃபி ட்ரேயுடன் ஹாலுக்குச் சென்றார் ராஜி.
“நீங்க சொல்றதைப் பார்த்தா, எனக்கு உங்கமேல பாசமே இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கா மாதிரி தெரியுதே” சொல்லிக்கொண்டே எழுந்து அவருக்குப் பின்னாலேயே நடந்தாள்.
“இருக்குன்னு நம்பச் சொல்றியா?” என்ற ராஜி, ஹாலில் அமர்ந்திருந்த மகனிடம் ட்ரேயை நீட்டியவர், “இப்போகூட, விமலா சொல்லித்தானே இங்கே வந்திருக்க...” என்றார்.
‘ஆஹா! அம்மா போட்டுக் கொடுத்துட்டாங்களா?’ என்று அசட்டுச் சிரிப்புடன் தலையைத் தட்டிக் கொண்டே, அத்தையைச் சமாளிக்கும் வழிதெரியாமல், ‘கொஞ்சம் ஹெல்ப்புக்கு வாயேன் அத்தான்!’ என்பதைப் போலத் தீபக்கைப் பார்த்தாள்.
சிரிப்புடன், ‘நீயே சமாளி’ என்பதைப் போன்ற பாவனையுடன், அன்னை கொடுத்த காஃபியை இரசித்துப் பருகிக் கொண்டிருந்தான் அவளது அருமை தாய்மாமாவின் மகன் தீபக்.
ராஜியின் அருகில் சென்று அமர்ந்தவள், “அத்தை! என்னைப் பாருங்களேன்” என்று அவரது முகவாயைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினாள்.
“நான் வேணும்னே அப்படிச் செய்வேனா? ஆஃபிஸ்ல, வேலை அதிகம். கல்யாணம் வேற நெருங்கிட்டிருக்கு. எப்படியும் ஒரு இருபது நாளாவது லீவ் போடணும்னு நீங்கதானே சொன்னீங்க. அதுக்குள்ள முடிக்க வேண்டிய வேலைகளைக் கொஞ்சம் சீக்கிரமா முடிக்கணுமில்ல” கொஞ்சலாகச் சொன்னாள்.
“அதுக்காக, போன் பேசக்கூட நேரமில்லையா உனக்கு?” என்றவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
பொறுமையிழந்த தீபக், “ஏம்மா! பத்து நாள் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கா. இந்தக் காச்சு காச்சறீங்க. இவ்வளவு பேசறீங்களே, நீங்க போய் அவளைப் பார்த்துட்டு வந்திருக்க வேண்டியது தானே” என்றான்.
“நீ என்னடா! எல்லாத்திலேயும் அவளுக்குச் சப்போர்ட்டா? நானும், என் மருமகளும் பேசிக்குவோம், சண்டை போட்டுக்குவோம் உனக்கென்ன? எங்கேயோ வெளியே போகணும்னு சொன்னியே கிளம்பு” என்று மகனை விரட்டினார் ராஜி.
“அதுசரி, இதுக்குத்தான் உங்களுக்கு நடுவில் நான் வர்றதே இல்லை” எனக் காட்டமாகக் கூறியவன், தன்னைப் பார்த்துச் சிரித்த மதுமிதாவை முறைத்தான்.
“மதும்மா! நைட் டிஃபனுக்கு உனக்கு என்ன டிஷ் வேணும்?” – ராஜி.
“எதைச் செய்தாலும் தின்னப் போறா… அப்புறம் என்ன கேள்வி?” கிண்டலாகச் சொன்னான் தீபக்.
“நீ இன்னுமா கிளம்பல?” அதட்டலாகச் சொன்னார்.
“கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன். உங்களுக்கு யாரையாவது மிரட்டிகிட்டே இருக்கற, மிரட்டல்ஃபோபியா போலம்மா! எதுக்கும், ஒரு நல்ல டாக்டரா பார்க்கணும்” தீவிர பாவத்துடன் சொல்ல, மது வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.
“டேய்! உன்னை…” என்று அவர் எழுவதைப் போலப் பாவனை செய்ய, அவன் ஹெல்மெட்டுடன் வெளியே ஓடினான்.
சிரித்துக் கொண்டே, “வித்யா எங்கே அத்தை? ஆளையே காணோம்” எனக் கேட்டாள்.
“லைப்ரரி வரைக்கும் போய்ட்டு வரேன்னு போனா. வர்ற நேரம்தான்.”
“ம்ம், சொல்ல மறந்துட்டேன். நேத்து நைட் அண்ணா போன் பண்ணாங்க. வித்யாவை யூ.எஸ்க்குக் கூட்டிக்க, ஆஃபீஸ் மூலமா ஏதோ பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்கறதா சொன்னாங்க.”
