அத்தியாயம் - 11
“சஹி! நாம கிளம்பிட்டோம்னு அண்ணிகிட்ட சொல்லிட்டியா?” அறைக்குள் நுழைந்த தங்கையிடம் கேட்டாள் வர்ஷா.
“அண்ணி ஆப்பரேஷன் தியேட்டர்ல இருக்காங்களாம். அவங்க ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். சொல்லிடுவாங்க” என்றாள் சஹானா.
“அண்ணியா? யாரை அண்ணிங்கற?” பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த சுகுணா சந்தேகத்துடன் கேட்டார்.
“ஸ், அம்மா இருக்கறது மறந்தே போச்சு” மெல்ல முணுமுணுத்த வர்ஷா, “ம், நம்ம திவ்யா அண்ணியைச் சொன்னேம்மா!” என்றாள் மெதுவாக.
“ரெண்டு பேரும் முடிவே பண்ணியாச்சா? இன்னும், உன் அண்ணனுக்கு விஷயமே தெரியாது. அவன் சம்மதிக்கணும். அந்தப் பொண்ணு சம்மதிக்கணும். அப்புறம்தான் மத்ததெல்லாம். அதுவரைக்கும் ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க” என்றார் அதட்டலுடன்.
“எங்க எல்லோருக்கும் அண்ணியைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன? அண்ணனுக்கும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். தினம் அண்ணியைத் தரிசிக்கும் பாக்கியமாவது கிடைச்சிருக்கும்” என்ற மூத்தவளை முறைத்தார் சுகுணா.
“வரவர உனக்கு வாய் அதிகமாகிடுச்சி. இன்னும் சஹி வீட்டுக்காரருக்கு விஷயத்தைச் சொல்லவேயில்ல. அவரும் சரின்னு சொல்லிக் கல்யாணத்தைப் பேசி முடிக்கிற வரைக்கும், எதுவும் சாஸ்வதம் கிடையாது. எல்லாம் கூடி வரட்டும், அப்புறம் முறையெல்லாம் வச்சிக் கூப்பிடலாம்” என்றார் கறாராக.
“அத்தையும், மாமாவும் ஓகே சொல்லிட்டங்க. அவரும் அதையே தான் சொல்லப் போறார். அதனால பிரச்சனையில்லம்மா. நாங்க அண்ணின்னே கூப்பிட்டுக்கறோம்” என்றாள் இளையவள்.
“எப்படியோ செய்ங்க. திவ்யா, எதிர்ல மட்டும் அப்படிக் கூப்பிட்டு வைக்காதீங்க.”
“சேச்சே! அப்படியெல்லாம் செய்யமாட்டோம்மா” சகோதரிகள் இருவரும் ஒருசேர சொல்லிவிட்டுச் சிரித்தனர்.
“என்னமோ போ. எல்லாத்தையும் எடுத்தாச்சு இல்ல” என்றவர், அறையை மீண்டும் ஒருமுறை சுற்றிப் பார்த்த பின்பே திருப்தியானார்.
“வர்ஷாம்மா! மெதுவா நடந்து வா” பெரியவளிடம் அக்கறையுடன் சொன்னவர், “சஹி! ஸ்ரீக்குப் போன் பண்ணிட்ட இல்ல” என்று கேட்டார்.
“பண்ணிட்டேம்மா. நம்மள கிளம்பச் சொல்லிட்டாங்க. ஆஃபிஸ் முடிஞ்சதும் ஹாஸ்பிட்டல் வந்து டீனைப் பார்க்கறேன்னு சொல்லிட்டாங்க. அத்தான் கேப் எடுத்துட்டு வந்திடுறாங்களாம். நம்மள வெளியே வந்துட சொன்னாங்க” பதில் சொல்லிக்கொண்டே வெளியில் வந்தாள் சஹானா.
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த வர்ஷா, “ஹப்பா! ஒரு வாரம் இந்த ஹாஸ்பிட்டல்ல அடைஞ்சி இருந்தேன். இன்னைக்குத் தான் வெளி உலகத்தைத் திரும்பப் பார்க்கறேன்” என்று பெருமூச்சு விட்டாள்.
