Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பெண்களைக் கண்காணிக்க மொபைல் ஆப்: சவுதி அரேபியாவுக்கு குவியும் கண்டனம்



பெண்கள் எங்கே செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க செல்போன் செயலி ஒன்றை சவுதி அரேபியா உருவாக்கியுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுக்கும் சவுதி அரசு, தி ஆப்ஷர் (The Absher) என்ற இந்த அப்ளிகேஷன் பெண்கள், வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களுக்குமே உதவியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றது.
இந்த அப்ளிகேஷன் அனைத்துவித ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் கிடைக்கிறது. இதன்மூலம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம் என சவுதி அரசு கூறுகின்றது.
ஆனால், விமர்சகர்களோ இந்த அப்ளிகேஷன் மூலம் சவுதி ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்கள், பெண் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள், வருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆப்பிள் சிஇஓ டிம் குக், இந்த ஆப் குறித்து தனக்குத் தெரியாது என்றும் விரைவில் அது என்னவென்று பரிசோதிக்கவுள்ளதாகவும் அமெரிக்க தேசியப் பொது வானொலியில் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரான் வைடன், ''அப்ஷர் ஆப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தூண்டுவதால் ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனை தங்கள் இயங்குதளங்களில் இருந்து நீக்க வேண்டும்'' என்று வலியுறுத்துயுள்ளார்.
மொபைல் அப்ளிகேஷன்கள் மக்களின் சவுகரியத்துக்கானது என்ற அடிப்படை சேவை இலக்கையே இந்த ஆப் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சவுதியின் இந்தப் பிற்போக்குத்தனத்தை மட்டுமே அமெரிக்கா எதிர்க்கின்றது என்றும் இதில் அரசியல் ஏதுமில்லை என்றும் ரான் வைடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர் ஜமால் படுகொலையால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் சவுதிக்கு இந்த அப்ளிகேஷன் சர்ச்சை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான், சமூக பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அறியப்பட்டிருக்கும் சூழலில்தான் அங்கு மனித உரிமை ஆர்வலர்களும் பெண் உரிமை பிரச்சாரகர்களும் தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதோ? அவர்கள் வழக்கின் நிலை என்னவென்பதோ புரியாத புதிராகவே இருக்கின்றன.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இது விமான காபி



விமானத்தில் பறக்க பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், அந்த ஆசை எல்லோருக்கும் நிறைவேறிவிடுவதில்லை. விமானத்துக்குள் செல்ல முடியவில்லையே என்று ஏங்குபவர்களின் ஏக்கத்தைப் போக்குவதற்காக எத்தியோப்பியாவில் ஒரு வசதி செய்திருக்கிறார்கள். என்ன வசதி என்று யோசிக்கிறீர்களா? ஒரு விமானத்தையே காபி ஷாப்பாக மாற்றிவிட்டார்கள். இதன் மூலம் விமானத்தில் பறக்க முடியாதவர்களின் ஆசையைத் தீர்த்துவருகிறார்கள்.
அது சரி, இவர்களுக்கு விமானம் எப்படிக் கிடைத்தது? ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ஒரு விமான சேவை நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடமிருந்த விமானத்தை ஏலமிட்டது. அப்படி ஏலத்தில் விடப்பட்ட விமானத்தைத்தான் காபி ஷாப் கடைக்காரர்கள் வாங்கினார்கள். வாங்கிய உடனேயே விமானத்திலிருந்த இறக்கையைக் கழற்றிவிட்டு, 92 சக்கரங்கள் உடைய ஒரு பிரம்மாண்ட லாரி மூலம் ஓரோமியா என்ற இடத்துக்கு எடுத்துவந்தார்கள்.


அங்குதான் அவர்களது கடை இருக்கிறது. அங்கே வைத்து விமானத்தை காபி ஷாப்போல மாற்றினார்கள். ‘காக்பிட்’ எனப்படும் இடத்தை காபி தயாரிக்கும் இடமாக மாற்றினார்கள். விமானத்துக்குள் இருக்கை, மேஜை, அலங்காரங்கள் செய்து அதை முற்றிலும் மாற்றினார்கள். இங்கே வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு ஏர்ஹோஸ்டஸ் போல உடைகள் வழங்கப்பட்டன. எல்லாவற்றையும் மாற்றிவிட்டுப் பார்த்தபோது, அது முழுமையான காபி ஷாப்பாக மாறியிருந்தது.
விமானத்துக்குள் இருப்பது போன்ற உணர்வுடன் சுடச்சுட காபியும் தரும் இந்த விமான காபி ஷாப் எத்தியோப் பியாவில் இப்போது பெரும் புகழ்பெற்றுவிட்டது. விமானப் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த காபி ஷாப்பைத் தேடிவருகிறார்களாம்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


ஆன்மாவை உலுக்கிய எழுத்து
அல்டா மெரினி, இத்தாலியின் நேசத்துக்குரிய எழுத்தாளர்; கவிஞர். இளம் வயதிலேயே எழுத்துலகின் அசைக்க முடியாத ஆளுமையாகப் போற்றப்பட்டவர். சிந்தனைச் செறிவுமிக்கக் கூர்மையான எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரது வாழ்க்கை 20 ஆண்டுக்கும் மேலாக மனநலக் காப்பகத்தில் கழிந்தது. அந்த வாழ்வு அவரது எழுத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மனத்தின் ஓட்டத்தையும் கட்டற்ற உணர்ச்சிப் பிரவாகத்தையும் தனித்துவ நடைகொண்ட எழுத்தில் அடக்கினார்.

