Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி | SudhaRaviNovels

மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் 3:



எட்டடுக்குகள் இருப்பதே தெரியாமல் கண்ணாடிகளால் சூழப்பட்ட அந்த கட்டிடத்தின் அனைத்து தளங்களும் இரவு நேரத்திலும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.

தன் வேலை நேரம் முடிந்ததும் ஏதாவது அப்பாயின்மென்ட் இருக்கிறதா என்று வரவேற்பறைக்கு அழைத்துக் கேட்ட மௌனிகா, தன் கைப்பையை எடுத்து, அறையை விட்டு வெளியேறினாள்.

லிஃப்டினுள் நுழைந்து இவள் இருக்கும் மூன்றாம் தளத்திலிருந்து அடித்தளம் செல்வதற்கான பட்டனை அழுத்தினாள். சென்னையிலுள்ள பிரபலமான மருத்துவமனை. ஆதலால் ஒவ்வொரு தளத்திலும் நின்று சிலரை ஏற்றியும் வெளியேற்றியும் கொண்டிருக்க, பொறுமையாக நின்றிருந்தாள்.

எப்பொழுதும் பேஷண்ட்களிடமும், அவர்களோடு வந்திருப்பவர்களிடமும் பொறுமையை கடைபிடிப்பவள், இன்று கார்த்திக்கின் நடவேடிக்கையில் எரிச்சலுடன் நடந்துக் கொண்டாள்.

‘கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாதவன்!!!’ என்று மனதினுள் வைதபடியே, தன் கையில் வைத்திருந்த பேசியை பார்ப்பதும், நிமிர்ந்து எந்த தளத்தில் இருக்கிறோம் என்று பார்ப்பதுமாக இருந்தவள், தன் காரை பார்க் செய்திருந்த அடித்தளம் வரவும் வெளியே செல்ல முயன்ற போது, ஒரு வலிய கரம் அவள் வாயை பொத்தி, அந்த பலத்திலேயே அவளை மீண்டும் லிஃப்டில் தள்ள, முதலில் அதிர்ந்தவள்,

“ம்ம்ம்” என்ற திமிறலுடன் அவன் கையை வேறு குத்த ஆரம்பித்தாள். அவன் அதற்கெல்லாம் அசராமல் கையை எடுக்காமலே எட்டு என்கிற பட்டனை அழுத்தினான். ஏதோ ஒரு தளத்தில் லிஃப்ட்டின் கதவு திறக்கவும், அவளின் வாய் மீதிருந்த கையை எடுத்து விட்டு சற்று தள்ளி நின்றான்.

அவளும் மூன்றாம் நபர் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் ஓரமாக நின்று அவனை முறைத்தாள்.

ஏழாவது தளம் வந்ததும் ஏறியவர் இறங்கி செல்லவும், மீண்டும் இருவர் மட்டும் தனித்து இருக்க, அவனை தன் கைப்பை உதவியுடன் நன்றாக அடித்தாள்.

“ஏன்டா இப்படி பண்ற? நம்ம காலேஜ் இல்ல இது ஹாஸ்பிட்டல்” என்றாள் தன் நண்பன் தீபக்கிடன்.

தீபக், “கீழே மட்டும் போயிருந்த தமிழ்நாட்டுக்கு இன்னைக்கு ஹெட் லைன்ஸ் நீ தான். உன் காருக்கு பின்னாடி தான் நிற்கிறானுக” என்று எரிச்சலுடன் மொழிந்து விட்டு, உரிமையாக அவள் கைப்பையை வாங்கி, அதிலிருந்த கைபேசியை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதற்குள் எட்டாவது தளம் வந்து விட, அங்கிருந்து டெரேஸ் என்று அம்புக்குறிக்காட்டிய படிக்கட்டுகளில் ஏறினான்.

தீபக் அனுப்பிய குறுஞ்செய்தியை படித்தபடியே மௌனிகாவும் அவனை பின் தொடர்ந்தாள். மொட்டை மாடியின் நான்கு புறமும் சென்று கீழேப் பார்த்தவன், அவள் முன் வந்து,

“நீ வைரலாக்கின வீடியோவோட எஃபெக்ட் பார்த்தியா?”

“என் தம்பி அப்லோட் பண்ணினது. கண்டிப்பா நாங்க தான்னு கண்டிபிடிக்க முடியாது தீபக்” என்று நிதானமாக சொல்லி விட்டு, அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்தாள்.

