Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
448
63
அத்தியாயம்—55

சித்தார்த், திருமணம் முடிந்து இருபது நாட்களுக்குப் பிறகு, அன்றுதான் அலுவலகம் சென்றான். இருவரின் வாழ்வும், தாமரை இலை தண்ணீர் போல, ஒன்றோடு ஒன்று ஒட்டாமலே சென்று கொண்டிருந்தது. அன்றைய நிகழ்வுக்குப் பிறகு, சித்தார்த்திடம் தன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் இருந்தாள்.

ஆனால், சித்தார்த்தோ நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவளைச் சீண்டிக்கொண்டே இருந்தான். அந்தநேரம் அவனிடம் முகம் திருப்பினாலும், அதை நினைத்துச் சில சமயம் தனிமையில் சிரித்துக் கொள்வாள்.

இடைப்பட்ட நாட்களில் சித்தார்த்தைத் தவிர, வீட்டில் அனைவரிடமும் நன்கு ஒட்டிக்கொண்டாள். மறுநாள் சுபா டெல்லி கிளம்ப வேண்டும். அவளுக்கும், குழந்தைகளுக்கும், ஏதாவது நல்ல கிப்ட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

அலுவலகம் செல்லக் கிளம்பி வந்த சித்தார்த், டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான். மது அவனுக்கு காலை உணவைப் பரிமாறிவிட்டு தேவகியின் அருகில் சென்றாள்.

"அத்தை!" என்று மெல்ல அழைத்தவளை, "என்ன மது?" என்றார்.

"சுபா அண்ணிக்கு, ஏதாவது நல்ல கிப்டா வாங்கலாம்னு இருக்கேன். வரீங்களா ஈவ்னிங், நாம கடைக்குப் போய்ட்டு வரலாம்?" என்றாள்.

"ஏன்மா? சித்தார்த் கூடப் போயேன். நீயும் வந்து பத்து நாள் ஆச்சு. ரெண்டு பேரும் எங்கேயும் போகவே இல்லையே. இன்னைக்குச் ஷாப்பிங் போயிட்டு அப்படியே வெளியே சாப்டுட்டு வாங்க" என்றார்.

‘நான் எப்படி அவரைக் கூப்பிடுவது?’ என்று நினைத்தபடி தயங்கி நின்றவளைப் பார்த்த மீரா, "என்ன மது யோசனை?" என்றாள்.

“இல்லக்கா! இன்னிக்குத்தான் அவர் ஆபீஸ் போறார். வேலை இருக்கும். நான் எப்படி அவரைச் சீக்கிரம் வரச்சொல்றது?" என்று கேட்டதும் சிரித்த மீரா, "நீ சொல்லு. சித்தார்த் சரியா நேரத்துக்கு வந்து நிற்கிறாரா இல்லையான்னு பாரு" என்று சொல்லிச் சிரித்தாள்.

அதற்குள் சித்தார்த் சாப்பிட்டு முடித்து, கிளம்பச் ஷூ போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் அவனருகில் சென்றாள்.

சித்தார்த் என்ன என்பது போல பார்க்க, “இன்னைக்கு ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா?" என்றதும் ஆச்சரியத்துடன், “என்ன இன்னைக்கு ஏதாவது விசேஷமா ட்ரை பண்ணப் போறியா? காஃபில உப்பு, சர்க்கரைக்குப் பதிலா வேற ஏதாவது..." என்று கேட்டதும், கடுப்புடன் அவனைப் பார்த்தாள்.

அதே கோபத்தோடு உள்ளே செல்லத் திரும்பியவளை, “ஏய் மது! நில்லுடா" என்று அவள் கையைப் பிடிக்க, "விடுங்க, உங்ககிட்டப் போய்ப் பேச வந்தேன் பாருங்க" என்றாள் கோபத்தோடு.

"மது! அம்மா நின்னு நம்மளையே பார்க்கறாங்க. முகத்தை இப்படிக் கடுகடுன்னு வச்சிட்டுப் பேசாதே! கொஞ்சம் சிரிச்சா மாதிரி பேசு" என்றான்.

அவளும், ‘தாங்கள் இருவரும் இயல்பாக பேசுவது கூட இல்லை என்பதை, எதற்கு அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட், அவர்களது நிம்மதியைக் குலைக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு, சிரித்தபடி, “இன்னைக்குச் சீக்கிரம் வந்தா, போய் சுபா அண்ணிக்கு ஏதாவது நல்ல கிப்ட் வாங்கிட்டு வரலாம்" என்றாள்.

"சரி, முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரம் வரப் பார்க்கறேன்" என்றவன் அங்கிருந்த ரோஜா செடியிலிருந்து ஒரு பூவைப் பறித்து அவளது கூந்தலில் சொருகியவன், அவளது கன்னத்தைத் தட்டிவிட்டுக் காரில் ஏறினான்.

அவன் கிளம்பிச் சென்றதும் கன்னத்தைத் தடவியபடி, வீட்டின் உள்ளே செல்லத் திரும்பியவளுக்கு, அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தை வீட்டின் உள்ளே இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது என்பது அப்போதுதான் புரிந்தது.

‘தன்னிடம் இப்படிப் பேசத் தான், அத்தை உள்ளேயிருந்து பார்ப்பதாகப் பொய் சொன்னான்’ என்று உணர்ந்தவள், எரிச்சலுடன் தலையில் வைத்த ரோஜாவை எடுத்து கீழே எறிய நினைத்தவளுக்கு, என்ன தோன்றியதோ மீண்டும் கூந்தலிலே வைத்துக்கொண்டாள்.

சித்தார்த் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்கெல்லாம், ஜீவாவும், ரமேஷும், ஒருவர் பின்னால் ஒருவராக அவனுடைய அறைக்கு வந்தனர்.

ரமேஷ், “என்னடா புது மாப்பிள்ளை எப்படியிருக்க?" என்று கேட்டபடி வந்தவனைப் பார்த்த சித்தார்த் புன்னகையுடன், “ஜம்முன்னு இருக்கேன்?" என்றான்.

சித்தார்த்தின் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்த்த ஜீவா, “நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்தில் இருந்த நிலையைப் பார்த்து, என்ன நடக்குமோ; எது நடக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்டா. நீ சந்தோஷமா இருந்தா அது போதும்! என்று சிரித்தான்.

“மது எப்படியிருக்கா? உங்க ரெண்டு பேரையும் அம்மா வீட்டுக்குக் கூப்பிடணும்னு சொல்லிட்டிருந்தாங்க. நான்தான் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு சொன்னேன்” என்ற ரமேஷ் தயங்கியபடி, “சித்தார்த்! மது உன்கிட்ட நல்லபடியாக நடந்துக்கறாளா?" என்று கேட்டான் அக்கறையுடன்.

புன்னகைத்த சித்தார்த், “எதுக்கு இவ்வளவு சந்தேகம்?" என்றவன், காபியில் உப்பைப் போட்டுக் கொடுத்தது முதல், தக்காளி சட்னியில் மிளகாய்த் தூளைக் கொட்டிக் கொடுத்தது வரை சொல்லிவிட்டுச் சிரிக்க, ரமேஷும் இணைத்து சிரித்தான்.

ஜீவா மட்டும் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த சித்தார்த், "என்னடா சைலண்டா இருக்க? அம்மாகூட எங்கே உன்னை இந்தப் பக்கம் காணோம்னு கேட்டாங்க. சண்டே லஞ்ச் நம்ம வீட்ல சாப்பிடுவது போல வாங்கடா..." என்றதும், அதை கேட்ட ஜீவாவின் முகம், இன்னதென்று சொல்ல முடியாமல் பல பாவத்தை வெளிப்படுத்தியது.

"உனக்குத்தான் தலையெழுத்து, மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு. நாங்க என்னடா பாவம் செய்தோம்? எங்களையும் நடுவுல இழுத்து விடுற. நான் வேற அடிக்கடி உங்க வீட்டுக்குச் சாப்பிட வருவேன். போதாக்குறைக்கு மதிய சாப்பாடு எனக்கும் சேர்த்து இத்தனை நாள் உங்க வீட்லயிருந்து தான் வந்தது. இவனுக்கு எதுக்குத் தண்டமா இங்கேயிருந்து சாப்பாடு போகணுங்கற ஆத்திரத்திலோ, இல்ல உன் மேலயிருக்கும் கோபத்திலோ சாப்பாட்டில் ஏதோ செய்யப் போய் அதில் நான் மாட்டிக்கவா? எங்க அம்மாவுக்கு, நான் ஒரே பையன்டா. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா? தயவுசெய்து என்னை விட்டுடுங்கடா. நான் இந்த விளையாட்டுக்கு வரலடா சாமி!" என்று பெரிதாக ஒரு கும்பிடு போட, நண்பர்கள் இருவரும் வாய்விட்டு நகைத்தனர்.

"சிரிங்கடா சிரிங்க. ஏற்கெனவே மயிரிழையில் உயிர் தப்பினவன் நான். அந்த பயம் எனக்குத்தானே தெரியும்." என்றதும் மேலும் இருவரின் சிரிப்பும் அதிகரித்தது.

சித்தார்த்தின் தோளை தட்டிய ரமேஷ், "சித்தார்த், அவளைத் திரும்பக் குறும்புக்கார மதுவாக பார்க்கச் சந்தோஷமாக இருக்குடா!" என்று சந்தோஷத்துடன் சொன்னான்.

"தேங்க்யூடா” என்றவன், “நான் ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும். சுபா, நாளைக்கு ஊருக்குக் கிளம்பறா. அவளுக்கு ஏதாவது வாங்கணும்னு மது சொன்னா" என்றான்.

"ஈவ்னிங் அந்தப் ஃபாரின் கம்பெனி ஜாயின்ட் வென்ச்சர், பத்திப் பேச வரேன்னு சொல்லி இருந்தாங்களே... பரவாயில்லடா! நீ கிளம்பு. நாங்க பார்த்துக்கறோம்" என்று ரமேஷ் நினைவுபடுத்த, "மறந்தே போய்ட்டேன். அதை முடிச்சிட்டுக் கிளம்பிப் போறேன்" என்றவன், அதன்பிறகு வேலையில் மூழ்கிப் போனான்.

ஆனால், சொன்னபடி அவனால் மாலையில் கிளம்ப முடியவில்லை. அந்தப் பிஸ்னஸ் பற்றிய பேச்சு இழுத்துக்கொண்டே போக, வீட்டிற்குப் போன் செய்து தன்னால் இன்று வர முடியாத விஷயத்தைச் சொன்னான். அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இரவு வெகுநேரமாகியும் அவன் வரவில்லை. மீண்டும் தொலைபேசி அழைப்புத் தான் வந்தது. மதுவுடன் விளையாடிக் கொண்டிருந்த அருந்ததி, அத்தையுடன் தான் படுத்துக்கொள்வேன் என்று அடம்பிடிக்க, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தவள் கதை சொல்லியபடியே குழந்தையுடன் படுத்தவள் அப்படியே தானும் உறங்கிவிட்டாள்.

சித்தார்த் வீட்டிற்கு வரும்போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அறைக்கு வந்தவன், குழந்தையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தவளை புன்னகையுடன் பார்த்தான். இரவு விளக்கின் ஒளியில் தனி அழகோடு இருந்தவளை, சில நொடிகள் பார்த்திருந்தவன் ஒரு பெருமூச்சுடன் குளித்துவிட்டு வந்து படுத்தான்.

இரவு விரைவாக உறங்கியதால், எப்போதும் விழிக்கும் நேரத்திற்கு முன்பே மதுவிற்கு விழிப்பு வந்துவிட, கண்களைத் திறந்தவள் மிக நெருக்கத்தில் சித்தார்த்தின் முகம் தெரிய திடுக்கிட்டுப் போனாள். அவ்வளவு நேரமும், அவனது தோளில் கன்னம் பதித்து உறங்கி இருப்பதை உணர்ந்து படபடப்புடன் எழுந்தாள்.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன், மதுவின் அசைவில் மறுபுறமாகத் திரும்பிப் படுத்தான். ‘எங்கே எழுந்துவிடுவானோ என்ற எண்ணத்துடன் அசையாமல் இருந்தவள், அவன் மறுபுறம் திரும்பிப் படுத்தும், கட்டிலின் ஓரமாகப் படுத்திருந்த அருந்ததியைத் தூக்கி அவனருகில் படுக்க வைத்துவிட்டு, எழுந்து சென்றாள்.

குளியலறையின் கதவை மூடும் சப்தம் கேட்டதும், கண்களைத் திறந்தவன், அவள் சாய்ந்து படுத்திருந்த தோளை ஒருமுறை தடவிச் சிரித்துக்கொண்டான். தூக்கக் கலக்கத்தில் தன்புறமாகத் திரும்பிப் படுத்தவள், தன் தோளில் சாய்ந்துகொண்டது முதல் அவளது முகத்தையே பார்த்தபடி, தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு படுத்திருந்தவன் மதுவின் அசைவால், தூங்குவது போலக் கண்களை மூடிக்கொண்டான். அவள் எழுந்து சென்ற பின்பும், தூக்கம் வராமல் அந்தச் சில நிமிடச் சந்தோஷத்தை மனத்தில் இருத்தி மகிழ்ந்திருந்தான்.

குளித்துவிட்டுப் புத்தம் புது ரோஜாவாக வந்தவள், ஈரக்கூந்தலை உதறியபடி பால்கனியில் சென்று நின்றாள். ஆதவன் மெல்ல மெல்ல எழுந்துவரும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை, வீட்டின் பின்புறம் இருந்த பறவைகளின் கூண்டின் மேல் நிலைத்தது.

வீட்டிற்கு வந்த இத்தனை நாட்களில் ஒருமுறை கூட, தான் பின்புறம் செல்லவில்லை என்று எண்ணியவள், கூந்தலை அடியில் முடிந்து கொண்டு வீட்டின் பின்புறத்திற்குச் சென்று பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் அறைக்கு வந்தவள். சித்தார்த்தைக் காணாமல், ஜாகிங் சென்றுவிட்டிருப்பான் என்று எண்ணிக்கொண்டே அறையை ஒழுங்குபடுத்தத் துவங்கினாள். அதற்குள் அருந்ததி கண்விழிக்க, “ஹாய் குட்டி, குட் மார்னிங்!" என்று குழந்தையைத் தூக்கி, "செல்லக் குட்டி நைட் அத்தை கூடவே தூங்கிட்டீங்களா? சமர்த்துக்குட்டியா நீங்க..." கொஞ்சியபடி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தவள், பால்கனி வாசலில் இருகைகளையும் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும் தன்னையும் அறியாமல் குழந்தையை இறக்கி விட்டுவிட்டு எழுந்து நின்றாள்.

சித்தார்த்தைக் கண்டதும், “மாமா!" என்று ஓடிச்சென்ற குழந்தை, அவனுடைய காலைக் கட்டிக்கொண்டாள். குழந்தையைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டவன், மனைவியின் அருகில் வந்து நிற்க, அவள் தன் வேலையைத் தொடர்வது போலத் திரும்பி நின்றுகொண்டாள்.

"டார்லிங்! நேத்து நைட் நல்ல தூக்கம் போல. நான் வரும்போது அசந்து தூங்கிட்டு இருந்தீங்களே" என்று குழந்தையைக் கேட்பது போல அவளைக் கேட்டான். அவன் தன்னைத் தான் சொல்கிறான் எனத் தெரிந்தும் எதுவும் சொல்லாமல் வேலையில் கவனமாக இருந்தாள்.

"அத்தை" என்று குழந்தை மழலையில் அழைக்க, "என்னடா குட்டி" என்று திரும்பியவளிடம் தாவிய குழந்தையை கொடுக்காமல், " ரொம்ப டயர்டா ஹனி! அதான், என் தோளில் சாய்ந்து தூங்கியது கூடத் தெரியாம, தூங்கிட்டு இருந்தீங்களோ!" என்று கேட்டதும், சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

அவனது கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டதும் கன்னம் சிவக்கக் குனிந்து கொண்டவள், “ப்ளீஸ், குழந்தையைக் கொடுங்க. அவளுக்குப் பால் கலந்து கொடுக்கணும்" என்றதும் சிரிப்புடன் குழந்தையைக் கொடுத்தான்.

மது அவசரமாக அங்கிருந்து செல்ல, “எனக்கும் காஃபி கொண்டு வர முடியுமா?” என்றதும், "ம்ம்” என்று, தலையை ஆட்டிவிட்டுச் சென்றாள்.

‘அவனுக்கு எதுவும் தெரியாது... தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று, தான் நினைத்தது தவறு’ என்று எண்ணியவள், ‘மீண்டும் எப்படி அவன் முன்னால் சென்று நிற்பது?’ என்று எண்ணிக்கொண்டு காஃபி கலந்து நேத்ராவிடம் கொடுத்தனுப்பினாள்.

கன்னம் சிவந்து நின்றவளையே நினைத்தபடி இருந்த சித்தார்த், ‘என்னடா இது! இன்னைக்கு ரொம்ப அதிசயமெல்லாம் நடக்குது. சண்டை போடுவான்னு நினைச்சா, வெட்கத்தோடு குனிஞ்சிகிட்டா. இப்படிப் போனா, என்னோட வாக்கைக் கடைசிவரை காப்பாற்ற முடியாது போலிருக்கே. இதுக்குத்தான் அவசரப்பட்டு வாயை விடக்கூடாதுன்னு சொல்றாங்க. அவள் முகம் சிவந்து நிற்கும்போது, பெரிய அவஸ்தையாக இருக்கே. சித்தார்த் கன்ட்ரோல் யுவர் ஸெல்ப்! அவசரப்படாதே... அவளோட மனம் இன்னும் முழுதாக மாறவில்லை. பொறுமை பொறுமை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

"அண்ணா காஃபி" என்ற குரலில் கண்களைத் திறந்தவன் புன்னகையுடன் தங்கைக்கு, "குட் மார்னிங் நேத்ரா, தேங்க்ஸ்" என்று சொல்லிக் கப்பை வாங்கிக் கொண்டான்.

“நீ சாப்டியா?” என்று பாசத்துடன் கேட்க, “ம்ம்” என்று உற்சாகத்துடன் தலையை ஆட்டினாள்..

"அண்ணி எங்கே? வேலையா இருக்காளா?" என்றான்.

"ரொம்ப முக்கியமான வேலை. கீழே எட்டி பாருங்க" என்று அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்று தோட்டத்தைக் காட்டினாள். அங்கே, கையில் பால் டம்ளருடன் அருந்ததியின் பின்னால் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள்.

சிறிதுநேரம் அவளது செயல்களை இரசித்தவன், முதல் வேலையாக ஜீவாவிற்குப் போன் செய்து, தான் இன்று ஆபிஸ் வரவில்லையெனச் சொல்லிவிட்டு அன்று செய்யவேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.

காலை உணவை முடித்துக்கொண்டவன், "மது! உன் வேலையை முடிச்சிட்டுக் கொஞ்சம் மேலே வா" என்று அழைத்தான். அவளும், அப்படி இப்படி என்று வேலைகளை ஒவ்வொன்றாக இழுத்துச் செய்து கொண்டிருக்க, "உன்னை சித்தார்த் அப்பவே கூப்பிட்டானே. நீ போ நாங்க பார்த்துக்கறோம்" என்று அவளை அனுப்பி வைத்தாள் சுபா.

"உட்கார் மது" என்றவன், பிரீப்கேஸிலிருந்து சில பேப்பர்ஸை எடுத்து, “இதைப் படிச்சிட்டுக் கையெழுத்து போடு" என்று பேனாவை அவளிடம் கொடுத்தான்.

படித்துப் பார்த்தவள், "எதுக்கு இதெல்லாம்?" என்றவளை கை உயர்த்தி, “நீ கையெழுத்து மட்டும் போடு" என்றான்.

தயக்கத்துடன், "அத்தை, மாமாவுக்குத் தெரியுமா? எதுக்காக இப்போது உங்க பேர்லயிருக்கற நம்ம கம்பெனி ஷேர்ஸ்ல பாதியை, என் பேர்ல மாத்தறீங்க? அதற்கு என்ன அவசியம்? ஜீவாண்ணாவும், ரமேஷ் அண்ணாவும் என்ன நினைப்பங்க?" என்றாள்.

புன்னகைத்தவன், "இது, புதுசா யோசிச்சது இல்ல மது! எப்போதோ முடிவு செய்தது. ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டுத் தான் செய்றேன். அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் செய்றேன். நீ கையெழுத்துப் போடு" என்றதும் அரைமனதாக கையெழுத்திட்டாள்.

"கங்கிராஜூலேஷன்ஸ் மேடம்! இனி, நீங்களும் ஒன் ஆப் தி டைரக்டர் ஆப் ஸ்ருஷ்டி மல்ட்டிமீடியா" என்று கையை நீட்டினான்.

அவளும், சிறு தயக்கத்துடன் கையைக் கொடுத்தாள். “மது! இந்த பேப்பர்ஸ்லையும் சைன் பண்ணு. உன் பேர்ல தனியா பேங்க் அக்கௌன்ட், டீமாட் அக்கௌண்ட் ஆரம்பிக்கணும்"

"எனக்குத்தான் தனி அக்கௌன்ட் இருக்கே அப்புறம் இது எதற்கு?" என்றாள்.

“இது, நான் உனக்காகச் செய்வது. இந்தக் கவர்ல, ட்வென்டி தௌசன்ட் இருக்கு. இது இந்த மாசச் செலவுக்கு. உனக்கு ஏதாவது வாங்கணும்னு தோணினா வாங்கிக்க" என்று கொடுத்தான்.

மது மௌனமாக வாங்கிக் கொண்டாள். “இந்த மாசம் உன்கிட்ட கொடுத்துட்டேன். அடுத்த மாசத்துலயிருந்து அக்கௌண்ட்ல போட்டுடுறேன்" என்றான்.

சரி என்பது போலத் தலையை ஆட்டியவள், "அவ்வளவு தானே நான் கிளம்பட்டுமா?" என்றாள்.

"என்ன அவசரம்? இரு உன்னிடம் கொஞ்சம் பேசணும்" என்றான். கையிலிருந்த வளையல்களை அவள் மாற்றி மாற்றி எண்ணிக்கொண்டிருக்க, "திரும்பத் திரும்ப எத்தனை முறை அதையே எண்ணுவ? கொஞ்சம் நிமிர்ந்து எங்ககிட்டயும் பேசலாமே" என்றான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

கைகளை சோஃபாவின் பின்னால் நீட்டிக்கொண்டு அமர்ந்தவன், "உனக்கு இங்கே எல்லாம் சௌகர்யமா இருக்கா?" என்றான்.

"ம்ம், இருக்கே. எனக்கு இங்கே எந்தப் பிரச்சனையும் இல்ல" என்றாள்.

"ஆனா, என்னைப் பார்த்தா தான் பிரச்சனை இல்லையா!" என்றதும். “அதெல்லாம் ஒண்ணும் இல்ல" என்றாள்.

"அப்போ ஏன் எல்லோரிடமும் நல்லா பேசும் நீ, என்னிடம் மட்டும் விலகி விலகிப் போற?" என்று ஏக்கத்தோடு கேட்டதும், ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.
"என்னை ஒரு ஃப்ரெண்டா கூடவா நினைக்கக் கூடாது. இல்ல, அதுக்குக் கூட நான் தகுதி இல்லாதவன் ஆகிட்டேனா?" என்று கேட்டதும் அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

சில நொடிகள் மௌனமாக இருந்தவள், "சாரி! உங்க மனசை நான் நோகடிச்சிருக்கேன். எனக்கே புரியுது. நானும் உங்ககிட்டச் சாதரணமாக பேசணும்னு தான் நினைக்கிறேன். ஆனா, முடியல" என்றவள், கலங்கிய விழிகளைக் கட்டுப்படுத்தினாள்.

"போனது போகட்டும். அன்னைக்குச் சொன்னது தான் இப்பவும் சொல்றேன். எனக்குத் தேவை உன்னோட மனசுல ஒரு இடம்” என்றவன், எழுந்து நின்றான்.

பின்னாலேயே எழுந்தவள், “சித்தார்த்! நீங்க இப்படி ஃபீல் பண்ணினா, எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் கொஞ்சங் கொஞ்சமா என்னை மாத்திக்க ட்ரை பண்றேன்” என்றாள் ஆத்மார்த்தமாக.

அவளை வியப்புடன் பார்த்தவன், “தேங்க்யூ ஹனி!” என்று அவன் நேசத்துடன் சொல்ல, முறுவலித்தாள்.

சந்தோஷத்துடன், "சரி, கிளம்பு. சுபாவுக்குக் கிப்ட் வாங்கணும்னு சொன்னியே, போய்ட்டு வந்திடலாம்" என்றான்.

"நீங்க இன்னைக்கு ஆபீஸ் போகலையா?" என்று கேட்டாள்.

“இல்ல. காலையிலேயே லீவ் சொல்லிட்டேன். சீக்கிரம் கிளம்பு. ஷாப்பிங் போய்ட்டு வந்து நாமதான் சுபாவை ஏர்போர்ட் கூட்டிட்டுப் போகணும்" என்றதும், விரைவாகத் தயாராகி இருவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்தவர்களுக்குச் சந்தோஷமாக இருந்தது.

ஆனால், இவ்வளவு தூரம் அமர்ந்து பேசியதெல்லாம், அன்று இரவே தலை கீழாக மாறப்போவதை இருவருமே உணரவில்லை.




அத்தியாயம்—55

கடைக்குச் சென்றவள், சுபாவுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகள் நால்வருக்கும் எடுத்தவள், நேத்ராவுக்கும் ஒரு அனார்கலி சுடிதாரை எடுத்தாள். அவள், சுபாவிற்குப் புடவை தேர்வு செய்துகொண்டிருந்த நேரத்தில், அவளுக்காக ரா சில்க்கில் ஒரு புடவை எடுத்துத் தனியாக வைத்தான்.

இருவரும் வீட்டிற்கு உள்ளே வரும்போது, "அம்மா நான் என்ன வனவாசமா போறேன்? பருப்புப் பொடி, தேங்காய் பொடி, எள்ளுப் பொடின்னு எல்லாத்தையும் செய்து கொடுத்து என்னை இம்சை பண்றீங்களே. இதெல்லாம் கிடைக்காத இடத்திலா இருக்கேன்? கடைக்குப் போனா எல்லாமே கிடைக்கும்" என்று அன்னையின் அன்பிற்கு தாழ் போடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் சுபாஷிணி.

"எல்லாம் கிடைக்கும். ஆனா, நாமளே தயார் செய்றது மாதிரி வருமா? இதுக்கு இன்னொரு பேர் பாசம்” என்று மீராவும், மாமியாருக்கு ஒத்து ஊத, “நான் எப்போ வந்து போனாலும் பாதி பிளைட் அடைக்கிற அளவுக்கு லகேஜ் சேர்ந்து போகுது" என்றாள் பெருமையும், தாங்கலுமாக.

உள்ளே வந்த சித்தார்த், “அப்போ இனி, நீ பேசஞ்சர் ஃப்ளைட்ல போகாதே. கார்கோல போ" என்று சொல்ல, "கொழுப்புடா உனக்கு. ஏன் பேசமாட்ட? கார்கோ பிளைட்ல போக நான் என்ன ஜடப்பொருளா?" என்று சீறினாள்.

சிரிப்பும், பேச்சுமாக ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் செய்து கொண்டிருக்க, புன்சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ‘சித்தார்த்! அலுவலகத்தில் ஒரு தலைமை அதிகாரியாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறான். வீட்டில் அனைவரிடமும் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் மரியாதையாகவும்; யாரிடம் எப்படிப் பேசவேண்டுமோ அப்படி, ஒவ்வொருவருக்கும் தகுந்தார் போன்று பழகுவதைக் கடந்த பத்து நாட்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாளே!

அருந்ததியைத் தூக்கிக் கொஞ்சியபடியே திரும்பியவன், மது தன்னையே பார்ப்பதைக் கண்டதும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுகொண்டே, அவளைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்த, தடதடத்த இதயத்துடன் மாமியாரின் அருகில் சென்று அமர்ந்தாள்.

அங்கே அமர்ந்திருந்தவளின் பார்வை மீண்டும் மீண்டும் அவனிடம் சென்று வர, சித்தார்த்தின் உற்சாகத்திற்குக் கேட்கவா வேண்டும். அவளையே பார்த்துக் கொண்டு குழந்தையிடம் பேசுவதைப் போல ஜாடையாகப் பேசுவதும், கண்களைச் சிமிட்டுவதுமாக இருக்க, அவளுக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. தன்னைத் திசை திருப்பிக் கொள்ள, வாங்கி வந்திருந்தவற்றை மாமியாரிடம் காண்பித்தாள்.

கடைசியாக நேத்ராவிற்கு எடுத்த அனார்கலி சுடிதாரை காண்பிக்க, "அண்ணி! எனக்கா? கலர் சூப்பரா இருக்கு. அண்ணினா அண்ணிதான்" என்று மதுவைச் சேர்த்தணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

"ஹேய்! என்ன இது?" என்று அவள் வெட்கத்துடன் சொல்ல, "அண்ணி அண்ணா எதிரில் இப்படி வெட்கப்பட்டுச் சிரிக்க மாட்டீங்களா? அங்கே பாருங்க அண்ணன் முகத்தில் எவ்வளவு ஏக்கம்?" என்றாள் யதார்த்தமாக.

"நேத்ரா! அத்தை காதுல விழப் போகுது சும்மா இரு?" என்று ரகசிய குரலில் சொன்னாள்.

"அண்ணி அப்படியே திரும்பிக் கொஞ்சம் அண்ணனைப் பாருங்களேன். பார்வையில் காதல் ரசம் சொட்டுது" என்றதும் மது சற்று எரிச்சலுடன், "நேத்ரா! என்ன இப்படியெல்லாம் பேசற?" என்று அதட்டலாகச் சொல்ல, நேத்ரா கொஞ்சம் அடங்கினாள்.

அதன்பிறகு மீரா, சுபாவுடன் பேசிச் சிரித்துக்கொண்டே திரும்பியவள், சித்தார்த்தின் காதல் பார்வையால், தன்னுள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வது போலத் தோன்ற, தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

சித்தார்த்தின் மடியிலேயே குழந்தை உறங்கிவிட, சுபா பயணத்திற்கு தயார் செய்து கொண்டிருந்ததால், குழந்தையைத் தன்னுடைய அறைக்குக் கொண்டு சென்றான். அவனும் உடை மாற்றிக்கொண்டு படுத்தான். கண்களை மூடினால் அவளது வதனே மீண்டும் மீண்டும் கண்களுக்குள் தோன்றியது. கவனத்தைத் திசை திருப்ப வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான். அலுவலகத்திற்குப் போன் செய்து பேசினான். ஆனாலும், எண்ணம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

‘இன்று ஏன் இப்படி என்னை அலைகழிக்கிறாய் மது?’ என்று மனத்திற்குள் புலம்பியவன் அவளது போட்டோவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

குழந்தையைத் தூக்கிச் செல்ல வந்த சுபா, தம்பியின் தவிப்பைக் கதவருகில் நின்று பார்த்தவள், வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றாள். அவள் வந்ததோ, சிறிதுநேரம் நின்று தன்னைக் கவனித்ததோ எதையும் அறியாமல், சித்தார்த் தன் எண்ணத்துடன் போராடிக் கொண்டிருந்தான்.

மதியம் மூன்று மணிக்கு அறைக்கு வந்த மதுமிதா, சித்தார்த் உறங்குவது தெரிந்தது. அவனருகில் திறந்திருந்த லேப்டாப்பை எடுத்து வைக்க அருகில் சென்ற போது தான், ஸ்கிரீன் சேவரில் தன்னுடைய போடோக்கள் மாறி மாறி வருவதைப் பார்த்தாள்.

அதில், பாவாடை தாவணியிலிருக்கும் படம் சிலதும் இருப்பதைக் கண்டாள். அவை தீபாவின் கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்கள் என்று புரிந்தது. ‘இது எப்படி இவனுக்குக் கிடைத்தது?’ என்று எண்ணியவள், ‘சுரேஷிடமிருந்து வாங்கி இருப்பான்’ என்று அவளே ஒரு தீர்மானமும் செய்து கொண்டாள்.

‘ஆனால், இந்தப் போட்டோக்களை நானே இத்தனை நாட்கள் பார்த்ததில்லையே’ என்று எண்ணிக்கொண்டே அவனருகில் சென்று, "என்னங்க, என்னங்க" என்று குரல் கொடுத்தாள். ஆனால், அவன் கண்ணைத் திறக்கவே இல்லை. அவளது குரல் அவளுக்கே கேட்காத போது அவனுக்கு எப்படிக் கேட்கும்? தயங்கியபடி அவனைத் தொட்டு அசைத்து, “என்னங்க! நேரம் ஆகுது எழுந்திருங்க" என்று சொல்ல, சித்தார்த் கண் விழித்தான்.

"நேரம் ஆகுது. அண்ணியை ஏர்போர்ட் கூட்டிட்டுப் போகணும்" என்றவள், குழந்தையுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

குழந்தையும் விழித்துவிட, கிளம்பத் தயார் செய்தாள் மதுமிதா. தயாராகி சுபாவின் அறைக்கு வந்தவன், அவளிடமிருந்து அருந்ததியை வாங்கிக்கொண்டவன், ஒரு ட்ராலி பேகை இழுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றான்.