“நமக்கே இப்படியிருக்கு. தினம் ஹாஸ்பிட்டல் வர்ற அண்ணிக்கு எப்படியிருக்கும்?” என்ற தங்கையுடன் சேர்ந்து கதையளந்தாள் பெரியவள்.
“ஆரம்பிச்சாச்சா! முதல்ல கிளம்புங்க. மீதியை வீட்ல போய்ப் பார்த்துக்கலாம்” என்ற சுகுணாவிற்கு, மகள்களின் ஆர்வத்தை எண்ணிச் சிரிப்பு வந்தது.
அவர்கள் பிரபாகருக்காக காத்திருந்த நேரத்தில், திவ்யா அவர்களை நோக்கி ஓடிவந்தாள்.
“அம்மா! அண்ணிம்மா” என்றாள் இளையவள்.
“சஹி” என்று முறைத்தார் சுகுணா.
அதற்குள் திவ்யா அவர்களை நெருங்கி வந்திருந்தாள்.
“கிளம்பியாச்சா. திடீர்னு அவசர கேஸ்…” என்றவளுக்கு மேல் மூச்சு வாங்கியது.
“புரியுதும்மா! அதுக்காக நீ இப்படி ஓடிவரணுமா!” என்றார் சுகுணா.
“நீங்க வீட்டுக்குக் கிளம்பிட்டா அப்புறம், என்னால எப்படிப் பார்க்க முடியும்?”
“ஏன்? வீட்டுக்கு வரலாமே” என்றாள் வர்ஷா.
“வரலாம்… கண்டிப்பா வரேன்…” எனத் திணறியவளை, தமக்கைகள் இருவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்த்தனர்.
“உடம்பைப் பார்த்துக்குங்க வர்ஷா. டேப்லெட்ஸ் கரெக்டா எடுத்துக்கோங்க. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க” என்றாள்.
“அதெல்லாம் எங்க அத்தான் பார்த்துக்குவாங்க. அக்காவுக்கு இனி, பெட் ரெஸ்ட்தான்” எனச் சிரித்தாள் சஹானா.
அதற்குள் பிரபாகர் டாக்ஸியுடன் வந்துவிட, அனைவரும் விடைபெற்றுக் கிளம்பினர்.
********
“இன்னுமா நீங்க சமாதானம் ஆகல திவ்யா?” எனக் கேட்டார் டீன்.
“மூணு வயசுக் குழந்தை! இந்த வயசுல ஹார்ட் பிராப்ளம்… ஆப்பரேஷன்… அது செட் ஆகாம ஃபிட்ஸ்ன்னு… என்ன கொடுமை டாக்டர்? இந்தக் கடவுளுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்ல! அயோக்கியத்தனம் பண்றவங்கள்லாம் நல்லாதானே இருக்காங்க. இந்தப் பிஞ்சிக்கு ஏன் சார் இப்படி ஒரு கொடூரம்?” என்ற திவ்யாவை ஆறுதலுடன் பார்த்தார்.
“திவ்யா! நீங்க ஒரு டாக்டர்! இன்னும் எவ்வளவோ கேஸஸ் பார்க்க வேண்டியிருக்கு. நம்ம மனசையும் கல்லாக்கிக்கிட்டுத் தான் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கு. இங்கே எமோஷன்ஸுக்கு இடமே இல்லை. அதனால தான் நம்மள கடவுளுக்குச் சமமா நினைக்கறாங்க.
இப்போதான் அந்தக் குழந்தைக்கு பல்ஸ் கொஞ்சம் கொஞ்சமா நார்மலாகிட்டு இருக்கே. ஒருகட்டத்துக்கு மேல நாம என்ன நினைச்சாலும் முடியாது. எல்லாத்தையும் மேலே இருக்கறவன் சரியா நடத்தணும். அவன் மனசு வைக்கணும். போங்க போய் வேலையைப் பாருங்க” என்றார்.
“ஓகே சார்!” என்றவள், கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.
மாலையில் அலுவலகம் முடிந்து மருத்துவமனைக்கு வந்த ஸ்ரீராம், வழக்கமான வேக நடையுடன் டீனின் அறைக்கு முன்பாக வந்து நின்றான்.
கதவைத் தட்ட முயன்றவன், உள்ளே அவர் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டதும், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டதும் எழுந்தவன், கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியில் வந்த திவ்யாவை, வியப்புடன் பார்த்தான்.