“யாரு?? அனிருத் க்கு கசின் சைஸ் ல இருந்துக்கிட்டு நான்தான் அடுத்த சுந்தர் பிச்சை ன்னு சொல்லிட்டு திரியுறவனா?” என்றதும்,

“அடிங்க” என்று அடிக்க போக, தீபக் ஏதோ ஒரு திசையை பார்த்து,

“டேய்!! எங்கேடா இருக்க நீ? உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று சொல்ல, இவள் புருவத்தை சுருக்கி தீபக்கை பார்க்க,

“உன்னிடம் மாட்டி சிக்கி சின்னபின்னமாக போற அந்த பாவப் பட்ட ஜீவனைத் தான் சொல்றேன்” என்றான். மொட்டைமாடியில் இருந்த ஏஸி மோட்டார் சத்தத்தில் அவளுக்கு காதில் விழவில்லை.

அதே திசையில் சில கிலோமீட்டர்கள் தள்ளி இருந்த ஹலோ எப்.எம் அலுவலகத்தில் இருந்த கார்த்திக்,

“ஏன்டா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையாடா” என்று கையில் இருந்த பேப்பரை கசக்கி எறிந்தான்.

“நீங்க தான் பாஸ் ஹலோ எஃப். எம் ஸ்டார் பர்ஃபார்மர்” என்று ஃப்ரெஷர் ஒருவன் ஏற்றி விட, அவனை ஒரு பார்வை பார்த்தவன்,

“இப்போ என்ன ப்ரோக்ராம் பண்ண்ணும் அவ்ளோ தானே?? வா” என்று தன் அருகில் நின்றிருந்த புதிதாக வேலைக்கு வந்த அஜயை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.

புதிதாக வேலைக்கு வந்திருப்பவர்கள் பேச போகும் ஸ்கிரிப்ட்டை சரி பார்ப்பதும் அவனின் வேலை தான். அப்படி சரிப் பார்க்கும் போது, “என்னடா எழுதி இருக்கீங்க?” என்று கடிந்து, மருத்துவமனையில் பட்ட அவமானத்தை இவர்களிடம் கொட்டி தீர்த்து கொண்டான்.

“இன்னைக்கு ஒருநாள் நீங்க பண்ணுங்க சார். நாங்க ஏதாவது சொதப்பிட போறோம்” என்று இரட்டையர்கள் இருவர்கள் தொகுத்து வழங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு பதிலாக இவனை நிகழ்ச்சியை நடத்த சொல்ல,

“ஹான்.. இசையோடு நான் ராஜா சார் ப்ரோக்ராம் உடனே வருமே அதை யாருங்க பண்ணுவாங்க” என்றான் நக்கலான கேள்வியுடன்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“உங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் தொடர்ந்து மூணு மணி நேரம் பண்றது ஒரு மேட்டரா சார்” என்றான் அஜய். அப்போது தான் கார்த்திக் அவர்களைப் பார்த்து, ‘மனசாட்சி இல்லையா’ என்றுக் கேட்டான்.

“சாங்ஸாவது செலக்ட் பண்ணியா?” என்றுக் கேட்டு பேச ஆரம்பித்தான்.

அன்றைய நாளில் கனவு என்ற தலைப்பைப் பற்றி பேசுவதாக ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த்தால், முதலில் அழைப்பில் வந்த நபருடன் உரையாட ஆரம்பித்தான்.

“கெனவு இன்னா சார். குப்புறப்படுத்து தூங்கினா வந்துட்டு போகுது” என்று சென்னை செந்தமிழில் ஒருவன் வர, இந்தபுறம் கார்த்திக் இன்முகத்தோடு பேச ஆரம்பித்தான்.

‘எப்படி தான் இந்த குடிகாரனை எல்லாம் கார்த்திக் சார் சமாளிக்கிறாரோ’ என்று வியந்து பார்த்தப்படி நின்றிருந்தான் அஜய்.



அதே நேரம் மருத்துமனையின் மொட்டை மாடியில்,

“தனியா ஹாஸ்பிட்டல் கட்டணுங்கிறது என்னுடைய கனவு டா. எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசுறது தான்….” என்று மேலும் தொடராமல் மௌனிகா நிறுத்த,

“அவன் கையில் இருக்க மீம் க்ரியேட்டர்ஸ் இந்த ஆட்சியே நிர்ணயிக்கியிற அளவுக்கு பவர்புல் ஆளுங்க. ஈஸ்வரன் சார் தங்கைப் பொண்ணுன்னு இவ்வளவு நாள் அடக்கி வாசிச்சாங்க. ஆனா நீ பண்ணியிருக்க வேலைக்கு தட்டிட்டு போலாம்னு வந்திருக்கானுக” என்று பதட்டத்துடனும் கவலையுடனும் தீபக் நிறுத்த,

“அந்த வீடியோ ஜஸ்ட் பயம் காட்ட போட்டது. நம்மளை பற்றி நினைக்காத மாதிரி அவங்களுக்கு பிரச்சனை இருந்தால் நம்மளை கண்டுக்க மாட்டான்னு..”

“ஆன்சைட்ல உட்கார்ந்துகிட்டு ஆப்படிக்கிற உன் தம்பி அறிவாளி சொன்னானா?” என்று இடை மறித்தான் தீபக் நக்கலாக.

