அத்தியாயம் -1௦
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்னு இதைத்தான் சொல்றங்களா? காந்திமதி செம்ம கடுப்பில் இருந்தார். மகனை வெறுப்பேற்ற இவர் ஒரு திட்டம் போட அவனோ அந்த திட்டத்தை தரை மட்டமாக்கிவிட்டான்.
கார்த்திக் மாலை வீட்டிற்கு வரும்போது அவனோடு அவனின் பிரெண்ட் அஜய்யும் கூட வந்தான். பேசியே அறுப்பதில் கார்த்திக் துண்டு பிளேட், மீனா ஹாக்ஷா பிளேட் என்றால்... இந்த அஜய்யோ ரம்பம்! சரியான கழுத்தறுப்பு.
“ம்மா! நம்ம சரசு மாமியோட ஒன்னு விட்ட அக்கா பேத்தியும், அவங்க பொண்ணும் அவங்க பூர்வீக சொத்தை விக்க தனியா கஷ்டப்பட கூடாதுன்னு நான் ஒரு நல்ல ஏற்பாட்டோட வந்திருக்கேன் ம்மா” வந்ததும் வராததுமாக நீட்டி முழக்கியவனை பார்த்த மாறன், ‘ஆரம்பிச்சிட்டான்! இதை தான் மகனே காலையில நான் நினச்சேன்’ கதைக் கேட்க வசதியாக அங்கிருந்த ஷோபாவில் சென்றமர்ந்தார்.
“ஹாய் ப்பா! எப்படி இருக்கீங்க?” கேட்ட அஜய்க்கு உரிய பதிலை தந்தவர் மகனின் ஆட்டத்தை பார்க்க ஆயத்தமானார்.
இப்படி கார்த்திக் அடிக்கடி அவனின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது எப்போதும் நடப்பதுதான் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத காந்தி, அவன் வரும்போதே ஏதோ சொன்னானே அது என்னவாக இருக்கும் என நினைத்துக்கொண்டே அஜய்க்கு ஸ்நாக்ஸ் காபி கொடுத்து உபசரித்தார். சமயலறைக்கு செல்ல திரும்பியவரை,
“ம்மா! எங்க உங்க தூரத்து சொந்தம்?” எனக் கேட்டு அவரின் கையை பிடித்திழுத்து தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.
அவனின் கேள்விக்கு ஒரு முறைப்பை பதிலாய் தந்தவர் அவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பதாகவும் இப்போது வரும் நேரம் தான் என்றும் கூறினார்.
“ம்மா! உங்க சொந்தக்காரங்களுக்கு இல்லல்ல உங்களுக்கு உதவி செய்ய அஜய் நம்ம வீட்ல தங்க வந்திருக்கான் ம்மா!” அசால்ட்டாய் பௌன்சர் வீசிய மகனை ஆவேன பார்த்துக்கொண்டிருந்தார் மாறன்.
என்ன சொல்ல வருகிறான் என சரியாக புரியாத போதும் அவனின் அன்னை என்பதை நிருபிக்கும் வகையில், ”டேய்... நான் உன்கிட்டே எந்த வீட்டு வேலையும் வாங்க மாட்டேன். இதுல இவன் கிட்ட எப்படிடா வாங்கறது?” என்றார் அப்பாவியாக.
‘ம்க்கும்! குசும்பு தான் இந்த காந்திமதிக்கு. காந்திமதின்னு பெயரு வச்சதும் இந்தம்மாக்கு கலைமாமணி காந்திமதின்னு நினைப்பு. நம்மகிட்டே ஆக்ட்டு தரதை பாரேன்!’ கடுப்பாய் எண்ணியவன்,
“எல்லாம் உங்க மனநிம்மதிக்காக தான் இந்த ஏற்பாடு. உங்க சந்தோசம் என் சந்தோசம். உங்க சோகம் என் துக்கம். நீங்க உங்க தூரத்து சொந்தக்காரங்களை பத்தி காலையில ரொம்ப கவலைப்பட்டு பேசினீங்களா.... “ என சொல்லிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட மாறன்,
“இது எப்போ?” என்றார்.
“காலையில தான் ப்பா!” பல்லைக் கடித்தவனை பார்த்தும் அடங்காது,
“நான் அங்க தானே ப்பா இருந்தேன். காந்தி அப்படி எதையும் சொல்லலையே கார்த்தி” என்றார் அழுத்தமாக.
“சொன்னாதானா ப்பா? இத்தனை வருஷம் அவங்க கூட வாழ்ந்த அனுபவம் இருந்தும்,என்னோட மனைவி எல்லாத்தையும் ஒன்னுக்கு நாலு தரம் சொன்னாத்தான் புரிந்துப்பேன்னு ஒரு ஹஸ்பன்ட்டா நீங்க சொல்லலாம். ஆனா ஒரு மகனா நான் அப்படி சொல்ல முடியாது ப்பா. சொல்லமுடியாது!” என்று தன் வலக்கையை கொண்டு சிவாஜி ஸ்டைலில் மார்பில் குத்திக்கொண்டு, வராத கண்ணீரை துடைத்துக்கொண்டவன்,
“எனக்கு அவங்க எதையும் சொல்லாமலேயே அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியும் ப்பா... தெரியும்! ஏன்னா நான் அவங்ககிட்ட பத்து மாசம் இருந்திருக்கேன்! பத்து மாசம் பெருசா.. முப்பது வருஷம் பெருசா ப்பா?” எல்கேஜி சிறுவன் போல் அப்பாவியாய் கேட்டவனை விழிபிதுங்கி போய் பார்த்தார் மாறன்.
‘நம்ம ஆட்டம் க்ளோஸ்! இதுக்கு மேல அவனை வம்பிழுத்தா அவங்க அம்மாவை என்பக்கம் திருப்பி விட்டுடுவான். இப்ப கொடுத்த அலெர்ட்ல, அலெர்ட்டா இருந்துக்கனும்...’ அவ்வளவு தான் இவ்வளவு நேரம் அவனை எதிர்த்து வாதித்துக்கொண்டிருந்த ஒரு ஜீவனும் வாய்தா வாங்கிடவே சோலோவாக பட்டையை கிளப்பினான் கார்த்திக்.
“ம்மா... நீங்கவேற உங்க சொந்தக்காரங்க, ரொம்ப வருஷம் முன்னாடியே நம்ம ஊரைவிட்டு போனவங்கன்னு சொன்னீங்களா.... அப்ப இருந்த ஊரு வேற.இப்ப இருக்கிற ஊரு வேற இல்லையா ம்மா? பொம்மனாட்டிகளா தனியா நல்ல ஹோட்டலில் தங்கறதுக்கே உங்க மனசு தாங்கல. இதுல ஒரு மாசம் அவங்க சொத்தை விக்க அங்கயிங்க அதே பொம்மனாட்டிகளா தனியா அலைய வேண்டிவந்தா உங்க மனசு தாங்குமா? கண்டிப்பா தாங்கவே தாங்காது. அதான் அவங்களுக்கு துணைக்கு நம்ம அஜயை அனுப்பலாம்னு கூட்டிவந்தேன்” என்றவனை உள்ளே வருமாறு கண்ணசைத்து சமயலறைக்கு சென்றார் காந்தி.
“ஒரு வயசு பொண்ணு இருக்கும் வீட்ல இவனை எப்படிடா தங்கவைக்கிறது! என்ன கார்த்தி இப்படி பண்ற?” எதையாவது சொல்லி அஜய்யை இங்கிருந்து ஓட்டிவிட காந்தி நினைத்தார்.