கண்களைத் துடைத்துக் கொண்டு பாக்கெட்டிலிருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு நிமிர்ந்தவள், அங்கே நின்றிருந்த ஸ்ரீராமைப் பார்த்தாள்.
இருவருக்குமே அடுத்த அடி எடுத்து வைக்கும் எண்ணமே இல்லை என்பது போல, ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்தனர். திகைத்தாலும் இருவருக்குள்ளும் வெவ்வேறு எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.
‘இன்னைக்கெல்லாம் தேடினேன். அப்போதெல்லாம் வராமல், இப்படி அழுது கொண்டிருக்கும் நேரத்திற்கு வரணுமா? கடவுளே! இப்படியே போய் எப்படிச் சாரி கேட்பது?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டாள்.
‘ஏதாவது பிரச்சனையா? வேலையில் ஏதேனும் தவறு செய்து மாட்டிக் கொண்டாளா?’ என்றவனது மனமே, ‘சேச்சே இருக்காது. இவளைப் பார்த்தால் ஸ்ட்ரெய்ட் பார்வார்ட் போல் இருக்கிறது. ம்ம், இவளோட வாயால தான் மாட்டியிருப்பா. அப்படி என்னவாக இருக்கும்?’ என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான்.
“ஹலோ சார்! எப்படியிருக்கீங்க?” என்ற கல்பனாவின் குரலைக் கேட்ட பின்பே, இருவரும் சுயநினைவிற்கு வந்தனர்.
“நல்லாயிருக்கேன் மேடம்! டீனைப் பார்க்க வந்தேன். வரேன்” என்றவன், கல்பனா மேற்கொண்டு பேசும் முன்பாக அங்கிருந்து நகர்ந்தான்.
எதிரெதிராக வந்த இருவரது பார்வையும், ஒருவரையொருவர் கடக்கும் வரை உரசிக் கொண்டே வந்தது.
அவளது விழிகளில் தெரிந்த தயக்கத்தை அவனும், அவனது கண்களில் தென்பட்ட குழப்பத்தை அவளும், புரிந்து கொள்ளத்தான் செய்தனர். ஆனால், அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளத்தான் அவர்களுக்குச் சமயம் வாய்க்கவில்லை.
டீனின் அறைக்கதவைத் தட்டுவதற்கு முன்பாகத் திரும்பி, அவளைப் பார்த்தான். கல்பனாவுடன் பேசிக்கொண்டே நடந்தவளும், தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள்.
அந்தப் பார்வை… அவனது இதயத்தை ஊடுறுவ, அந்தநொடி அவளது அழுகை, தன்னைப் பாதித்ததற்கான காரணத்தை அறிந்து கொண்ட ஸ்ரீராமிற்கு, திடுக்கிடலுடன் கூடிய ஆச்சரியம்தான் எழுந்தது.
‘இது எப்படிச் சாத்தியம்?’ காரணம் மட்டும் அவனுக்குப் புரியவேயில்லை.
“ஹலோ ஸ்ரீராம்! வாங்க… நியாயமா ஹாஸ்பிட்டலுக்கு வாங்கன்னு கூப்பிடக்கூடாது” எனச் சிரித்த டீனிற்கு எப்படியும் அறுபத்தைந்து வயதிருக்கும்.
“ஹா ஹா ஹா… இப்போ இருக்குற ஸ்டேஜ்ல வருஷத்துக்கு ஒரு முறையாவது மாஸ்டர் செக்அப் பண்ணிக்கோங்கன்னு எல்லோருக்கும் அட்வைஸ் பண்ண வேண்டியிருக்கு சார்!” என்று சிரித்தான் ஸ்ரீ.
“உங்க ஆஃபிஸ் ஸ்டாஃப்ஸுக்கு ஆன்வல் செக் அப் கேம்புக்கு, நம்ம ஹாஸ்பிட்டலை சஜஸ்ட் பண்ணதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்!” என்றார்.
“நீங்க தெரிஞ்சவர்ங்கறதுக்காக செய்யல சார்! உங்க தொழில்ல நீங்க நியாயமா இருக்கீங்க. உங்க ஹாஸ்பிட்டலையும் அப்படித்தான் நடத்திட்டு இருக்கீங்க. இதைக் கூடச் செய்யலன்னா எப்படி? நானும் நல்லாருக்கணும், அடுத்தவங்களும் நல்லாயிருக்கணும்னு எத்தனைப் பேர் நினைப்பாங்க?” என்றான்.