“ஹலோ!!! எங்களுக்கும் இருக்கு” என்று ஒருவிரலால் நெற்றியின் ஓரம் அவள் தட்டியபடி அவனைப் பார்க்க,

“ஒழுங்கா காதை குடைஞ்சோமா காசை வாங்கினோமான்னு இல்லாம அவன் காதிலேயே ஓட்டை போட போனால் விடுவானா?”

“சித்ராவோட அப்பா கமிஷனர் தானே. நமக்காக ஹெல்ப் பண்ண மாட்டாரா?” என்றுக் கேட்க,

“யார் அந்த சிலுக்குவார்ப்பட்டி சித்ராவா?” சி. சித்ராவுக்கு கல்லூரியில் ரேக்கிங்கில் சீனியர்கள் வைத்தது, இன்றும் தொடர்கிறது. அவள் யோசனையுடன் தலையசைத்து ஆமோதிக்க,

“அவ ஹனிமூன் போய் நமக்கு சனிமூனை இழுத்து வச்சிருக்கா. அவங்க ஹனிமூன்க்கு ஸ்பான்ஸரே அவனுக க்ரூப் தானாம். இதில் எப்படி அந்த ஆளு உனக்கு ஹெல்ப் பண்ணுவார்”

“ஓகே தீபக். இது என் பிரச்சனை எனக்கு பார்த்துக்க தெரியும். சொல்லிட்ட இல்ல. நீ போகலாம்” என்று அவள் நிமிர்வுடன் பதில் சொல்ல, அவளை முறைத்தவன்,

“திரும்பவும் ஏதாவது வம்பை விலைக் கொடுத்து வாங்காத. ஹாஸ்பிட்டல 24 அவர்ஸ் சர்வீலன்ஸ் கேமரா இருக்கு. பேசாமல் இங்கேயே டேரா போட்டுடு. அதான் உனக்கு சேஃப். மகளே வெளியே வந்த கண்டமாக்கி காக்காவுக்கு போட்டுருவானுங்க”

“டேய் லூசு, என் வொர்க்கிங்க் அவர்ஸ் முடிந்தால் என் ரூமே எனக்கு சொந்தமில்ல. உருப்படியா ஏதாவது ஐடியா சொல்லு” என்று தலையில் கை வைத்தாள்.

“ஆமா அவனுக ஏன் இவ்ளோ தூரம் வந்தானுக. வேற ஏதோ பண்ணி வச்சிருக்கியா?” என்று ஆராய்ச்சியுடன் அவளைப் பார்க்க, அவன் பார்வையை அலட்சியத்துடன் தவிர்த்தவள், தன் கைப்பையை மாட்டிக் கொண்டு,

“செல்ப் டிஃபன்ஸ் க்ளாஸஸ் போயிருக்கேன். என்னைப் பார்த்துக்க தெரியும்” என்று சொல்லி விட்டு படிக்கட்டை நோக்கி நடக்க,

“இன்னைக்கு ஒருநாள் என்னோடு வா” என்று கெஞ்சலுடன் சொல்லிவிட்டு முன்னே நடந்தவன், தன் கைபேசியின் உதவியோடு அருகில் இருக்கும் ஓலாவை வரவழைத்தான்.

மருத்துவமனைக்கு வெளியே நின்றிருந்தவள், தீபக் புக் செய்த கார் அருகே வரும் போது, சற்று குனிந்து தான் வழக்கமாக கார் நிறுத்தும் இடத்தைப் பார்த்தாள். தீபக் சொன்னது போலவே, காருக்கு பின் இருந்த தூணின் மறைவில் ஒருவன் தலையை மட்டும் வெளியே நீட்டி மௌனிகாவிற்காக காத்திருந்தான். யார் இவன் என்ற யோசனையுடனே நின்றிருந்த போது, அவனும் வெளியே நின்றிருந்த இவளைப் பார்த்து விட்டான்.

இத்தனை பேர் இருக்கும் இடத்தில் என்ன செய்து விடமுடியும் என்ற தைரியத்தில் அவனை முறைத்தப்படியே மௌனிகா பின் சீட்டில் ஏறி அமர, தீபக் முன்னே சென்று அமர்ந்தான்.



கனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே

இரு கண்ணுக்குள்ளே கூடுக்கட்டி வாழ்கிறாய்

என்று ஸ்ரேயா கோஷல் குரல் கார் முழுவதும் இனிமையாக நிறைந்திருக்க, அதை மெய்மறந்து ரசித்தப்படி வந்த தீபக்கின் கைபேசி ஒளிர எடுத்துப் பார்த்தான்.

அவர்கள் பின் தொடர்ந்து வருவதாக பின்னால் அமர்ந்திருப்பவள் அனுப்பிய செய்தியில் அதிர்ந்தவன், பின்னே மௌனிகாவை திரும்பிப் பார்க்க, அவள் அமைதியாக புன்னகைத்தாள்.