“இந்த லகேஜையும் கொண்டு போகட்டுமா அண்ணி” என்றவளிடன், "ஆங்.. கொண்டு போகலாம்” என்றவள் தம்பி மனைவியின் கையைப் பற்றிக் கொண்டாள். மதுமிதா விழிகள் அகல, “என்ன அண்ணி?” என்றாள்.

“உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும். பேசலாமா?" என்று கேட்டாள்.

அவள் என்ன பேசப் போகிறாள் என்று மதுவும் அறிந்தே இருந்தாள். "இதென்ன கேள்வி? சொல்லுங்க " என்றாள்.

"நான் என்ன சொல்லப் போறேன்னு உனக்கும் புரிஞ்சிருக்கும். இருந்தாலும், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடுறேன். நீ தப்பா, உங்க விஷயத்துல தலையிடுவதா நினைக்காதே. ஏன்னா, இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை சம்மந்தபட்டது மட்டுமில்ல. ரெண்டு குடும்பத்தோட சந்தோஷம்" என்றாள்.

மதுமிதா மௌனமாக தலைகுனிந்து நின்றிருக்க, “கல்யாணமாகி இருபது, நாளைக்கு மேல ஆகுது. ஆனா, நீங்க ரெண்டு பேரும் சகஜமா பேசுறது கூடயில்ல, இல்லையா?" என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள் சுபா.

பதில் சொல்லும் தைரியம் அற்றவளாக, மதுமிதா நின்றிருந்தாள்.

"நீ எங்ககிட்ட பேசுறதுல பாதி கூடச் சித்தார்த்கிட்டப் பேசறதில்ல. உனக்குத் தெரியுமா! சித்தார்த்தை, இவ்வளவு பொறுமையானவனா நாங்க பார்த்ததே இல்ல. அதுக்காக, அவன் அவசரக்காரன் இல்ல. எல்லாத்திலேயும் யோசிச்சித் தான் முடிவெடுப்பான். அது சரியா இருந்தா, யாருக்காகவும் அவனோட முடிவை மாத்திக்கமாட்டான்.

ஆனா, உன் விஷயத்துல அவன் ரொம்பவே பொறுமையா இருக்கான். அவனையே அறியாமல் கூட, உன்னைக் காயப்படுத்திடக் கூடாதுன்னு நினைக்கிறான். அதுக்குக் காரணம், அவன் உன் மேல வச்சிருக்கற உண்மையான காதல் தான் மது!" என்ற சுபாவை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

“கல்யாணத்துக்கு முன்னால, உன்கிட்டச் சில சமயம் கொஞ்சம் கடுமையா பேசியிருக்கலாம். அதுக்குக் காரணமும், அவனோட காதல் தான். நீ வேலையை விட்டுப் போக அவன்தான் காரணம்னு சொன்னதும், அவனோட மனசு என்ன பாடுபட்டதுன்னு தெரியுமா உனக்கு? இனி, உன் வாழ்க்கையில வரமாட்டேன்னு உன்கிட்ட பேசிட்டு வந்த அன்னைக்கு, என்கிட்டச் சொல்லி ரொம்பவே கஷ்டப்பட்டான். நான் கூட, இப்படிப் பைத்தியக்காரத்தனமா பேசிவிட்டு வந்திருக்கிறாயேன்னு திட்டினேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?" என்று சொல்லி நிறுத்திவிட்டு மதுவைப் பார்த்தாள்.

‘அப்படி என்ன சொன்னான்?’ என்று அறிந்து கொள்ளும் ஆவல், அவள் கண்களில் தெரிந்தது.

"நான் அவளோட வாழ்க்கைலயிருந்து போனாதான் அவளுக்குச் சந்தோஷம்னா, என்னோட காதல் தான் அவளோட நிம்மதியைக் குலைக்குதுன்னா அப்படிப்பட்டக் காதல் எனக்குத் தேவையில்ல. மது என்னைக் கல்யாணம் செய்யாம இருந்தாலும், இல்ல நாளைக்கே மனசு மாறி வேற யாரையாவது கல்யாணம் செய்துகிட்டாலும், அவள் சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும். அவளோட சந்தோஷத்தைப் பார்த்துட்டே நான் நிம்மதியா இருந்திடுவேன்னு சொன்னான்" என்று தழுதழுத்தாள்.

திகைப்பும், தவிப்புமாக மனம் அலைபாய, கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டவள், "நீ அழணும்ன்னு இதைச் சொல்லல. காதலிச்ச பொண்ணைக் கைக்கெட்டும் தூரத்துல வச்சிட்டு, கையைக் கட்டி வேடிக்கை பார்க்கறது எவ்வளவு அவஸ்தைன்னு உனக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்ல. இப்போதைக்கு, அவன் பொறுமையா இருக்கலாம். ஆனா, இதுவே இன்னும் கொஞ்ச நாள் தொடர்ந்தா, ஒரு அலுப்பு தட்டிடும். சலிப்பு வந்துட்டா வாழ்க்கையே வெறுத்துடும் மது!" என்றாள் ஆதூரத்துடன்.

சுபா, “அதுக்காக உன்னை உடனே, மாறணும்னு சொல்லலை. அவனோட உணர்வுகளை நீயும் கொஞ்சம் புரிஞ்சி நடக்க முயற்சி செய்ன்னு தான் சொல்றேம். நாம நினைச்சா முடியாதது ஒண்ணுமில்ல. நீயும் முயற்சி செய்றன்னு எங்களுக்கும் புரியுது. ஆனா, அவனைச் சில சமயம் பார்க்கும்போது ரொம்பக் கஷ்டமாக இருக்கு மது! நான் சொல்றதை அறிவுரையா எடுத்துக்காம ஒரு ஆலோசனையாக எடுத்துக்கோ மது. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் எங்க எல்லோருடைய ஆசையும்" என்று அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு, “ரொம்பக் காலம் தாழ்த்திடாதே மது! நமக்காக நேரம் காத்துட்டு இருக்கறதில்ல. நான் கிளம்பறேன். நீயும், சித்தார்த்தும் அவசியம் வீட்டுக்கு வரணும்" என்றவள், அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.

சுபாவை ப்ளைட் ஏற்றிவிட்டு வரும்போது இருவரின் இடையேயும் கனத்த மௌனமே நிலவியது. வீட்டிலிருந்து கிளம்பும் போதே அவளைக் கவனித்தான். செவ்வரியோடிய விழிகள், அவள் அழுததைச் சொல்லாமலே அவனுக்கு உணர்த்தியது. சுபா, அவளிடம் ஏதோ பேசியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். இதே நிலையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றால், தனக்குள் முடங்கிக்கொள்வாள் என்று நினைத்து வண்டியை கொட்டிவாக்கத்திற்குச் செலுத்தினான்.

"மது! உங்க மாமா வீட்டிற்குப் போகப் போகிறோம். முகம் கொஞ்சம் டல்லா இருக்கு முகத்தைக் கழுவிக்கோ” என்றவன், வழியில் வண்டியை நிறுத்தி வீட்டிற்குச் ஸ்வீட், பூ என்று வாங்க, அதற்குள் மதுவும் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள்.

வீட்டினருகில் காரை நிறுத்தியவுடன், அனைவரையும் பார்க்கும் ஆவலில், “அத்தை!" என்று உற்சாக குரல் கொடுத்தபடி செல்ல, "மதும்மா!" என்று அவளை எதிர்கொண்டு வந்த ராஜியைப் பிடித்து இரண்டு சுற்றுச் சுற்றினாள்.

"மது! எப்படிடா இருக்கே?" என்று ஆசையுடன் அவள் கன்னத்தை வருடியபடி கேட்க, சலுகையுடன் அவர் தோளில் சாய்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு, “போங்க அத்தை! என்னை எல்லோரும் மறந்துட்டீங்க. நான் வீட்டுக்குப் போன அன்னைக்கு மறுநாள் வந்ததோடு சரி. அம்மாவும், அப்பாவும் ரெண்டு நாளைக்கு முன்னால ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிக்க வந்தாங்க. போன் செய்து நாலு வார்த்தை பேசுவதோடு சரி. என்னை அனுப்பிட்டு நீங்க எல்லோரும் நிம்மதியாக இருக்கீங்க இல்ல?" என்று சிணுங்கலாகக் கேட்டாள்.

‘இதுவரை தன்னிடம் சாதரணமாகக் கூடச் சிரித்துப் பேசியதில்லையே’ என்ற எண்ணம் தோன்றினாலும், அவளது முகத்தில் தெரிந்தச் சந்தோஷத்தையும், புன்னகையையும் வாசற்படியில் சாய்ந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.

"உன்னைப் போய் மறப்போமா? நீ இல்லாம, வீடே வெறிச்சின்னு இருக்குடா ராஜாத்தி!" என்று கன்னத்தைத் தடவியபடி நிமிர்ந்தவர், அப்போதுதான் சித்தார்த்தைக் கவனித்தார். "வாங்க வாங்க. உள்ளே வாங்க" என்று வரவேற்றார்.

"நான் நேராக உள்ளே வந்திருந்தா, இவ்வளவு நேரம் நடந்த கண்கொள்ளா காட்சியைப் பார்த்திருக்க முடியாதே" என்று மதுவைப் பார்த்துக்கொண்டே சொல்ல, அவள் உதட்டைக் கடித்தபடி ராஜியின் பின்னால் ஒட்டிக்கொண்டாள்.

"உட்காருங்க. ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. காஃபி கொண்டு வரேன்" என்று கிச்சனுக்குச் செல்ல, சித்தார்த்தின் பார்வை மதுவை அளவிட்டுக் கொண்டிருந்தது.

அவனது பார்வை வீச்சின் ஆளுமையில் அவஸ்தையுடன் நெளிந்தவள், "அத்தை! நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று ராஜியின் பின்னால் விரைந்தாள்.

சித்தார்த் சிரித்துக்கொண்டே, அங்கிருந்த மேகசினை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான்.

ராஜியும், மதுவும் கிச்சனில் இருந்து பேசியது, அவனது காதுகளில் தெளிவாக விழுந்தது,

“மாமாவும், அத்தையும் என்னிடம் ரொம்பப் பிரியமா இருக்காங்க. மீரா அக்கா சொல்லவே வேண்டாம். ரொம்ப அட்ஜஸ்டபுல். பெரிய அத்தான் சைலென்ட். ஆனா, அவர் டைமிங் ஜோக் அடிக்கறதுல கில்லாடி. ரெண்டு குட்டீஸும் ரொம்பச் சமர்த்து. ஆர்த்தி மழலைல பேசினா, கேட்டுட்டே இருக்கலாம். அப்புறம், எங்க வீட்டு விஐபிஸ் ரெண்டு பேர் இருக்காங்க. அஷ்வந்த், நேத்ரா. குழந்தைங்க ரெண்டு பேரையும் கூடச் சமாளிச்சிடலாம். ஆனா, இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கறது ரொம்பக் கஷ்டம்ன்னு அத்தை புலம்புவாங்க" என்று ஒவ்வொருவரைப் பற்றியும் விலாவாரியாக கூறிக்கொண்டிருந்தாள்.

சிரித்துக்கொண்டே அனைத்தையும் கேட்டுகொண்டிருந்த ராஜி, "மாப்பிள்ளையை ரூமுக்கு அழைச்சிட்டுப் போ. முகம் கழுவிக்கச் சொல்லிட்டு வந்து டிபனை எடுத்துட்டுப் போ. ரெண்டு பேரும் டின்னர் முடிச்சிட்டுத் தான் கிளம்பணும்" என்றார்.

"நாங்க இங்கே வர்றதை அத்தைகிட்டச் சொல்லலை. அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேனே" என்றதும், அவளது பதிலில் மகிழ்ந்து போனார் ராஜி.

ஹாலுக்கு வந்தவள், "என்னங்க! நீங்க கொஞ்சம் ரெரெஷ் பண்ணிக்கோங்க" என்று தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள். முகம் கழுவிக்கொண்டு வந்தவனிடம் தன் ஷெல்பிலிருந்து டவலை எடுத்துக் கொடுத்தாள். "அத்தை! இன்னைக்கு நைட் இங்கேயே சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க? நாம அத்தைகிட்ட இங்கே வருவதைச் சொல்லவே இல்லையே?" என்றாள்.

"அதனால் என்ன? போன் செய்து அம்மாகிட்டச் சொல்லிடறேன்” என்றான்.

அதை ராஜியிடமும் சொல்லிவிட்டு டிபனை எடுத்துக்கொண்டு மேலே வந்தவள், ஊஞ்சலில் அமர்ந்திருந்தவனிடம் கொடுத்தாள். இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை. பிளாஸ்க்கில் இருந்த காபியை ஊற்றிக் கொடுக்க, சித்தார்த் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்று தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, ‘எங்கே திரும்பி விடுவானோ என்ற சஞ்சலத்துடன்’ தன்னை மீட்டுக்கொண்டாள்.

வானில் பௌர்ணமி நிலா பவனிவர தொடங்க அந்தி நேரம். ‘இரு மாதங்களுக்கு முன் வந்த பௌர்ணமி, தன் வாழ்வை அமாவாசையாக ஆகிவிட்டதோ! என்று எண்ணி எண்ணி மருகிய அதே பௌர்ணமியில் இன்று, தன் உரிமையாக இருப்பதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டான். திரும்பி வந்தவன், அவளை நெருங்கி அமர்ந்தான். அவளுக்குத் திக்திக் கென்றது.

"அப்புறம், சொல்லு மது!" என்று அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டதும், "ம்ம்... என்...ன. சொல்லணும்?" என்று கேட்டுக்கொண்டே அவன் புறமாகத் திரும்பியவள், அவனை இத்தனை நெருக்கத்தில் பார்த்ததும், ஒரு கணம் தடுமாறினாள்.

சட்டென தலையைக் கவிழ்ந்து கொண்டவள், "நான் இதையெல்லாம் கொண்டு போய் வச்சிட்டு வரேன்" என்று எழுந்தவளின் கையைப் பற்றி அமரவைத்தவன், “அதெல்லாம் அப்புறம் கொண்டு போகலாம். உட்கார்" என்றான்.

மீறமுடியாமல் அமர்ந்தவளை, இடது கையால் வளைத்தான். மதுவின் இதயம், பந்தயக் குதிரையின் வேகத்திற்கு ஓடியது. ஒருபக்கம், அனைவரின் அறிவுரை; மறுபக்கம் அவனது அன்பிலும், அரவணைப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அன்பில் தோற்றுக் கொண்டிருக்கிறோமோ! என்ற எண்ணம் அவளைக் கலவையாகக் குழப்பிக் கொண்டிருந்தது.
தன்னைச் சமாளித்தபடி இருக்க முயன்றும் முடியாமல், "ப்ளீஸ்! யாராவது பார்க்கப் போறாங்க" என்று நிமிர்ந்து பாராமலே சொன்னாள்.

அவள் கையைப் பற்றி அறைக்கு அழைத்துச் சென்றவன், முதல் வேலையாக கதவைத் தாளிட்டான். அவள் கலவரத்துடன், அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள். அவனது மூச்சுக்காற்றின் வெப்பம், அவனது நெருக்கத்தை உணர்த்த, பயத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.

சித்தார்த்தின் கரங்கள் மாலையென பின்னாலிருந்து தழுவிக்கொள்ள, அந்த அணைப்பை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தனக்குள் தவித்தாள். அவளது நிராகரிப்பற்ற அந்த மௌனமே, அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவனது அணைப்பு மேலும் இறுக, அவளது கழுத்தில் முத்தமிட, இதயம் படபடக்க, கால்கள் துவள அருகிலிருந்த கட்டிலைப் பிடித்துக்கொண்டாள்.

அவனது உதடுகள் மேலும் முன்னேறி காதுமடல்களைச் ஸ்பரிசிக்க, “சித்தார்த்!” என்றவளது குரல் வெறும் உதட்டசைவாக வெளிவந்தது. அவனது காதல் படிதாண்டும் முன், அவனது கைப்பேசி அழைக்க, சட்டென்று கனவுலகிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டான்.

நினைவிற்கு வந்தவனுக்கு, ‘தன்னை மீறி, இப்படி நடந்து கொண்டோமே’ என்ற எண்ணம் தோன்ற, அவளைப் பரிதவிப்புடன் பார்த்தான். நடந்தது நிஜமா; கனவா? என்று புரியாமல், இனம் புரியாத உணர்வில் மனம் தத்தளிக்க, ‘இப்போதைக்கு அந்த இடத்தை விட்டுச் சென்றால் போதும்’ என்ற முடிவுடன், வெளியே சென்றாள்.

ராஜி, கணவருக்குப் போன் செய்து பேசிக்கொண்டிருக்க, அவனது ஸ்பரிசத்தை மறுக்கவும் முடியாமல்; ஏற்கவும் இயலாமல் உள்ளுக்குள் குழம்பியவாறு ஹாலில் அமர்ந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம், "ஏய் அல்லிராணி! எப்போ வந்த? எப்படியிருக்கே?” என்று சிரித்துக்கொண்டே வந்த தீபக் மதுவின் பக்கத்தில் அமர்ந்தான்.

புன்னகைத்தவள், “ஹாய் அத்தான்! நான் நல்லயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?" என்றாள்.

"ஹ்ம்ம்...” என்றவன், “எங்கே உன்னோட ஹீரோ ஆளைக் காணோம்?"

"மேலே ரூம்ல போன் பேசிட்டு இருக்கார்" என்றாள்.

“அவரைத் தனியா ரூம்ல விட்டுட்டு, நீ என்ன பண்ற இங்கே?" என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சித்தார்த் இறங்கி வந்தான்.

இருவரும் பேசிக்கொண்டிருக்க, மது தீபக்கிற்கு டிபனும், காபியும் கொண்டுவந்து கொடுத்தாள்.
இருவரும் பேசிகொண்டிருக்க, மது ராஜிக்கு உதவியாக கிச்சனில் நின்றிருந்தாள். சற்றுநேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வெளியே சென்றிருந்த வித்யாவும், மேகலாவும் வர, சற்றுநேரத்தில் ராஜேஷ் அலுவலகத்திலிருந்தும், ஈஸ்வரன் கல்லூரியிலிருந்தும் வந்து சேர்ந்தனர்.

அனைவரும் சேர்ந்து கதைகள் பேசிக்கொண்டும், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் இருக்க, மதுவும் சற்றுநேரத்தில் சகஜமானாள்.

இரவு உணவுக்குப் பின், "வாங்களேன் இன்னைக்குப் பௌர்ணமி. பீச்ல ஒரு வாக் போயிட்டு வரலாம்" என்றான் ராஜேஷ்.

ஈஸ்வரன், “என்னையும், என் மனைவியையும் தொல்லை பண்ணாம எங்களுக்குத் தனிமை கொடுத்துட்டு, நீங்க எல்லோரும் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க" என்று சொல்ல, "அப்பா நீங்க வரலன்னு சொல்றதுக்கு இவ்வளவு பில்டப்பா" என்று தீபக் சிரித்தான்.

மூன்று ஜோடிகளும் பீச்சில் சிறிது தூரம் நடந்தனர். பின்னர், “எங்களுக்குக் கொஞ்சம் தனிமை வேணும். நாங்க தனியா பௌர்ணமியை ரசிக்கப் போறோம்” என்று, மது சித்தார்த்திற்குத் தனிமை கொடுத்து ராஜேஷும், தீபக்கும் வேறு வேறு திசையில் தங்கள் மனைவிகளுடன் சென்றனர்.

சில நொடிகள் எதுவும் பேசாமல் இருவரும் மௌனமாய் அமர்ந்திருக்க, அவளை நெருங்கி அமர்ந்தான். மாலையில் நடந்தவை நினைவிற்கு வந்தபோதும், விலகாமல் அமர்ந்திருந்தாள்.

"ஏன் மது? ராஜி சித்திகிட்ட, நம்ம வீட்டில இருக்கவங்க எல்லோரை பத்தியும் சொன்ன. ஆனால், என்னைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே?" என்று ஏக்கத்துடன் கேட்டான்.

‘அப்போதுதான், அவனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை’ என்று உணர்ந்து, "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அதான்...” என்றாள்.

"ஹ்ம்ம்.... உனக்கு ஒண்ணு தெரியுமா! நமக்கு ரொம்பப் பிடிச்சவங்களைப் பத்திக் கூடச் சிலசமயம் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லாதது போலத் தோணுமாம். அது நிஜமா மது..." என்று கேட்டுக்கொண்டே, அவளது கையை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டு, “ஏய் மது.... என்ன இப்படி உன் கை ஜில்லுன்னு இருக்கு" என்று சொல்லிக்கொண்டே அவளது கையில் முத்தமிட, மது கையை உருவிக் கொள்ள முயல, அவன் விடாமல் மற்றொரு கையில் முத்தமிட, "சித்தூ... ப்ளீஸ்... இது பப்ளிக் பிளேஸ்” என்று குரலே எழும்பாமல் சொல்ல,

அவள் முதன்முறையாக, தன்னைச் சித்தூ என்று அழைத்ததைக் குறித்துக்கொண்டான். உள்ளுக்குள் மலர்ந்த புன்னகையுடன், "அப்போ, நம்ம ப்ரைவசி போகாத நம்ம ரூமா இருந்தா ஓகேவா" என்று தாபத்துடன் அவள் காதருகில் கேட்க, அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளது மௌனத்தையே சம்மதமாகக் கொண்டு, "தேங்க்ஸ் மது!" என்றவன் சட்டென அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.

அந்த மென்மையான இதழ் ஒற்றலை, கண்களை மூடி சிறு முறுவலுடன் ஏற்றுக்கொண்டாள்.

சிறிது தூரத்தில் ராஜேஷ் வருவது தெரிந்ததும், "மது! கிளம்பலாமா. ராஜேஷ் வந்துட்டான்" என்றதும் , அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே , “ம்ம்.." என்றாள்.

எழுந்தவன், அவளுக்காகக் கையை நீட்ட, அவளும் மறுக்காமல் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். பற்றிய கரத்தை விடாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பும் நேரம், “அத்தை! அம்மாவும், அப்பாவும் என்னைக்கு ஊர்லயிருந்து வராங்க?" என்றாள். "இன்னும் 4 நாள் ஆகும் மது" என்றார் ராஜி.

"சரி அத்தை! நாங்க கிளம்புகிறோம். வீட்டுக்கு வாங்க” என்று சொல்லிக்கொண்டு கிளம்ப, “இரு மது! குங்குமம் எடுத்துக்கோ” என்றவர், “திரும்பு இந்தப் பூவை வச்சிக்க” என்று சொல்லி அவள் தலையில் சூட்டினார்.

மீதமிருந்த பூவை எடுத்தவள், “அம்மா, அப்பா படத்துக்கு வச்சிட்டு வரேன்” என்று பூஜையறைக்கு ஓடினாள்.

தன் பெற்றோரின் படத்திற்குச் சூட்டும் வரை, எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தவளின் கண்களில் பூவை வைத்துவிட்டுத் திரும்பும் நேரம் அர்ஜுனின் புகைப்படத்தில் அவளது பார்வை நிலைத்தது. மலரத் துடித்துக்கொண்டிருந்த இதயத்தின் உணர்வுகள் எல்லாம் இப்போது மறத்துப் போனது.
விழிகள் ஈரமாக, ‘கடவுளே! இதை நான் எப்படி மறந்தேன்?’ என்று தவிப்புடன் சுவற்றில் சாய்ந்து நின்றுவிட்டாள். தான் ஏன் இப்போது பூஜையறைக்கு வர வேண்டும் என்று தன்னையே நொந்து கொண்டாள்.

வெளியே சித்தார்த்தின் சிரிப்புச் சப்தம் கேட்க, அவளது இதயத்தைக் குத்திக் கிழிப்பது போலயிருந்தது. ‘கடவுளே! என்னை இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டாயே?’ என்று கலங்கியவளை, "மது! இன்னும் என்னம்மா செய்ற? நேரமாகுது பார்" என்ற ஈஸ்வரின் குரலுக்கு, தன்னைச் சற்று நிலைபடுத்திக் கொண்டு வந்தவள், வலிய வரவழைத்த புன்னகையுடன் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள்.

சித்தார்த் இருந்த சந்தோஷ மனநிலையில், அவளது முகமாறுதலைச் சரியாகக் கவனிக்கவில்லை. மது, தன் பார்வை முழுவதையும் சாலையில் பதித்திருந்தாலும், மனம் முழுவதும் குழப்பத்திலேயே உழன்றது.

போர்ட்டிக்கோவில் காரை நிறுத்தும்போதே, "ஹனி! உனக்கு வெறும் பத்து நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள எல்லோரையும் பேசிச் சமாளிச்சிட்டு மேல வர்ற” என்றதும், “சித்தார்த்...” என்று பலகீனமான குரலில் அவள் அழைக்க, “எந்த சாக்குபோக்கும் கிடையாது. வர்ற” என்றவன் உள்ளே சென்றுவிட, செய்வதறியாமல் தவிப்புடன் நின்றாள்.

சித்தார்த், அன்னையிடம் பேசிவிட்டு அறைக்குச் செல்லும் முன், ‘சீக்கிரம் வா’ என்று கண்களால் ஜாடை செய்துவிட்டுச் செல்ல, அவளது நிலை இருதலைக்கொள்ளி எறும்பை ஒத்திருந்தது.

தேவகியிடம் சற்று நேரம் அவள் பேசிக்கொண்டிருக்க, மீரா அவளிடம் இரு பால் டம்ளர்களைக் கொடுட்தாள்.

“நீ போம்மா!” என்று தேவகியே அனுப்பி வைக்க, பேசும் திறனற்றவளைப் போல, தலையை ஆட்டிவிட்டு எழுந்து சென்றாள்.

அவள் வருவதற்குள் குளித்துவிட்டு வந்த சித்தார்த், கதவைத் திறக்கும் ஓசை கேட்டதும் ஒளிந்து நின்றான். கணவனைக் காணாமல் அவள் பார்வையைச் சுழற்ற, பின்னாலிருந்து அணைத்தவன், “ஐ லவ் யுடா ஹனி" என்றான்.

அவன் பின்னாலிருந்து அணைத்ததுமே கண்களை அழுந்த மூடி, கையிலிருந்த ட்ரேவை இறுகப் பற்றிக்கொண்டாள். “உங்களுக்குப் பால் கொண்டு வந்திருக்கேன். குடிச்சிடுங்க. அப்புறம் ஆறிடும்" என்று திக்கித் திணறிச் சொல்ல, "பால் மட்டுமா சூடாயிருக்கு?" என்று தாபத்துடன் சொன்னவனுக்கு, காலையில் எடுத்து வந்த புடவை நினைவிற்கு வந்தது.

"மது! உன் ஷெல்ஃப்ல ஒரு கவர் இருக்கு. அதை எடுத்துட்டு வா" என்றபடி அவளிடமிருந்து டம்ளர்கள் இருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டான்.

அவளும் கொண்டுவர, "பிரிச்சிப் பாரு" என்றான்.

எடுக்கும்போதே, அது புடவை என்று புரிந்தது. “பாரு மது" என்று மீண்டும் சொல்ல, மெல்லக் கவரை பிரித்தவள், உள்ளிருந்த புடவையைப் பார்த்ததும் முகம் வெளிற, கண்கள் மளமளவென கண்ணீரைப் பொழிந்தன.

அவளுக்குப் பின்னால் நின்றிருந்தவனால், அவளது முகபாவத்தை அறிய முடியவில்லை. பார்த்திருந்தால் அதன்பிறகு ஏற்படவிருந்த மன வருத்தம் அதிகமாகாமல் தடுத்திருப்பான். ஆனால்!

அருகில் வந்தவன், “என்ன மேடம்? எப்படியிருக்குன்னு சொல்லவே இல்லையே?" என்று கேட்க. அவள் காதில் அர்ஜுன் அன்று கேட்டது போலவே கேட்கவும் அதுவும் அர்ஜுன் முதன்முதலாக ஆசையுடன் வாங்கிக் கொடுத்த அதே தேன் நிறத்தில் இருக்கவும், மதுவின் கோபத்தை அதிகபடுத்த அந்த ஒன்றே போதுமானதாக இருந்தது.

நடுங்கும் விரல்களால் அந்தப் புடவையைக் கையில் எடுத்தவள், சித்தார்த்தின் புறமாகத் திரும்பி அவனையும், புடவையும் மாறி மாறிப் பார்த்தாள். அவனது புன்னகை நிறைந்த முகத்தைப் பார்த்ததும், என்ன செய்கிறோம் என்று உணரும் முன்பே, ஆத்திரத்துடன் புடவையை சித்தார்த்தின் முகத்திலேயே விட்டெறிந்தாள்.

அடுத்த நொடியே வெறி பிடித்தவள் போல, "யாரைக் கேட்டு இப்போ புடவை வாங்கிட்டு வந்தீங்க? நானா உங்களைக் கேட்டேன்? ஓஹ்! புடவை வாங்கிக் கொடுத்து, பேங்க் அக்கௌன்ட் ஆரம்பிச்சு கம்பெனில பாட்னர் ஆக்கிட்டா, உங்க இஷ்டப்படி ஆடுவேன்னு நினைச்சீங்களா? இல்ல, இதெல்லாம் செய்தா நான் உங்ககிட்ட மயங்கி உங்க காலடியில் விழுந்திடுவேன்னு நினைச்சீங்களா?" என்று ஆத்திரத்துடன் கத்தினாள்.

அவளது செய்கையில் அதிர்ந்து போனவன், அவளது வார்த்தைகளைக் கேட்டதும் ஆத்திரத்துடன், “ஏய்... என்ன பேசறோம்னு புரிஞ்சு பேசறியா இல்லையா? அப்படியே, ஒரு அறைவிட்டா எப்படியிருக்கும் தெரியுமா? நான் எதுக்குடி உன்னை மயக்கணும்? நீ, என் பொண்டாட்டி. உன்கிட்ட, எனக்கில்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு? நானும் முடிஞ்ச அளவுக்குப் பொறுமையா இருக்கேன். நீ என்னடான்னா என்னையே இவ்வளவு கேவலமா பேசற. ஒரு புடவை ஆசையா வாங்கிக் கொடுத்தா, அதுக்கு இப்படித் தான் பேசுவியா? நீ யாரையும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு நினைச்சித் தானே உனக்குப் பேங்க் அக்கௌன்ட் ஆரம்பிச்சிக் கொடுத்தேன்" என்று சித்தார்த்தும் பதிலுக்குச் சப்தம் போட, அன்று முழுவதும் இருந்த ஒரு நூலிழை அன்பும், முற்றிலுமாக அறுந்து விழுந்தது.

அவனது வார்த்தைகளில் இருந்த உண்மையை, அவள் உணர்ந்திருந்த போதும், "என்னை வெறுப்பேத்தத் தானே இந்தக் கலர்ல புடவை வாங்கிக் கொடுத்தீங்க" என்று கண்ணீர் உகுத்தவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

"ஏதாவது உளறாதடி! நான் எதுக்கு உன்னை வெறுப்பேத்தணும்? ராஜேஷ் கல்யாணத்துல இந்தக் கலர்ல நீ புடவை கட்டியிருந்ததைப் பார்த்தேன். உனக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது. அதான், கடைல அந்தக் கலர்ல பார்த்தும் ஆசையா வாங்கிட்டு வந்தேன். அதுக்கு என்னவெல்லாம் பேசற. என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தோணுது? சே..." என்று தலையை அழுந்தக் கோதிக்கொண்டு கோபத்துடன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

அவளும் அழுதுக்கொண்டே தரையில் அமர்ந்தாள். பீச்சில் காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் வீலின் மீது கவிழ்ந்து கொண்டான். ‘தன் வாழ்க்கையில், என்றுமே அமாவாசைதானா!’ என்று அவனது இதயம் கேள்வி கேட்டது. குளிர்ந்த காற்றும், அமைதியும் அவனது மனத்தைச் சற்று இளக்க, நடந்தவைகளைப் பொறுமையாக யோசித்தான். ‘அவளது இந்த எதிர்பாராத் ஆக்ரோஷத்திற்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ?’ என்று எண்ணினான்.

சித்தார்த் வெளியே சென்று இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. சற்றுநேரம் அழுதுகொண்டிருந்தவள், தனது வார்த்தையின் வீரியம் அவனை எந்த அளவிற்குத் தாக்கியிருக்கும் என்று உணர்ந்தவளுக்கு, தன்னை நினைத்தே எரிச்சலாக வந்தது.

‘கோபமாகச் சென்றானே... எங்கே சென்றானோ?’ என்ற கவலையுடன் அறைக்குள்ளேயே உலவிக் கொண்டிருந்தாள். வெளியே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் மனத்தில் சிறு நிம்மதி பரவ, வேகமாக வந்து பெட்ஷீட்டை இழுத்து மூடிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

அறைக்குள் வந்தவன் கட்டிலின் அருகிலிருந்த டேபிள் மேலே புடவை மடித்து வைக்கபட்டிருந்தது. திரும்பி அவளைப் பார்த்தான். அவள் முகத்தைப் பார்க்காவிட்டாலும், அவள் இன்னும் உறங்கவில்லை என்று அறிந்து கொண்டவன், எதுவும் சொல்லாமல் படுத்துக்கொண்டான்.