பெருமூச்சு விட்ட ராஜி, “ஹும்! கூடப் பிறந்தவ இங்க இருக்குற. கட்டிக்கிட்டவளும் இங்கே இருக்கா. எல்லாத்தையும் விட்டுட்டு இந்தப் பிள்ளை அங்கே போய் வேலை பார்க்கணுமா? கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா இதே கதையைத் தான் ராஜேஷும் சொல்லிட்டிருக்கான். இப்படித் தனித்தனியா ஆளுக்கொரு இடத்துல இருக்கறதுக்கா, கல்யாணம் செய்து வச்சோம்!
ஆனா ஒண்ணு மதும்மா! நீ, உங்க அண்ணனுக்கு ஒரு நல்ல பதிலைச் சொல்ற வரைக்கும், அவன் இங்கே வரப்போறதில்லை. கல்யாணத்துக்கு வரேன்னு சொல்றதுகூட உனக்காகத்தானிருக்கும்” என்றவர் அங்கிருந்து எழுந்து செல்ல, அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
‘ஒரு கேள்விக்கு, ஒரு பதில் தானே இருக்கும். ஏற்கெனவே முடிவாகத் தெரிந்த பதிலுக்கு, இன்னும் என்ன பதிலைச் சொல்வது?’ என்ற ஆயாசத்துடன் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
திடீரென, “ஹாய் நாத்தனாரே! எப்போ வந்த? வர்றேன்னு சொல்லவேயில்ல…” என்று கழுத்தைக் கட்டிக்கொண்ட வித்யாவின் தொடுகையில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“என்னடி! இப்படி மலங்க மலங்க முழிக்கிற?” என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தாள் வித்யா.
“ம், ஒண்ணுமில்ல… லைப்ரரியிலிருந்து வந்துட்டியா?” என்றாள் சமாளிப்பாக.
“என்னடி ஆச்சு உனக்கு? வீட்டுக்கு வந்ததால தானே, உன்கிட்டப் பேசிட்டிருக்கேன்” என்று வித்யா சிரிக்க, அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
“இன்னைக்கு நீ ஆளே சரியில்ல. ஆமாம், உங்க புது எம்.டி வந்துட்டாரு போல…”
சட்டென நிமிர்ந்தவள், “ம், வந்துட்டாரு… உனக்கு யாரு சொன்னா?” எனக் கேட்டாள்.
“கீதாதான். அவளும் லைப்ரரிக்கு வந்திருந்தா. அவரைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டு, எங்கேயோ பார்த்தா மாதிரியே இருக்குன்னு ஒரு பத்து நிமிஷம் மொக்கை போட்டுட்டா. போதும் தாயேன்னு அவளைக் கழட்டி விட்டுட்டு, ஓடி வந்துட்டேன்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க, சிறு புன்னகையைக்கூட வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்தவளை உற்று நோக்கினாள் வித்யா.
“மது! என்னாச்சு?” அவளது தோள்களைப் பற்றி உலுக்கினாள்.
“ஒண்ணுமில்ல. வந்ததுல இருந்து இங்கேயே உட்கார்ந்திருக்கேன். கொஞ்சம் ரிப்ரெஷ் பண்ணிகிட்டு வந்திடுறேன்” என்றவள், எழுந்து தன்னுடைய அறைக்கு விரைந்தாள்.
அவளையே ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வித்யா. இதயம் கனத்தது! கண்களில் கண்ணீர்! அந்தக் கண்ணீரால், கடந்த காலத்தை உரு தெரியாமல் அழிக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!
தனது அறையை ஒட்டிய மொட்டை மாடியில் வந்து நின்றாள் மது. அந்த வீட்டிலேயே அவளுக்கு மிகவும் பிடித்த இடம். அவளது அத்தனைச் சந்தோஷத்தையும், விருப்பத்தையும், துக்கத்தையும் பகிர்ந்து கொண்ட இடம்.
காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள். கிறீச்சென ஒலியெழுப்பிய ஊஞ்சல், தன்னை நலம் விசாரிப்பதைப் போலத் தெரிய கம்பியை இறுக பிடித்தபடி, தலையை அதன்மீது சாய்த்துக் கொண்டாள்.
வானில் மின்னிய தாரகையும், வெட்டியெறிந்த நகத்தைப் போன்ற மூன்றாம் பிறையும், அவளது வரவை எதிர்பார்த்ததைப் போல மேகத்தினிடையிலிருந்து எட்டிப் பார்த்தன. குளிர்ந்த காற்று மேனியைத் தீண்ட, மனத்தின் இறுக்கத்திற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது அவளுக்கு.
‘இன்று ஏன் என் மனம், இப்படிப் பரிதவிக்கிறது?’ கேள்விக்கான பதில் தெரிந்த போதும், அதை ஏற்றுக்கொள்ள ஏனோ, மனம் இடம் தரவில்லை.