“எப்படி கண்டுபிடிச்சாங்க?” என்று டிரைவர் அறியாமல் மெதுவான குரலில் தீபக் கேட்க,

“இது ஹலோ எப்.எம் 106.4 இணைப்பில் இருப்பது உங்கள் கார்த்திக்” என்று காரில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் நிறைவுற்றதும் கார்த்திக்கின் குரல் கேட்க, அவள் தீபக்கு பதில் சொல்லாமல்,

“கார்த்திக்!!!!” என்று அவன் பெயரை யோசனையுடன் முணுமுணுத்தாள்.

அவளின் கவனம் சிதறுவதை பார்த்தவன் வேகமாக ப்ளேய்ரை அணைத்தான். அவள் மனதில் ஏற்பட்ட தடுமாற்றத்தை தீபக் முன் வெளிபடுத்த முடியாமல் அமைதியாகவே இருந்தாள்.

உங்கள் கார்த்திக் என்று கேட்டது உண்மையா? ஒருவேளை பிரம்மையோ!!! என்று இவள் இங்கு குழம்பிய வேளையில், அங்கே அலுவலகத்தில்,

“நண்பேன்டா” என்று கிரியை கட்டியணைத்தான் கார்த்திக். அவனுடைய வழக்கமான நிகழ்ச்சியை கிரி, தான் தொகுத்து வழங்குவதாக சொல்லி விட்டானே.

“மச்சி ஹாஸ்பிட்டலில் இருந்து நேரா வந்து இறங்கிட்டேன். பைக் எடுத்துட்டு வரல?”

“பிச்சிடுவேன். நான் பத்து மணிக்கு மேலே கேப் தேடி அலைய முடியாது” என்கவும், அஜயை அழைத்து,

“எக்மோர்ல டிராப் பண்ணு” என்றான். முதல்வகுப்பு டிக்கெட் எடுத்து, வழியெங்கும் ‘கார்த்திக் சார், நான் உங்க ஃபேன்’ என்ற பாராட்டுகளை பெற்று மின்சார இரயிலில் ஏறிய போது, வலதுபுறம் யாரோ இருவர் முதுகுக் காடி அமர்ந்திருக்க, “லவ்வர்ஸ் போல” என்றெண்ணியபடியே, இடதுபுறம் சென்றமர்ந்தான். ஏனோ மௌனிகா இ.என்.டி என்ற நேம் போர்டும் அவள் முகமும் கண்முன்னே வர,

“இன்னைக்கு டே வே ஸ்பாயில் ஆகிடுச்சு” என்று முணுமுணுத்து, அவனுக்கு முதுகுக் காட்டி அமர்ந்திருந்தவர் ஏதோ சண்டையிட்டுக் கொள்ள சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்தான்.

தீபக்கும், மௌனிகாவும் தான் பெரிய சேஸிங்கிலிருந்து தப்பித்து, மின்சார இரயில் ஏறி விட்டனர்.

“ஒழுங்கா உன் மாமா மூலமா டீல் பண்ணு. இப்படி எல்லாம் ஓடிட்டு இருக்க முடியாது” என்று தீபக் சொல்ல, அவள் மறுத்து,

“என் அம்மாவோட முழு பென்சன் பணத்தையும் இன்வஸ்ட் பண்ணியிருக்கோம்” என்று தலையசைக்க, பின்னால் இருந்து பார்த்த கார்த்திக்கு ஏதோ காதலர்கள் சண்டை போல் தோன்றியது.

சிறியதாக செவ்வக வடிவில் இருந்த ஐபாடை, மௌனிகா தன் ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் வைத்து சுழற்றிய விதத்தையும், அவளின் அழகிய விரல்களையும் ரசித்து பார்த்திருந்தவன், அவர்கள் இருவரும் எழுவதைப் பார்த்ததும், ஜன்னலின் வழியே வெளிக்காட்சிகளை பார்த்தப்படி பார்வையை திருப்பினான்.

‘எப்படியும் நம்மைப் பார்த்ததும் வந்து பேசுவார்கள்’ என்றெண்ணி அமர்ந்திருந்தவன், இரயில் நின்று சில நிமிடங்களாகியும் வராமல் போனதைக் கண்டு திரும்பிப் பார்க்க, அவர்கள் இருவரும் ஸ்டேஷனில் இறங்கி, இப்பொழுதும் அவனுக்கு முதுகுக் காட்டியபடியே, பேசிக் கொண்டே நடந்தனர்.

‘இது என்னடா இன்று கார்த்திக்கு வந்த சோதனை!!!’ என்று அவன் மனசாட்சியே அவனை கேலி செய்தது.