நாளுக்கு நாள் மனத்தில் கேள்விகள் மட்டும் பெருகிக் கொண்டே இருந்தன. அதற்கான விடைகள் காலத்தின் கைகளில் இருந்தன.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
448
63
அத்தியாயம்—56

அன்று இரவு நடந்த பிரச்சனைக்குப் பிறகு, அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவர்களுக்கிடையில் சுமுகமான பேச்சு இல்லவே இல்லை. இருவருக்கும் இடையே நிகழ்ந்த பிரச்சனையால் வந்த கோபம் அல்ல.

‘அவனுடைய மனத்தைக் காயpபடுத்திவிட்டோமே’ என்ற குற்ற உணர்வில், மதுமிதா தவிக்க, அவள் மனம் மாறி வரும் நேரத்தில் அவசரப்பட்டு விட்டேனே’ என்று தனக்குள் புழுங்கிக் கொண்டிருந்தான் சித்தார்த்.

காலையில் விரைவாகக் கிளம்பி அலுவலகம் சென்றுவிடுவதும், இரவில் நேரம் கழித்து வருவதுமாக, வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டான். மதுவோ, ‘தன்னால் தான் அவன் இப்படி ஓயாமல் தன்னை வேலையில் ஈடுபட்டு வருத்திக்கொள்கிறான்’ என்ற கவலையில் இருந்தாள். அதேநேரம், அவனை அணுகிப் பேசவும் அச்சமாக இருந்தது.

இந்த நிலையில் மீராவின் வீட்டில் ஒரு விசேஷம் வர சித்தார்த்தின் தந்தை, "கட்டாயம் நாம எல்லோரும் குடும்பத்தோட போய் வரணும். நாம எல்லோரும் சேர்ந்து வெளியே போய் ரொம்ப நாள் ஆகிடுச்சி. சம்மந்தியும் வரும் போதெல்லாம் சொல்லிட்டுப் போறாங்க. அதனால, எல்லோரும் ஒரு பத்து நாள் போய்த் தங்கிட்டு வரலாம்" என்றார்.

"சாரிப்பா! ஏற்கெனவே ரொம்ப நாள் லீவ் போட்டுட்டேன். ஜீவாவும் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா ஹைதராபாத்துக்கும், சென்னைக்குமா அலைஞ்சிட்டு இருக்கான். இப்போதைக்கு என்னால் வர முடியாது" என்றான் சித்தார்த்.

"எங்களாலும் வர முடியாதுப்பா. இன்னும் ரெண்டு எக்ஸாம் தான் இருக்கு. அதை முடிச்சதும் நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு டூர் போறோம். திரும்பி வந்ததும் கேம்ப் போகணும்” என்று அஷ்வந்தும், நேத்ராவும் சொல்லிவிட்டனர்.

"அப்போ சரி இவங்க மூணு பேரும் வரல. கல்யாணமாகி மதுவை மட்டும் தனியா முதன்முதல்ல எப்படிக் கூட்டிட்டுப் போறது? அதனால, நாம மட்டும் போகலாம் அத்தை. இவங்க நாலு பேரும் இருக்கட்டும்" என்ற மீராவின் பார்வை மதுமிதாவின் மீது அழுத்தமாக படிந்தது.

தேவகியும் ஆமோதிப்பாக, "அதான் சரி. மீரா சொன்னபடியே செய்துடலாம். ஆதி! நீ ட்ரவல்ஸ்ல சொல்லி டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்" என்றார்.

தேவகி கிளம்பும் முன் மதுவிடம், “உன்னைத் தனியா விட்டுட்டுப் போறது கஷ்டமா இருக்கா மது! முதன்முதலா ஒரு விசேஷத்துக்கும் போகும் போது ஜோடியாக போனால் தான் நல்லாயிருக்கும்" என்று விளக்கமும் சொன்னார்.

அவளும், "பரவாயில்ல அத்தை! நீங்கள்லாம் போய்ட்டு வாங்க. கண்டிப்பா நாம எல்லோரும் சேர்ந்து எங்கேயாவது போய்ட்டு வரலாம். நான் பார்த்துக்கறேன்” என்று அவர்களுக்குச் சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தாள்.

இரண்டு நாள்களுக்கு முன் சித்தார்த்தும் மதுவும் வெளியே சென்று வந்தபோது அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சியைப் பார்த்த மீரா, இருவரையும் கவனித்துக்கொண்டு இருந்தாள். சித்தார்த் தன் அறைக்குச் செல்லும் முன், மதுவிற்கு ஜாடை காட்டிவிட்டுச் சென்றதைப் பார்த்து, இருவரும் ஏதோ சமரசத்திற்கு வந்துவிட்டார்கள். இனி, மெல்ல எல்லாம் சரியாகிவிடும்’ என்று எண்ணி கொண்டு இருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் சித்தார்த் கோபமாக எங்கோ செல்வதை தற்செயலாகச் பார்த்த மீரா, ஆதியிடம் சொல்ல, இருவரும் தூங்காமல் சித்தார்த்தின் வருகைக்காகக் காத்து இருந்தனர்.

இரண்டு மணி நேரம் கழித்துச் சித்தார்த் வரும்போது, அண்ணனும், அண்ணியும் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் சுதாரித்துக் கொண்டான். அண்ணனுடன் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு தன் அறைக்குச் சென்றதுமே எதுவோ சரியில்லை என்று இருவருக்கும் புரிந்தது.

அதன்பின் வந்த நாட்களில் சித்தார்த்தின் நடவடிக்கையில் மாற்றத்தையும், மதுமிதா அவனருகிலேயே இருந்த போதும் அவனது பார்வை அந்தப் பக்கமே செல்லாமல் இருப்பதையும் பார்த்தாள்.

அதே போன்று மதுமிதாவின் பார்வை இப்போது அடிக்கடி கணவனின் மேல் படிவதையும், ஆனால், ஏதோவொரு தயக்கம் அவளிடம் குடிகொண்டிருப்பதையும் கவனித்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

இருவருக்கும் இப்போது தேவையான மருந்து தனிமை. ஒன்று அவர்களை எங்காவது அனுப்பி வைக்கவேண்டும். ஆனால், இருப்பதைப் பார்த்தால் அவன் அதற்குச் சம்மதிக்கமாட்டான். அதனால், அவர்களைத் தனியாக விட்டுவிட்டு தாங்கள் எல்லோரும் எங்கேனும் சென்று வரவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அவளுக்கு வாய்ப்பாக அவளது தந்தை வழி உறவில் ஒரு விழா வர, நல்ல சமயம் என்று கணவனுடன் சேர்ந்து பேசி அதை பயன்படுத்திக் கொண்டாள். அதை நடத்தியும் விட்டனர்.

யார் சொல்லி என்ன? யார் என்ன செய்து என்ன? பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்ட இருவரும், பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போது, அதற்கான பலன் என்னவாக இருக்கும்? மேலும் இரு நாள்களும் ஓடியது தான் மிச்சம். பிரச்சனையும் கிணற்றில் போட்டக் கல்லைப் போல, அப்படியே இருந்தது. ஒன்றைத் தவிர.

அவள் வீட்டில் தனியாக இருப்பாளே என்ற காரணத்தால் மாலையில் விரைவாக வீடு வந்து சேர்ந்து விடுவான்.

மதியத்திற்கு மேல் ஆபிஸிலிருந்து போன் செய்வான். "சாப்பிட்டாயா?" என்ற ஒற்றை கேள்விக்கு, அவளிடமிருந்து "ம்ம்.." என்ற ஒற்றை வார்த்தை பதிலுடன், ஒரு தலையாட்டல் மட்டும்தான் இருக்கும்.

அப்படியே மாலையில் வீட்டுக்கு வந்ததும் அவள் ஊஞ்சலிலோ, சோஃபாவிலோ, அமர்ந்திருப்பதும், சித்தார்த் லாப்டாப்பில் மூழ்கிவிடுவதுமாக இருந்தனர். அன்றும் அவள் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, சித்தார்த் அறையில் லாப்டோப்பில் வேலை செய்து கொண்டிருக்க சித்தார்த்திற்கு ஸ்ரீராமிடமிருந்து போன் வந்தது.

ஸ்ரீ ராம் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டே மதுவைப் பார்த்தான். அவள் அமர்ந்திருந்த தோற்றத்தைப் பார்க்க பார்க்க, அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. ஸ்ரீ ராம் சொல்லி முடித்தும், “சரி ஸ்ரீராம்! நீங்க எல்லா ஏற்பாடும் செய்துடுங்க. மற்றதை நான் பார்த்துக்கறேன்" என்றான்.

அதன்பிறகு அவனுக்கு வேலையே ஓடவில்லை. உள்ளே இருந்தபடியே கண்ணாடி ஜன்னல் வழியாக, சாலையோர விளக்கொளியில் ஊஞ்சலில் ஆடியபடி இலக்கின்றி எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிதுநேரத்தில் ராஜேஷிடமிருந்து போன் வர, வழக்கமான விசாரிப்புக்குப் பிறகு, “சந்துரு அங்கிள் பேசணுமாம்" என்று போனை சந்த்ருவிடம் கொடுத்தான்.
அனைவரையும் விசாரித்த சந்துரு தயக்கத்துடன், "சித்தார்த்! நாளைக்கு அர்ஜுனுக்கு நினைவு நாள்" என்றார்.

"தெரியும் சித்தப்பா! இப்போதான் ஸ்ரீராம் போன் செய்தார்" என்றான்.

"ஒஹ்...” என்றவர், சொல்லவந்ததைச் சொல்ல முடியாமல் தவிப்புடன், “சரிப்பா! நான் போனை ராஜேஷிடம் கொடுக்கிறேன்" என்று கொடுத்துவிட்டுச் சென்றதும். ராஜேஷிடம் பேசிவிட்டுப் போனை வைத்தான்.

சிறிதுநேரம் யோசனையிலிருந்தவன், பால்கனி கதவைத் திறந்துக்கொண்டு வெளியே சென்றான்.

"மது!" என்று அழைத்ததும் அவன் அழைப்புக்காகவே காத்திருந்தது போல, "ஆஹ்... ஏதாவது வேணுமா?" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். மணி பதினொன்று ஆச்சு. வந்து படு" என்றதும், எதுவும் சொல்லாமல் எழுந்து வந்து படுத்தாள். ஆனால், உறக்கம் மட்டும் வரவில்லை.

இரவு விளக்கின் ஒளியில் அவளது தோள்கள் அழுகையில் குலுங்குவதைக் கண்டவனுக்கு, அவளை என்ன சொல்லிச் சமாதானம் செய்வதெனப் புரியாமல் இந்த நிலையிலிருப்பதை எண்ணி தன் மீதே வெறுப்பாக வந்தது.

காலையில் அவன் கண்விழித்தபோது, அவள் அங்கில்லை. எழுந்து ஜாகிங் போகும் எண்ணமில்லாமல் அமர்ந்திருந்தவன், குளித்துவிட்டுக் கீழே வந்தான். மது காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்.

கிச்சனுக்கு வந்த சித்தார்த், "குட் மார்னிங் மது" என்றான்.
சப்தம் கேட்டுத் திரும்பியவள், ஐந்து நாள்களுக்குப் பிறகு இன்றுதான் குட் மார்னிங் சொல்கிறான் என்று நினைத்துக்கொண்டே, “குட் மார்னிங்!" என்றாள் முறுவலுடன்.

"என்ன வேலைக்கு யாரும் வரலையா?"

"இல்ல. நான்தான் வரவேண்டாம்னு சொல்லிட்டேன். நாம ரெண்டு பேர் மட்டும் தானே. அஷ்வந்தும், நேத்ராவும் காலையிலேயே கிளம்பி கம்பைன் ஸ்டடின்னு போய்ட்டாங்க" என்றாள்.

சித்தார்த்திற்கு டிபனை எடுத்து வைத்தாள். "வாங்க சாப்பிடுங்க" என்றாள். நீயும் உட்கார் சேர்ந்து சாப்பிடலாம்" என்றதும், "இல்ல. நான் அப்புறம் சாப்பிடுறேன் நீங்க சாப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயன்றாள்.

"நீ சொன்னா கேட்க மாட்ட. இருக்கறது நாம ரெண்டு பேர். இதில் என்ன தனித்தனியா சாப்பிடுவது? உட்கார்!” என்று கட்டாயப்படுத்தி அமரவைத்தவன், தானே டிபனைத் தட்டில் வைத்து அவளுக்கு முன்பாக வைத்தான்.

அவளும் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும், பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். சித்தார்த், ரமேஷிற்குப் போன் செய்து, ‘இன்று வேலைக்கு வரவில்லை என்றும், அவசியம் ஏற்பட்டால் போன் செய்யும் படியும் கூறிவிட்டுப் போனை வைத்தான்.

பேசிவிட்டு வந்தவன், சமையலறையை எட்டிப்பார்த்தான். அங்கே அவள் இல்லை. எங்கே என்று தேடியவன், வீட்டின் பின்னால் பறவைகள் இருந்த கூண்டின் அருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அங்கே சென்றான்.

"எதுக்கு இப்படி வெயில்ல வந்து நின்னுட்டிருக்க? உள்ளே வா" என்றான். அவள் எதுவும் சொல்லாமல் வீட்டை நோக்கி நடந்தாள். பதினோரு மணி அளவில், "மது! கிளம்பு, கொஞ்சம் வெளியே போய் வரலாம்" என்றான்.

அவள் தயக்கத்துடன், "சாரி! நான் வரல. நீங்க போய்ட்டு வாங்க" என்றாள்.

"வெளியே கிளம்பறதே உனக்காகத் தான். உனக்கும், கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும். கிளம்பு" என்றான் நிதானமாக.

"நான்தான் வரலன்னு சொல்றேனே. அப்புறம் கிளம்பி வா கிளம்பி வான்னு ஏன் என்னைத் தொல்லை செய்றீங்க. நான் எங்கேயும் வரல" என்றவள் தங்கள் அறைக்குச் செல்ல, அவன் பின்னாலேயே வந்தான்.
அவள் சோஃபாவில் அமர்ந்திருக்க, “இப்போ நீ வர்ற. உனக்குப் பதினைந்து நிமிடம் தரேன். அதுக்குள்ள கிளம்பி வர்ற" என்றவன் உடையை மாற்றிக்கொண்டு, "இன்னும் ஏழு நிமிஷம் தான் இருக்கு. சீக்கிரம்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அவள் ஆத்திரத்துடன், “சே...!” என்று குஷனைத் தூக்கிக் கட்டில்மீது எறிந்தாள்.

அவள் கிளம்பி கீழே வந்தபோது சித்தார்த் காரில் அமர்ந்திருந்தான். சரியாக பதினைந்து நிமிடம் ஆனதும் ஹாரனை நிறுத்தாமல் அடிக்க ஆரம்பித்தான்.

எரிச்சலுடன், ‘ஹப்பா! பிடிவாதம் பிடிவாதம் உடம்பு முழுக்கப் பிடிவாதம். தான் நினைத்ததைச் சாதித்தே தீரணும்’ என்று எண்ணிக்கொண்டே காரில் அமர்ந்ததும் கதவை கோபத்தோடு வேகமாகச் சாத்தினாள். அவனும், அவள் அமர்ந்த பின்பே ஹாரன் அடிப்பதை நிறுத்தினான்.

அவன் புன்னகையுடன் காரைக் கிளப்ப, ‘இந்தச் சிரிப்பில் ஒண்ணும் குறைச்சல் இல்லை. பெரிய புன்னகை மன்னன் என்று நினைப்பு’ என்று எண்ணிகொண்டே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் காட்சியைக் கண்டபோதும், கருத்தில் பதியவில்லை.

இருபது நிமிடப் பயணத்திற்குப் பிறகு, "இறங்கு மது!" என்றான்.

கார் ஸ்ரீராமின் ஹோமில் நின்றுகொண்டிருக்க, விழிகள் அகல திகைப்புடன் அவனைப் பார்த்தாள். காரைப் பூட்டிவிட்டு அவன் முன்னால் நடக்க, அவனைப் பின்தொடர்ந்து ஸ்ரீராமின் அலுவலக அறைக்குச் சென்றனர்.

ஸ்ரீ ராமிடம் பேசும்போதும், ஒருவித இறுக்கத்துடனேயே அமர்ந்திருந்தாள். "ஓகே ஸ்ரீ! நான் கிளம்பறேன்” என்றவன் அவளிடம், "மது! நான் கிளம்பறேன். ஈவ்னிங் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

மதுவிற்கோ, என்னவென்று புரியாத நிலையில் ஒரு பக்கம் எரிச்சலும், ஒரு பக்கம் ஆத்திரமும் போட்டியிட ஸ்ரீராமுடன் சென்றாள்.

தீபக்கின் வீட்டிற்குள் நுழைந்த சித்தார்த்தை அங்கிருந்த யாரும் எதிர் பார்க்கவில்லை என்பதை அவர்களது பார்வையே உணர்த்தியது. தான் வாங்கி வந்திருந்த மாலையை அர்ஜுனின் புகைப்படத்திற்கு போட்டான்.

சந்துரு நெகிழ்ச்சியுடன் கண்கலங்க, அவர் கைகளை ஆதரவுடன் பற்றிக்கொண்டு, சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தான்.

"சித்தி எங்கே சித்தப்பா?" என்றான்.

"ரெண்டு நாளா அர்ஜுனை நினைச்சி அழுதுட்டே இருந்தா. காலைல திடீர்னு பிபி அதிகமாககிடுச்சி. டாக்டர் வந்து பார்த்து இன்ஜெக்ஷன் போட்டுட்டுப் போனார். தூங்கிட்டிருக்கா" என்றவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அதேநேரம், மயக்கம் தெளிந்து எழுந்த விமலா அறைக்குள் வந்தவனைக் கண்டதும், “அர்..ஜுன்...” என்றவர், சுதாரித்துக்கொண்டு, அழுதார்.

அவரருகில் அமர்ந்தவன், ஆறுதலாக அவரது கரத்தைப் பற்றிக் கொண்டான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு, “மது வந்திருக்காளா?" என்றார்.

“இல்ல. அவளை ஹோம்ல விட்டுட்டு வந்திருக்கேன். நான் இங்கே வந்தது அவளுக்குத் தெரியாது" என்றான்.

நெகிழ்ச்சியுடன் அவனுடைய கரத்தைப் பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டு,, “உன்னை மாதிரி ஒருத்தன் கிடைக்க அவள் புண்ணியம் செய்திருக்கணும். அவளும், உன் அருமை புரிஞ்சி நடந்துக்கணும்” என்று தழுதழுத்தவர், “நடந்துக்குவா... நடந்துக்குவா... அவள் எங்களுக்காகத் தான் உன்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா. ஆனா, உன் மேல அவளுக்கு ரொம்ப நல்ல அபிப்பிராயம் சித்தார்த்! கூடிய சீக்கிரம் அவ மாறுவா.

உனக்குத் தெரியுமா! உன்னைக் கல்யாணம் செய்துக்க அவள் சம்மதம் சொன்னதும், அர்ஜுன் சம்மந்தபட்ட, அவளுக்கு வாங்கிக் கொடுத்த எல்லா பொருளையும் திரும்ப எங்ககிட்டயே கொண்டுவந்து கொடுத்துட்டா” என்று ஷெல்பில் இருந்த கொடுத்த அனைத்துப் பொருட்களையும் சுட்டிக்காட்டினார்.

திரும்பி ஷெல்ஃபைப் பார்த்த சித்தார்த்தின் கண்களில், அந்தத் தேன் நிறப் புடவை பளிச்சென்று தெரிந்தது.

அவர் அருகில் வந்த ச்ந்துரு, “விமலா போதும்மா! நீ ரொம்பச் ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே. கொஞ்சம் ரெஸ்ட் எடு" ‘எல்லாவற்றையும் இப்படிச் சித்தார்த்திடம் சொல்லிக் கொண்டிருக்கிறாளே’ என்று எண்ணி அதைத் தடுக்க முயல. "நீங்க சும்மா இருங்க. சித்தார்த் யாரு? அவனும் என் பிள்ளை தான்" என்றவர், அவனிடம், “சித்தார்த்! என்னை நீ அம்மான்னு கூப்பிடுறியா?" என்று கலங்கிய விழிகளில் எதிர்பார்ப்புடன் கேட்டார்.

அவரது கேள்வி அங்கிருந்தோர் அனைவருக்கும் கண்ணீரை வரவழைக்க, சித்தார்த்தின் பதிலுக்காகக் காத்திருந்தனர்.

ஒரு தாயின் உணர்வுகளை மதித்தவனாக, "கண்டிப்பா! நீங்களும் எனக்கு அம்மாதான். இனி, உங்களை அம்மான்னே கூப்பிடுகிறேன்" என்றான்.

மகிழ்ச்சியுடன் சிரித்தவர், அவனது கன்னத்தை வருடியபடி, "அர்ஜுன் என்னை வாய் நிறைய அம்மான்னு கூப்பிடுவான். வீட்ல இருந்தா அம்மா அம்மான்னு என்னைச் சுத்திச் சுத்தி வருவான். என்கிட்டச் சொல்லாம எங்கயுமே போகமாட்டான்.ஆனா, இப்போ... எங்களைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டான்” என்று அவன் மீது சாய்ந்து கதறி அழ, கலங்கிய விழிகளுடன் அவரை அணைத்துக் கொண்டான்.

சட்டென தன்னைச் சமாளித்துக் கொண்டவன், "நான் இருக்கேன் அம்மா... உங்களுக்கு. நீங்க இப்படி அழக்கூடாது. மதுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா. நான் ஈவ்னிங் வரைக்கும் இங்கே தான் இருப்பேன். நீங்க கொஞ்ச ரெஸ்ட் எடுங்க. தூங்கி எழுந்ததும் நாம பேசலாம்" என்று அவர் மறுபடி உறங்கும் வரை அவர் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

வீட்டிலிருந்த அனைவருமே ஒருவிதமான இறுக்கத்துடன் இருந்தனர். ராஜேஷ், சித்தார்த்தைச் சாப்பிட அழைத்துச் சென்றான். மாலைவரை அங்கேயே இருந்தவன் விமலாவிற்குத் தைரியம் சொல்லிவிட்டு, மதுவுடன் ஒரு நாள் வருவதாகக் கூறி விடைபெற்றுக் கிளம்பினான்.

வரும் வழியில், மது அன்று புடவையைப் பார்த்ததும் கத்தியதே நினைவிற்கு வந்தது. இன்று அதை நினைக்கும் போது, அவளுடைய செய்கை நியாயமாகவேபட்டது. ‘நான்தான் அன்று கொஞ்சம் அவசரப்பட்டு கோபத்துடன் அவளிடம் கத்திவிட்டேன். அதற்காக இன்று அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டே ஹோமிற்குச் சென்றான்.

ஸ்ரீ ராமுடன் சிறிதுநேரம் பேசிவிட்டு , மதுவை அழைத்துக்கொண்டு கிளம்பினான். ஆழ்ந்த அமைதியுடன் வரும் மனைவியைப் பார்த்தான். அவள் ஏதோ பலத்த யோசனையில் இருந்தாள்.

தனது நினைவுகளில் ஆழ்ந்திருந்த மதுமிதா, அன்று அர்ஜுனின் புகைப்படத்தைப் பார்த்ததும தான், அவனது நினைவு நாள் நினைவிற்கு வந்தது. இந்த நாளை எப்படி மறந்தோம்? என்ற கலக்கத்துடன் வீட்டிற்கும் வந்தாள்.

ஆனால், சித்தார்த் அவளிடம் கொடுத்த புடவை, அவன் பேசிய வார்த்தைகள், எல்லாம் அர்ஜுனின் நினைவை அவளுக்கு அதிகமாக்கிவிட, தன்னையும் மீறி வெளிப்பட்ட வார்த்தைகள் சித்தார்த்தைத் தாக்கின.

அவன் கோபத்தோடு கிளம்பி சென்றதும், தன்னுடைய வார்த்தைகளின் வீரியம் புரிய, தன்னையே நொந்துகொண்டவள், புடவையை எடுத்து மடித்து வைத்தாள்.

அர்ஜுனின் மறைவிற்குப் பிறகு, அவனது பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், ஸ்ரீராமின் ஹோமிலிருந்த அனைவருக்கும் தன்னுடைய செலவில் உணவும், உடைகளும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆனால், இனி, தன்னால் அதைச் செய்ய இயலாதே என்ற எண்ணத்தோடு அடுத்து வந்த நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

அர்ஜுனின் நினைவு நாளன்று, மது சரி நம்மால் இனி, அப்படிப் போய் எதுவும் செய்ய முடியாது. அதனால் ஸ்ரீராமிற்குச் செக் அனுப்பிவிடலாம் என்ற யோசனையுடன் பறவைகளின் கூண்டருகே நின்று கொண்டிருக்க, சித்தார்த் அவளைக் கட்டாயபடுத்தி அழைத்து வந்துவிட்டான். ஆனால், ஹோமிற்கு வந்து சேரும் வரை கூட மதுவிற்குத் தான் செல்லும் இடம் தெரியாததால், சித்தார்த்தின் மேல் அவளுக்கு எரிச்சல் தான் வந்தது.

ஒருவிதமான இறுக்கத்துடனேயே அமர்ந்திருந்த மதுவை ஸ்ரீ ராம் அழைத்துக்கொண்டு குழந்தைகள் இருக்கும் இடத்திற்குச் சென்றான். மதுவைப் பார்த்ததும் அனைத்துக் குழந்தைகளும் ஆசையுடன் அவளருகில் வந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவளது மனமும் சற்று அமைதி அடைந்திருந்தது.

மதிய உணவை குழந்தைகளுடன் சேர்ந்து உண்டாள். மேலும் சிறிதுநேரம் குழந்தைகளுடன் இருந்தவளை, ஸ்ரீ ராம் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

" கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறியா மது?" என்றான்.

"இல்லைண்ணா. வேண்டாம்" என்று மறுத்தவளின் அருகில் வந்து அமர்ந்தான்.

"மது! ஏன் நீ முன்னமாதிரி வர்றதில்ல. நீ வந்தே ரெண்டு மாசம் ஆகிடுச்சி" என்றான்.

"இனி, என்னால எப்படிண்ணா அடிக்கடி வர முடியும்? எங்க வீட்ல கேட்கணும். சித்தார்த்தைக் கேட்கணும். இனி, நான் தனி ஆள் இல்லையே" என்றவளைப் பார்த்துச் சிரித்தான்.

"என்னண்ணா சிரிக்கிறீங்க?"

"நம்ம ஹோம்ல ஏதாவது வித்தியாசம் தெரியுதா?" என்றான்.

"ஹ்ம்ம்... இடத்தைக் கொஞ்சம் பெரிசாக்கி இருக்கீங்க. புதுசா பில்டிங் கட்டிட்டிருக்கீங்க. நானே கேட்கணும்னு நினைச்சேன். பரவாயில்லை, ஊர்ல இப்போ நிறைய தாராள மனம் படைச்சவங்க இருக்காங்க போல" என்றாள்.

"ஆமாம், இருக்காங்க. அவங்க யாருன்னு நீ தெரிஞ்சிக்க வேண்டாமா?" என்றதும். "எனக்கு அவங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறீங்களா?" என்று குதூகலத்துடன் கேட்டாள்.

"அறிமுகப்படுத்தவேண்டிய அவசியமே இல்ல. உனக்கு அவர்களை நல்லாவே தெரியும்" என்று புன்னகைத்தான்.

"எனக்குத் தெரிஞ்சவங்களா... யார் அது?" என்றவள் சட்டென, "அண்ணா! சித்தார்த்தா...!" என்று கேட்டதும். ஆம் என்று தலையசைத்தான்.

தன்னிடம் சொல்லாமல் இவ்வளவு விஷயங்களைச் செய்திருக்கிறானா? என்று அவள் வாயடைத்துப் போனாள்.

"சித்தார்த்தை முதல் முறை பார்த்ததுமே சொன்னேன்... உனக்கு ஒரு நல்ல துணைன்னு. நல்ல குணமும் கூட. சித்தார்த் இங்கே முதல்முறை வந்து போன போது, சீக்கிரமே நல்ல செய்தியோடு உங்களைப் பார்க்க வரேன்னு சொல்லிட்டுப் போனார். நான்கூட உங்க கல்யாண விஷயமா இருக்கும்ன்னு நினைச்சேன். ஆனா, நான்கு நாள்கள் கழித்து வந்து என்னோடு பேசினார்.

ஹோம் நடத்த ஆகும் செலவு, உணவு, பராமரிப்பு செலவு என்று எல்லா விவரமும் வேண்டும் என்று சொல்லி வாங்கிக்கொண்டு சென்றார். அதுக்கப்புறம் வேகமா வேலை நடந்தது. இந்த ஹோமையே மொத்தமாக, தன் கம்பெனி மூலமா அவங்களுடைய பொறுப்புல எடுத்துக்கிட்டாங்க.

அதே போல, இங்கேயிருக்கும் குழந்தைக படிப்பு செலவு முதல், அவங்க பெரியவர்கள் ஆகி வேலை கிடைக்கும் வரை எல்லாப் பொறுப்பையும் ஏத்துக்கிட்டாங்க. பக்கத்து நிலங்களையும் வாங்கி, புது பில்டிங் கட்டி கொடுத்திருக்காங்க" என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல மது மெளனமாக கேட்டுக்கொண்டாள்.

"இவ்வளவையும் நடத்துறது சாதாரண வேலை இல்லன்னு உனக்கே தெரியும். தன்னோட ஃப்ரெண்ட்ஸ் கூடப் பேசி, அவங்களையும் இதுல இன்வால்வ் பண்ணியிருக்கார். சீக்கிரமே மெடிக்கல் கேம்ப்க்கு ஏற்பாடு செய்து தர்றதாவும் சொல்லியிருக்கார். நான் கூட கேட்டேன் ஏன் மது வர்றதில்லன்னு. நான் அவளைத் தடுக்கல ஸ்ரீ! அவளுக்கு விருப்பம் இருந்தா தாராளமாக வரட்டும். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைன்னு சொன்னார்.

சித்தார்த் போனவாரம் இங்கே வந்திருந்த போதே, அர்ஜுன் பிறந்த நாளுக்கும், நினைவு நாளுக்கும் நீ இங்கே வந்து போவன்னு சொன்னேன். உடனே, அதற்கு அவரே செக் கொடுத்துட்டு, “இனி, மது இதை எப்படிச் செய்றதுன்னு நினைச்சித் தயங்கலாம். என்கிட்ட இதைப் பத்திப் பேச அவளுக்குத் தர்மசங்கடமா இருக்கும். அதனால் நானே செக் கொடுத்துடுறேன். எனக்கு ஒரு போன் செய்து கொஞ்சம் ஞாபகப்படுத்துங்க. இருக்கற வேலைல நான் மறந்தாலும் மறந்துவிடுவேன்னு சொன்னார். ஊருக்குப் போய்ட்டு நேத்துதான் நானும் ஊரிலிருந்து வந்தேன். உடனே, சித்தார்த்திற்குப் போன் செய்தேன்" என்றான்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டவள் மனத்தில், ‘சித்தார்த்தின் குணத்தை இன்னும் நான் புரிந்து கொள்ளவில்லையோ!’ என்ற எண்ணம் ஏற்பட தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தாள். இன்னும் அந்தக் குழப்பம் தீராமலேயே வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

கார் வீட்டை நெருங்கும் நேரம், சித்தார்த்தின் மொபைல் ஒலித்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு பேசி முடித்தான்.

“மது! ரமேஷும், அம்மாவும் நம்ம வீட்டிற்கு வந்திருக்கிறார்களாம்" என்று செய்தி சொல்லிக்கொண்டே விரைவாக வீட்டை அடைந்தான்.

வாசலிலேயே அபிராமியும், ரமேஷும் நின்றிருந்தனர். "வாங்க ஆன்ட்டி, வாங்க அண்ணா” என்று புன்னகைத்தவள் அபிராமியை நோக்கிச் சென்றாள்.

"என்ன மதும்மா, எப்படியிருக்க?” என்று பேசிக்கொண்டிருக்க சித்தார்த்தும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான்.

"நாங்க மட்டும் தானே வீட்டில் இருக்கிறோம் என்று வேலைக்கு யாரும் வர வேண்டாம்னு சொல்லிவிட்டாள் மது. அதான் வாட்ச்மேன் மட்டும் இருக்கார். ஏன் நீங்க வெளியவே நின்னுட்டு இருந்தீங்க. உள்ளே உட்கார்ந்திருக்கலாமே?" என்றான்.

"வாட்ச்மேன் உள்ளே தான் உட்காரச் சொன்னார். வெளியே காத்து அருமையா இருந்தது. அப்படியே நிற்கிறோம்ன்னு சொல்லிவிட்டோம்" என்றான் ரமேஷ்.

"ஆன்ட்டி! முதல்முதல்ல நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. இருந்து சாப்டுட்டுத் தான் போகணும்" என்றாள்.