“மனுஷன்னா, மனுஷத்தன்மை வேணுமில்லையா ஸ்ரீ! நம்ம காலத்துக்குப் பிறகு, நல்லவிதமா பேசறாங்களோ இல்லையோ அட்லீஸ்ட், நினைச்சாவது பார்க்க வைக்கலாமில்ல.”
“எக்சாட்லி சார்! ஒகே சார்… நான் கிளம்பறேன். தேங்க்ஸ்” என்று விடைபெற்றான்.
“என்னடி! ஸ்ரீ சார்கிட்ட பேசனியா?” மெல்லத் தோழியின் காதைக் கடித்தாள் கல்பனா.
“இல்லடி… இப்படி அழுத முகத்தோட அவர்கிட்ட எப்படி மன்னிப்புக் கேட்கறது” என்றவளை முறைத்தாள் கல்பனா.
“முறைக்காதேடீ… என்னோட ஃபீலிங்ஸைப் புரிஞ்சிக்கவே மாட்டேன்ற” என்றாள்.
“கொன்னுடுவேன் உன்னை. ஃபுல் மேக் அப் போட்டுட்டுப் போய்த் தான் மன்னிப்பு கேட்பியாக்கும். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…” என்றவள் கடுப்புடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்.
“இப்போ என்னடி பண்ணட்டும்?” அப்பாவியாகக் கேட்டாள் திவ்யா.
கோபத்துடன், “நல்ல சான்ஸ் அதைக் கோட்டைவிட்டுட்டு, இப்போ கேளு… என்ன பண்ண? நொன்ன பண்ணன்ணு” என்றாள்.
பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு, அமர்ந்திருந்த தோழியின் முகத்தைப் பார்க்க கல்பனாவிற்கே பரிதாபமாக இருந்தது.
“சரிவிடு. வேற சான்ஸ் வரும்…”
“வருமா…?” எனக் கேட்டவளைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாள்.
“அதுவா வருமா… நீதான் உருவாக்கிக்கணும்” என்றவள், இதற்குமேல் முடியாது என்பதைப் போல எழுந்து வெளியே சென்றாள்.
**********
இரவெல்லாம் ஓயாமல் பெய்த மழையால் சாலையெங்கும் குட்டைகளாக மாறிப் போயிருந்தது. ஆங்காங்கே சேறும் சகதியுமாக, காலை கீழே வைக்கவே எரிச்சலாக இருந்தது திவ்யாவிற்கு. போதாக்குறைக்கு அரசியல் பேரணி ஒன்றால், வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பி விடப்பட, போக்குவரத்து நெரிசல் வேறு அவளை மேலும் கடுப்பாக்கிக் கொண்டிருந்தது.
சூப்பர் மார்க்கெட்டிலிருந்து இருபது நிமிடத்தில் செல்ல வேண்டிய வீட்டிற்கு, ஒரு மணி நேரமாகியும் பாதி வழியைக்கூட கடந்த பாடில்லை. இருட்டிக் கொண்டுவர மழை வருவதற்குள் வீட்டிற்குச் சென்று விடும் அவசரம் அவளுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அத்தனைப் பேருக்குமே இருந்தது.
கிடைத்த இடைவெளியில் புகுந்து மேலும் போக்குவரத்து நெரிசலை அதிகமாக்கிக் கொண்டிருந்தனரே தவிர, யாராலும் பத்தடி தூரம்கூட நகரமுடியவில்லை. ஆங்காங்கே கிடைத்த சிறு தெருக்களில் வாகனங்களின் ஆக்ரமிப்பு நடந்து கொண்டிருந்தன.
நடைபாதைகள், இருசக்கர வாகனங்களின் அவசரத் தேவைக்குப் பாதையாக மாறிக் கொண்டிருந்தன.
கிடைத்த வழியில் முன்னேறி ஒரு சிறு தெருவிற்குள் புகுந்தாள் திவ்யா. நெரிசலிலிருந்து தப்பித்து வந்தவளுக்குத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக்கூட நேரமில்லாமல், பின்னாலிருந்த வாகனங்களின் ஹாரன் ஒலி காதுகளைக் கிழித்தன.