அவன் இறங்க வேண்டிய இடம் வரவும், எழுந்து கதவருகே வந்தவன் காலில் ஏதோ தட்டுபட, எடுத்துப் பார்த்தால், அவள் கையில் வைத்திருந்த, அதே சின்னஞ்சிறு ஐபாட்.

கோகிலா
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் -4

ட்ரெய்னை விட்டு கீழிறங்கிய கார்த்தியின் கால்களில் ஏதோ மிதிபடுவதை உணர்ந்தவன், குனிந்து கீழிருந்த ஐ பாடை கையில் எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தான் தவறவிட்டவர்கள் தேடுவதைப் பார்த்தால் கொடுத்துவிடலாம் என்று...

மேலும் சில நிமிடங்கள் நின்று பார்த்தவன், யாரும் ஐ பாடின் உரிமையாளராக தோன்றாமல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கலாம் என்று அங்கிருந்த அலுவலகத்தை நோக்கி நடந்த கார்த்திக் திடீரென்று ஞானோதயம் அடைந்தவனாக அவ்விடத்திலிருந்து வேகமாக வெளியேறினான்.

மனதில் ஏற்பட்ட சொல்ல இயலாத உணர்வில் தன்னிடம் இருந்த ஐ பாடை உரியவரிடம் தானேதான் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததில் கார்த்திக் தனக்கு மேல் மாடி நட்டு கழண்டு விட்டதோ என்று எண்ணிக் கொண்டே வீட்டை வந்தடைந்தான்.

வீட்டிற்கு வந்தவன் குளித்துவிட்டு டைனிங் டேபிளில் கோவிலுக்கு செல்லும் முன் காந்திமதி வைத்துவிட்டு சென்றிருந்த டிபனை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு சோஃபாவில் சென்றமர்ந்தவன், தன்னுடைய வழக்கமான வேலையாக டீவியை ஹை பிட்சில் வைத்தான்.

" இவனோட இதே தொல்லையா போச்சு!", என்று எதிர்வீட்டு தாத்தா புலம்பியது தெரிந்திருந்தால் கார்த்திக் லவுட் ஸ்பீக்கர் வைத்து அலற விட்டிருப்பான்... ஏனோ சிறுவயதிலிருந்தே மிகவும் சத்தத்தை விரும்பிய மகனை கண்டித்தும் பயனில்லாமல் போனதில் மாறன் தம்பதியினரும் இவனது இந்த பைத்தியக்காரத்தனத்திற்க்கு பழகி போயிருந்தனர்.

செய்யும் வேலையில் ஒலிபரப்புவது அனைத்தும் இளையராஜாவின் மெல்லிசை பாடல்கள்.... ஆனால் கேட்பது அனைவரையும் அலற வைக்கும் அதிரடி மெட்டுகளே!

இதைப் பற்றி கேட்டால் அது என்னுடைய வேலை இது என்னுடைய ரசனை என்று அதர பழைய சித்தாந்தம் பேசுவான் "பேச்சு மட்டும் இல்லைன்னா பிறந்த குழந்தை கூட உன்னை மதிக்காதுடா", என்று காந்திமதி அவ்வப்போது கலாய்ப்பதும் உண்டு.

சாப்பிட்டுக் கொண்டே தாயின் முந்தைய கலகலப்பை எண்ணிக் கொண்டிருந்த கார்த்திக்கின் காதில் "நீங்க கொஞ்ச நாள் பேசாம இருந்தாலே சரி ஆயிடும்", என்றுக் கூறிய மௌனிகாவின் குரல் அசரீரியாக ஒலித்து அவனது ஈகோவை "நான் ஈ" என தட்டிவிட்டது.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
" ரொம்பதான் அலட்டிக்கிறாங்க டாக்டரு.... காதை, மூக்கை தட்டி பார்த்து எல்லோரையும் தட்டி வைக்கணும்னு நினைக்கிறாங்க... அதை மத்தவங்க வேணும்ன்னா அக்சப்ட் பண்ணிக்கலாம். ஆனால் இந்த ஆர் .ஜே. கார்த்திக் அன்புக்கு அடிபணிவானே தவிர அதிகாரத்துக்கு அடங்க மாட்டான்..

அதுவும் என்னை தெரியாத மாதிரி என்ன ஒரு அலட்சியம்?", என்று தனக்குத்தானே பினாத்தி கொண்டிருந்தவன் திடீரென "எஸ்! அப்படிதான் இருக்கும்", என துள்ளி குதிக்க ஆரம்பித்தான்.

"என்னாச்சு கார்த்தி? தனியா குதிச்சுக்கிட்டு இருக்க..",என்றவாறு உள்நுழைந்த மாறனும் காந்திமதியும் உலகின் அதிசயமாக தங்கள் வீட்டு டிவியை பார்த்தனர். ஏனென்றால் மௌனிகாவை பற்றி எண்ணிக்கொண்டே தன்னையும் அறியாமல் கார்த்திக் வொல்யூமை மிகவும் குறைத்திருந்தான்.