"என்ன மெனு மது? இட்லி, தக்காளி சட்னியா?" என்று ரமேஷ் சிரித்துக்கொண்டே கேட்க, "டேய்! சும்மா இருடா" என்றவன், தன்னை முறைத்த மதுவைப் பார்த்து தர்ம சங்கடத்துடன் சிரித்து வைத்தான்.

"அப்புறம் காஃபி... " என்று தொடங்கிய ரமேஷின் கையில் கிள்ளியவன், "என்னமோ முக்கியமான விஷயம்னு சொன்னியே என்னடா?" என்று கேட்டான்.

அவள் எழுந்து சமையலறைக்குச் செல்ல, அபிராமியும் உடன் சென்றார்.

ரமேஷிடம் திரும்பிய சித்தார்த், "டேய் பாவி... உன் வாயை வச்சிக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா? அவள் வேப்பிலை எடுத்து ஆடாத குறையா ஆடவா?" என்று கேட்டதும் சிரித்த ரமேஷ், "அடடா! தி கிரேட் பிஸினஸ் மேன் சித்தார்த் அவர் பொண்டாட்டிக்கு எப்படிப் பயப்படறாருன்னு பாருங்க..." என்று சத்தமாகச் சொல்ல, அவன் வாயைப் பொத்தினான்.

"எதுக்குடா இப்படிக் கத்தற? அவள் காதில் விழப் போகுதுடா..." என்றவன் சமையலறையைத் திரும்பிப் பார்க்க ரமேஷ் சத்தமாகச் சிரித்தான்.

"போதும்டா முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்" என்றான்.

"அதை அப்போ பார்த்துக்கலாம்டா" என்றவன், "சரிடா விஷயத்துக்கு வரேன். அந்த வெளிநாட்டுக் கம்பெனி ஜாயின்ட் வென்ச்சர் பத்திப் பேச இன்னைக்கு நைட் வரச்சொல்லி இருக்கான். நமக்கு டின்னர் அங்கே தான் கிளம்பு" என்றான்.

"என்னடா இப்போவே கிளம்பணுமா?" என்று கேட்டதும், “என்னடா ஆச்சு உனக்கு? உடனே கிளம்பறவன் நீதான். நீயே இப்படித் தயங்குற?" என்றான்.

"கண்டிப்பா நான் வரணுமா, நீங்க ரெண்டு பேரும் சமாளிச்சிக்குங்க. நான் நாளைக்கு வந்து உங்ககிட்ட விவரம் கேட்டுக்கறேன்" என்றான்.

"டேய்! நீ இப்படித் தலைகீழா மாறுவன்னு நான் நினைக்கவே இல்லடா. ஆனா, ஒண்ணும் செய்ய முடியாது. நீ வந்து தான் ஆகணும். அவங்க நம்ம மூணு பேரையும் கட்டாயம் வரணும்னு சொல்லியிருக்காங்க."

யோசித்தவன், "சரிடா! கிளம்பலாம். ஆனா, மது வீட்டில் தனியாக இருப்பாளே" என்றான்.

"அஷ்வந்த், நேத்ரா ரெண்டு பேரும் வரும் வரை அம்மா இருக்கட்டும். அப்புறம் அம்மா என் காரை எடுத்துக்கொண்டு கிளம்பட்டும். நான் உன்னோடு வந்துடுறேன்" என்றான்.

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த சித்தார்த், "சரி, நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்" என்று தன் அறைக்குச் சென்றான்.

காபியுடன் வந்தவள் ரமேஷிற்குக் கொடுத்துவிட்டு, “அண்ணா! அவர் எங்கே?" என்றாள்.

விஷயத்தைச் சொன்னவன், "அம்மா இருக்கட்டும் மது. அஷ்வந்த் வந்தவுடன் அம்மா கிளம்பட்டும்" என்றதற்கு, சரி என்று தலையாட்டினாள்.

சித்தார்த்தும் தயாராக கோட் சூட்டில் வந்தான்.

அபிராமி, இருவரிடமும், "நீங்க ரெண்டு பேரும் நாளைக்குக் கட்டாயம் நம்ம வீட்டுக்கு வரணும். காலையிலேயே வந்துடுங்க. ராஜேஷையும், தீபக்கையும் கூட வரச்சொல்லி இருக்கேன். அஷ்வந்த் நேத்ராவையும் கூட்டிக்கொண்டு வாங்க" என்றார்.

"கட்டாயம் வரோம் அம்மா. அஷ்வந்தும், நேத்ராவும் நாளைக்கு டூர் போறாங்க. எக்ஸாம் முடிஞ்சதும் என்ஜாய் பண்றாங்களாம்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் சித்தார்த்.

"சரிடா கிளம்பலாமா?" என்று ரமேஷ் கேட்டதும், “மது! நான் கிளம்பறேன். நீ தீபக் வீட்டுக்குப் போறியா?” என்று கேட்க, “வேண்டாம்” என்றாள்.

“சரி, நீ சாப்டுட்டுப் படுத்துக்கோ. நான் வர லேட் ஆகும். ஜாக்கிரதை" என்றவன் ரமேஷுடன் சென்றான்.

இருவரும் பேசிக்கொண்டிருக்க, அடுத்த அரைமணி நேரத்தில் அஷ்வந்த், நேத்ரா இருவரும் வந்ததும், சேர்ந்து சாப்பிட்டுவிட்டு அபிராமி காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார். மதுவும் வேலைகளை முடித்துக்கொண்டு வந்து படுத்தாள்.

சித்தார்த் வீட்டிற்கு வர நள்ளிரவு ஆகிவிட்டது. உறங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் குனிந்து முகத்தில் புரண்ட முடியை ஒதுக்கிவிட்டான். அவளது உறக்கம் கலைந்துவிடாமல் நெற்றியில் பட்டும் படாமலும் முத்தமிட்டான். நாளை எப்படியும் ரமேஷ் வீட்டிற்குச் சென்றுவந்ததும் அவளிடம் மனம் விட்டுப் பேசிவிட வேண்டும்’ என்ற முடிவுடன் உடையை மாற்றிக்கொண்டுவந்து படுத்தான்.



அத்தியாயம்—57

மறுநாள் காலை விரைவாக எழுந்த மது, அஷ்வந்த் நேத்ராவிற்குத் உணவைச் சமைத்து பேக் செய்து வைத்துவிட்டு நேத்ராவின் அறைக்குச் சென்றாள்.

“நேத்த்ரா! எழுந்திரு. மணியாகுது” என்றாள்.

“இன்னும் ஃபைவ் மினிட்ஸ் அண்ணி!” என்று கெஞ்சும் குரலில் கேட்டுவிட்டு திரும்பிப் படுத்துக் கொள்ள, மது சிரித்துக் கொண்டாள்.

சூட்கேஸ் திறந்திருக்க, எடுத்து வைக்க வேண்டிய உடைகள் கட்டில் மீது ஒரு பக்கமாகக் கிடந்தது. அவற்றை எடுத்துப் பெட்டியில் அடுக்கும் போது, அவளது உடைகளுக்கு நடுவிலிருந்து ஒரு போட்டோ விழுந்தது. எடுத்தாள்... அது அறுபதாம் கல்யாணத்தின் போது எடுத்த குரூப் போட்டோ. சிரித்துக்கொண்டே போட்டோவை துணிகளுடன் வைத்துவிட்டு மீண்டும் நேத்ராவை எழுப்பிக் கிளம்பச் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

மது, அந்தப் போட்டோவை நன்றாகக் கவனித்திருந்தால் புரிந்திருக்கும். அதில் ஸ்ரீராமும் சேர்ந்து இருந்தது. மொத்தக் குடும்பமும் இருக்கும் அத்தனைப் படங்களை விட்டுவிட்டு எதற்கு இந்தப் படத்தை எடுத்துச் செல்ல வேண்டும்?’ என்ற எண்ணமாவது தோன்றியிருக்கும்.

அஷ்வந்த், நேத்ராவை வழியனுப்பி விட்டு இருவரும் ரமேஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களுக்கு முன்பாகவே மற்றவர்கள் அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். ஜீவாவும், கீதாவும் கூட வந்திருந்தனர். மதுவும் வெகு நாட்களுக்குப் பிறகு, அனைவரையும் ஒன்றாகப் பார்த்ததில் தனது சஞ்சலங்கள் அனைத்தையும் மறந்து அவர்களுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

"சித்தார்த் அண்ணா! உங்களுக்கு விஷயம் தெரியுமா... நம்ம ஜீவா அண்ணாவோட அம்மா இன்னைக்கு ஊர்லயிருந்து வராங்க" என்றான் சுரேஷ்.

"என்னடா! இவ்ளோ நாளா புலி வருது புலி வருதுன்னு சொல்லிட்டு இருந்த... அப்போலாம் வரல. திடீர்னு இப்போ வராங்க?" என்றான்.

"நான் என்னடா செய்வேன்? அவங்களுக்கு வீட்ல இருக்க போர் அடிக்குது. அதான் ஊர் ஊரா கோயில் குளம்னு போய்ட்டு இருந்தாங்க. போதாதுன்னு எங்க அத்தை வேர்ல்ட் டூர் கூப்பிட்டதும், அங்கே எங்கேலாம் கோவில் இருக்குன்னு கூகுள்ல சர்ச் பண்ணி போய்ட்டு இப்போதான் இந்தியா வராங்க. இப்பவாவது நான் ஒருத்தன் இருக்கேன்னு அவங்களுக்கு நினைப்பு வந்திருக்கே" என்றான் ஜீவா.

"பார்த்தீங்களாம்மா! ஜீவா அண்ணாவோட அம்மாவுக்கும், உங்களுக்கும் ஏறக்குறைய ஒரே வயசு தான். ஆனா, அவங்க உலகம் முழுக்க சுத்திட்டு வந்துட்டாங்க" என்று அவரை வம்பிழுப்பதைப் போலச் சொன்னான் சுரேஷ்.

"ம்ம், அவங்க ஒண்ணு பெத்தாலும் முத்து மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்திருக்காங்க. ஆனால், நான் அப்படியா, முன்னாலையும் பின்னாலையும் ரெண்டு முத்தைப் பெத்தாலும், நடுவில் உன்னை மாதிரி ஒரு அறுந்தவாலையும் பெத்து வச்சிருக்கேனே! உன்னை நம்பி நான் பக்கத்துத் தெருவுக்குக்கூடப் போக முடியல. இந்த லட்சணத்துல எங்கே போய் உலகத்தைச் சுத்துறது?" என்றார் வேண்டுமென்றே.

"இதுதான் சொந்த காசுல சூனியம் வச்சிக்கிறதா?” என்று அவன் வடிவேலு பாணியில் சொல்ல அனைவரும் நகைத்தனர்.

"அம்மா! இத்தனைப் பொண்ணுங்களுக்கு நடுவுல என்னை இன்சல்ட் பண்ணிட்டீங்களே. இனி, நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவங்க முகத்தில் விழிப்பேன்?" என்று சினிமா வசனம் பேச, "இருக்குற மூஞ்சியை வச்சிக்கிட்டுத் தான் முழிக்கணும்" என்று பட்டெனச் சொன்னாள் கீதா.

"இந்த மூஞ்சியைப் பார்த்து மயங்கித் தானே, என் பின்னாலேயே சுத்திச் சுத்தி வந்த. இப்போ இந்த மூஞ்சியைப் பார்த்தா உனக்குக் கஷ்டமா இருக்கா மேடம்?" என்றான் கிண்டலாக.

"ஏய் ஏய்... பொய்ச் சொல்லாதே! நீ தான், என் பின்னாலேயே சுத்திச் சுத்தி வந்த. இப்போ கதையையே மாத்துற. மது நீ சொல்லுடி!” என்று மதுவை நடுவில் இழுக்க, "நீ யாரு? உன்னை, எனக்குத் தெரியவே தெரியாது" என்றாள் வேகமாக.

"அப்படிப் போடு! அப்படிப் போடு” என்ற சுரேஷ் எழுந்துவந்து மதுவிற்குக் கை கொடுத்தான்.

"அடிப்பாவி இப்படிக் காலை வாரிவிட்டுட்டியேடி" என்ற கீதாவைப் பார்த்துச் சிரித்தான் சுரேஷ்.

நண்பர்களின் கூட்டணியில் வீடே கலகலத்துக் கொண்டிருந்தது. மதுவைப் பார்த்த ஜீவா, “ஏன் மது இன்னைக்குத் தண்ணீர் அபிஷேகம் எதுவும் கிடையாதா?" என்று கேட்டுவிட்டுச் சிரிக்க, அவள் திரும்பிச் சித்தார்த்தைப் பார்த்துவிட்டு மௌனமாக இருந்தாள்.

“இங்கேயுமா? யாரு அந்த அதிர்ஷ்டசாலி?” என்று திபக் கேட்டதும் ஜீவா விளக்கமாக விளக்கினான்.

“அடுத்தவனோட கஷ்டம் மத்தவங்களுக்கு சந்தோஷம்” என்றான் சித்தாத்.

ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தாலும், பெரும்பாலான நேரம் மதுமிதா அமைதியாகவே இருந்தாள். அபிராமி சமைக்க எழுந்துச் செல்ல, பெண்கள் அனைவரும் எழுந்து உடன் சென்றனர்.

உணவு நேரத்தின் போது ஜீவா மட்டும் உணவைப் பார்த்தபடி அமர்ந்திருக்க ராஜேஷ், “என்ன ஜீவா சாப்பிடலையா?" என்றான்.

"நான் கொஞ்சம் விவரமானவன். நீங்க எல்லோரும் சாப்பிடுங்க. நான் அப்புறம் சாப்பிடுறேன்" என்றான்.

“ஏன் என்ன ஆச்சு?" என்று கேட்டான் தீபக்.

"நான் என் வாயை வச்சிக்கிட்டுச் சும்மா இல்லாம, காலைல மது வந்ததும் அவளைக் கிண்டல் செய்றது போலப் பேசிட்டேன். கோபத்துல எனக்குச் சாப்பாட்டில் எதையாவது கலந்து வச்சிருந்தா என்ன செய்றது?" என்றான் போலியான அச்சத்துடன்.

"ஜீவாண்ணா! இதெல்லாம் ரொம்ப அதிகம்" என்றாள் மது.

அவன் சிரித்துக்கொண்டே, "எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தாம்மா" என்று சிரித்தான்.

வந்ததிலிருந்தே அனைவரின் கண்களிலும் பட்டது மதுவும், சித்தார்த்தும் பேச்சில் கலந்து கொண்டாலும், இருவரும் இயல்பாக இல்லை. எதையோ விழுங்க முடியாமல், தொண்டையில் சிக்கிக்கொண்டதைப் போல அவஸ்தையுடன் இருப்பதைக் கண்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், ஆண்கள் அனைவரும் மாடிக்குச் சென்றுவிட, பெண்கள் அனைவரும் தீபாவின் அறையில் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக அப்படியே தூங்கிவிட, மதுவிற்கும், கீதாவிற்கும் மட்டும் உறக்கம் வரவில்லை. மது அறையைவிட்டு வெளியே வந்து சிட்டவுட்டில் அமர்ந்தாள். சற்றுநேரத்தில் கீதாவும் எழுந்துவந்து மதுவின் பக்கத்தில் அமர்ந்தாள்.

மாடியில் ரமேஷின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஜீவா, "ஓகேப்பா நான் கிளம்பறேன். ஏர்போர்ட் போக நேரம் சரியா இருக்கும்" என்று சொல்லிகொண்டே கிளம்பினான். சித்தார்த்தும் தானும் உடன் வருவதாகச் சொல்லிக் கிளம்பினான்.

"சாரிடா.... என்னால வர முடியவில்லை" என்று ரமேஷ் வருத்தத்துடன் சொல்ல, "நீ வந்திருக்கும் கெஸ்ட்டைக் கவனிடா" என்றான் ஜீவா.

"சரி நான் போய்...." என்று சித்தார்த் ஆரம்பிக்க ஜீவா தொடர்ந்து, "என்ன ஹோம் மினிஸ்ட்டர்கிட்டப் பர்மிஷன் வாங்கப்போறியா?" என்று சிரித்தான்.

"ஒண்ணும் முடியலடா உங்களுக்கு" என்றவன் கீழே இறங்கி வந்தான்.

"மது ஏன் ஒரு மாதிரி இருக்க? நானும் வந்ததுலேருந்து பார்த்துட்டிருக்கேன். என்னடி ப்ராப்ளம் உனக்கு? சித்தார்த் உன்னை நல்லா தானே பார்த்துக்கறார்?" என்று அக்கறையுடன் கேட்டாள்.

கீழே இறங்கி வந்த சித்தார்த், அவர்களது பேச்சில் தன் பெயர் அடிபடுவதைக் கேட்டதும் நின்று கவனிக்க ஆரம்பித்தான்.

"மது வாயைத் திறந்து பேசு! ஏன் எல்லாத்தையும் உன் மனசுலையே போட்டு புதைச்சிக்காதே. வாட் இஸ் ஈட்டிங் யூ?" என்று அவளது முகத்தைப் பற்றி நிமிர்த்திய கீதா கலங்கியிருந்த மதுவின் கண்களைப் பார்த்ததும், “ஏய்... என்னப்பா ஏன் கண்கலங்கற?" என்று உண்மையான அன்பில் பதறினாள்.

அவளுக்கும், ‘தன் மனத்தில் உள்ளதை யாரிடமாவது சொல்லவேண்டும்’ என்ற உந்துதலில் திருமணமான நாள் முதல் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கீதாவிடம் சொன்னாள்.

"நீ சொல்றதைப் பார்த்தா உங்களுக்குள்ள பெரிசா பிரச்சனை இருப்பதா தெரியலையே. உனக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்றது போலத் தானே இருக்கு" என்றாள்.

"என்னோட பிரச்சனையே அதான் கீதா. சித்தார்த் எனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்றதா நினைச்சி, நான் எதை மறக்கணும்னு நினைக்கிறேனோ அதையே நினைவு படுத்துறது போலச் செய்கிறார். அது அவர் தப்பும் இல்லை" என்று அழுதாள்.

அதைக் கேட்ட கீதா கடுப்புடன், "மது சும்மா அழாதே. உனக்கே தெரியுது. அவர் உன்னைச் சந்தோஷப்படுத்தணும்னு நினைச்சிச் செய்றார். ஆனா, அது உனக்கு அர்ஜுனை நினைவு படுத்துது. இது தான் உன் பிரச்சனை. இதைத் தெளிவா நீ அவர்கிட்டயே சொல்லலாமே. சொல்லாம, உன் மனசுல இருக்கறது அவருக்கு எப்படித் தெரியும்?

எத்தனைப் பேருக்கு யோசனையும், அறிவுரையும் சொல்வ. இன்னைக்கு உன்னோட பிரச்சனையைச் சால்வ் பண்ண இவ்வளவு தயங்குற! முதல்ல உன் மனசைத் திறந்து பேசு. இப்போ, கண்ணைத் துடை. ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்குப் போய் அழுதுட்டு" என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டாள்.

"நானும் பேசணும்னு தான் நினைக்கிறேன், ஆனா, சில சமயம் என்னால... என்னன்னு சொல்ல முடியல கீதா" என்றாள்.

"உன்னோட குழப்பம் புரியுது. ஆனா, எந்த நல்ல முடிவையும் நீதான் எடுக்கணும். என்ன கொஞ்சம் டைம் ஆகும். எடுத்துக்கோ. ஆனா, அதுக்கு முன்னால ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க. தன்னால வழிகிடைக்கும். நான் உன்னை அடுத்த முறை பார்க்கும் போது, நீங்க ரெண்டு பேரும் இயல்பா இல்லனாலும், மனசுல குழப்பத்தோடு உன்னைப் பார்க்கக் கூடாது. ஆல் த பெஸ்ட்" என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவளும் முறுவளித்தாள்.

அனைத்தையும் கேட்ட சித்தார்த், ‘இனியும், காலம் தாழ்த்துவது சரி இல்லை. இன்று எவ்வளவு நேரமானாலும் அவளிடம் பேசிவிட வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தான்.

"மது" என்று அவன் அழைத்துக்கொண்டே வர, ‘தாங்கள் பேசியதைக் கேட்டிருப்பானோ!’ என்று நினைத்து அவனைப் பார்த்தாள். அவனோ, முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல், “நான் ஜீவாகூட ஏர்போர்ட் போறேன். வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்" என்று சொல்லிவிட்டு ஜீவாவையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

இருவரும் சென்றதும் மாலையில் அனைவரும் மொட்டை மாடியில் காஃபி குடித்தபடி அமர்ந்திருக்க, ரமேஷ் யாருடனோ போனில் பேசியபடி ஒருபுறம் நின்றுகொண்டிருந்தான்.

தீபக், "வேலை வேலைன்னு, அது பின்னாலேயே ஓடுறோம். இன்னைக்கு இங்கே வந்தது எவ்ளோ ரிலாக்ஸா இருக்கு. இனி மாசத்துக்கு ஒரு தடவை இப்படி எல்லோரும் சேர்ந்து அவுட்டிங் போகலாம்" என்றான்.

சுரேஷ், கீதாவுடன் பேசிக்கொண்டிருந்த மது, "ஹேய்! அவுட்டிங்கா? எங்கே போகலாம்? நல்ல இடமா, இதுவரை போகாத இடமா போகலாம். சீக்கிரம் சீக்கிரம் சொல்லுங்க" என்று குழந்தையின் குதூகலத்துடன் சொன்னாள்.

அருகில் அமர்ந்திருந்த வித்யா, "ஹலோ மது மேடம்! நாங்க பேமிலின்னு சொன்னது எங்க பேமிலி. அதாவது, நான், என் வீட்டுக்காரர்; என் அண்ணன், எங்க அண்ணி. இதுதான் நாங்க சொன்ன பேமிலி. அவங்க அவங்களுக்குப் போகணும்னா அவங்க அவங்க குடும்பத்தோட போங்க. யாரும் நடுவில் வந்து ஒட்ட வேணாம்" என்று முகத்திலடித்தார் போலச் சொல்ல, அங்கிருந்த அனைவரின் முகமும் சற்று வாடிவிட்டது.

மதுவின் நிலையோ சொல்லவே வேண்டாம். அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.

"ஒ... சாரி வித்யா. அநாவசியமா உங்க குடும்ப விஷயத்தில் நான் குறுக்கப் பேசிட்டேன்" என்றவள் கலங்கிய விழிகளுடன் அங்கிருந்து செல்லட, கீதா வெறுப்புடன் வித்யாவைப் பார்த்துவிட்டுச் செல்ல, சுரேஷும் அவளுடன் சென்றுவிட்டான்.

மூவரும் கீழே சென்றதும் ரமேஷ், "வித்யா! ஏன் இப்படிப் பேசின? பாவம் அவளோட மனசு எவ்வளவு கஷ்டப்படும்? என்ன ராஜேஷ் நீயாவது வித்யாவைக் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணியிருக்கலாமே?" என்று ஆற்றாமையுடன் கேட்டான்.

"அவ சொன்னதுல தப்பிருக்கறதா எனக்குத் தோணல" என்று அவன் தோள்களைக் குலுக்கினான்.

மேகலா மட்டும் சற்று கவலையுடன் அமர்ந்திருந்தாள். ரமேஷ் சலிப்புடன் தலையசைத்துவிட்டுச் சென்றுவிட்டான். கீழே வந்த மதுமிதா கலங்கிய விழிகளைக் கட்டுப்படுத்த முயன்றாள். ஆனால், அது அருவியெனப் பெருகியது. எல்லோரும் என்னுடையவர்கள் என்று உரிமையுடன் பழகுபவளுக்கு வித்யாவின் வார்த்தைகள் கத்தியாகத் தாக்கியது. அதைவிட, அதற்கு ராஜேஷும், தீபக்கும் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தது வித்யாவின் வார்த்தைகள் கொடுத்த வேதனையையே ஒன்றுமில்லை என்பதைப் போல தோன்றச் செய்துவிட்டது.

கீதாவும், சுரேஷும் அவளுக்கு ஆறுதல் சொல்ல தீபக்கும், ராஜேஷும் கீழே இறங்கி வந்து அபிராமியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.

மதுவின் அருகில் வந்த மேகலா, “சாரி மது. ப்ளீஸ் அவள் சொன்னதைத் தப்பா எடுத்துக்காதே. நீ எப்பவும் அந்த வீட்டுப் பொண்ணுதான். அவளுக்காக நான் சாரி கேட்டுக்கறேன்” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“பரவாயில்ல மேகலா! அவ சொன்னது கூட எனக்குப் பெரிசா தெரியல. ஆனா, அண்ணாவும், அத்தானும் ஒரு வார்த்தைக் கூட எனக்கு ஆறுதலா பேசலன்னு நினைச்சா தான்...” என்றவள் வேகமாகக் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். “நீ கிளம்பு” என்று வலிய வரவழைத்த புன்னகையுடன் சொன்னாள்.

இரவு எட்டுமணிக்கு வந்த சித்தார்த், வாட்டத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும், "மது! ஏன் டல்லா இருக்க? உடம்பு ஏதாவது சரி இல்லையா?" என்றான் பரிவுடன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்றாள்.

சுரேஷ் கோபத்தோடு, “என்ன ஒண்ணுமில்ல. இன்னும் என்ன உனக்குப் பாசம் வேண்டி கிடக்கு. அவதான் அவ்வளவு தெளிவா சொல்லிட்டுப் போனாளே?" என்று தோழியின் மீதிருந்த பாசத்தில் கத்தினான்.

"ப்ளீஸ் சுரேஷ் விஷயத்தை பெரிதுபடுத்தாதே. அவ சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்" என்றாள் மது.

"ஆமாம் பெரிய காரணம். அண்ணா! அவள் சொல்லவே மாட்டா. நான் சொல்றேன்" என்றவன், நடந்த அனைத்தையும் சொன்னான்.

"ஒஹ்..." என்ற ஒற்றைச் சொல்லோடு, அவளை மதுவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

மதுவை கேட்டின் அருகிலேயே விட்டுவிட்டு, "நீ உள்ளே போ! நான் ஒன் அவர்ல வந்திடுவேன்" என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினான்.

‘எங்கே இவ்வளவு அவசரமாகச் செல்கிறான்? இன்றைக்கு எவ்வளவு நேரமானாலும் அவனிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு அவனுக்காகக் காத்திருந்தாள்.

காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு, கோபத்துடன் தீபக்கின் வீட்டிற்குச் சென்றான். பெரியவர்கள் டிவி பார்த்துக்கொண்டிருக்க, இளையவர்கள் டைனிங் ஹாலில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

உள்ளே வந்த சித்தார்த்தை, விமலா தான் முதலில் பார்த்தார். அவனது கோப முகத்தைக் கண்டதும், ‘மது தான் ஏதோ செய்துவிட்டாள் போல’ என்று எண்ணிக்கொண்டே, "சித்தார்த்! என்னப்பா இந்த நேரத்துல வந்திருக்க? வா வந்து உட்கார்" என்று தயக்கத்துடன் சொன்னார்.

கோபத்தில் சிவந்திருந்த அவனது முகத்தைப் பார்த்து, ‘என்ன பிரச்சனையோ?’ என்று அனைவருமே கவலையுடன் பார்த்தனர்.

"அம்மா! நான் இங்கே உட்கார்ந்து பொறுமையா பேச வரல. தீபக், ராஜேஷ் எங்கே?" என்றான்.

"என்னப்பா சித்தார்த்! உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?" என்று ஈஸ்வரன் நடுவில் வர, அதற்குள் அவனுடைய குரலைக் கேட்ட நால்வரும் ஹாலுக்கு வந்தனர்.

"வா சித்தார்த்!" என்ற ராஜேஷைக் கை நீட்டி நிறுத்தியவன், "ரெண்டு பேரும் மதுவை என்னடா சொன்னீங்க?" என்றான் கோபத்துடன்.

"அது ஒண்ணுமில்லடா... சும்மா விளையாட்டுக்கு..." என்ற ராஜேஷை முறைத்தான்.

"எதுடா விளையாட்டு? நீங்க பேசின பேச்சு விளையாட்டா? எங்க பேமிலி, ஒட்ட வரவேணாம்னு சொல்றது தான் விளையாட்டா? இன்னொரு முறை விளையாட்டுக்கு , நிஜத்துக்குன்னு அவளை யாராவது அழ வச்சா, நான் பொல்லாதவனா ஆகிவிடுவேன்" என்று முகம் சிவக்க கத்தியவனை, அனைவரும் சற்று பயத்துடனே பார்த்தனர்.

“இல்லை சித்தார்த். இப்படிப் பேசினாலாவது, அவ உன்கிட்டக் கொஞ்சம் தயக்கம் விட்டுப் பழகுவான்னு..." என்ற தீபக்கை வேதனையுடன் பார்த்தான்.

"அதைப் பத்திக் கவலைப்பட வேண்டிய நானே கவலைப்படல. உங்களுக்கு எதுக்குக் கவலை? அவள், என்னை எது சொன்னாலும் அவளுக்காக, எல்லாவற்றையும் தாங்கிக்குவேன். எனக்கு வேண்டியது அவளோட மனசுதான். அது இன்னைக்கு இல்லைன்னாலும், என்னைக்காவது ஒரு நாள் என்னிடம் வரத்தான் போகுது. அதுவரை நான் பொறுமையா காத்திருப்பேன்.

இல்ல, காலம் பூராவும் அவளோட மனம் மாறாமல் இருந்தாலும், அவளுக்காக நான் அதையும் ஏத்துக்குவேன். அவளைப் பத்தி எப்போ தெரிஞ்சதோ, இதை எல்லாம் யோசிச்சித் தான் அவளைக் கல்யாணமும் செய்துகிட்டேன்" என்று பேசி முடித்து ஓய்ந்து போனவனாக முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தான்.

"என்னதான் நடந்தது? யார் மதுவை என்ன சொன்னீங்க?” என்று நால்வரின் முகத்தையும் பார்த்த ராஜி, "மேகலா! நீ சொல்லு என்ன நடந்தது?" என்று கேட்டதும். தீபக்கை ஒரு பார்வைப் பார்த்த மேகலா நடந்ததைச் சொல்ல ராஜி கோபத்தோடு வித்யாவைப் பார்த்து கத்தினார்.

"இல்லம்மா! நான் வேண்டாம்னு தான் சொன்னேன். அண்ணன் தான்...” என்று இழுத்தாள்.

"ப்ளீஸ்! எனக்கு நல்லது செய்றதா நினைச்சி அவளைக் காயப்படுத்தாதீங்க. இவ்வளவு நாள் கூட பழகிய நீங்களே அவளோட மனசை வருத்தினா, அவளால் எப்படித் தாங்க முடியும்? அவள் சந்தோஷமா வந்து போறது இந்த வீட்டுக்கு மட்டும்தான். நீங்களும் அவளை மூணாவது மனுஷியா பிரிச்சி வச்சிப் பேசினால் அவள் எங்கே போவாள்?" என்றவனை, ராஜேஷ் தாவி அணைத்துக்கொண்டான்.

"சித்தார்த் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா? இனி, என் தங்கையைப் பத்தி நிச்சயமா நான் மட்டும் இல்ல... எங்க யாருக்குமே எந்தக் கவலையும் இல்ல. எங்களை விட நீ அவளை பார்த்துப்ப" என்றவன் ஆனந்தத்தில் உண்டான கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

"நானும், கோபத்தில் பேசினதை மனசுல வச்சிக்காதீங்க. மதுகிட்ட சொல்லாமலே வந்துட்டேன். கிளம்பறேன்" என்று சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அனைவரும் சித்தார்த்தை அனுப்பிவிட்டு உள்ளே வந்த மேகலா, மதுவிற்குப் போன் செய்து ஒரு வார்த்தையை விடாமல், அனைத்தையும் சொல்ல மறுபக்கம் சுத்தமாகப் பேச்சுச் சப்தம் கேட்கவே இல்லை. மேகலா சந்தோஷத்துடன், “சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு. இனி, அவங்க ரெண்டு பேரோட பாடு" என்று சிரித்துக்கொண்டே போனை வைத்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் சித்தார்த்தின் கார் போர்ட்டிக்கோவில் வந்து நிற்கும் ஓசை பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்த மதுவிற்கு கேட்டது. மேலே வந்தவன் அவளருகில் அருகில் அமர்ந்தான்.

"மது! ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் போய்க் குளிச்சிட்டு வந்திடுறேன். உன்னிடம் பேசணும்" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

அவளும், அதே முடிவுடன் தானே அவனுக்காகக் காத்திருக்கிறாள். குளித்துவிட்டு அவன் வர, அறைக்குள் வந்தவள் சோஃபாவில் அமர்ந்தாள்.

அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்தவன், “மது! நான் பேசுவதைக் கொஞ்சம் பொறுமையா கேளு. ஏதாவது மறுப்பு சொல்லணும்னு தோணினா கடைசியில் சொல்லு. இனியும், நம்ம மனசிலே இருக்கறதை நேரடியா பேசினா மட்டும்தான், நம்ம எதிர்காலம் ஒரு தெளிந்த நீரோடையாக இருக்கும். இல்லன்னா, கடைசிவரை கலங்கிய குட்டையா தான் இருக்கும்” என்றவன், அவள் முகத்தைப் பார்த்தான்.

எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், சுத்தமாகத் துடைக்கப்பட்ட ஒரு பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.

“ஏன் மது? உன் மனசுல இருக்கறதை நீ வெளிப்படையா என்னிடம் சொல்லியிருக்கலாமே. அந்த அளவுக்கா நான், உனக்கு வேண்டாதவன் ஆகிட்டேன். நான் தான் சொன்னேனே... நீயும், நானும் இனி, நல்ல நண்பர்கள்ன்னு. அந்த உரிமையைக் கூட நீ எனக்குக் கொடுக்கலையா?” என்று கேட்க, ‘தான் அவனை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறோம்’ என்பதை அவனது வார்த்தைகள் வெளிவந்த விதத்திலேயே அவளுக்குப் புரிய, குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

“உனக்கு என்ன கஷ்டம்? நான் செய்யும் சில பாவனை உனக்கு அர்ஜுன் போலவே தெரியுதாதா?” என்றதும் சடாரென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“சாரிம்மா.... இந்த இடத்தில் நான் அர்ஜுன் பேரைச் சொல்லியே தீரவேண்டி இருக்கு. இதுவும், உன் மனசைக் காயப்படுத்தினா சாரி. அது பிறந்தது முதல் வருவது மது! அதை என்னால் உடனே மாத்திக்க முடியாது. ஆனா, அதுக்கான முயற்சி செய்கிறேன். அப்புறம், அந்தப் புடவை... அதைப் பத்தித் தெரியாம தான் அந்தக் கலர் வாங்கிட்டு வந்தேன்.

நேத்து உன்னை ஹோமுக்கு அழைச்சிட்டுப் போனது, உன்னோட மனத் திருப்திக்காகத் தான். உன்னைக் காயபடுத்தணும்னு செய்யல. ஸ்ரீயோட ஹோமை நம்ம கம்பெனி பராமரிப்பில் எடுத்திருக்கறதை, நடந்துட்டிருக்கும் வேலைகள் முடிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தேன்.

உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்ல. என்னுடைய சீண்டல்கள் உனக்கு அவஸ்தையா இருக்கா... இனி, அதையும் செய்யல. உன் மனசு முழுசா மாறும் வரைக்கும் காத்திருக்கேன். நீ உன் மனசைப் போட்டுக் குழப்பிக்காதே.

காத்திருந்து ஜெயிக்கும் காதலுக்குத்தான் அன்பும், சக்தியும் அதிகம். அதிலும், ஒரு சுகம் இருக்கு. நீ அந்தக் காத்திருப்போட சுகத்தையும், எனக்குக் கொடுத்திருக்க. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. குடும்ப வாழ்க்கை மட்டும், வாழ்க்கை இல்ல. ஒருத்தரை ஒருத்தர் ஐயம் திரிபுர உணரணும்" என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை நிமிர்த்தினான்.

“நமக்குக் கல்யாணம் ஆனதால, எதுவுமே மாறிடல. நீ, இவ்வளவு நாள் உங்க வீட்ல இருந்த; கல்யாணத்திற்குப் பிறகு, நம்ம வீட்ல இருக்க. அவ்வளவு தான் வித்தியாசம். உனக்குத் திரும்ப வேலைக்குப் போகணும்னு எண்ணம் இருந்தா சொல்லு. சந்தோஷமா சம்மதிப்பேன். ஹோமுக்குப் போ! உனக்குப் பிடிச்சதையெல்லாம் செய்.

நிச்சயம் நானும், நம்ம வீட்டில் இருப்பவர்களும் தடுக்க மாட்டோம். உனக்கு ஏதாவது பிடிக்கலன்னா தாராளமா சொல்லலாம். அந்தச் சுதந்திரம் உனக்கு எப்பவும் உண்டு. ஆனா, எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும், என்கிட்டச் சொல்லலைனாலும் பரவாயில்லை... அப்பா, அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டுச் செய்.

நீ செய்வது நல்ல விஷயமா இருந்தா நிச்சயம் அவங்க, உன்னை ஊக்குவிப்பாங்க. இல்ல, அதுல ஏதாவது வில்லங்கம் இருக்கும்ன்னு தோணினாலும் நமக்குச் சொல்வாங்க. அவங்களெல்லாம் அனுபவசாலிகள் ஆச்சே!” என்றவன் அவளது கண்களை ஆழ நோக்கினான்.

“இப்போ சொல்லு! உனக்கு மனசுல ஏதாவது வருத்தமோ, குழப்பமோ, சந்தேகமோ இருந்தா தயவுசெய்து என்னிடம் கேளு. உனக்குத் தேவையான பதிலை, உன்னோட குழப்பத்தை முழுதுமாக தீர்த்து வைக்க நான் தயாரா இருக்கிறேன்” என்று பொறுமையாக தன் மனத்தில் இருக்கும் அத்தனையையும் அவளிடம் மடை திறந்த வெள்ளமாகக் கொட்டினான்.

அவ்வளவு நேரமும் தன்னை நினைத்தே மருகிக்கொண்டிருந்தவளுக்கு, அவனுடைய விளக்கமும், தன்னுடைய விலகலால் தனக்கு மட்டும் அல்ல, அவனுக்குத் தான் பெரிய இழப்பு. நான்தான் அவனை வருத்திக்கொண்டிருக்கிறேன். அவன் நினைத்திருந்தால், வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக இருந்திருக்கலாம்.

ஆனால், காதலித்த ஒரு பாவத்துக்காக என்னுடைய கடந்த காலத்தையும் மதித்து, எனக்கும் ஒரு மனம் இருக்கிறது என்று நினைத்து வாழ்பவனுக்கு, நான் இத்தனை நாளாக என்ன செய்தேன்? கடவுளே! இனியாவது சித்தார்த்தின் வாழ்க்கைச் சந்தோஷமாக இருக்கணும். அதற்கு நான் என் மனத்தைக் கட்டுப்படுத்தி, வேறு எண்ணத்திற்கு இடம் கொடாமல், அவரை ஏற்றுக்கொள்ள எனக்குச் சக்தியை கொடு’ என்று வேண்டிக்கொண்டவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவன், "மது" என்று ஆதரவுடன் அவளது கையைப் பற்றியதும், "சித்தூ..." என்று அவனுடைய நெஞ்சத்திலே அடைக்கலமாகி அழுதாள்.

அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டு, பரிவுடன் தலையைத் தடவிக்கொடுத்தான். அவளை அழவிட்டான். அவனது கண்களும் கலங்கி இருந்தன
.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
448
63
அத்தியாயம் --57

மறுநாள் காலையில் , “குட் மார்னிங் மேடம்" என்ற குரலில் கண்விழித்த மது எதிரில் புன்னகையுடன் நின்றிருந்த சித்தார்த்தைப் பார்த்ததும் பதட்டத்துடன் எழுந்தாள்.

"ரிலாக்ஸ் ரிலாக்ஸ் எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டம்?" என்று புன்னகை மாறாமல் கேட்க.

"சாரி நான் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேன் போல" என்று சொல்லிக் கொண்டே கட்டிலைவிட்டு இறங்கினாள்.

"கொஞ்சநேரம் இல்ல மணி ஏழு தான் ஆகுது மேடம்!" என்றதும், "ஏழா! ஐந்து நிமிஷம், பிரஷ் பண்ணிட்டு வந்து உங்களுக்குக் காஃபி போட்டுக் கொடுக்கிறேன்" என்றாள்.

"ஒண்ணும் அவசரம் இல்லை. உங்களுக்காக, நானே என் கையால் காஃபி போட்டுக் கொண்டு வந்திருக்கேன். நீங்க பிரஷ் பண்ணிட்டு வந்து காஃபியைக் குடிச்சிப் பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொன்னா போதும்" என்றான்.

பிரஷ் செய்துக்கொண்டு வந்த மது முகத்தை துடைத்தபடி, "என்னங்க நீங்க போய் காஃபி போட்டுட்டு வந்திருக்கிங்க. என்னை எழுப்பி இருக்க கூடாதா?" என்று ஆற்றாமையுடன் கேட்டாள்.

"ஹ்ம்ம்... ஏன் சொல்ல மாட்டீங்க? நைட் சரியாகவே தூக்கம் இல்லை. தெரியுமா உனக்கு? உனக்கு எங்கே தெரியும்? நீதான் நல்லா கும்பகர்ணனுக்குத் தங்கச்சி மாதிரித் தூங்கிட்டு இருந்தியே... நானே காலைல நெஞ்சுவலி தாங்காம தானே எழுந்துட்டேன்" என்றான்.
"என்னது நெஞ்சுவலியா? ஏன் என்ன ஆச்சு?” என்றவள் அவன் அருகில் வந்து நெஞ்சை தடவிக் கொடுத்துக்கொண்டே “டாக்டர்கிட்டப் போகலாம்" என்றாள் வேகமாக.

"ஆஹா... இப்படி ஒரு ட்ரீட்மென்ட் கிடைக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா உடம்பு வலிக்குதுன்னு சொல்லியிருப்பேனே... நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டியே சித்தார்த்" என்று மதுவின் கையைப் பிடித்தபடி தனக்குத்தானே சொல்ல, இரவு அவனது மார்பில் சாய்ந்து அழுததைச் சொல்கிறான் என்று உணர்ந்தவள், அவன் நெஞ்சிலே கைவைத்துத் தள்ளிவிட, அதை எதிர்பார்த்து போலச் சிரித்துக் கொண்டே சோஃபாவில் விழுந்தான்.

"இந்த லொள்ளுல ஒண்ணும் குறைச்சல் இல்ல" என்று சொல்லிவிட்டு பக்கத்து சோஃபாவில் அமர்ந்தாள்.

சித்தார்த்தே காபியைக் கப்பில் ஊற்றி, "மேடம் காஃபி" என்று பவ்யமாக எழுந்து குனிந்து கொடுக்க, "தேங்க்ஸ்" என்று சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டாள்.

அவன் பேப்பரை எடுத்துப் படிக்க ஆரம்பிக்க, கப்பை உதட்டருகில் கொண்டு சென்றவள் மீண்டும் சாசரில் வைத்துவிட்டு அவனைப் பார்த்தாள்.

அசைவை உணர்ந்த சித்தார்த் நிமிர்ந்து பார்த்து, "தைரியமா குடிங்க மேடம்! நான் உப்பெல்லாம் போடல. சுகர் தான் போட்டிருக்கேன்" என்று சொல்ல, "சித்தார்த்..." என்று சிணுங்கலாகச் சொல்ல, அவளது கொஞ்சல் மொழியை ரசித்துச் சிரித்தான்.

“நீங்க சுத்த மோசம்! நீங்க காஃபி குடிக்கலையான்னு கேட்க நினைச்சேன்" என்றாள்.

"நான் குடிச்சிட்டேன். நீ குடி" என்றவன், ‘இப்படிக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி, என்னைக் கொல்லாமல் கொல்லாதடி செல்லம்! நான் மோசமா, இல்ல ரொம்ப ரொம்ப மோசமான்னு போகப் போக, உனக்கே தெரிய வேண்டிய நேரத்தில் தெரியும்’ என்று எண்ணிக்கொண்டு அவளைக் குறுகுறுவெனப் பார்த்தான்.

காபி குடித்துக்கொண்டே, அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, "எனக்கு எவ்வளவு மார்க்? பாஸாகிட்டேனா?" என்று கேட்டதும் தான், தன்னைக் கண்டுகொண்டதை எண்ணி திருதிருவென விழித்தபடி அவனைப் பார்க்க, "அச்சச்சோ... மார்க் கம்மியா வாங்கிப் பெயில் ஆகிட்டேனா? ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் க்ரேஸ் மார்க் போட்டுப் பாஸ் பண்ண வச்சிடுங்க மேடம்!” என்று கெஞ்சுவது போல கேட்டான்.
"சித்தூ... உங்களை என்ன செய்றது?” என்றவள் எழுந்து நிற்க, "நீ என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனா, எதுவும் செய்யத்தான் மாட்டேன்ற. ஹ்ம்ம்..." என்று பெருமூச்சு விட்டான்.

அவனது பதிலில் அவளது சிரிப்பு மறைந்திட, “நான், குளித்துவிட்டு வந்திடுறேன்” என்று சொல்லி கொண்டே குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள். சித்தார்த் சிரிப்புடன் பேப்பரைப் படிக்கத் தொடங்கினான்.

அவள் காலை உணவு தயாரித்திக் கொண்டிருக்க, அங்கே வந்தவன் மேடை மேல் அமர்ந்து அங்கிருந்த வெங்காயத்தை எடுத்து ஜக்ளிங் செய்துகொண்டிருக்க, அவள் ஆச்சரியத்துடன், "நீங்க ஜக்ளிங் கூடச் செய்வீங்களா?" என்று கேட்டாள்.

"ம்ம்.. ஏன் அது அவ்வளவு அதிசயமா? எல்லாம் பழக்கத்துல வர்றது தானே" என்றான்.

"ஜக்ளிங் செய்றதுக்குப் பழக்கம் மட்டுமில்ல, நல்ல கான்சன்ட்ரேஷன் பவரும் தேவை. அவங்களெல்லாம் ரொம்பப் புத்திசாலியா இருப்பாங்களாம். அதான், உங்களுக்குத் தெரியுதேன்னு ஆச்சரியமா இருந்தது" என்றாள் வேகமாக.

பேசியபின்பு தான், என்ன சொன்னோம் என்று உணர்ந்தவள், நாக்கைக் கடித்துக்கொண்டு தோளைக் குலுக்கியபடி மெல்லத் திரும்பிச் சித்தார்த்தைப் பார்த்தாள்.

அவனும், அவளையே பார்த்துக் கொண்டிருக்க, "சாரி" என்றாள்.

அவன் அப்போதும் சலனமே இல்லாமல் அமர்ந்திருக்க, "எஸ்.ஒ.ஆர்.ஆர்.ஒய்" என்றவள், “வேணும்னா, தோப்புக்கரணம் போடட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே, காதைப் பிடித்தாள்.

அவளருகில் வந்தவன், அவளது கன்னத்தில் புரண்ட முடியைக் காதின் பின்புறம் எடுத்து விட்டவன், " எனக்கு ஜக்ளிங் மட்டும் இல்ல... வேற இன்னும் என்னவெல்லாம் தெரியும்னு உனக்குத் தெரியவேண்டிய நேரத்தில் தெரிய வைக்கிறேன்” என்று மெல்லிய குரலில் அவள் காதருகில் சொல்லிவிட்டுச் செல்ல, அவளுக்குக் குப்பென உடலில் உஷ்ணம் பரவ, சிறு பதட்டத்துடன் அங்கிருந்த மேடையில் சாய்ந்து நின்றாள்.

"சும்மா இருப்பவனையும் நீதான்டி தேவையில்லாம சீண்டி விடற. உன் வாய் இருக்கே வாய்... அதைக் கொஞ்சம் அடக்கிட்டு வேலையைப் பாரு" என்று சொல்லிக்கொண்டே திரும்பியவள், தனக்குப் பின்னால் நின்றிருந்தவனைக் கண்டதும் அசடுவழிய சிரித்தாள்.

"ரொம்ப வழியுது துடைச்சிக்க" என்றதும், "ஆஹ்... என்னது?" என்று கேட்டாள்.

"வியர்வை வழியுதே... அதைத் தான் சொன்னேன்" என்றான் குறும்புப் புன்னகையுடன்.

நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டு தக்காளியை அரிந்து கொண்டிருக்க, "இன்னைக்கு என்ன டிபன்?" என்றான்.

"நாம ரெண்டு பேர் தானே. நீங்களே சொல்லுங்க என்ன வேண்டும்?"

"தோசை மாவு இருந்தா, தோசை போட்டுக்கலாம்" என்றதும், அவள் தோசை ஊற்ற... சொல்லச் சொல்லக் கேட்காமல் சித்தார்த் சட்னி அரைத்து எடுத்தான்.

சாப்பிடும் போது, “ம்ம்...சட்னி சூப்பர். நீங்க நல்லா சமைப்பீங்களா? காலையில் போட்ட காஃபியும் சூப்பர். இப்போ, சட்னியும் சூப்பர்."

"அப்போ மதிய சமையலும் நானே செய்துடட்டுமா?" என்று கேட்டான்.

"எம்.டி சார் இன்னைக்கு ஆபீஸ் போகலையா? இப்படி நள மகாராஜா மாதிரி, வீட்டில் உட்கார்ந்து சமைச்சிட்டிருந்தா என்ன ஆவது?" என்றாள்.

"இன்னைக்கு ஆபீஸ் லீவ்" என்றான்.

"சும்மா சும்மா ஆபீஸுக்கு லீவ் போட்டா என்ன அர்த்தம்? முதலில் கிளம்புங்க" என்றாள் அதிகாரமாக.

"அறிவுக்களஞ்சியமே! இன்னைக்குச் சண்டே" என்றதும், தலையைத் தட்டிக்கொண்டு “ஸ்ஸ்ஸ்... மறந்தேபோச்சு" என்றாள்.

"கோவிலுக்குப் போய்ட்டு வருவோமா?” என்று அவன் கேட்டுகொண்டிருக்க, ஜீவாவிடமிருந்து போன் வர, "நீ ரெடியாகு! நான் பேசிட்டு வரேன்"என்றான்.
அறைக்கு வந்தவள், ‘என்ன புடவை கட்டுவது?’ என்று யோசித்தவளின் கண்களில் அந்தப் புடவையில் நிலைத்தது.

ஜீவாவிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தவன், டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து வெளியே வந்தவளைப் பார்த்ததும், ஒரு நிமிடம் இமைக்க மறந்து நின்றுவிட்டான். முதன்முதலில் அவளுக்காக வாங்கிக் கொடுத்த இலை பச்சை நிறச் சேலையில், பொருத்தமான நகையை அணிந்து தயாராகி இருந்தாள்.

தன்னைப் பார்த்தபடியே நிற்பதைக் கண்டவள், “நான் ரெடி” என்றவளின் குரலிலும், விழிகளிலும் நாணத்தின் சாயல் தெரிய, புன்னகைத்துக் கொண்டான்.

“கிளம்பலாம் மது. உனக்கு இந்தப் புடவை, ரொம்ப அழகா இருக்கு" என்றான் நெகிழ்ந்த குரலில்.

"தேங்க்ஸ்!" என்றவளின் முகம் சிவக்க, முயன்று தன்னை மீட்டுக் கொண்டவன், அவளுடன் கிளம்பினான்.

இருவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு, மதிய உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். சிறிதுநேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு, தூங்கி எழுந்து தோட்டத்தில் அமர்ந்து இயற்கையை இரசித்தபடி தேநீர் அருந்தினர். பேசிக்கொண்டே தோட்டத்தில் உலவினர்.

அந்தி சாயும் நேரம், "மது அப்படியே பீச் வரைக்கும் போய்ட்டு வரலாமா?" என்றதும், நடந்தே சென்றனர்.

அங்கிருந்த படகில் சாய்ந்து அமர்ந்தனர். சிறிதுநேரம் மௌனத்திலேயே கரைந்தது. ஆனால், அதுவும் ஒரு ஏகாந்தத்தைத் தருவது போலிருக்க, இருவரின் மனமுமே அதை ரசித்தது.

இரவு வீட்டிற்கு வந்ததும், வீட்டினருக்குப் போன் செய்து பேசினர். அனைவரும் மதுவிடம் மாறி மாறிப் பேசிவிட்டு, இன்னும் நான்கு நாட்களில் வந்து விடுவதாகக் கூறிப் போனை வைத்தனர்.

அடுத்து வந்த நாட்களில் இருவருக்கும் இடையில், வாழ்க்கை இலகுவாகவே சென்றது. சித்தார்த் காலையில் மதுவை அழைத்துச் சென்று ஹோமில் விட்டுவிட்டு, மாலையில் வரும்போது அழைத்து வந்தான். வீட்டிற்குக் கொண்டு வரும் அலுவலக வேலைகளில் அவனுக்கு உதவி செய்தாள்.
ஐந்தாம் நாள் காலை அனைவரும் வந்து இறங்கினர். குழந்தைகள், "சித்தி!" என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டனர். பெண்கள் மூவரும் பத்து நாள் கதையையும் உட்கார்ந்து பேச, "ஆரம்பிச்சாச்சு இவங்க மாநாட்டை. அவ்வளோ தான்... நாம எல்லோரும் இன்னைக்கு வயித்துல ஈரத் துணியைக் கட்டிட்டு உட்கார வேண்டியது தான்" என்று சிரித்தான் ஆதி.

"எத்தனை நாள் உங்களைப் பட்டினி போட்டுட்டோம்? இன்னைக்கு ஒரு நாள் எல்லோரும் வெளியே சாப்பிட்டுக்கலாம்” என்றாள் மீரா.

"இத்தனை நாள் வெளியில் தானே சாப்பிட்டோம். இன்னைக்காவது வீட்டில் சாப்பிடலாம்னு நினைச்சா, இன்னைக்கும் வெளில தான் சாப்பிடணுமா?" என்று எரிச்சலுடன் கேட்டான் ஆதி.

"என்ன ஆதி அப்படியா உங்களையெல்லாம் பட்டினி போட்டுவிடுவோம்? கொஞ்சம் இரு சமைச்சிடுறோம்" என்று எழுந்த தேவகியிடம், "அத்தை! எல்லோரும் குளிச்சிட்டு வாங்க. மதிய சமையல் ரெடியா இருக்கு” என்றாள்.

"நீயேவாம்மா இவ்வளவு பேருக்கும் சமையல் செய்த?" என்று ஆதூரத்துடன் கேட்டார் தேவகி.

"இதெல்லாம் அநியாயம்! வீட்ல வேலைக்கு இருக்கவங்க எல்லாத்தையும் செய்ததை, உங்க மருமகள் மேற்பார்வை தான் பார்த்தாங்க. இதுக்கே இவ்வளவு உருக்கமா?" என்று கிண்டலாகக் கேட்டான் சித்தார்த்.

"என் அத்தை என்கிட்டே உருகறாங்க. உங்களுக்குப் பொறாமை" என்றாள்.

"உங்களுக்குப் பொறாமை" என்று அவள் சொன்னதைப் போலவே சொல்லி அவன் கிண்டல் செய்ய, அவளும் தன்னை யாரும் பார்க்கவில்லை என்று கண்டுகொண்டு உதட்டைச் சுழித்து ஒழுங்கெடுத்தாள்.

சித்தார்த் சிரிப்புடன், "வா வா... நீ மேலே வருவ இல்ல" என்று உதட்டை மட்டும் அசைக்க, "ஹ்ம்ம்... புரியல” என்று செய்கையில் சொன்னதும், அவளருகில் வந்த மீரா, “வா வா நீ மேலே வருவ இல்லன்னு சொல்றார்" என்றதும், அசடுவழிய சிரித்துவிட்டுச் சித்தார்த்தைப் பார்க்க, அவனும் சிரித்துக்கொண்டே எழுந்து சென்றான்.

மீராவும், ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர். அவர்களது எண்ணம் ஓரளவுக்கு ஈடேறிவிட்டதே. அடுத்த நடவடிக்கையாக இருவரையும் தனியாக எங்காவது ஹனிமூன் அனுப்பிவிட வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள் மீரா.

நாட்களும் வேகமாக நகர ஆரம்பித்தது. நேத்ராவும், அஷ்வந்தும் மேற்படிப்பு குறித்தும், அதற்கு நடுவில் ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகச் சேர்ந்தனர். சித்தார்த் இருவரையும் அழைத்து, ஹோமில் உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மெடிக்கல் செக்கப் செய்வது குறித்து, அவர்கள் மருத்துவமனை டீனிடம் பேசும்படி கேட்டுக் கொண்டான்.

நேத்ரா, தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக முன்வந்து சொல்ல, அஷ்வந்த் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

தான் அதற்கு முன் ஒருமுறை ஹோமை பார்க்கவேண்டும் என்று சொல்ல, “அண்ணியுடன் போய் வா” என்றான் சித்தார்த்.

அண்ணனின் அனுமதி கிடைத்ததும் அவள் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தையும், கண்களில் தோன்றிய ஆர்வத்தையும் அஷ்வந்த்தை மட்டுமல்ல, சித்தார்த்தையும் யோசிக்க வைத்தது.

அன்று அனைவரும் வீட்டிலிருக்க தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆதியும், சித்தார்த்தும் ஷேர் மார்க்கெட் முதல், உலக விஷயங்களை அலசிக்கொண்டிருக்க, தேவகியும், ராம மூர்த்தியும் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். மீரா, நேத்ரா, மது மூவரும் ஸ்க்ரேபுல் விளையாடிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.

"ஹாய் அண்ணிஸ்!" என்றபடி அங்கே வந்தான் அஷ்வந்த்.

மீராவும், மதுவும் அவனைப் பார்த்து, "ஹாய்!" என்று சொல்ல நேத்ரா மட்டும், "வந்துட்டான் ரம்பம்" என்று முணுமுணுத்தாள்.

மதுவின் விளையாட்டைக் கவனித்தவன், ஒரு வார்த்தையை அமைக்க, “வீட்ல யாரும் இல்லாம பத்து நாளை ஓட்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி. அதுவும், அஷ்வந்த் இல்லாம கொஞ்சம் போர்" என்றாள் மது.

"தேங்க்யூ அண்ணி!. இந்த அஷ்வந்தோட அருமை இந்த வீட்ல உங்களுக்கு மட்டும்தான் புரிஞ்சிருக்கு" என்று சொல்ல நேத்ரா எரிச்சலுடன், "அண்ணி! உங்களுக்கு இவனைப் பத்திச் சரியா தெரியல. இவ்வளவு நாள் எக்ஸாம், வேலைன்னு அலைஞ்சதில் ஆள் வீட்டில் இல்லாம, எல்லோரும் நிம்மதியா இருந்தோம். இனி, எல்லாரையும் மொக்கை போட்டு, காதுல ரத்தம் வர வச்சதும் தான் நிறுத்துவான்" என்றாள் கடுப்புடன்.

"ஏய், பீப்ஸ்.... கொஞ்சம் அடங்கறியா. அண்ணி என்னைப் புகழ்ந்ததும், உனக்கு என் மேல கடுப்ஸ். அதான் உன் வயிறு எரியுது" என்றான்.

கோபத்தோடு, "தடியா, என்னைப் பீப்பான்னு சொல்லாதேன்னு எத்தனை முறை சொல்றேன்?” என்று கத்தினாள்.

"ஐந்தரை அடி பீப்பாவை, பீப்பான்னு சொல்லாம என்ன சொல்றது?" என்று சிரித்தான்.

"அஷ்வந்த் ஏன் எப்போ பாரு அவளிடம் வம்பு பண்ணிட்டு இருக்கீங்க? இந்தியன் லேடீஸ் எல்லோருமே நார்மல் ஹைட் ஐந்தரை அடி தான்" என்று நேத்ராவின் உதவிக்கு வந்தாள்.

“இவனெல்லாம் பனை மரம் மாதிரி ஆறு, ஆறரை அடி வளர்ந்தா அதுக்கு நாம என்ன செய்றது?" என்றாள் கோபத்துடன்.

"நான் சொன்னது உன் உயரத்தை இல்லடா ராஜாத்தி! உன் அகலத்தை..." என்று இரு கைகளையும் இருபுறமும் அகல விரித்துக் காட்டிச் சொல்ல, நேத்ரா கோபத்தில் உதடு துடிக்க, "போடா ஒட்டகச் சிவிங்கி" என்றாள்.

மீராவும், மதுவும் இருவரின் வார்த்தைகளும் தடிப்பதை தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

"பொண்ணுன்னா எப்படியிருக்கணும் தெரியுமா? இதோ, நம்ம அண்ணிங்க மாதிரி இருக்கணும். அதான், நம்ம அண்ணங்க ரெண்டு பேரும் சும்மா சுத்திச் சுத்தி வராங்க பாரு" என்றான் கிண்டலாக.

"நீ என்னதான் எங்களுக்கு ஐஸ் வச்சாலும், உனக்குச் ஸ்பெஷலா எதுவும் கிடையாது புரிஞ்சுதா?" என்றாள் மீரா..

"நேத்ரா! நீ கவலைப்படாதே. உன் ஹைட்டுக்கு, நீ கொஞ்சம் வெய்ட் குறைத்தால் போதும். இன்னும் ஆறே மாசத்துல நான், உன்னைச் ஸ்லிம்மாக்கிக் காட்டுறேன். அப்புறம், இந்த அஷ்வந்த் மட்டுமில்ல யாரும் உன்னை ஒண்ணும் சொல்ல முடியாது" என்றதும், "தேங்க்யூ அண்ணி!” என்று மதுவை சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

"ஏய்! அந்தப் பக்கம் போடி! சித்தார்த் அண்ணா உன்னை அப்படியே சிவபெருமான் மாதிரி எரிச்சிடப் போறார்" என்றான் தீவிர பாவனையுடன்.

"டேய்! சும்மா இருக்க மாட்டியா? நாங்க ரெண்டு பேரும் இங்கே பேசிட்டு இருக்கோம். நீ வம்பா எங்களை வம்புல கோர்த்து விடுற" என்றான் சித்தார்த்.

"அவனுக்கு வேற வேலை என்னடா? அவனுக்கும் கல்யாணமாகி இதுமாதிரி ஒரு பொண்டாட்டி வந்தால் தெரியும்" என்றான் ஆதி.

"இது மாதிரின்னா... என்னை மாதிரியா? ராட்சஷி மாதிரி வாயாடின்னு சொல்லாமல் சொல்றீங்களா" என்று கோபத்துடன் கேட்டாள் மீரா.

"நான் ஏன் மீராம்மா உன்னைச் சொல்லப் போறேன்?" என்றான் சமாளிப்பாக.

"அப்போ, இது மாதிரின்னா யாரை மாதிரி ? இன்னைக்கு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்" என்று சொல்லிகொண்டே போக, ஆதி தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக, சிரித்துக் கொண்டிருந்த அஷ்வந்தைப் பார்த்து, "போதுமாடா?" என்று பாவமாகக் கேட்டான்.

"ஹப்பா! இப்போ தான் நிம்மதியா இருக்கு. நான் வந்த வேலை நல்லபடியா முடிந்தது" என்று அவன் நிம்மதியாகச் சொல்ல, ஆதி அவன் முதுகிலேயே ஒன்று போட்டான்.

அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, "மது! நாளைக்கு நீ ஹோமுக்குப் போகும்போது நேத்ராவையும் அழைச்சிட்டுப் போ. கேம்ப் விஷயமா ஸ்ரீயுடன் பேசணுமாம்" என்று சொன்னான் சித்தார்த்.

"சரிங்க, என்றவள், நேத்ராவிடம் திரும்பி நாளைக்குப் பத்து மணிக்கு மேலே போகலாம் நேத்ரா!" என்றாள்.

அதற்காகவே காத்திருந்த நேத்ராவும் புன்னகையுடன், "சரி அண்ணி!" என்று சந்தோஷமாக தலையாட்டினாள்.

மறுநாள் காலையில் நேத்ராவை அழைத்துக்கொண்டு ஹோமுக்குச் சென்றபோது ஸ்ரீராம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.

"அண்ணி! அவர் பேசிமுடிக்கும் வரை, நாம ஹோமைச் சுத்திப் பார்க்கலாமா?" என்று கேட்டாள்.

"ஓஹ்... தாராளமா பார்க்கலாம்" என்றவள், தானே உடன் சென்று அனைத்து இடங்களையும் சுற்றிக் காட்டினாள்.

இருவரும் ஹோமை பார்த்துவிட்டு வந்தபோது ஸ்ரீ ராம் இருவருக்காகவும் காத்திருந்தான். மது நேத்ராவை அழைத்துக்கொண்டு ஸ்ரீயின் அறைக்குச் சென்றாள். "வா மது, சௌக்கியமா?" என்றவனின் பார்வை, நேத்ரா மீது விழுந்தது. அவளிடம் ஒரு சிநேகப் புன்னகையை வீசினான்.

"அண்ணா! இது என் நாத்தனார், நேத்ரா. இவங்க தான் டாக்டர். உங்ககிட்ட கேம்ப் பத்திப் பேசணும்னு வந்திருக்காங்க" என்றாள்.

"ஹலோ உட்காருங்க" என்று இருக்கையைக் காட்டினான்.

அவளும், “ஹலோ" என்று சொல்லி விட்டு அமர்ந்தாள்.

"அண்ணா! நான் போய்க் குழந்தைங்களோடு விளையாடிட்டு இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் பேசுங்க" என்றவள் ,நேத்ராவிடம் திரும்பி தலையசைத்துவிட்டுச் சென்றாள்.

நேத்ராவும் தனக்குத் தேவையான விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டு ஸ்ரீயிடம் தங்களுடைய தேவை. எப்படிச் செய்யவேண்டும் என்று மேலும் சில விஷயங்களைத் தெளிவு படுத்திவிட்டு அமர, இருவருக்கும் காபி வந்தது. ஸ்ரீ, கப்பை அவளிடம் கொடுத்தான்.

“அப்படியே நடந்து கொண்டே குடிக்கலாமா?" என்று கேட்டவளைப் பார்த்துச் சரி என்பது போலத் தோளைக் குலுக்கினான். இரண்டு நிமிடம் பேசாமல் வந்தவளால், அதற்கு மேல் முடியவில்லை.