அந்தத் தெருவைக் கடந்து வந்தவளுக்கு, அங்கிருந்து எந்தப் பக்கமாக வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்று தெரியவில்லை. தென்காசிக்கு வந்து இரண்டு மாதங்களாகிய போதும், மருத்துவமனை, வீடு, சூப்பர் மார்க்கெட் என்று சில இடங்கள் மட்டுமே பரிச்சயமாகியிருக்க, வழி தெரியாமல் தடுமாறினாள்.
சுற்றும் முற்றும் பார்த்தவள், குனிந்து பைக்கில் என்னவோ செய்து கொண்டிருந்தவன் அருகில் சென்று, “எக்ஸ்கியூஸ்மீ சார்!” என அவள் அழைத்ததுமே, நிமிர்ந்து பார்த்தவனைக் கண்டதும் அவளுக்குப் பகீரென்றது.
‘அச்சச்சோ இவரா!’ என்று எண்ணியவளுக்குத் தொண்டை வறண்டது.
பெட்ரோல் டாங்கில் தண்ணீர் இறங்கிவிட்டதால் கிளம்பாத பைக்கைச் சரி செய்து கொண்டிருந்த ஸ்ரீராம், திவ்யாவின் குரலைக் கேட்டதும் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். தன்னைக் கண்டதும் திணறிக் கொண்டு நின்றிருப்பவளைக் காண, அவனுக்குச் சிரிப்பாக வந்தது.
‘நம்மை மரியாதையாகச் சார்ன்னு கூப்பிட்டது, மேடத்துக்குச் ஷாக்கா இருக்கும். இந்த நேரத்தில் இவளைக் கடுப்படிப்பது போல எதுவும் பேச வேண்டாம்’ என்று நினைத்துக் கொண்டவன், “சொல்லுங்க மேடம்!” என்றான்.
பழையபடி இருந்திருந்தால், அவனைக் கண்டதுமே வாயில் வந்ததைப் பேசியிருப்பாள். இப்போதுதான் அவளது உள்ளம் கவர் கள்வனாகி விட்டானே!
“காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எந்தப் பக்கமா போகணும்?” என்றாள் மென்குரலில்.
‘அடடா! மேடம் இன்னைக்கு இவ்ளோ பவ்யமா பேசுவாங்கன்னு முன்னமே தெரிஞ்சிதான், வருண பகவான் நான் - ஸ்டாப்பா நைட்டெல்லாம் வந்து விசிட் அடிச்சிட்டுப் போயிருக்காரு போல’ என எண்ணிக் கொண்டான்.
என் பின்னாலேயே வா. நானும் அவ்வழியாகத் தான் போகிறேன் என்று அவனும் சொல்லியிருப்பான். அப்படிக் கூறினால், புதிதாக முளைத்திருக்கும் மரியாதை எந்த நேரத்திலும் காணாமல் போகும் என்ற அச்சத்தில், அவளுக்கு வழி சொல்லத் துவங்கினான்.
“ஓகே. தேங்க்ஸ்…” என்று அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களைக் கடந்து சென்ற கார் சாலையிலிருந்த சேற்றை, அவள் மீது வாரி அடித்துவிட்டுச் சென்றது.
“சே!” என்றபடி தன்னை மொத்தமாக நனைத்து விட்டுச் சென்ற கார்க்காரனை மனத்திற்குள் திட்டினாள்.
“மை காட்!” என்றவன், “இந்தாங்க முகத்தைக் கழுவிக்கோங்க” என்று பைக்கிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.
முகத்தையும், தன் மீது படிந்திருந்த சேற்றையும் ஓரளவிற்குக் கழுவிக் கொண்டவள், அவன் நீட்டிய சிறிய டவல் ஒன்றை வாங்கித் துடைத்துக் கொண்டாள்.
“வேற ஏதாவது?” அவன் தயக்கத்துடன் வினவ, “நோ தேங்க்ஸ்” என்றாள்.
அதற்கு மேல் என்ன கேட்பதெனப் புரியாமல், “ஓகே, பத்திரமா வீட்டுக்குப் போங்க” என்று சொல்லிவிட்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு செல்ல, அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
காதல் பூக்கும்...