அதனைப் பற்றி கேட்பதற்காக மாறன் வாயை திறக்கும் முன்னரே "அந்த பொண்ணுக்கு தானே என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா நான் கண்டுக்கமாட்டேன் தானே! அதனால தான் நான் யாருன்னே தெரியாத மாதிரியும், என்னை அலட்சியப்படுத்துற மாதிரியும் பேசிருக்கா .....அப்பதான் நான் இம்ப்ரெஸ் ஆகி அந்த பொண்ணை திரும்பி பார்ப்பேன்னு பிளான் செஞ்சுருக்கா...", என்று இஷ்டத்திற்கு தன் தற்பெருமையை தண்டோரா போட்ட கார்த்திக்கை மாறன் ஒரு பரிதாப பார்வை பார்த்தார்.

ஆனால் காந்திமதியோ "கார்த்திக் கொஞ்சம் பேசுறதை நிறுத்துறியா? தலையெல்லாம் வலிக்குது... என்னங்க நான் தூங்குறேன், பிரிட்ஜ்ல மாவு இருக்கு, பொடி வச்சு தோசை ஊத்தி சாப்பிட்டிடுங்க", என்றுக் கூறிவிட்டு தங்களின் அறைக்குள் நுழைந்தவரை பார்த்து கார்த்திக் அதிர்ந்து போயிருந்தான்.

"கார்த்திக் தப்பா எடுத்துக்காதடா! கோவிலுக்கு போயிருந்தப்ப என்னோட ஒன்னு விட்ட தங்கச்சி தனம் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தா. அதுல இருந்தே கொஞ்சம் மூட் அப்செட், வீட்டுக்கு வந்தப்புறம் என்ன பேசுனாங்கன்னு கேட்டுக்கலாம்னு இருந்தேன்", என்று கூறியவரை ஒருப் பார்வை பார்த்தவன்

"அம்மாவை அடுத்த செக் அப் நான் மட்டும் கூட்டிட்டு போறேன்.... நீங்க வர வேண்டாம்ப்பா .எனக்கு டிபன் சாப்பிட்டதே போதும் ",எனக் கூறிவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்துவிட்டான்.

ரூமினுள் வந்த கார்த்திக்கின் மனம் கொதித்து கொண்டிருந்தது. பிறந்தது முதல் ஒற்றை பிள்ளை என்று ஒரு வார்த்தைக் கூட திட்டாமல் வளர்த்த அம்மா, தன் பேச்சைக் கேட்பதில் பெருமை மட்டுமே பட்டவர், இன்று "நீ பேசினால் தலைவலிக்குது", என்றுக் கூற காரணம் அந்த மௌனிகா தான்....

" ஒரு நாள் கன்சல்டேஷன் போனதுலயே என்னோட அம்மாவை எனக்கெதிரா திருப்பி விட்டுட்டா ....இவளே என்கிட்ட வந்து ஐ லவ் யூ சொல்ல வச்சு நோஸ் கட் பண்றேன்", என்று கூறுகெட்ட தனமாக சவால் விட்டு கொண்ட கார்த்திக் அந்த கார்த்திகேயனே "வள்ளி ,தெய்வானையை விட இந்த மௌனிகாவை சமாளிக்கிறது கஷ்டம்டா பையா!", எனக் கூறியதை காது கொடுத்து கேட்காதது யாருடைய குற்றமோ?

ஓரளவு மனம் சமாதானமடைந்தவனின் கண்ணில் இன்று கண்டெடுத்த ஐ பாட் பட்டதும் அதனை எடுத்து என்னதான் இருக்கிறது என கேட்கத் தொடங்கினான்.பிளே லிஸ்ட் ஆன் செய்ததும் ,
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஆஆ…ஆஆ…
மௌனமான நேரம்

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இதுமௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

என்றப் பாடல் இனிமையான மெல்லிசையுடன் ஒலிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து வந்த பாடல்களும் மெல்லிசையாக இருந்திடவே, ரசித்து கேட்டுக் கொண்டே தன்னையும் அறியாமல் கார்த்திக் உறங்கியிருந்தான்.




கார்த்திக் தன்னிலை மறந்து உறங்கிடக் காரணமான பாடல்கள் கேட்டிட வழி வகுத்தவளோ, உறக்கம் தொலைத்து, தொடுவானம் தொந்தரவு செய்கிறாளே ! என்று எண்ணிடும் அளவில் வான்வெளியை வஞ்சனையின்றி உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

வானத்தை வெறிப்பதால் வேதனைகள்
சாம்பலாகிடாது என்பது மூளை உணா்ந்தாலும், மனம் எனும் மந்திரக்கோல் மாறிடாது மண்டலவெளியில் பதில் தெரியா கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டுதானிருக்கிறது.