"உங்க ட்ட பெர்சனல் கேள்வி கேட்கலாமா?" என்று கேட்டாள்.

ஸ்ரீ ஆச்சரியமாக, “அப்படி ஒண்ணும் பெரிய ஆள் இல்லைங்க நான். என்னிடம் பர்சனல் கேள்வி என்ன கேட்கப் போறீங்க?" என்றான்.

"ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்கவா விஷயம் இல்லை? சரி, நான் கேட்கிறேன் நீங்க அதற்குப் பதில் சொல்லிக்கொண்டே வாங்க" என்றவள், "முதல் கேள்வி, நீங்க எப்படி இந்த ஹோமை எடுத்து நடத்தணும்னு நினைச்சீங்க?"

"இந்த ஹோம் எங்க தாத்தா காலத்திலிருந்து நடத்திட்டு இருக்கோம். அப்பா என்னை ஏரோனாடிக்கல் என்ஜினியரிங் படிக்க வைத்தார். நானும் படிப்பை முடிச்சிட்டு ஒரு வருடம் ஏர்போர்சில் வேலை செய்தேன். அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததும், என் வேலையை விட்டுட்டு இந்த ஹோமைப் பார்த்துக்க ஆரம்பித்தேன்" என்றான்.

"அப்போ உங்க அம்மா, அப்புறம் உங்க கூட பிறந்தவங்க எல்லோரும் எங்கே இருக்காங்க?" என்றாள்.

ஸ்ரீ புன்னகைத்துவிட்டு "சின்ன வயசுலயே அம்மா இறந்துட்டாங்க. அப்பா தான் என்னை வளர்த்தார். நானும், அர்ஜுனும் திக் பிரெண்ட்ஸ். பாதி நேரம் அவங்க வீட்டில் தான் இருப்பேன். எனக்குக்கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை என்ற எண்ணமே தெரியாம, ரெண்டு பேரும் சேர்ந்து வளர்ந்தோம். ஒன்றாக வேலை செய்தோம். ட்ரெயினிங் பீரியடில் உங்க மாமா ஹரி சார் தான் எங்களுக்கு ட்ரெய்னர். இதுதான் என்னோட கதை போதுமா?" என்றான்.

"ஹ்ம்ம்... உங்களுக்கு அண்ணியைக் கூட அவங்க மூலமாகத் தான் தெரியும் இல்லையா?" என்றதும், "ஆமாம். மது எனக்குக்கூட பிறக்காத தங்கை" என்றான் மனம் நிறைய பாசத்துடன்.

“ஓஹ்! அண்ணி உங்க தங்கைனா, எங்க அண்ணன் உங்க மச்சானா?" என்றாள் புன்னகையுடன்.

ஒரு விசித்திர பார்வையை அவள் மீது செலுத்திவிட்டு, "அப்படித்தான்" என்று சொல்லிவிட்டு முன்னால் செல்ல, “அப்போ, மச்சானோட தங்கை உங்களுக்கு என்ன வேணும்ன்னு தெரியுமா?" என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு முன்னால் நடந்து செல்லும் ஸ்ரீயை பின்தொடர்ந்து சென்றாள்.

அங்கே வந்த மது, “ரெண்டு பேரும் பேசி முடிச்சிட்டீங்களா?" என்றதும், நேத்ரா "ஹ்ம்ம்... பேசியாச்சு அண்ணி. ஆனா, நான் பத்து லைன் பேசினா, அவர் பத்து வார்த்தை பேசுறார்" என்று குற்றப் பத்திரிகை வாசித்தாள்.

"அண்ணா அப்படித் தான் நேத்ரா. அதிகமா பேசமாட்டாங்க" என்று சிரித்தவள், "ஓகே அண்ணா நாங்க கிளம்பறோம்" என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.

கார் வரை உடன் வந்த ஸ்ரீ, நேத்ரா இருந்த பக்கம் திரும்பவே இல்லை. மதுவுடனே நின்று பேசிவிட்டு புன்னகையுடன் விடைபெற்றுக்கொண்டான்.

காரில் ஏறியது முதல் நேத்ராவின் நினைவு ஸ்ரீயிடமே சுற்றிக்கொண்டிருக்க, அமைதியாகவே வந்தாள். யோசனையிலிருந்த மதுவும், அவளது அமைதியைக் கவனிக்கவில்லை.

நேத்ரா மனத்திற்குள் புலம்பிக்கொண்டிருந்தாள். ‘சரியான சாமியார்! ஹோம்லயிருந்து இருந்து அப்படியே மாறியாச்சு போல. இருக்கட்டும்! சாமியாரை, மாத்தும் விதத்தில் மாத்தலாம்’ என்று எண்ணிகொண்டே அவன் தன்னைப் பற்றிச் சொன்னவைகளை யோசித்துக் கொண்டே வந்தாள்.

‘ஸ்ரீராம் நீங்க விலகி விலகிப் போனாலும், நான் உங்களை மிஸ் பண்ணமாட்டேன்’ என்று புன்னகையுடன் நினைத்துக்கொண்டாள்.


அத்தியாயம் –58

மீராவின் அறையில் அஷ்வந்த், நேத்ரா, மீரா மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். "அண்ணி, இன்னும் நாலு நாளைக்கு நம்ம பிளான் சித்தார்த் அண்ணாவுக்கும், அண்ணிக்கும் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரிந்தால் போட்ட பிளான் எல்லாம் வீணாகிவிடும்" என்றான் அஷ்வந்த்.

"ஆமாம் அண்ணி, அஷ்வந்த் சொல்வது தான் சரி. இல்லைனா, ரெண்டு பேரும் அவங்க பிறந்த நாளைக்குக் கோவில் போய்ட்டு வந்து, ஹோமில் குழந்தைகளோடு இருந்துட்டு வந்தார்களே, அதுபோலத் தான் செய்வாங்க. சோ, நாம அவங்க ஃபர்ஸ்ட் வெட்டிங் டேவை நல்லா கொண்டாடணும்” என்றாள்.

"ஹ்ம்ம்...உங்க அண்ணன் தான் வேலை வேலைன்னு அது பின்னாலேயே ஓடிட்டு இருக்கார். எங்கேயாவது ஒரு பத்து நாள் வெளியூர் போய்ட்டு வாங்கன்னு சொன்னா, கேட்டா தானே. புதுப் ப்ராஜெக்ட் போகுது. ஃபாரின் கம்பெனியோட புது கான்ட்ரக்ட் சைன் பண்ணியிருக்குன்னு ஏதாவது காரணம் சொல்ல வேண்டியிருக்கு. இந்த மதுவாவது சொல்றதைக் கேட்கிறாளா? அவளும், அதையே பிடிச்சிட்டு நிக்கிறா" என்று அவர்கள் இதுவரை தனியாக ஹனிமூன் செல்ல ஒத்துக்கொள்ளாத ஆதங்கத்தில் மீரா பேசிக்கொண்டிருந்தாள்.

அந்த நேரம் கதவைத் திறந்து உள்ளே வந்த ஆதி, "என்ன மூணு பேரும் சேர்ந்து யாரைக் கவிழ்க்கக் கூட்டுச் சதி செய்றீங்க?" என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

"எல்லாம் உங்க தம்பி கல்யாண நாள் கொண்டாட்டம் பத்தித் தான். நானும் ,சுபாவும் சேர்ந்து ஒரு பிளான் வச்சிருக்கோம். ரெண்டு பேரையும் முதலில் கிளப்பி டெல்லி அனுப்பிட்டா, அங்கே சுபா பார்த்துப்பா" என்றாள்.

"நாம எல்லோருமே மாத்தி மாத்தி ஏதாவது செய்றோம். ஆனா, அவன் கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கானே மீரா! என்ன செய்வது? அந்தப் பொண்ணை வெளியூர் எங்கேயும் கூட்டிட்டுப் போக மாட்டேன்றான். அம்மாவும், அப்பவுமே சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டு விட்டுட்டாங்க. நாம ஏதாவது சொன்னா சிரிச்சே மழுப்புவான். நாம சொல்லத்தான் முடியும்" என்று சொல்லிவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான்.

"ஓகே அண்ணி நாங்க கிளம்பறோம். விஷயம் சீக்ரெட்டா இருக்கட்டும். பை" என்று சொல்லிவிட்டு நேத்ராவும், அஷ்வந்தும் சென்றனர்.

ஹ்ம்ம்.. என்று பெருமூச்சுடன் ஆதியின் பக்கத்தில் அமர்ந்த மீரா, "ஏன் ஆதி, நான் நினைக்கிறேன் இன்னும் ரெண்டு பேரும் முழுசா சரி ஆகலைன்னு. கல்யாணமாகி முழுசா ஒரு வருஷம் ஆகப்போகுது. வித்யா இவங்களுக்கு மூணு மாதம் முன்னால் கல்யாணம் ஆன மேகலா, ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு மாதத்தில் குழந்தை பிறக்கப் போகுது. ராஜி அத்தையும், விமலா அத்தையும் சொல்லவும் முடியாம; விழுங்கவும் முடியாம தவிச்சிட்டிருக்காங்க. இதுக்கு மேல, நாமளும் இவங்க ரெண்டு பேரோட விஷயத்தில் தலையிடவும் முடியாது. ரெண்டு பேர் மேலயும் தப்பு சொல்ல முடியாது? சில சமயம் நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு ஆதி" என்று அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

"நாம சொல்லத்தான்டா முடியும். எப்படியாவது சித்தார்த்தை இந்த முறை விடக்கூடாது. சரி, அவன் ஆபீஸ் வேலை எதுவும் தடைபடாமல் ஜீவா, ரமேஷிடம் நான் பேசிக்கிறேன். மீதி வேலையை, நீ பார்த்துக்கோ. ஓகே வா" என்றதும் சிரித்தவளின் நெற்றியில், புன்னகையுடன் முத்தமிட்டான்.

மறுநாள் மாலை ராஜேஷ், பெரியவர்களுடன் மதுவைக் காண வீட்டிற்கு வந்தான். ராஜேஷின் காரைப் பார்த்ததும் வெளியே வந்து, அவர்களைச் சந்தோஷத்துடன் வரவேற்றாள். அதற்குள் தேவகியும் வந்து அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
காரைப் பூட்டிவிட்டு வந்த ராஜேஷைப் பார்த்ததும் "அண்ணா!" என்று ஓடிவந்தவளை "மதும்மா! எப்படிடா இருக்க?" என்று தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். "நான் நல்லாயிருக்கேன் அண்ணா! நீங்க எப்படியிருக்கீங்க? வீட்ல எல்லொரும் எப்படி இருக்காங்க?" என்று ஆசையுடன் விசாரித்தாள்.

“எங்களை எல்லாம் நேரில் பார்த்ததும் இவ்வளவு விசாரிக்கிற... வர வரப் போனும் செய்றது இல்ல. எங்களைப் பார்க்க வீட்டுக்கும் வர்றது இல்ல" என்றான்.

"வீட்ல வேலை சரியா இருக்கு. ஹோமுக்கு வேற போறேன். இங்கே ஆர்த்திக்கு நான் இல்லைனா பொழுது போகலையாம். அவளுக்கு நான்தான் எல்லாம் செய்யணும். இல்லனா அழுவா" என்றாள்.

அங்கே வந்த அஷ்வந்த், "ஆமாம். அண்ணி இல்லனா, எங்க அண்ணன் என்ன செய்வாரோ, அதை ஆர்த்தி செய்வான்னு, நாசூக்கா சொல்றாங்க" என்றான்.

அனைவரும் சிரிக்க, சற்றுநேரத்தில் சித்தார்த்தும் வந்துவிட, அவன் கையிலிருந்த பிரீப் கேஸை வாங்கிக்கொண்டு வந்தாள்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர். வந்தவர்கள், “வித்யாவுக்கு வளைகாப்பு வச்சிருக்கோம். எல்லோரும் முன்னாலேயே வந்து விசேஷத்தில் கலந்துக்கணும்" என்று சொல்லி அழைப்பிதழைக் கொடுத்தார்.

தேவகி, “மேகலாவுக்கு இது எத்தனை மாதம்?" என்று விசாரித்தார்.

"இது ஐந்தாம் மாதம். ஏழு மாதம் முடிஞ்சதும், அவளுக்கும் வளைகாப்பு நடத்திடலாம்னு இருக்கோம்" என்று ராஜி சொல்லிக்கொண்டிருக்க, சிரித்துக் கொண்டே சித்தார்த்தின் பக்கம் திரும்பிய மது, அவன் கண்களில் தெரிந்த சிறு சஞ்சலத்தை கண்டுகொண்டாள்.

சங்கடத்துடன் அவள் அங்கிருந்து நகர்ந்துவிட, மீராவின் விழிகள் அவளைப் பின் தொடர்ந்தன.

"மாப்பிள்ளை சார்! கல்யாண நாளுக்கு, இன்னும் மூணு நாள் தான் இருக்கு. பார்ட்டி கிடையாதா?" என்றான் ராஜேஷ்.

"பார்ட்டி தானே... கொடுத்துட்டா போகுது" என்றான் சந்தோஷமாக.

"என்னப்பா! முதல் கல்யாண நாள் கிராண்ட் செலிப்ரேஷன் தானே" என்றதற்கு மழுப்பலாகச் சிரித்தான் சித்தார்த். இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்க, இரவு உணவையும் முடித்துக்கொண்டு வந்தவர்கள் கிளம்பினர்.

அழைப்பிதழ் கொடுக்கும் போது சற்று சோர்வுடன் இருந்தவன் அதன்பிறகு அதைப் பற்றி நினைக்கவே இல்லை. ஆனால், மதுவிற்கு அதே நினைவாகவே இருந்தது. தன்னால் அவனும் இப்படி வேதனை அனுபவிக்கின்றானே!’ என்று எண்ணிக்கொண்டே படுத்தவளால் தூங்கவே முடியவில்லை.

மறுநாள் காலையில் வழக்கம் போல ஆபீஸ் கிளம்பிச் சென்றவன், மதியம் வீட்டிற்குப் போன் செய்தான்.

"மது! நான் இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பி வரேன். எனக்கு இரண்டு நாளைக்குத் தேவையான டிரஸ்ஸை பேக் செய்து வை" என்று சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டான்.

‘நாளை மறுநாள் தங்கள் முதல் திருமண நாள். இந்த நேரத்தில் எங்கே கிளம்பிச் செல்கிறான்?’ என்று எண்ணிக்கொண்டே அவன் சொன்னவற்றைச் செய்தாள்.

அரைமணி நேரத்தில் வந்தவன், உடையை மாற்றிக்கொண்டே, “மது! ஒரு அவசர மீட்டிங் ஸ்ரீநகர்ல. நான் நாளைக்குக் காலையில் எப்படியும் வந்துடுவேன். நான் கொஞ்சம் பிஸியாக இருப்பேன். அதனால, நானே போன் செய்து பேசுறேன். நீ செய்யவேண்டாம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

தனது அன்னையிடம் சொல்ல, “ என்ன சித்தார்த் இது நாளன்னைக்கு உங்க கல்யாண நாள். இந்த நேரத்தில் இப்படி அவசரமா கிளம்பிப் போகணுமா? ஜீவா இல்ல ரமேஷை அனுப்ப கூடாதா?" என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

"அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் ப்ராஜெக்ட் வேலை பெண்டிங் இருக்கு. அதான் நான் போறேன். முடிஞ்ச வரைக்கும் நாளைக்கு இல்லனா, நாளன்னைக்கு ஈவ்னிங் வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு, அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான்.

அவன் சென்றபின்னும் வாசலில் நின்றபடி, அவன் சென்ற வழியை பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவை அழைத்த தேவகி, "நீ வாம்மா. அவன் கட்டாயம் நாளைக்கு வந்திடுவான்" என்று ஆறுதல் சொல்லி, உள்ளே அழைத்துச் சென்றார்.

அன்று இரவெல்லாம் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாள் அதிகாலையில் மொபைல் ஒலிக்க சத்தம் கேட்டு எழுந்தவள் சித்தார்த்தின் பெயரைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் பேசும் முன்பே, "விஷ் யூ எ ஹாப்பி வெட்டிங் ஆனிவர்சரி டூ மை லிட்டில் கார்ஜியஸ்!" என்று சித்தார்த்தின் ஆழ்ந்த குரல் கேட்டதும் மதுவின் மனதில் சந்தோஷ மின்னல் வெட்டியது.

“சித்தூ....தேங்க்ஸ்" என்றவளின் குரல் உள்ளடங்கி நெகிழ்ந்திருந்தது. கண்கள் சட்டென கலங்கியன. "உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்" என்று சொன்னபோது அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை.







"தேங்க்யூடா!" என்றவன் "ஐ ல்வ் யூ மது!" என்று சொன்னவன் போனைக் கட் செய்து விட்டான்.
“ஹலோ! ஹலோ….” என்றவளுக்குப் பதிலாக மறுமுனையில் எங்கேஜ்டு டோன் வந்தது.

எவ்வளவோ முயன்றும் அவனது லைன் கிடைக்கவே இல்லை. அவன் போன் செய்ததே சந்தோஷத்தை கொடுக்க எழுந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு கீழே சென்றாள். அவளுக்காக காத்திருந்த அனைவரும் வாழ்த்துச் சொல்ல, பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாள்.

"மதும்மா! உனக்கு எங்களுடைய கல்யாணப் பரிசு” என்று தங்கள் பரிசாக வைர நெக்லஸ் ஒன்றைக் கொடுக்க, "மாமா! தப்பா நினைக்காதீங்க. அவரும் வந்ததும் நான் வாங்கிக்கிறேனே" என்றாள்.

"பரவாயில்லைம்மா வாங்கிக்க. நல்ல நாளும் அதுவுமா, உன்னை வெறுங்கையோட எப்படி ஆசீர்வாதம் செய்றது?" என்று சொல்ல, அவளும் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். மற்றவர்களும் தங்கள் அன்பளிப்பைக் கொடுக்க, "ப்ளீஸ்... அவர் வந்ததும், ரெண்டு பேருமா சேர்ந்து வாங்கிக்கிறோம்” என்றதும் சரியென ஒப்புக்கொண்டனர்.

காலையில் தேவகி, மீராவுடன் கோவிலுக்குச் சென்று வந்ததும் மீண்டும் சித்தார்த் மொபைலில் அழைத்தான்.

"மது எங்கே இருக்க? வீட்ல தானே” என்று கேட்டான்.

"ஆமாம். நீங்க எப்போ கிளம்பி வரீங்க?” என்று கேட்டதும், “இன்னும் மீட்டிங் முடியல முடிந்ததும் வந்துடுறேன். கொஞ்சம் வெளியே போய்ப் பாரு" என்றான்.

மதுவும் வெளியே சென்று பார்க்க ஒருவர் ஒரு கிப்ட் ராப் செய்யப்பட்ட சிறிய பெட்டியை கொடுத்துவிட்டுச் சென்றதும் மது அதைப் பிரித்துப் பார்த்தாள். சிறிய ஐவரி பாக்ஸ் சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.

“என்ன மது பிரித்துவிட்டாயா?" என்றான்.

“ம்ம்... ஐவரி பாக்ஸ் இருக்கு" என்றாள்.

“பிரிச்சிப் பார்த்துட்டு அப்படியே கேட்டுக்கு வெளியே போய்ப் பார். கொஞ்ச நேரத்துல நானே கூப்பிடுறேன்" என்று இணைப்பைத் துண்டித்தான்.

அவசரமாக ரிப்பனைப் பிரிக்க, உள்ளே வெல்வெட் துணியில் ஒரு சிகப்பு ரோஜாவும், ஒரு பேப்பரில், ‘டு மை லிட்டில் ஏஞ்சல்’ என்று எழுதியிருக்க ஒரு சாவியும் இருந்தது. சாவியை பார்த்ததும் புரிந்து கொண்டவள் வேகமாக வாசலுக்கு ஓடினாள்.

அங்கே அழகானப் பச்சை நிறத்தில் புத்தம் புதிய எர்ட்டிகா பளபளப்புடன் நின்றுகொண்டிருக்க, “வாவ்...” என்று தன்னையும் அறியாமல் சொன்னவள் ஆசையுடன் அந்த காரைத் தடவி ரசித்தாள்.

மீண்டும் சித்தார்த்திடம் இருந்து போன் வர, ''என்ன மது பிடிச்சிருக்கா? உனக்குப் பிடிச்சக் கலர்" என்று சொல்லவும், அவளுக்குப் பேச்சு வராமல் தொண்டை அடைத்தது.

“மது!” என்றவனது குரல் காதலுடன் ஒலிக்க, "ம்..." என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. "ஓகேம்மா மீட்டிங் ஆரம்பிச்சிடுச்சி. நான் அப்புறம் கூப்பிடுகிறேன்" என்று சொல்லி வைத்துவிட்டான்.

எனக்கு இந்தக் கலர் பிடிக்கும் என்று எப்படி தெரியும்? என்று யோசனையுடன் இருக்க, அதற்குள் வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்து மகிழ்ந்தனர். அதன் பிறகு ஒருவர் மாற்றி ஒருவர் போன் செய்து வாழ்த்த, ஹோமிற்குச் செல்ல, என்று அவளது நேரம் ஓடியது. மாலையில் அவள் மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட, அஷ்வந்தின் ஏற்பாட்டின்படி பெரிய கேக்கும், இரவு டின்னரும் வந்துவிட, அனைவரும் சித்தார்த்தின் வருகைக்காக காத்திருந்தனர்.

அவர்களது நல்வாழ்வில் அக்கறை கொண்டிருக்கும் அனைவரும் வந்துவிட, சித்தார்த் மட்டும் வரவே இல்லை. நேரம் ஆகஆக அவளுக்குக் கவலை அதிகரித்தது. அனைவரின் முன்பும் சிரித்தது போலயிருந்தாலும், மனத்தில் கவலை அரித்துக்கொண்டே இருந்தது. ஒருவர் மாற்றி ஒருவர் சித்தார்த்தின் மொபைலுக்கு முயல, அவனைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

மதுவின் அருகில் வந்த சுரேஷ், "என்ன மது அண்ணன் எங்கே போயிருக்கார். முதல் கல்யாண நாள் ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா தானே எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும்." என்றதும், "இல்ல சுரேஷ், அவர் வேலை விஷயமாக தான் ஸ்ரீ நகர் போயிருக்கார் என்றதும் அருகில் இருந்த ரமேஷ் வேலை விஷயமா ஸ்ரீ நகர்க்கா?" என்று சொல்லிக்கொண்டே வந்தவன் விஷயம் புரிய பேச்சை பாதியில் நிறுத்திவிட்டான்.

ஆனால், மது அதைக் கவனித்துக்கொண்டாள். ஆனால், எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

கடைசியில் ஒன்பது மணி வரை சித்தார்த் வராததால், மதுவை மட்டும் கேக் கட்பண்ண சொல்ல மது ஆர்த்தி, ஆகாஷை வைத்து கேக்கை வெட்ட வைத்தாள். அனைவரும் சற்றுக் கவலையுடனே இருந்தாலும், அவளுக்காக எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மதுவிற்கோ, இருக்க இருக்க கோபமும், துக்கமும் போட்டிப் போட அனைத்தையும் தனது புன்னகைக்குப் பின்னால ஒளித்துக் கொண்டாள்.

பெயருக்குச் சாப்பிட்டேன் என்று சிறிது கொறித்தாள். அனைவரும் கிளம்பிச் சென்றதும், தன் அறைக்குச் சென்றவள் அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கோபமும், துக்கமும் பொங்கிவர வெகு நேரம் அழுது தீர்த்தாள்.

விடியும் நேரம், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அறைக்குள் யாரோ நடமாடுவது போல தோன்ற கண்ணைத் திறந்து பார்த்தாள். இரவு விளக்கின் ஒளியில் முதலில் எதுவும் புரிபடவில்லை. யாரோ வார்ட்ரோபைத் திறக்கும் சப்தம் கேட்டதும், இந்த நேரத்தில் அறைக்குள் யார் என்று பயத்துடன், வீல்லென அலறவும், வார்ட்ரோபில் டாக்குமென்ட்டை வைத்துக்கொண்டிருந்த சித்தார்த் பதற்றத்துடன் ஓடிவந்தான்.

"மது... மது..." என்று பயத்துடன் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தவளைப் பிடித்து உலுக்க சித்தார்த்தின் குரலைக் கேட்டதும், "நீங்..க..." என்றவளால் அதற்கு மேல் பேச முடியாமல் தவிக்க, அருகிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.

ஆதரவாக தலையைத் தடவி கொடுத்தவன், "பயந்துட்டியா. சாரிடா" என்றபடி அவள் முகத்தை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.

தன் பதட்டம் அடங்கும் வரை அப்படியே இருந்தவள், மெல்ல அவனது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

"விடுங்க சித்தாத்!" என்றவளது குரல் ஞமணநமன போட்டது.

கையை விடாமல் எழுந்தவன், "என் மேல கோபமா இருக்கியா?" என்றதும் ஆத்திரத்துடன் திரும்பியவள், “கோபமா! நான் எதுக்கு உங்க மேல கோபப்படணும்? உங்க மேல கோபப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு?" என்று சொல்லும்போதே கண்கள் கலங்கின.

அவளைத் தன்புறமாக இழுக்க, அவள் திமிறினாள்.

“மது! நீ பேசின, நான் கேட்டேன். இப்போ, நான் சொல்றதை நீ கேளு” என்று அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினான்.

"என்ன சொல்லப் போறீங்க? எனக்குச் சொல்ல ஏதாவது கதை வச்சிருக்கீங்களா?" என்று எரிச்சலுடன் கேட்டாள்.

"இப்போ உனக்கு என்ன கோபம் மது. நான் நேத்து வரல. அதானே..."

"ஆமாம், ஏன் அப்படிச் செய்தீங்க? நீங்க வராதபோது எதுக்கு எனக்குப் பரிசு கொடுக்கணும்? நான் உங்களைக் கேட்டேனா? அது சரி, நீங்க எனக்காகவா செய்தீங்க? எல்லோரும் கேட்பாங்கன்னு தானே இந்தப் பரிசெல்லாம்... நான்தான் முட்டாள் மாதிரி நீங்க உண்மையாகவே ஆபீஸ் விஷயமாக போயிருப்பதாக நினைச்சிக்கிட்டேன். ஆனா, நீங்க என்னை மட்டுமில்ல... அத்தை, மாமா, இன்னும் எல்லோரையும் ஏமாத்தி இருக்கீங்க" என ஆத்திரத்துடன் கத்தினாள்.

"நீ என்ன சொன்னாலும் நான் யாரையும் ஏமாற்றவில்லை. நான் எதற்காக மற்றவர்களுக்காக உனக்கு எல்லாம் செய்யவேண்டும். நான் உனக்கே உனக்காகத் தான் செய்தேன். எல்லாவற்றையும்..." என்றவன் எல்லாவற்றிலும் என்ற வார்த்தையில் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துச் சொன்னான்.

"அதனால் தான் நேத்து வராம ஏமாற்றினீர்களா?" என்றவளால் அதற்கு மேல் என்ன சொல்வது என புரியாமல் நிற்க.

"மது இப்படி உட்கார் நான் எல்லாவற்றையும் சொல்கிறேன்" எனச் சொல்லி அவளை அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்தான்.

“நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் நான் சொல்வது அத்தனையும் உண்மை. நீ தர்ம சங்கடத்திக்கு ஆளாகக் கூடாதுன்னு தான், வெளியூர் போனேன். அதுமட்டும் இல்ல. போன வாரம் அண்ணி, நேத்ரா, அஷ்வந்த் மூணு பேரும் ஏதாவது பேசுறதும் நாம யாராவது வந்தா பேச்சை நிறுத்திடுவாங்க இல்ல வேற ஏதாவது சத்தமாகப் பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதைக் கவனிச்சிட்டுத் தான் இந்த முடிவை எடுத்தேன். இல்லனா, உன்னோட சூழ்நிலை தான் தர்மசங்கடமா ஆகியிருக்கும். அதனால தான் மூணு நாளைக்குப் பெங்களுர் போய்ட்டேன்" என்றவன் அவளை நேருக்கு நேராகப் பார்த்தான்.

"நீங்க என்கிட்டச் சொல்லிட்டே போயிருக்கலாமே. அத்தையும், மாமாவும் எவ்வளவு சங்கடப்பட்டாங்க தெரியுமா? அத்தை எனக்காக அவங்க வருத்தத்தை மறைச்சிக்கிட்டு எனக்கு ஆறுதல் சொன்னாங்க" என்றாள்.

"நான் அம்மாவிடம் தான் சொல்லவில்லை. ஆனால், அப்பாகிட்டச் சொல்லிவிட்டுத் தான் போனேன். நான் எந்த விஷயத்தையும், அப்பாவிடம் மறைக்கறதில்ல மது! ஒரு முறை அவர்ககிட்ட சொல்லாம மறைச்சி அதுக்காக பட்ட வேதனையும், துன்பமும் கொஞ்சநஞ்சம் இல்ல. அதிலிருந்து, என்னால தீர்க்க முடியாத, குழப்பமான விஷயங்களை அப்பாகிட்டக் கலந்து பேசி அவரோட யோசனையையும் கேட்டுத் தான் முடிவெடுக்கறேன்" என்றான்.

“சாரி சித்தூ! என்னால தானே...” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், அவளது கரத்தில் முத்தமிட்டு, “உனக்காக மட்டும் தான். ஆனா, எப்பவுமே நடக்குமா நடக்குமான்னு எதிர்பார்த்து ஒரு விஷயம் நடந்திடும் போது, அதன் சந்தோஷமே தனி. அப்படி ஒரு சந்தோஷத்துக்கான எதிர்பார்போடு காத்திருக்கேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

பதில் சொல்ல முடியாமல் அவள் நெளிய, “சரி. நான் கொஞ்சநேரம் தூங்கி எழுந்துக்கறேன். காலைல எல்லோரிடமும் பாட்டு வாங்கணும். முடிஞ்சா, என்னைக் கொஞ்சம் காப்பாத்தும்மா" என்றதும், "ம்ம், சமாளிக்கத் தெரியாமலா இவ்வளவு வேலையும் நடந்தது?” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.

“அதானே... அல்லிராணியையே சமாளிச்சாச்சு. மத்தவங்களைச் சமாளிக்க மாட்டோமா!” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, “சித்தார்த்...!” என்றாள் கொஞ்சலாக.

“எஸ் டியர்! ஐயம் ஃபார் யூ” என்று பாவனையுடன் சொல்ல, தலையை உலுக்கிக் கொண்டவள், நீங்க தூங்குங்க…” என்றபடி மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொள்ள, அவனும் புன்னகையுடன் படுத்தான்.

சித்தார்த் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட, மதுமிதா அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்கிறானே!’ என்று ஒருபுறம் சஞ்சலமாக இருந்தாலும், மறுபுறம் அதை நினைக்கவே பேரின்பமாக இருந்தது. அதே சந்தோஷத்துடன்

படுத்துக்கொண்டிருந்தவளுக்கு, ‘அது என்ன? ஒருமுறை ரொம்பவும் வேதனைப்பட்டதாகச் சொன்னானே. அதைச் சொல்லும்போதே, அவனது கண்களில் தெரிந்த வேதனை... என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தாள்.

‘சரி, சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் அவரே சொல்வார்’ என்று எண்ணிக் கொண்டாள்.
தோட்டத்தைச் சிறிதுநேரம் சுற்றிவந்தவளின் மனம் முழுதும் சந்தோஷ அலை வீசிக்கொண்டிருக்க, போர்ட்டிக்கோவிற்கு வந்தவள் அங்கே நின்றுகொண்டிருந்த புத்தம் புது காரை மெல்லத் தடவிக்கொடுத்து இதழ் பதித்தாள்.

சிரித்துக்கொண்டே நிமிர்ந்தவள், புன்னகையுடன் மறுபக்கம் வந்து நின்ற கணவனைக் கண்டதும், “ஸ்.ஸ்..” என்று வெட்கத்துடன் கண்களைச் சுருக்க, "மேடம்! ஒரு டிரைவ் போய் வரலாமா?" என்று கேட்டான்.

"போய் வரலாம். முதல்ல கோவில் போய்ட்டு வந்து குழந்தைகளையும் கூட்டிட்டு ட்ரைவ் போகலாம்” என்றாள் மகிழ்ச்சியுடன்.

"டன்!” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன், “குளிச்சிட்டு வந்துடுறேன்" என்று வீட்டிற்குள் செல்ல, குழந்தைகளைத் தயார் செய்ய உற்சாகத்துடன் சென்றாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
448
63
அத்தியாயம்—59

"ஏய்! நில்லுடா என்கிட்ட உதை வாங்காம நீ போகப் போறது இல்ல. எப்பப் பாரு என்கிட்டயே சண்டை போட வேண்டியது. உனக்கு வரப்போறா பாரு ஒரு ராட்சஷி!" என்று அஷ்வந்தை துரத்திக்கொண்டு ஓடிவந்தாள் நேத்ரா.