ஏதேதோ நினைவுகளால் எண்ணங்களின் போக்கு, கட்டுக்கடங்காமல் பயணித்ததில் தவிப்பும், மனக்குழப்பமும் ஒன்றையொன்று விஞ்சி நின்றன.
கண்களை மூடி ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்தாள். மனத்தின் அழுத்தமும், உடலின் சோர்வும் ஒன்று சேர, தன்னை மீறிக் கண்களை மூடினாள்.
திடீரென இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்க, (காற்றே இல்லாத) பிரபஞ்ச வெளியில் மூச்சுக் காற்றுக்குத் திணறுவதைப் போலத் தவித்தாள்.
அந்தரத்திலிருந்து நிலை தடுமாறி விழுந்ததவளை, கடல் அலை தனக்குள் சுருட்டி இழுக்க… உதவிக்காக கைகளைத் துழாவினாள்.
மூச்சுமுட்டி அவள் மூழ்கிய நேரம், வலிய கரம் ஒன்று அவளது கரத்தைப் பிடித்து நீருக்கு மேலே இழுத்துக் கொண்டு வர, அந்தக் கரத்திற்குச் சொந்தக்காரனைப் பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள்.
‘சித்தார்த்!’
பட்டென கண்களைத் திறந்தவளது விழிகள் தன்னிச்சையாகக் கண்ணீரைப் பொழிந்தன.
******************
இரவு உணவை முடித்துக் கொண்டு, சற்றுநேரம் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த சித்தார்த், தனது அறைக்கு வந்தான். குளித்துவிட்டு வார்ட்ரோபின் மேல் தட்டிலிருந்த குர்த்தாவை எடுத்த வேகத்தில், அதன் அடியிலிருந்த டைரி தரையில் விழ அதிலிருந்த போட்டோக்கள் சில தரையில் சிதறின.
மெதுவாகக் குனிந்து, அவற்றை எடுத்தான். புகைப்படத்திலிருந்த மதுமிதா அவனைப் பார்த்து அழகாகச் சிரித்துக்கொண்டிருக்க, அவனது இதயம் இரும்புக் குண்டை வைத்தது போலக் கனத்தது.
ஒர் இறுக்கத்துடன் மீண்டும், டைரிக்குள்ளேயே வைத்தான். மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அவளை முதன்முதலில் பார்த்த நாள் நினைவில் வந்து அவனை இம்சித்தது.
பெருமூச்சுடன் டைரியை வார்ட்ரோபின் கீழ்த்தட்டில் போட்டான். உடையை மாற்றிக்கொண்டு படுத்தவனுக்கு உறக்கமே வரவில்லை. எழுந்து பால்கனியில் வந்து நின்றான். கடற்காற்று ஆவேசத்துடன் அவனை அணைத்துக் கொண்டது.
சற்றுநேரத்தில் உறக்கம் வருவதைப் போலிருக்க, கதவை மூடிவிட்டுப் படுத்தான். உறக்கம் அவனைத் தழுவிய அதேநேரத்தில் ஆழ்மனதிலிருந்தவள், அவனது கண்களுக்குள் வந்து நின்றாள். விழிகளில் பொங்கிய நேசத்துடன், அவனை நோக்கிக் கரத்தை நீட்டினாள்.
அவனும், அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். அவளை நெருங்கச் சில அடிகளே இருந்த நிலையில், திடீரென புயல் காற்று வீச இருவரும் வெவ்வேறு திசையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
கண்களை விழித்துப் பார்த்த போது, தான் கடற்கரையில் இருப்பது தெரிய, மெல்ல எழுந்தான். மது, கடலை வெறித்துப் பார்த்தபடி அழுது கொண்டிருப்பதைக் கண்டதும், வேகமாக அவளை நெருங்கியவன் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அவனது அணைப்பினால் உண்டான ஆறுதலில், அவளது அழுகை மெல்லக் குறைந்து, அவனைப் பார்த்துப் புன்னகை சிந்தினாள். வெட்கத்தில் சிவந்த அவளது கன்னத்தில், சித்தார்த் முத்திரையைப் பதிக்க, நாணத்துடன் விலகி ஓடினாள்.
உடல் அதிர தூக்கத்திலிருந்து விழித்தவனுக்கு, ஏசி குளிரையும் மீறி வியர்த்திருந்தது. மெல்லத் தன்னிலை அடைந்தவன், தனது மனம் போகும் போக்கை நினைத்து, அலைகழித்த மனத்துடன் தூங்காமலேயே அன்றைய இரவைக் கழித்தான்.
Comments :
கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் பதியுங்கள்..
sudharavinovels.com