திடீரென்று காற்று மிகவும் பலமாக வீசியதில் சுய உணர்வுப் பெற்ற மௌனிகா தன்னுடைய அறைக்கு வந்து பாட்டுக் கேட்பதற்காக ஐ பாட் தேடிய பொழுதுதான் அதனை தவறவிட்டதை உணர்ந்தாள்." ச்சே எல்லாம் இந்த தீபக் பண்ணுன வேலையால வந்தது... என்னோட பேவரைட் சாங்ஸ் எல்லாம் போச்சு", என்று புலம்பியவள் வேறு வழியின்றி கண்களை மூடிக் கொண்டு அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.

தொலைந்ததை பற்றி யோசித்தால் துளியளவு எஞ்சியிருக்கும் நிம்மதியும் நித்திரை இன்றிச் செய்துவிடுமே! என்னதான் உறுதி எடுத்தாலும், உள்ளம் ஒத்துழைக்க வேண்டுமே!

வேலை முடிந்து வெளியே வரவிருந்த பொழுது தீபக்கை கண்ட இதமான மனநிலை அவன் கூறிய தகவல்களிலும், முன்பின் அறியாதவர்களின் பார்வையில் படாதவாறு ஓடி ஒளிந்து வந்ததிலும் காணாமல் போயிருந்தது. அத்துடன் நில்லாமல் ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளி வந்ததும் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தவன்,

" உன்னோட பிரச்சினையிலே மௌனிகாவை இழுத்து விடாத... யாரோ ஒரு பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கனும்னா அவங்க வீட்டுல நீ நேரடியா மோது.. அதுக்காக உன்னை படிக்க வைக்க ஸ்பான்சர் செஞ்சு, நீ இந்த நல்ல நிலைமையில இருக்க காரணமானவங்க மகளை பலிகடா ஆக்க நினைச்ச நானே உன்னை அவங்ககிட்ட மாட்டிவிட்டுடுவேன்", என்று கோபமாக பேசிவிட்டு வைத்தவன், தன்னை பேசவிடாமல் செய்ய தடுத்துக்கொண்டிருந்த மௌனிகாவின் கைகளை தன் பிடியில் இருந்து தளர்த்தியதோடு அருகிலிருந்த காபி ஷாப்க்குள் நுழைந்துவிட்டான்.

வேறுவழியின்றி நண்பனை பின்தொடர்ந்து சென்றாலும் "நீ பேசியதில் எனக்கு உடன்பாடில்லை", என்று காட்டும் விதமாக மௌனிகா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். கோபத்தையோ, வருத்தத்தையோ மௌனிகா என்ற பெயருக்கு ஏற்ப மௌனத்தால் மட்டுமே பிரதிபலிப்பாள்....


அதனை உணர்ந்திருந்த தீபக் தனக்கென்று ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு அவளை நேர்பார்வையாக பார்த்தவன் "ஒரு பிரண்ட் என்ன செய்வானோ அதை தான் நான் செஞ்சேன்... நீ தனியா இருக்குற இந்த நிலைமையில ஏதாவது ப்ரோப்ளேம் வந்தா என்ன பண்றது?

இருபத்தி நாலு மணி நேரமும் கூடவே யாரும் வர முடியாது.... போராடி ஜெயிக்க தகுதி இல்லாதவனுக்கு லவ் ஒரு கேடா? இதுக்கு தியாகி நீங்களும் துணை... சோசியல் சர்வீஸ் உருப்படியான விஷயத்துக்கு மட்டும் செஞ்சா போதும்", என்று பொரிந்து விட்டு வந்திருந்த ஜுஸை எடுத்து அருந்த தொடங்கினான்.

தீபக் கூறியதில் இருந்த எதார்த்தம் புரிந்தாலும் ,தான் உடன் பிறவா தம்பியாக எண்ணுபவனின் மனம் நோகடித்ததை மௌனிகாவால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதனால் தன் மௌனத்தை கைவிடாமல் எழுந்து கிளம்பியவளைக் கண்டு வருந்தினாலும் பில் தொகையை செலுத்திவிட்டு மௌனிகா தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட் வரை உடன் வந்து விட்டே சென்றான்.

உதவி செய்தாலும், உற்ற நண்பனாலும் வீட்டினுள் மௌனிகா யாரையும் அனுமதிப்பதில்லை. அதனால் கேட்டில் இருந்தவாறே சென்ற தீபக் "டேக் கேர்", என்றதில் மனம் சற்று இளகினாலும், திரும்பி பார்க்காமல் தான் தங்கியிருக்கும் வீட்டை அடைந்து கதவினை திறந்தவளுக்கு அதனுள் இருந்த அசாத்திய அமைதியும், வெறுமையும் வேள்வித்தீயில் இட்டு சாம்பலான சங்கதிகளை சடுதியில் கண்முன்னே காண்பித்தன.