அவன் சிரித்துக்கொண்டே மொட்டை மாடிக்கு ஓடினான். அங்கே ரூஃப் கார்டனில் மதுவும், மீராவும் செடிகளைச் சுத்தம் செய்துக்கொண்டிருக்க, தேவகி குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தபடி ஊஞ்சலி அமர்ந்திருந்தார்.

அவன் தன் அன்னையில் அருகில் அமர்ந்துகொள்ள, துரத்தி வந்தவள் அன்னையைக் கண்டதும், "அம்மா! நான் சும்மா இருந்தாலும், என்னையே வம்பு பண்ணிட்டிருக்கான்" என்றாள் சிணுங்கலுடன்.

"இன்னைக்கு என்ன பிரச்சனை?" என்று கடமைக்குக் கேட்பதைப் போலக் கேட்டதும், "ஒண்ணுமில்லம்மா! இவள் டைரில எதையோ மறைச்சி வச்சா. அதைப் பார்த்துட்டு, என்னடி ஏதாவது திருட்டுத்தனம் செய்றியான்னு கேட்டேன். செய்யலைன்னா செய்யலைன்னு சொல்லணும்" என்று சொல்லிக்கொண்டிருக்க, வேகமாக நடுவில் குறுக்கிட்டாள் நேத்ரா.

“அம்மா! இவன் என்ன சொன்னான்னு மட்டும் கேளுங்க? வேற கதை எதுவும் வேணாம்" என்று அவசரமாகச் சொல்ல, அவளைப் பார்த்த தேவகியின் பார்வையில் ஆராய்ச்சி இருந்தது. “என்னம்மா நீங்க அவனைக் கேட்கச் சொன்னா, என் முகத்தைப் பார்க்கறீங்க?" என்று சிறு எச்சரிக்கையுடன் கேட்டாள்.

"சொல்லேன்டா! நீ அவளை என்ன சொன்ன?" என்றார்.

"ஒரே ஒரு கேள்வி கேட்டேம்மா. அதுக்கு இந்தக் அறிவுக்கொழுந்து, தப்பாப் பதில் சொன்னா; நான் சிரிச்சேன். அதுக்கு என்னைத் துரத்திட்டு வர்றா" என்றான்.

"அப்படி என்ன கேள்வி?" என்று மீரா கேட்டதும், "அது அண்ணி, ஒரு ஓட்டப் பந்தைய மைதானம். அங்கே ஐம்பது பேர் ஓடறாங்க. உனக்கு முன்னால நாற்பத்தி ஒன்பது பேர் ஓடறாங்க. உனக்குப் பின்னால எத்தனைப் பேர் ஓடிவருவாங்கன்னு கேட்டேன்? இந்த மேதாவி ஒருத்தர் ஓடிவருவாங்கன்னு சொன்னா... எனக்குச் சிரிப்பா வந்தது. ஏன்டா சிரிக்கிறன்னு கேட்டா, லூசு உனக்கு முன்னால நாற்பத்தி ஒன்பது பேர் ஓடினா நீ தானேடி கடைசியா ஐம்பதாவது ஆளா ஓடுவ. உனக்குப் பின்னாடி யாரு ஓடிவருவான்னு கேட்டேன்? அதுக்குத்தான் என்னைத் துரத்திக்கிட்டு வரா" என்றதும் மற்ற மூவரும் சிரிக்க, நேத்ரா மீண்டும் அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.

சிரித்தபடியே மதுவிடம் திரும்பிய தேவகி, "மது! நம்ம வித்யா வளைகாப்புக்கு, இன்னும் நாலு நாள்தான் இருக்கு. ஈவ்னிங் அவளுக்கு நல்லதா கிஃப்ட் வாங்கிட்டு வந்துடலாம். நீயும், சித்தார்த்தும் ரெண்டு நாளைக்கு முன்னாலேயே கிளம்பிப் போங்க. உங்க அத்தைக்கும் சந்தோஷமா இருக்கும்" என்றார்.

"அவரைக் கேட்கணும் அத்தை! ஏதாவது வேலையிருந்தா...?" என்றாள்.

"ஆமாம்! திருவான்மியூருக்கும், கொட்டிவாக்கத்திற்கும் ப்ளைட்லயா போய் வரப்போறோம்? அதெல்லாம் அவன் பார்த்துப்பான். அவங்களும், நீ வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு புலம்பறாங்க. நாளு கிழமைல கூடிக்கறதுக்குத் தான் உறவுகள்" என்றார்.

"சரிங்கத்தை! அவர்கிட்டச் சொல்றேன்" என்றாள்.

மறுநாளே இருவரும் தீபக்கின் வீட்டிற்குச் செல்ல, "என்ன மது சொல்லாம கொள்ளாம வந்திருக்க?" என்று ராஜி ஆச்சரியத்துடன் கேட்டார்.

"அத்தை தான் ரெண்டு நாள் முன்னாலேயே கிளம்பிப் போகச் சொன்னாங்க" என்றதும், "அதானே பார்த்தேன். இந்தப் பொண்ணுங்கல்லாம் எப்படித் தான் கல்யாணம் ஆனதும் தலை கீழா மாறிடறீங்களோ தெரியல. இத்தனை வருஷம் பிறந்து வளர்ந்த வீட்டை மொத்தமா மறந்து போய்டுறீங்க" என்றான் தீபக்.

"ஆமாம் அத்தான்! மேகலாவோட அம்மா கூட, அதைத் தான் சொன்னாங்க" என்றதும், சித்தார்த் சிரித்தான்.

"என்ன சிரிப்புப்பா உனக்கு? உன் பொண்டாட்டி என்னைக் கிண்டல் பண்றது உனக்குச் சிரிப்பா இருக்கு..." என்றான்.

ஆண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மது தன் அத்தை, விமலா, மேகலா வித்யாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். வித்யாவிடமும், மேகலாவிடமும் அவர்களுடைய உடல்நிலை குறித்து விசாரித்தாள்.

மேகலா சத்தமாக, “எங்களை விசாரிக்கறது இருக்கட்டும். நீ எப்போ குட் நியூஸ் சொல்லப் போற?" என்று கேட்டாள்.

"ஏய்! மெதுவா பேசுடீ. என் காது ஜவ்வே கிழிஞ்சிடும் போலயிருக்கு" என்றாள் மழுப்பலாக.

"போதும் போதும் கேட்டக் கேள்விக்கு நீ மழுப்பாம பதிலைச் சொல்லு" என்று வித்யா சொன்னதும், அவள் அங்கிருந்து நழுவ முயல வித்யாவும், மேகலாவும் அவளைப் பின் தொடர்ந்து வந்தனர்.
"பதில் சொல்லாம ஓடாதடி! நீ எப்போ எங்களுக்கு குட் நியூஸ் சொல்ல போறேன்னு கேட்டேன்" என்று மேகலா திரும்ப கேட்டதும், மது சிரித்துக்கொண்டே தன்னையும் அறியாமல் திரும்பிச் சித்தார்த்தைப் பார்த்தாள்.

அந்தநேரம் அவனும், அவளையே பார்க்க மதுவின் கன்னங்கள் வெட்கத்துடன் சிவந்தன. பார்வையைத் தழைத்துக் கொண்டவளைப் பார்த்த சித்தார்த்திற்குத் திருமணமான புதிதில் சுபா இதே போன்று சொன்னபோது இருந்தவளின் பாவனையும், இப்போது அவளது முகத்தில் தோன்றும் வெட்கமும் அவளது மாறுதலை நன்கு உணர்த்தியது.

"இங்கே பாருடி இந்த லுக்கெல்லாம் அப்புறம் விட்டுக்கோ. வீ நீட் தி ஆன்சர்" என்று அவளைத் துளைத்தாள் மேகலா.

"மேகலா, வித்யா வந்து இந்த டிபனை கொண்டுப் போய் எல்லோருக்கும் கொடுங்க" என்று ராஜி கிச்சனிலிருந்து குரல் கொடுக்க, "வரேன்ம்மா" என்ற வித்யா. “சரியான அழுத்தம்டி நீ" என்று சொல்லிவிட்டுச் செல்ல, அவள் புன்னகையுடன் தன் அறைக்குச் சென்றாள்.

வளைகாப்பு அன்று காலையில் வீடே உறவினர்களின் வருகையால் கலகலத்துக் கொண்டிருந்தது. சம்மந்திகள் அனைவரது வருகையாலும், வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

வித்யாவிற்கு நல்ங்கு வைத்து முடித்ததும், ஒவ்வொருவராக பரிசுப் பொருட்களை அளித்தனர். தேவகியும், ராம மூர்த்தியும் வாழ்த்தி விட்டுத் தங்கள் அன்பளிப்பாக வித்யாவிற்குப் பச்சைக் கல் வளையலும், பட்டுப்புடவையும், ராஜேஷுக்கு கோடியும் எடுத்துக் கொடுத்திருந்தனர்.

மதுவின் பிறந்த வீட்டினருக்குப் பெருமை பிடிபடவில்லை. தங்கள் பெண்ணை அவர்கள் கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு விஷயத்திலும் கவனித்துக் கொள்வதில் பெரும் சந்தோஷம். மதுவும் அவர்களுடன் அனைத்திலும் ஒன்றாகக் கலந்து கொண்டு பெரியவர்களை முன்னிறுத்தி நடந்து கொள்கிறாளே! என்று அகமகிழ்ந்தனர்.

அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க உறவினர் ஒருவர், “என்ன மது வித்யா, மேகலா ரெண்டு பேரும் நல்ல விஷயம் சொல்லிட்டாங்க. நீ எப்போ சொல்லப் போற?" என்று கேட்டதும், அவள் திணறலாகச் சிரித்தாள்.

சற்று தள்ளி ஸ்ரீராமுடன் பேசிக்கொண்டிருந்த சித்தார்த், "குறைந்தது ரெண்டு வருஷமாவது ஆகும். நாங்களும் கொஞ்ச நாள் ஜாலியா இருந்துக்கறோமே. அதுக்காக குழந்தைங்க வந்தா தொந்தரவுன்னு சொல்லலை. குழந்தை வந்துட்டா மது என்னைச் சுத்தமா கவனிக்க மாட்டாளே!" என்றதும் அனைவரும் நகைத்தனர்.

மதுவிற்கோ, ‘எதற்காக இவன் தன் மீதே எல்லாவற்றையும் போட்டுக்கொள்கிறான். இந்த நிலையிலும் எப்படி இவனால் சகஜமாகச் சிரிக்க முடிகிறது?’ என்று வருத்தத்துடன் நினைத்தவளின் மனதிற்குள் ஏதோ ஒன்று கரைவது போலயிருந்தது.

விழா முடிந்து அனைவரும் கிளம்பிச் செல்ல, மது வீட்டினர், மேகலா வீட்டினர் மட்டும் இருந்தனர். அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, பேச்சு சித்தார்த்தின் முதல் திருமண நாள் அன்று வராதது குறித்து வந்து நின்றது. அனைவரும் அவனைக் கேள்வி கேட்பதும், அவனும் சமாளிப்பாக ஆளுக்குத் தகுந்தார் போல பதிலளித்ததும், அவளுக்கு மனத்தில் உறுத்தியது.

“போனதெல்லாம் போகட்டும். அடுத்த வாரம், சுபா டெல்லிக்கு வரச்சொல்லி கூப்பிட்டிருக்கா. அதுக்காவது ரெண்டு பேரையும் கிளம்பி போய் வரச்சொல்லுங்க" என்றாள் மீரா.

"அடுத்த வாரமா? என்னால முடியவே முடியாது. ஆளை விடுங்க" என்றவன் எழுந்து சென்றுவிட, விமலா, “என்ன மதும்மா! எல்லோரும் இவ்வளவு தூரம் சொல்றாங்க. நீங்க ரெண்டு பேரும் பிடிகொடுக்காமல் இருக்கீங்க" என்று கேட்டார்.

செய்வதறியாமல், "வீட்டுக்குப் போனதும், அவர்கிட்டப் பேசறேன் அம்மா" என்றாள்.

அவளது இந்தப் பதிலே, மீராவிற்குச் சந்தோஷத்துடன் நிம்மதியைக் கொடுத்தது. ‘இனி, சித்தார்த்தை இவளே சம்மதிக்க வைத்துவிடுவாள்’ என்ற நம்பிக்கை துளிர்த்தது.

அறைக்கு வந்தவள், சொல்ல வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தவிப்புடன் நின்றிருக்க, படுக்காமல் தன் அருகிலேயே நின்றிருந்தவளைக் கூர்ந்து பார்த்தான். “என்ன மது தயங்கித் தயங்கி நிற்கிற. ஏதாவது சொல்லணுமா?" என்று கேட்டான்.

"ம்ம், உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்" என்றாள்.

மடியிலிருந்த லாப்டாப்பை மூடி வைத்துவிட்டுத் தலையணையை முதுகிற்குக் கொடுத்து காலை நீட்டி அமர்ந்தவன், “சொல்லு. என்ன முக்கியமான விஷயம்?" என்றான்.

"அது... அது வந்து நம்ம வீட்டில் எல்லோருமே நம்மள எங்கேயாவது வெளியூர் போய் வரச்சொல்லறாங்க. நாமளும், ஏதாவது சொல்லித் தள்ளிப் போட்டுட்டே இருக்கோம். அதனால, எல்லோருக்குமே கொஞ்சம் வருத்தமிருக்கு..." என்று நிறுத்திவிட்டு கணவனின் முகத்தை நோக்கினாள்.

அவன், கையைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். உதட்டைக் கடித்துக்கொண்டு எழுந்தவள் திரும்பி நின்றபடி, "அதனால... நாம அடுத்த வாரம் டெல்லி போய்ட்டு வரலாமே..." என்றாள்.

சித்தார்த்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போக, ஒருவேளை அவனுக்கு விருப்பம் இல்லையோ என்று எண்ணி திரும்பிப் பார்த்தாள். அவனோ, நம்ப முடியாத பார்வையை மனைவியின் மீது பதித்திருந்தான்.

அவள் மௌனமாகப் பார்க்க, "இது சரியா வருமான்னு யோசிக்கிறேன்? இத்தனை நாள் தள்ளிப் போட்டுட்டு வந்ததற்குக் காரணம், நாம ரெண்டு பேரும் இங்கே இருந்தாலும், நான் பாதி நேரம் வீட்ல இருக்கமாட்டேன். உனக்கும் மத்தவங்களோட நேரம் போயிடும். இதுவே எங்கேயாவது ஊருக்குப் போனா... இருபத்து நாலு மணி நேரமும், என் முகத்தைப் பார்க்கணும். என்னிடம் தான் பேசணும். என்னைச் சகிச்சிக்கணும்..." என்றவனை விழிகளை உருட்டிப் பார்த்தாள்.

‘சகிச்சிட்டிருக்கேனா?’ என்று கடுப்புடன் நினைத்தவள், “பேசணும்னு நினைச்சிக் கண்டபடி பேசாதீங்க சித்தூ! என்னைக்காவது உங்களைச் சகிச்சிட்டு இருக்கேன்னு சொன்னேனா? எப்படி அந்த வார்த்தையைச் சொல்வீங்க?” என்று ஆற்றாமையுடன் கேட்டவளை, கனிவுடன் பார்த்தான்.

அவனது பார்வையின் மாறுபாட்டை உணர்ந்தவளது குரல் இறங்கி விட, “போய்ட்டு வரலாம்ன்னு நான்தானே சொல்றேன்! நீங்க ஏன் தயங்குறீங்க?” என்றவள், “ஒரு வேளை என் முகத்தைப் பார்த்துச் சகிக்கணு உங்களுக்குப் பயம்மா இருக்கா?" என்று கண்களை விரித்துப் பாவனையுடன் கேட்டள்.

எழுந்து அவளருகில் வர, அந்த நெருக்கத்தில் அவளது இதயம் படபடவென வேகமாக அடித்துக்கொண்டது.

அவளது முகவாயைப் பற்றி நிமிர்த்தியவன், "இந்த அழகான குழந்தைத்தனமான முகத்தைப் பார்த்து தானே விழுந்தேன். பிறை போல நெற்றி, பட்டாம்பூச்சி போலப் படபடக்கும் நீளக் கண்கள் எல்லாம் சேர்ந்து தானே என்னை வலைவிரித்து விழவச்சது. எடுப்பான இந்த நாசி, கலகலவெனச் சிரிச்சி என்னை வாவான்னு அழைக்கும் அதரங்கள்; சமயத்துல என்னைப் பார்த்ததும் இளம் ரோஜாவாகச் சிவக்கும் இந்தக் கன்னம்... இதையெல்லாம் நாளெல்லாம் சலிக்காம பார்த்துக்கொண்டே இருக்கணுங்கற எண்ணம் தானே வரும்" என்று தன் விரல்களால் அவளது முகத்தில் ஓவியம் தீட்டிக்கொண்டே சொல்ல, வெட்கமும்; தவிப்புமாக கண்களை மூடிக்கொண்டவளை வேகமாக அருகில் இழுத்தான்.

அவளது இமைகள் மேலும் அழுத்தமாக, என்ன நினைத்தானோ சட்டென அவளிடமிருந்து விலகினான்.

அவனுடைய விலகலை உணர்ந்து கண்களைத் திறந்தவள், அவனைத் தேடினாள். அவனோ, பால்கனியில் கழுத்தைத் தடவியபடி நின்றிருக்க, கதவருகில் வந்து நின்றவள், “சித்தார்த்..." என்று மெதுவாக அழைத்தாள்.

திரும்பாமலேயே, "நீ படு மது! நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்" என்றதும், "இல்ல சித்...." என்றவளை, "ப்ளீஸ் மது! லீவ் மீ அலோன்" என்றான் சற்று கடினமான குரலில்.

அவனது புறக்கணிப்பைத் தாங்க முடியாமல், கண்ணை கரித்துக்கொண்டு வர மௌனமாக வந்து படுத்துவிட்டாள்.

சித்தார்த்தின் மனச்சாட்சி அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. ‘சித்தார்த்! அவசரப்படாதே. அவளுடைய மனம் முழுதாக மாறட்டும். தற்போது, மதில் மேல் பூனை என்ற நிலைதான் அவளுடையது. அவளே அவளைப் பரிபூரணமாக உணரட்டும். இவ்வளவு காலம் பொறுத்திருந்த நான், இன்னும் சிறிதுகாலம் காத்திருக்கிறேன். தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் அவள் உன் மேல் சற்று நெகிழ்ந்து இருக்கலாம்.

இது போதாது. முழுக்க முழுக்க மதுவின் மனம் என்னை ஏற்றுக்கொள்ளும் நிலையை அடையவேண்டும். அவளுடன் இருக்கப் போகும் இந்தப் பத்து நாட்களில் என்னையும், என் காதலையும் அவள் உணரும்படி செய்வேன். மேலும், அவளைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தையும் அவளிடம் சொல்லி அவள் அதை மன்னிக்க வேண்டும் அது மிக முக்கியம். இல்லையென்றால் என்னுடைய மனசாட்சியே என்னை நிம்மதியாக இருக்க விடாது. எல்லாவற்றையும் ஏற்ற பின்தான் அவளுடனான என் வாழ்க்கையைத் துவங்கவேண்டும்’ என்று எண்ணிக்கொண்டே நெடுநேரம் நின்று கொண்டிருந்தான்.

அவள் உறங்கிவிட்டாள் என்பதை உறுதிசெய்து கொண்டு, விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தான். அவளைத் தழுவத் துடித்தக் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உறக்கத்தைத் தழுவினான்.

காலையில் எழுந்தது முதல், இருவரும் ஒன்றுமே பேசவில்லை. அலுவலகம் செல்லத் தயாராகி வந்தவன், “அம்மா! எங்கேயாவது வெளியூர் போய் வரச்சொல்லி, இத்தனை நாளா கேட்டீங்க இல்ல. நானும் யோசித்தேன். சரி போய்ட்டு வந்துவிடலாம்ன்னு முடிவு செய்திருக்கோம்" என்றான்.

"ரொம்பச் சந்தோஷம்ப்பா! இப்போதாவது அவளை வெளியே கூட்டிட்டுப் போகணும்னு தோணுச்சே. சரி, அடுத்த வாரம் தானே போறீங்க?" என்றார் தேவகி.

"இல்லம்மா! நாளைக்குக் காலையிலேயே கிளம்பறோம்" என்று சொல்லிவிட்டு மதுவைப் பார்க்க, அவள் கையிலிருந்த சாம்பாரைக் கலக்கிக் கொண்டிருந்தாள்.

சித்தார்த் காரை எடுக்கச் செல்ல வழக்கம் போல அவனுடன் வாசல் வரை செல்ல கதவை தாண்டியதும் சித்தார்த் சட்டென திரும்ப கீழேயே பார்த்துக்கொண்டு வந்தவள் அவன் மீது மோதியவளைப் பிடித்து நிறுத்தினான்.

“மேடம்! இப்படித் தரையையே பார்த்து நடந்து வந்தா, இப்படித் தான் முட்டிக்கணும்" என்றதும், "நான் ஒண்ணும் கீழே பார்த்துட்டு வரல" என்றாள் எதோ சொல்ல வேண்டும் என்று.

"அப்போ என் மேல முட்டிக்கணும்னே வந்தியா?" என்று இரு புருவங்களை உயர்த்திக் கேட்க, “ம்ம் ஆசைதான் மோதிக்கணும்னு” என்றாள் வேகமாக.

“அதுக்கு நேராவே வந்து மோதியிருக்கலாமே...” என்றதும், “ஆஹ்...” என்றாள்.

“ஏய்! நேரான்னா கீழே பார்க்காமலேயேன்னு சொன்னேன்” என்று வேகமாகச் சொன்னவன், “சரி, பத்து நாளைக்குத் தேவையானதை பேக் பண்ணிக்கோ” என்றவன் அவள் கன்னத்தைத் தட்டிக்கொடுத்து விட்டுக் கிளம்ப, சந்தோஷத்துடன் கையசைத்தாள்.

 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
448
63
அத்தியாயம்​

"ஹேய்! சித்தார்த், மது வாங்க வாங்க. இப்போதாவது இங்கே வரணும்னு தோணுச்சே" என்று சந்தோஷத்துடன் இருவரையும் வரவேற்றாள் சுபா. பரஸ்பர நல விசாரிப்புக்குப் பிறகு, "என்னடா நீ மட்டும் தனியா வந்திருக்க? உன் பின்னாடி லாரி வரலையா?" என்று சுபா கேட்க மதுவும், ஹரியும் புரியாமல் பார்த்தனர்.

சித்தார்த் சிரித்துக்கொண்டே, “நான் என்ன பார்சல் சர்வீசா நடத்தறேன்? நான், என் பொண்டாட்டிகூட ஜாலியா ஒரு பத்து நாள் இருக்கலாம்னு, என் வேலைகளை ஒதுக்கி வச்சிட்டு வந்திருக்கேன்" என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய தோளில் கை போட்டபடி அருகில் அமர்ந்தான்.

அவள் சங்கடத்துடன் நெளிய, சுபா கண்டும் காணாதது போல எழுந்து சென்றாள். ஹரியும் கையிலிருந்த புத்தகத்தில் பார்வையைப் பதிக்க, மதுமிதா எழுந்து செல்ல முயற்சித்தாள்.

வேண்டுமென்றே சித்தார்த் அவளை எழவிடாமல் தோளை அழுத்த, "அண்ணி! அருந்ததி எப்போ ப்ளே ஸ்கூல்ல இருந்து வருவா?" என்று சப்தமாகக் கேட்டுக்கொண்டே எழுந்து சென்றாள்.

"மதியம் வந்திடுவா மது!" என்றவள் தம்பி மனைவியுடன் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, சித்தார்த் அங்கே வந்தான்.

பேசிக்கொண்டே திரும்பிய சுபா, மதுவின் பின்னால் நின்றிருந்த தம்பியைக் கண்டதும் சத்தமில்லாமல் சிரிக்க, உதட்டில் விரல் வைத்துச் ‘சத்தம் போடாதே!’ என்று செய்கை செய்ததும், "மது! பால் பொங்கியதும் இறக்கிடு. நான் இதோ வரேன்" என்று சொல்லிவிட்டு குறும்புச் சிரிப்புடன் சென்றாள்.

பால் பொங்க, “அண்ணி! சர்க்கரை எங்கே இருக்கு?” என்று ஷெல்ஃபில் தேடிக்கொண்டே திரும்பியவள், குறுகுறு பார்வையுடன் தனக்குப் பின்னால் நின்றிருந்த கணவனைக் கண்டதும், “என்ன வேணும்?" என்று உள்ளடங்கிய குரலில் கேட்டாள்.

பதில் சொல்லாமல் அவளை உரசுவது போல வரவும், ஒரு பக்கம் சுவரும், மறுபக்கம் சித்தார்த்தும் நிற்க, எந்த பக்கம் போவதென்று தெரியாமல் திணறிக்கொண்டே சமையலறை மேடை மீது சாய்ந்தாள். சித்தார்த் பொறுமையாகக் கையை நீட்டி அவளுக்குப் பின்னாலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு, “இது தான் வேணும்” என்று சொல்லிக்கொண்டே வெளியே சென்றான்.

நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, ‘என்னிடம் சொல்லியிருந்தால் நான் எடுத்துக் கொடுத்திருக்க மாட்டேனா?’ என்று எண்ணிக்கொண்டே நின்றிருக்க, அவன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

மதிய உணவு நேரத்திற்கு குழந்தைகள் வந்துவிட, "ஹாய் வருண், ஹே அரு டார்லிங்" என்று அவளிடம் ஓடி வந்த அருந்ததியைத் தூக்கிக்கொண்டாள். குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொஞ்சிக்கொண்டிருக்க, அவளருகில் இயல்பாக வந்து அமர்ந்தவன், "கல்யாணமான இவ்வளவு நாள்ல, ஒரு நாளாவது என்னை இப்படிக் கொஞ்சி, ஒரு முத்தமாவது கொடுத்தியா நீ!" என்று கேட்டதும், பதைப்புடன் சுற்றிப் பார்த்தாள்.

"ஹே... முண்டக்கண்ணி... உன் கண்ணை உருட்டி உருட்டிக் காட்டி இப்படித் திருதிருன்னு விழித்தா எல்லோருக்கும் தெரிந்துவிடும். இப்போதைக்கு, நம்மள யாரும் கவனிக்கல. ரிலாக்ஸ்!" என்றான்.

அவனது சீண்டலில் முகம் சிவந்தவளாக, குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.

சாப்பிட்டு முடித்ததும் சித்தார்த்திடம் ஒரு கவரை கொடுத்த ஹரி, "இதுல என் பிரெண்டோட அட்ரஸ் போன் நம்பர் இருக்கு. இன்னைக்கு என் பிரெண்ட் வீட்டிலே தங்குவதுன்னாலும் தங்கிக்கோங்க. இல்லைனா, நீ சொன்னது போலவே கொசானியில் தங்க எல்லா ஏற்பாடும் செய்துட்டேன். அது ஒரு வில்லேஜ். அதனால ரொம்ப வசதின்னு சொல்ல முடியாது. நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. நைனிட்டால்லயும் தங்க ஏற்பாடும் செய்தாச்சு. ரெண்டு மணிக்கு கிளம்பலாம்" என்றார்.

"ஏன் அண்ணி நீங்களும் வரலாமே? எல்லோரும் போனா ஜாலியா இருக்குமே" என்றாள் சுபாவிடம்.

அவளது பேச்சைக் காதில் வாங்காதது போல, “மது! ஒருவாரத்திற்குத் தேவையான டிரஸ் எடுத்துக்கோ. பன்னெண்டு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம்” என்றான்.

அவள் அங்கிருந்து செல்ல, சித்தார்த்தின் அருகில் வந்து அமர்ந்த சுபா அவன் முகத்தைப் பார்த்துச் சிரிசிரியென சிரித்தாள்.

“ஹேய்! சுபா உன் சிரிப்பை நிறுத்தறியா!” என்றவனுக்கும், தன்னை மீறி புன்னகை அரும்பியது.

"பார்த்தியா உனக்கே தாங்கல. நீ ஹனிமூனுக்கு நம்ம வீட்டு மொத்தக் கும்பலோட போனா எப்படியிருக்கும்னு? நினைச்சேன்..." என்று மீண்டும் சிரிக்க, "ம்க்கும்... அதுக்கு ஹனிமூன் வேற போணுமாக்கும்" என்று பாவமாகச் சொல்ல, சுபா விழுந்து விழுந்து சிரித்தாள்.

உடைகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தவள், ‘இருவருக்கும் அப்படி என்ன சிரிப்பு?’ என்று எட்டிப் பார்த்தவள், சித்தார்த்தின் இறுக்கம் களைந்த முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

ஹரி, சித்தார்த், மது இருவரையும், பாலம் ஏர்போர்டில் ப்ளைட் ஏற்றிவிட்டதும் பூல்பாக் ஏர்போர்டில் வந்து இறங்கிய இருவரையும் ஹரியின் நண்பர் நேராக வந்து தன் காரிலேயே நைனிட்டாலுக்கு அழைத்துச் சென்றார். வழி முழுதும் தெரிந்த இயற்கை அழகையும், வளைந்து நெளிந்து செல்லும் பாதையும், ஓடைகளும், அருவிகளும், விண்ணைமுட்ட வளர்ந்திருந்த பைன் மரங்களையும், சுத்தமான காற்றையும் சுவாசித்தபடி, விமானப் பயணம் என்பதால் அவ்வளவாக அலுப்பும் தெரியாததால், இளங்குளிரை அனுபவித்தபடி முகம் மலர ரசித்தபடி வந்தனர் இருவரும்.

முதலில் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்ற ஹரியின் நண்பர், அன்று அங்கேயே தங்கச் சொல்ல, “இல்லை நாங்க கொசானில சூரிய அஸ்தமனமும் காலையில, சூர்ய உதயமும் பார்த்துட்டு, நாளைக்கு ஈவ்னிங் நைனிதால் வருவது போல ஏற்பாடு" என்றான் சித்தார்த்.

"ஒஹ்..., சரி நீங்க முகம் கழுவிக்கொண்டு தயாராகுங்க போக எப்படியும் ஒன்றரை மணி நேரம் ஆகும். இன்னைக்கே நீங்க பார்க்க முடிந்தால் நல்லது. இல்லாவிட்டால் நாளைக்குப் பார்த்துவிட்டு காலையில் கிளம்பி வாங்க" என்று சொல்லிவிட்டுத் தன் காரிலேயே அவர்கள் தங்க வேண்டிய இடத்தில் விட்டுவிட்டு கிளம்பினார்.

"என் காரையும், டிரைவரையும் இங்கேயே விட்டுட்டுப் போறேன். நீங்க சுத்திப் பார்க்க வசதியாக இருக்கும். அவருக்கு எல்லா இடமும் தெரியும்" என்றார் ஹரியின் நண்பர்.

அவன் மறுத்தும், சித்தார்த்தைச் சமாதானம் செய்துவிட்டு, "டிரைவர் என்னை இறக்கி விட்டுட்டு திரும்ப வருவார். உங்களுக்கு டின்னர் என் வீட்டிலிருந்தே கொடுத்தனுப்புகிறேன் பத்திரமாக இருங்க. பத்து மணிக்கு மேல தனியா வெளியே வராதீங்க. நைட்ல யாராவது கதவை தட்டினாலும் உடனே, திறந்திடாதீர்கள். யார் என்று கேட்டுப் பதிலுக்குக் குரல் கொடுத்தால் மட்டும் திறங்க. நைட்ல சிறுத்தைகளோட நடமாட்டம் இருக்கும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்ப, அவள் பயத்துடன் சித்தார்த்தின் கையைப் பிடித்துக்கொண்டு அவனுடன் ஒட்டி நின்றிருந்தாள்.

சித்தார்த் சிரித்துக்கொண்டே, “இப்படி ஏதாவது சிறுத்தை, புலி வந்தாதான் என் கையையாவது பிடிப்பப் போலிருக்கு"என்று ஏக்க பெருமூச்சுடன், கிண்டலாகக் கூற, சட்டென அவன் கையை விட்டுவிட்டு ரிசார்ட்டின் உள்ளே சென்றாள்.

பத்து நிமிடத்திற்குப் பிறகும் சித்தார்த் வராமல் போகவே மேலே அறையிலிருந்து எட்டிப்பார்த்தாள். அங்கே நவநாகரீக ஆடையில் ஐந்தாறு பெண்கள் அவனிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, அவனும் அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

அந்த பெண்கள் நன்றி சொல்லிவிட்டுச் செல்ல, சித்தார்த் மொபைலில் பேசிக்கொண்டிருந்தான். அந்தப் பெண்கள் சென்ற திசையைப் பார்த்த மது, அவர்கள் அனைவரும் திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ஏதோ பேசிக்கொண்டு செல்வது தெரிய, எரிச்சலுடன் கீழே இறங்கி வந்தாள்.

சித்தார்த்தும் உள்ளே வர, “என்ன இவ்வளவு நேரம்? அவர் கிளம்பினதும் உள்ளே வரவேண்டியது தானே!” என்று கடுகடுத்தாள்.

அவளைக் கூர்ந்து நோக்கியவன், "சுபாகிட்டப் பேசிட்டிருந்தேன். அதுக்கு எதுக்கு நீ இப்படி டென்ஷன் ஆகற?" என்று கேட்டுக்கொண்டே ஸ்வெட்டரை எடுத்து அணிந்தவன், "கிளம்பு மது! சன்செட் பார்த்துட்டு வருவோம். பனி இருக்கறதைப் பார்த்தா... தெரியுமான்னே சந்தேகம் தான்" என்று சொல்லிக்கொண்டே பைனாகுலரையும் எடுத்துக்கொண்டு அவளுடன் கிளம்பினான்.

கிளம்பும் வரை கோபமாகவே இருந்தவள், வெளியே தெரிந்த இயற்கை அழகைக் கண்டு மனம் லயிக்க புன்னகையுடன் வந்தவளை ரசித்தபடி வந்தான் சித்தார்த். யாரும் இல்லாத மரங்கள் அடர்ந்த அந்த இடத்தில் நின்று சுற்றிப் பார்த்தனர்.

தூரத்தில் தெரிந்த இமயமலையின் நந்தா தேவி மலைத்தொடரை ரசித்தவளிடம், "இந்த இடம் உனக்குப் பிடித்திருக்கா மது?" என்று அவள் காதருகில் ரகசிய குரலில் கேட்டதும், "எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று சந்தோஷத்துடன் இரு கரங்களையும் கன்னத்தில் வைத்துக்கொண்டு, சிறு குழந்தையின் ஆர்ப்பரிப்புடன் சொன்னவளைக் காதலுடன் பார்த்தான்.

அவனது பார்வையைக் கண்டதும், அவளது கன்னங்கள் செந்நிற வானை ஒத்திருந்தது. அவளது கன்னத்தை மெல்ல வருடி, "அந்தி வானமும், உன் கன்னமும் ஒரே நிறத்தில் இருக்கு" என்று சொல்ல, அவள் நாணத்துடன் தலை கவிழ்ந்தாள்.

இயற்கை அன்னையின் அழகில் ஏகாந்தத்தை அனுபவித்தபடி தோள்கள் உரச நடந்த இருவரது கரமும் எப்போது இணைந்தது என்று அறியாவண்ணம் இறுக பிணைத்துக் கொண்டு நடந்தனர்.

தாங்கள் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்த பிறகும், இருவரும் தங்கள் கரங்களை விலக்கிக்கொள்ள மனம் இல்லாமல் கையை பற்றியபடியே கூட்டம் அதிகமில்லாத இடத்தில் ஒரு பெரிய பைன் மரத்தின் அடியில் அமர்ந்தனர். அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் புதுமணத்தம்பதிகள் இருந்ததால், இவர்களை யாரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. சொல்லப் போனால் மற்றவர்களில் சற்று விலகி அமர்ந்திருந்தவர்கள் இவர்கள் தான்.

சித்தார்த், அவளது கரத்தில் முத்தமிட, புன்னகையுடன் கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளது இந்த அருகாமையே அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்க, அவள் தலையின் மீது தன் கன்னத்தைப் பதித்துக்கொண்டான். நேரம் ஓடியதே தவிர பனியால் அஸ்தமனம் தெரியவில்லை.

உங்கள் வாழ்க்கையிலிருந்த அஸ்தமனம் எல்லாம் போதும் இனியாவது சந்தோஷம் உதயமாகட்டும் என்று எண்ணினாரோ அந்தக் கடவுள். அதனால் தான் அஸ்தமனத்தை காட்டாமல் இருந்தாரோ!

இருவருமே அந்த நேரத்தை அந்த நிமிடத்தை, அந்த நொடியை ரசித்தபடி தங்களை மறந்து அமர்ந்திருந்தனர். கண்ணை திறந்தவன், வெளிச்சம் குறைய ஆரம்பித்து இருள் சூழ்வதைப் பார்த்ததும், "மது கிளம்பலாமா? இருட்ட ஆரம்பிக்குது. அப்புறம் சிறுத்தை வந்துடப் போகுது" என்றதும், “ப்ளீஸ் ப்ளீஸ் அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க எனக்குப் பயமாயிருக்கு" என்று அவனை இன்னும் நெருங்கிக் கையை இறுகப் பற்றிக்கொண்டாள்.

"அப்போ, பயந்தபடியே என்னைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டே வா" என்றதும், "ம்ம்ம்... ரொம்பத் தான் ஆசை" என்று சொல்லிகொண்டே எழுந்தவள் தான் மேல் ஒட்டி இருந்த மண்ணை தட்டிவிட அமர்ந்திருந்தவன் கண்ணில் பட்டது.

அவன், "ஆஹ்..." என்று கண்ணைக் கசக்க, "என்ன சித்தூ? தூசி விழுந்துடுச்சா? சாரி சாரி. இருங்க..." என்று அவனது கண்ணைத் திறந்து ஊத அவள் அருகில் வந்ததும், அவள் கழுத்தில் சட்டென முத்தமிட்டான்.

நேசத்தின் வெளிப்பாடான அந்த முத்தத்தில் காதலே தெரிந்தது. அந்த நொடியில் ஏற்பட்ட பரவசமும், கிளர்ச்சியும் வெட்கத்துடன் அவனிடமிருந்து விலகச் செய்ய, அதை அனுமதிக்காமல் அவளது தோளை அணைத்தபடி நடந்தான்.

"சித்தூ ப்ளீஸ்! யாராவது பார்க்கப் போறாங்க” என்ற அவளது செல்லக் கெஞ்சலை, புறந்தள்ளினான்.

"எல்லோரும் அவங்க வேலைல தான் கவனமா இருப்பாங்க. யாரு நம்மை பார்ப்பாங்கன்னு நினைக்கிற?" என்றதும் சுற்றிலும் சங்கடத்துடன் பார்த்தாள்.
இவன் எவ்வளவோ தேவலாம் என்று எண்ணும் அளவிற்கு இருக்க, அவனது அண்மையை ஏற்றுக் கொண்டவளாக, மௌனமாக நடந்தாள். வாய் வேண்டாம் என்றாலும், அந்தக் கணத்தை மனம் இரசிக்கவே செய்தது.

கால்கள் வலிக்கும் அளவிற்கு நடந்தனர். நடக்க நடக்க ஏற்பட்ட உடல் உஷ்ணத்தையும் மீறி குளிர் வாட்ட ஆரம்பித்தது.

ஸ்ஸ் என்று கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டு, “இந்தக் குளிருக்கு சூடா இஞ்சி டீ சாப்பிட்டா நல்லாயிருக்கும்" என்றாள்.

“அவ்வளவு தானே!” என்றவன் சற்றுத் தூரத்திலிருந்த தேநீர் கடையை நோக்கி நடந்தான்.

சற்று வெளிச்சமான இடத்திற்கு வந்ததும், அவளது தோளிலிருந்து கையை எடுத்துவிட்டு, கையைப் பற்றி அழைத்துச் சென்றான். அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமரச் சொல்லிவிட்டுக் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தான். அந்த நேரம் அருகில் சிரிப்பொலி கேட்க, மது திரும்பிப் பார்த்தாள்.

அங்கே, மாலையில் தான் கண்ட அந்த ஐந்து பெண்களும் சிரித்தபடி இவளைத் தாண்டி கடையை நோக்கிச் சென்றனர். அவர்களைப் பார்த்ததும், ‘இந்தப் புன்னகை அரசிங்களா? இந்த நேரத்துக்கு இங்கே எதுக்கு வந்தாங்களோ?’ என்று எண்ணிக்கொண்டே பார்க்க, அவள் நினைத்ததைப் போல அவனைக் கண்டதும் மேலும் சிரிப்புடன் அவனிடம் பேச ஆரம்பித்தனர்.

அவளது முகம் கடுகடுத்தது. பெரிய எம்.டி. அவங்க எதுக்குப் பேச வராங்கன்னு கூடத் தெரியாம ஈன்னு பல்லைக் காட்டி இவரும் பேசிட்டிருக்காரு. வரட்டும் இன்னைக்கு ரூமுக்கு. இன்னைக்கு விடுற டோஸ்ல...’ என்று மனத்திற்குள் கருவிக்கொண்டே அமர்ந்திருக்க சித்தார்த் டீயுடன் வந்தான்.

"இந்தாங்க மேடம் டீ!" என்று கொடுத்தும், எதுவும் சொல்லாமல் வாங்கிக் குடிக்க ஆரம்பித்தாள்.

"டீ இன்னும் கொஞ்சம் சூடா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று அவன் சொல்ல, “கடைக்காரன் கொடுத்ததும் எடுத்துட்டு வந்திருந்தால் சூடா இருந்திருக்கும். அரைமணி நேரம் ஈன்னு சிரித்துச் சிரித்துப் பேசிட்டு வந்தா..." என்று எரிச்சலுடன் சொன்னாள்.

விஷயம் புரிய புன்னகைத்தவன், “என்ன மேடம் பொறாமையா?" என்றபடி மெதுவாக அவள் நெற்றியில் முட்டினான்.

"எனக்கென்ன பொறாமை" என்றவள் டம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு நிற்க, “டீ தான் சூடாக இல்லை. ஆனா, மேடம் ரொம்பவே சூடாக இருக்காங்க போல. அதுவும் நல்லதுக்குத் தான் குளிருக்குச் சும்மா கும்முன்னு இருக்கும்" என்று தோளைக் குலுக்கினான்.

"இருக்கும் இருக்கும் ரொம்ப நினைப்புத் தான்" என்று சொல்லிவிட்டு வேகமாக முன்னால் நடந்தாள்.

"ஹே மது! நில்லு நானும் வரேன்" என்று சொல்ல சொல்ல மது வேகமாக முன்னே சென்றவள் நின்றாள்.

அவன் அவளருகில் வந்தநேரம் அந்த ஐந்து பெண்களில் ஒருத்தி, "சார்! மார்னிங் சன்ரைஸ் பார்க்க வருவீங்க இல்ல. அப்போ பேசுவோம், பாய் சார்" என்று கொஞ்சிக் கொஞ்சிச் சொல்ல, அவன் சிரித்தபடி அவள் கையைப் பிடித்தான்.

கடுகடுவென்ற முகத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

"என் நிலைமையைப் பார்த்தா உங்களுக்குச் சிரிப்பா இருக்கா? விடுங்க என் கையை" என்று உதறிக்கொண்டு சென்றவளை, "ஹே! சும்மா வாடி ரொம்ப தான் பிகு பண்ற" என்று கையை இறுக பற்றிக்கொண்டு தாங்கள் தங்கி இருந்த ரிசாட்டிற்கு வந்தான்.

உள்ளே சென்று கதவை மூடியதும், “என்ன கோபம் உனக்கு மது டார்லிங்" என்று பின்னாலிருந்து அணைத்தவனைத் தள்ளி விட்டுவிட்டு அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டாள். ஏற்ற இறக்கத்தில் நடந்து சென்றதால், இரண்டு கால்களும் கடுக்க ஆரம்பித்தன.

குளிரில் பசி வேறு வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. மெல்லக் கதவைத் திறந்து பார்த்தவள் அவன் டிவி பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், “இங்கே நான் கால் வலியில் அவஸ்தை பட்டுட்டிருக்கேன். இவருக்கு இந்த நேரத்திற்கு டிவி ரொம்ப முக்கியம்” என்று முனகிக்கொண்டே கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

சற்றுநேரத்தில் ஹரியின் நண்பரின் வீட்டிலிருந்து இரவு உணவு வந்து விட, சித்தார்த் அவளைச் சாப்பிட அழைத்தான். இருந்த பசியில் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று உணவருந்தினாள். சாப்பிட்டு முடிக்கும் வரை, அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனும் மௌனமாகவே சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு, காலை பிடித்தபடி அமர்ந்திருந்தாள். அவள்து முக வாட்டத்தை வைத்தே சாப்பிட்டு எழுந்தவுடனே, கீசரை ஆன் செய்தான். பாதங்களை அழுத்தி விட்டுக்கொண்டு படுத்தவள் கண்களை மூட, அவளருகில் அமர்ந்தவன் இதமாக அவள் பாதங்களைப் பிடித்து விட்டான்.

கண்களைத் திறந்தவள், “சித்தூ! என்ன செய்றீங்க நீங்க? விடுங்க" என்று எழுந்து அமர்ந்தாள்.

"நீ ரொம்ப டயர்டா இருக்க. பேசாம படு. நான் அழுத்தி விடுறேன்" என்றான்.

"இல்ல வேண்டாம்... இப்போ பரவாயில்லை. ஏங்க விடுங்க” என்று சொல்ல, “நான் ஏற்கெனவே ஏங்கிட்டுத் தான் இருக்கேன். இதுல இன்னும் ஏங்கச் சொல்ற" என்று சொல்லிக்கொண்டே அவளுக்குப் பாதத்தை அழுத்திவிடுவதைப் பார்த்ததும் கண்களைக் கரித்துக்கொண்டு வர, உதட்டைக் கடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

அவள் முகத்தைப் பார்க்காமலேயே, “பீலிங்க்ஸெல்லாம் போதும். கொஞ்சம் இரு வரேன்” என்றவன், இதமான கால் பொறுக்கும் சூட்டில் வெந்நீரை பாக்கெட்டில் கொண்டுவந்து சிறிது நீலகிரி தைலத்தை ஊற்றி, "பாதத்தை கொஞ்சநேரம் வெந்நீரில் வச்சிக்க வலிக்கு இதமாக இருக்கும்” என்றான்.

அவன் சொன்னபடியே செய்ய, இடைப்பட்ட நேரத்தில் குளித்துவிட்டு வந்தவன், "நான் ஹால்ல இருக்கேன். ஏதாவது வேணும்னா என்னைக் கூப்பிடு" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். அந்தத் தண்ணீரை குளியலறையில் கொட்டிவிட்டு வரும்போது ஹாலை எட்டிப் பார்த்தாள். அங்கிருந்த திவானில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்.

‘உங்களுக்கும் தானே கால் வலி இருக்கும். ஆனா, எனக்காக செய்த உங்களுக்கு நான் ஒன்றுமே செய்யவில்லையே. எதற்கு எனக்கு இவ்வளவு கோபம் வருகிறது?’ என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

உள்ளே சென்று ஒரு தலையணையைக் கொண்டுவந்து தலைக்கு வைத்துவிட்டு, ரஜாயைப் போர்த்திவிட்டாள். அவன் தலையைக் கோதியவள், மெல்லக் குனிந்து முதன்முறையாக அவன் நெற்றியில் தன் இதழ் பதித்துவிட்டு அவன் காதருகில், “ஐ லவ் யூ சித்தூ!" என்று சொல்லிவிட்டு வெட்கத்துடன் ஓடிச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

மனம் நிறைய மகிழ்ச்சியுடன் இருந்ததாலும், உடல் சோர்வும் சேர்ந்து அன்று இரவு அவளை நிம்மதியான உறக்கம் தழுவியது.

காலையில் எழுந்தவன், தன் மீது போர்த்தி இருந்த ரஜாயைப் பார்த்ததும், இரவில் அவள் காதலைச் சொன்னது கனவல்ல நிஜம்’ என்று புரிய சந்தோஷத்துடன் அவளருகில் சென்று அமர்ந்தான்.

மெல்ல அவளது தலையை வருட, ஏதோ கனவில் இருந்திருப்பாள் போலப் புன்னகையுடன், “சும்மா இருங்க சித்தூ!” என்று சொல்லிக்கொண்டே அவனை நெருங்கிப் படுத்தாள்.

அவன் புன்னகையுடன், "ஹே மது!" என்றபடி அவளை அணைத்துக் கொண்டான். அந்தப் பரவசத்தை அனுபவித்தவனுக்கு, அந்த அணைப்பு ஒன்றே போதுமானதாக இருந்தது.

நேரமாவதை உணர்ந்து, "ஹனி! எழுந்துக்கோடா, சன் ரைஸ் பார்த்துட்டு வருவோம்" என்று சொன்னதும், கண்ணைத் திறந்தவள் மது தான் இருந்த நிலையைக் கண்டதும் வெட்கத்துடன் அவனிடமிருந்து விலகினாள்.

நிமிர்ந்து, அவன் முகம் பார்க்க முடியாமல் விரைந்து கிளம்பினாள்.

இருவரின் மனமும் ஒன்றாகச் சங்கமித்திருந்த அந்த நேரம், அந்த நிலை இருவரையும் மௌனத்தில் ஆழ்த்தியிருந்தது. சுற்றிலும் இருந்த இடம் காலை நேரப் புத்துணர்ச்சியை அதிகமாக்கியது. சூரியன் மெல்ல மெல்லத் தன் முகத்தை உலகிற்குக் காட்ட எழுந்து வர வர அவ்வளவு நேரமும் வெள்ளிக் கிரீடத்தைச் சூடியிருந்த மலைச்சிகரம், சிறிது சிறிதாக மஞ்சள் பூசிய புதுமணப் பெண்ணைப் போல, அழகு மிளிர பரவசத்துடன் உயர்ந்து நின்றது.

"இன்னைக்கு இந்த விடியல் நம் வாழ்விலும் மறக்க முடியாத விடியலா இருக்க போகுது" என்று ஆழ்ந்த குரலில் அவன் சொல்ல, புன்னகையுடன் அவனது தோளில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள். மனத்தின் ஆனந்தம், கண்களில் கண்ணீராகப் பூத்தது.

அவளைக் கையணைப்பில் கொண்டு வந்தவன், "மது மை லவ்!" என்று மென்மையாக முணுமுணுத்தபடி அவன் அணைப்பை இறுக்கினான். அவள் நாணத்துடன் அவன் மார்பில் தஞ்சம் புக, சித்தார்த்திற்குப் பெரும் சிலிர்ப்பைத் தந்தது. மதுவின் மனதிற்குள்ளோ சந்தோஷ சிதறல்களும், நாணப் பூக்களும் ஒரு சேர மலர்ந்தன.

தான் நடக்குமா என்று எண்ணி இருந்தது இன்று தன் கண்முன்னே நிஜமாகிக் கொண்டிருப்பதை நினைத்தபடியே, "மது! உனக்குச் சம்மதமாடா" என்று கேட்டதும் அவன் நெஞ்சில் மேலும் தன்னைப் புதைத்துக்கொண்டவளை அணைத்துக் கொண்டான்.

‘நீ! அந்தக் கடவுள் எனக்களித்த பொக்கிஷம். உன்னை, என் கண்ணாகக் காப்பாற்றுவேன்’ என்று எண்ணிக்கொண்டான். அந்த நேரத்தில் இருவருக்குள்ளும் தங்களைப் பற்றி மட்டுமே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் கிளம்பி, அங்கிருந்த மகாத்மா காந்தி நினைவிடத்தைச் சென்று பார்த்தனர். "மது! கொசாணியை இந்தியாவோட சுவிட்சர்லாந்த்ன்னு சொல்வாங்க. முன்பு மகாத்மா காந்தி தன்னோட விடுமுறை நாளை இங்கே தான் கழிப்பாராம். அதை இப்போ அவரோட நினைவிடமா மாத்திட்டாங்க" என்று அவளுக்கு அனைத்தை விபரங்களையும் சொல்லிக்கொண்டே வந்தான்.

அதன்பிறகு, வழியில் சில கோவில்களையும், பாத் வே என்ற மிக நீளமான நடைபாதையில் இயற்கை அழகை கண்டுகளித்துக் கொண்டே சென்றனர். மாலையில் அங்கிருந்த பீம் தாலில் போட்டிங், முன்தினம் தவறவிட்ட சூரிய அஸ்தமனத்தையும் பார்த்துவிட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு ரிசாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

"மது! நான் போன் பண்ணிட்டு வரேன்" என்றவன் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

அவள் முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தவள், "ஆ..ஆ.. அம்மா..." என்று அலறிக்கொண்டே கீழே விழுந்தாள்.

சப்தம் கேட்டதும், “மதூ...!” என்றபடி உள்ளே ஓடிவந்தான்.

"ஆஹ்... காலைல கிளம்பும் போது கை காலுக்கு எண்ணெய் தேய்ச்சேன். அது கீழே கொஞ்சம் சிந்தியிருந்தது போல. நான் கவனிக்காம காலை வச்சதும் வழுக்கிடுச்சி" என்று வலி தாங்காமல் கண்களில் நீர் பெருக சொன்னதும், அவளைத் தூக்க முயன்றான்.

"சித்தூ... காலை கீழே வைக்கவே முடியல” என்று கண்ணீருடன் அவன் மார்பில் முகம் புதைக்க, அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.

"கொஞ்சம் பொறுத்துக்கோடா... ரிசாட் மேனேஜரிடம் ஹாஸ்பிட்டல் எங்கே இருக்குன்னு கேட்டுட்டு வரேன்" என்று சொல்லிவிட்டுச் செல்ல, முழங்காலுக்கு கீழே வலியில் உயிர் போவது போல வலித்தது. வலது கை தோள்பட்டை விழுந்த வேகத்தில் தரையில் மோதியதால், வலி தாங்க முடியாமல் துடித்தாள்.

ஐந்து நிமிடத்தில் வந்தான், "மது! இங்கே பெரிய ஹாஸ்பிட்டல் எதுவும் இல்ல. லோக்கலில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் வந்து பார்த்ததும், நைனிட்டால் போய்டுவோம்" என்று அவளைத் தன் மீது சாய்த்துக்கொண்டு கண்களைத் துடைத்துவிட்டான்.

சற்றுநேரத்தில் டாக்டர் வந்து பார்த்துவிட்டுப் வலிநிவாரணி ஒன்றைக் கொடுத்தார்.

“கால் தசை பிடிச்சிட்டிருக்கு. பாதம் மூட்டு சுளுக்கியிருக்கு. மூணு நாலு நாளைக்குக் காலை ஊன்றி நடக்காதீங்க. ரொம்பச் ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க. கை தோள்பட்டையில் லேசா ப்ளட்க்ளாட் ஆகி இருக்கு. பெயின் கில்லர் போட்டுத் தூங்கட்டும்” என்று சொல்லிவிட்டுச் செல்ல, அவளுக்கு மாத்திரையைக் கொடுத்துவிட்டு, உறங்கும் வரை தன் மீதே சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

மறுநாள், காலையில் எழுந்தது முதல் அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவனே செய்தான். வலது கையில் வலி இருந்ததால், பல் தேய்த்து முகம் கழுவிவிட்டது முதல், உணவை ஊட்டிவிட்டது வரை அனைத்தையும் செய்தான். இரவில் அவள் கையை அசைத்துவிடாமல் இருக்க அவள் கையை தான் கையால் பிடித்துக்கொண்டு, படுத்திருந்தான்.

முழுதாக நான்கு நாள்களுக்குப் பிறகு, சுவற்றைப் பிடித்தபடி நடக்கத் துவங்கினாள். அதன் பிறகே, நைனிட்டாலுக்குச் சென்றனர். அதுவரை ஹரியின் நண்பர் தங்களது காரை சித்தார்த்திடமே அவசரத்திற்கு உதவும் நீங்கள் இங்கே இருக்கும் வரை நீங்கள் உபயோகபடுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்திருந்தார்.

அன்றுதான் அவர்கள் நைனிட்டாலில் தங்கப்போகும் கடைசி நாள். மது கொஞ்சம் காலை தாங்கியது போல நடக்கத் தொடங்கினாள். முதல் நாள் கூட மது அவனை மட்டுமாவது சென்று சுற்றி பார்த்துவிட்டு வரும்படி சொல்ல, இன்னொரு முறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மறுத்துவிட்டான்.

‘இன்னைக்குக் காலும் பரவாயில்லை. நடக்க முடிகிறது. கையும் ஒன்றும் பிரச்சனை இல்லை’ என்று எண்ணியவள் சித்தார்த்தின் அருகில் சென்று அமர்ந்தாள்.

பேப்பரில் ஆழ்ந்திருந்தவன், “ஹேய்! கண்ணம்மா! கால் பரவாயில்லையா? வலி எதுவும் இல்லையே? இருந்தா சொல்லும்மா" என்று ஆதரவுடன் கேட்டதும், "அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா, உள்ளேயே இருக்கறது கஷ்டமா இருக்கு. எங்கேயாவது வெளியே போய்ட்டு வரலாமா?" என்று கெஞ்சலாகக் கேட்டாள்.

"இல்லடா! இன்னைக்கு ஒரு நாளைக்குச் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே. நாளைக்கு ஊருக்குப் போனதும், எங்கேயாவது வெளியே போய் வரலாம்" என்றான்.

"ஹும்...எனக்குப் போர் அடிக்குது சித்தூ. ப்ளீஸ்..." என்று அவன் தாடையைப் பிடித்து கொஞ்சுவது போலச் செய்ய சிரித்துக்கொண்டே, "சரி போலாம். ஆனா, உனக்குக் கொஞ்சம் வலி தெரிஞ்சாலும் சொல்லிடணும்" என்றதும், சரி என்றவள் மகிழ்ச்சியுடன் தயாரானாள்.

நாள் முழுதும் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தாலும், அவ்வப்போது அவளது நலத்தையும் விசாரிக்கத் தவறவில்லை. இரவு உணவை முடித்துக் கொண்டு வந்த போது, தங்கள் காட்டேஜின் பக்கத்து காட்டேஜில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருந்தனர்.

இவர்கள் இருவரும் தமிழில் பேசிக்கொண்டு வருவதைப் பார்த்ததும், "சார் நீங்க தமிழா?" என்று கேட்க, அவர்களது பேச்சு தொடர்ந்தது.

"நைட் கேம்ப் ஃபயர் இருக்கு. நீங்களும், மேடமும் வாங்க சார்!" என்றதும், "இல்ல, நீங்க என்ஜாய் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

"என்ன சார்? எல்லோரும் ஒரே ஊர். பக்கத்திலேயே இருக்கீங்க. நீங்களும் கலந்துகிட்டா எங்களுக்குச் சந்தோஷமா இருக்கும்" என்றதும், சித்தார்த் மதுவைப் பார்த்தான்.

அவள், ‘சரி’ என்று தலையாட்டினாள். இருவரும் கேம்ப் பையரில் கலந்துக்கொண்டனர். கல்லூரி மாணவ மாணவிகளின் கொண்டாட்டத்தை கேட்க வேண்டுமா? அந்த இடமே களை கட்டியது. பாட்டும், நடனமுமாக நேரம் சென்றது.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்று செய்ய சித்தார்த்தின் முறை வந்ததும், அவனைப் பாடச் சொல்ல, சித்தார்த் மதுவைப் பார்த்துச் சிரித்தான்.

"சாரி! நான் பாடல" என்றதும் மாணவர்கள் பாடச் சொல்லி ஆரவாரம் செய்ய, "என்னை விட என் ஒய்ஃப் நல்லா பாடுவாங்க" என்றான்.

அவள், “ஆஹா... இல்ல இல்ல...” என்று மறுக்க, "ரெண்டு பேரும் சேர்ந்து, ஒரு டூயட் பாடுங்க சார்! நீங்களும் பாடுங்க மேடம்" என்று சொல்ல, அவள் சித்தார்த்தைப் பார்த்தாள்.

குளிர் இரவின் காற்றுடன், மேகத் திரள்களுக்கு இடையில் மங்கலாகத் தெரிந்த பௌர்ணமி நிலாவை நிமிர்ந்து பார்த்தவன், மதுமிதாவின் முகத்தைப் பார்த்தான். வானத் தாரகையின் மங்கிய ஒளிக்குக் காரணம் மேகத் திரள்கள் மட்டுமல்ல, என்று எண்ணிக்கொண்டு அவளைக் காதலுடன் பார்த்தான்.

"வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத் தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை"
என்று கண்களைச் சிமிட்டிப் பாட, அவள் நாணத்துடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

"பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூ கூட அறியாமல், தேனை ருசிக்கவேண்டும்"
என்று அவள் பாடிக்கொண்டே காதலில் கனிந்திருந்தவனை நேசத்துடன் பார்க்க, அவளது காந்தப் பார்வையை உள்ளத்தில் தாங்கியபடி,

"அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு"
என்றவன் அவளது கரத்தை எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்களை மூடி தன்னை மறந்த நிலையிலிருந்தான்.

அவளும், சித்தார்த்தின் காதலை அவன் உருகிப் பாடிய விதத்தையும் எண்ணி மெய்மறந்து அமர்ந்திருக்க, சுற்றி அமர்ந்திருந்தவர்களின் கைதட்டல் இருவரையும் சுய உணர்வி்ற்கு கொண்டுவந்தது. இருவருமே தங்களை மீட்டுக்கொண்டனர்.

அனைவரிடமும் நன்றி கூறி விடை பெற்று தங்கள் அறைக்கு வந்ததும், அவள் வெட்கத்துடன் உள்ளறைக்குச் செல்ல, பின்னாலேயே சென்றவன் ஒற்றை விரலால் அவளது முகத்தைப் பற்றி நிமிர்த்தினான். படபடத்த விழிகளைத் தன் முத்தத்தால் ஈரமாக்கினான்.

மெல்ல அவனது உதடுகள், அவளது முகமெங்கும் விளையாட, இறுதியில் தன் இணையைக் கண்ட சந்தோஷத்தில் இருவரின் இதழ்களும் முதன்முறையாக ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து சந்தோஷித்துக்கொண்டன. விலக நினைத்த போதும் கூட்டணியை முறித்துக் கொள்ள விருப்பமில்லாமல், ‘இந்த நிலை தொடராதா?’ என்ற ஏக்கத்துடன், மனமே இல்லாமல் தங்களைப் பிரித்துக் கொண்டன.

கண்களை மூடி நின்றிருந்தவளின் முகத்தைக் கைகளில் ஏந்தியவன் அவளது கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைக் கண்டதும், “என்னடா பிடிக்கலையா?" என்று பதறினான்.

அவன் பதறிய குரலைக் கேட்டதும், அவனது மார்பில் முகம் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

"மது! உனக்குப் பிடிக்கலனா, எதுவும் வேண்டாம்" என்றவனின் வாயைத் தன் கரத்தால் அவசரமாக மூடினாள்.

"ஐயம் சாரி சித்தூ! நான் உங்களை ரொம்பவே சோதிச்சிட்டேன். உங்களை ரொம்பவே தவிக்க வச்சிட்டேன். உங்க உணர்ச்சிகளோடு விளையாடிட்டேன். உங்களுடைய குணத்தாலேயே என்னையும் அறியாமல் நீங்க எனக்குள்ளே வந்துட்டீங்க சித்தூ! எந்தக் காரணத்திற்காகவும், நான் உங்களை இழக்கமாட்டேன். நீங்க எனக்கு வேணும்! உங்க காதல், எனக்கு முழுமையா வேணும்! உங்க அன்புக்கு முன்னால நான் ஒண்ணுமே இல்ல.

நீங்க என்னைக் காதலிக்கும் அளவுக்கு, நான் உங்களைக் காதலிக்கிறேனான்னு எனக்குச் சந்தேகமாக இருக்கு? ஆனா, என்னோட காதல் உண்மை சித்தூ. உங்க மேல நான் வச்சிருக்கும் இந்தக் காதல் நிஜம். உங்களுடைய சந்தோஷத்திற்காக, நான் என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கேன். ஐ லவ் யூ சித்தூ! ஐ லவ் யூ..." என்று சித்தார்த்தை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

மதுவின் கண்ணீரை கண்டவன், அவளை விருப்பம் இல்லையோ என்ற எண்ணம் தோன்றிய நேரத்தில் மதுவின் அழுகையும், அவளது காதலையும் அறிந்தவன், ஒரு நொடி தன்னைச் சுற்றி இயங்கிக்கொண்டிருந்த உலகம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது போல ஓர் உணர்வு அவனுக்குள் எழுந்தது. ஆனாலும், தான் அவளிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அவள் தலையை வருடிகொடுத்தான்.

"மது! நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன். ஆனா, அதை நீ கட்டாயம் தெரிஞ்சிக்கணும்" என்றான்.

"நீங்க என்கிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறீர்கன்னா, அது என் நன்மைக்காகத் தான் இருக்கும். அதனால் அதை தெரிந்துக்கொள்ளவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இனியாவது நான் உங்களை மன அமைதியுடன் வச்சிருக்க விரும்பறேன். அப்படியே நீங்கள் என்கிட்ட அந்த உண்மையைச் சொல்லித்தான் ஆகணும்னா, ஊருக்குப் போனதும் சொல்லுங்க... கேட்டுக்கறேன். அதுவும் உங்களுடைய திருப்திக்காக" என்றாள் தழுதழுப்புடன்.

“இல்ல மது நான்..." என்று அவன் ஆரம்பிக்க, “ப்ளீஸ் சித்தூ!" என்று அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

அதற்கு மேல் இருவருக்கும் இடையில் பேச்சு சுத்தமாக நின்று, அங்கு வளையல்களின் ஒலியுடன், செல்லச் சீண்டல்களும், சிணுங்கல்களுடன், தனக்காகவே அந்தக் கம்பீர மனிதனின் காத்திருப்புக்கு, அவனது மனத்தில் தேக்கி வைத்திருந்த காதலுக்கு, அவனது நேசிப்புக்கு, அவனது பொறுமைக்கு ஈடாக, தன்னையே அவனுக்குப் பரிசாகத் தந்தாள். இருவரும் ஒருவருக்குள் ஒருவர் உருகிக் கரைந்துக் கொண்டிருந்தனர்.