ஆனால் உள் நுழைவதை தவிர வேறு வழி இல்லாததால் உள்ளே வந்த மௌனிகா பிரிட்ஜில் காலையில் செய்து சாப்பிட்டது போக மீதம் வைத்திருந்த உப்பு, சப்பற்ற உப்புமாவை எடுத்து சூடு செய்யாமல் அப்படியே சாப்பிட்டு அமர்ந்தவள் வேறு எதனையும் கண்டுகொள்ளாமல் தன் சிந்தனையில் செயலிழந்திருந்தாள்.....

உணவும், உறவின்றி இருந்தால் உயிர் வாழ மட்டுமே! என்ற அறிய கொள்கை கொண்டவள், எதனையும் எண்ண கூடாது என்று நினைத்துக் கொண்டே அனைத்தையும் மறுசுழற்சி செய்திருந்தாள்.

மறுசுழற்சியில் இன்று கண்ட கார்த்திக்கை கடுகளவும் மௌனிகா நினைத்திடவில்லை என்பதை அறிந்தால் கார்த்திக் கஷாயம் குடித்தவனை போன்று முகம் கசங்கிடுவானோ?

மறுநாள் விடியல் கார்த்திக்கின் காதை பிளக்கும் சத்தத்துடன் தான் ஆரம்பித்தது. ஏனென்றால் மாறன் செய்திருந்த வேலை அப்படியானது.... ஆனால் அதை அவர்தான் செய்தார் என்று யாரும் கண்டு கொள்ளாதவாறு அமர்ந்திருந்தார்.

காந்திமதியோ தன்னுடைய காதில் எதுவும் விழாத காரணத்தினால் அமைதியாக வழக்கமான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். எப்படி இவ்வாறு நடந்தது என்ற குழப்பத்துடனேயே கார்த்திக் வேலைக்கு சென்றான்.

அவன் சென்றதும் மனைவியின் அருகில் வந்த மாறன் அவரிடம்" நாம நேத்து போய்ட்டு வந்த டாக்டர் உனக்கு கொம்பர்ட்டபிள் ஆக இருக்காங்களா? இல்லை வேற டாக்டர் மாத்தணுமா மா?", என்று தான் பேசுவதை அவர் புரிந்து கொள்ளும் விதமாக கேட்டார்.

அதற்கு காந்திமதி "அந்த பொண்ணுக்கிட்டயே பார்க்கலாம்ங்க...
காது சரியா கேட்குதோ? இல்லையோ? நம்மளால முடியாத ஒரு விசயத்தை ஒரே நாளுல செஞ்சதுக்கு அந்த பொண்ணுக்கு தேங்க்ஸ் சொல்லணும்ங்க", என்றுக் கூறியதில் மாறன் மகிழ்ந்தாலும், மகனின் தற்பெருமையை நினைத்து சிறிது கலங்கவே செய்தது.




மாறன் முதல் நாளிரவு தனது மனைவியின் தலைவலிக்குது என்ற வார்த்தையில் மௌனிகா கூறிய "அதிக சத்தமே காதின் கேட்கும் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்", என்பதை நினைவுபடுத்தி கொண்டு கார்த்திக் அசந்து தூங்கும் வரை காத்திருந்தார்.

மகனின் உறக்கம் உறுதியானதும், தினமும் காலை எழுந்ததும் டிவியில் பாடல்களை போட்டு கொண்டு ஹோம் தியேட்டர் மூலமாக அலறவிடும் கார்த்திக்கை அலற செய்யும் ஆயுதமாக வீட்டில் இருந்த ஸ்பீக்கர் அனைத்திற்கும் சிறிது தண்ணீர் மற்றும் எண்ணெய் அபிஷேகம் செய்துவிட்டு படுத்துக்கொண்டார்.

ஸ்பீக்கர் வேலை செய்யாமல் போனதில் தனது வேலையை சிறு சிறு கவன சிதறல்களுடன் முடித்த பொழுது அவனது சகாக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் "கார்த்தி ஆர் யூ ஓகே? நேயர் கேட்ட சாங் போடாம நீ வேற ஏதோ பாட்டு போடுற..
எதுக்கும் ஈ .என். டியை பார்த்துடு", என்று இலவச அறிவுரையும் வழங்கியதில் மௌனிகாவின் ஞாபகம் தானாக வந்து அவனின் முகத்தில் சிறு மாறுதல் ஏற்படுத்தியது.

" தேங்க்ஸ் போர் யூவர் அட்வைஸ்", என்றுக் கூறிவிட்டு வெளியில் வந்தவன் "மௌனிகாவின் அழுத்தமான ஐ லவ் யூ கூடிய சீக்கிரம் கேட்க தான் போறேன்", என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

ஐ லவ் யூ கூறி நோஸ் கட் வாங்க போகும் நபர் எவரென்று விதி எழுதியவன் மட்டும்தான் அறிவானோ?

தீபி