எழுத்தின் மீதான அவரது பேரார்வமும் அவர் எழுத்தில் இருக்கும் உண்மையும் வாசிப்பவரின் ஆன்மாவை உலுக்கின. சக்திவாய்ந்த, தனித்துவ நோக்குகொண்ட எழுத்து அவருக்கு உலகெங்கும் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. ‘தி அதர் ட்ரூத், டைரி ஆஃப் எ டிராப் அவுட்’ எனும் கவிதை அவரது படைப்பின் உச்சம் எனக் கருதப்படுகிறது. நோபல் பரிசுக்காக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார். அவரது கவிதைக்காக ‘இத்தாலியன் ரிபப்ளிக்’ விருதைப் பெற்றார். அவரது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக மார்ச் 21 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
மரங்களின் தாய்
தனக்குக் குழந்தையில்லை என்ற குறையை மறக்கச் சாலைகளில் மரக்கன்றுகளை நடத் தொடங்கிய திம்மக்காவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்துச் சிறப்பித்துள்ளது. பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டாத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 107 வயது முதியவரான இவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களில் ஒருவர். மரங்கள் தனக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவுகின்றன எனக் கூறும் திம்மக்கா ‘மரங்களின் தாய்’ என்று அழைக்கப்படுகிறார்.
தன் வாழ்நாள் முழுக்க பல்லாயிரக்கணக்கான மரக் கன்றுகளை ஒரே ஆளாக நட்டிருக்கிறார். 107 வயதிலும் உற்சாகம் குறையாமல் புதிய மரக் கன்றுகளை நடுகிறார். அமெரிக்கா வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் கிளை ஒன்றுக்கு திம்மக்காவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மரங்களைத் தன் குழந்தைகளைப் போல் பார்த்துக்கொள்ளும் இவர், இயற்கை ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறார்.


ஏபெல் பரிசு பெற்ற முதல் பெண்
கணிதத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் ஏபெல் பரிசு, நோபல் பரிசுக்கு இணையானது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நார்வேயின் புகழ்பெற்ற கணிதமேதையான ‘நெய்ல்ஸ் ஹென்ரிக் ஏபெல்’ பெயரில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பரிசு, வகைக்கெழு சமன்பாட்டில் மேற்கொண்ட ஆய்வுக்காக கரேன் உல்லேபெக்குக்கு வழங்கப்பட்டது.
ஏபெல் வரலாற்றில் அந்தப் பரிசைப் பெறும் முதல் பெண் இவர். வடிவியல் பகுப்பாய்வு, பாதைக் கோட்பாடு ஆகியவற்றில் கரேன் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் கணிதத்தின் எல்லையை மாற்றி அமைத்து இருப்பதாக, ஏபெல் பரிசுக் குழுவின் தலைவர் ஹான்ஸ் முந்தே காஸ் தெரிவித்துள்ளார். 76 வயது கரேன், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
பின்னோக்கிச் செல்கிறோமா?
நிறைமாதக் கர்ப்பிணியான பொம்மி, பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகித் தனியாக வந்தது. இதையடுத்து ஆபத்தான நிலையிலிருந்த பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடலை மருத்துவர்கள் அகற்றினர். பொம்மிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழில்நுட்பமும் மருத்துவமும் உச்சத்தில் இருக்கும் இந்த நாளில் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல; அவமானத்துக்கும் உரியது.
நோபலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பள்ளி மாணவி
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரெட்டா துன்பெர்க் (16) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை மாற்றம், உலக வெப்ப மயமாதலைத் தடுக்க வேண்டி, ஸ்வீடன் நாடாளுமன்ற வாசலில் சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார். மேலும், உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள், இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து கிரெட்டா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாடினார். அது மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வெள்ளி அன்றும் பள்ளிக்குச் செல்வதை விடுத்து, நாடாளுமன்ற வாசலில் உலக வெப்ப மயமாதலைத் தடுக்க வேண்டி, அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.
இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதைக் குறித்து கிரெட்டா கூறுகையில், “அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதைக் கவுரவமாகவும் ஆசியாகவும் கருதுகிறேன்” என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


இந்திய ஸ்குவாஷ் விளையாட்டைச் சர்வதேச அளவில் உயர்த்திப் பிடித்தவர் அவர். இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் முடிசூடா ராணி. உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த தன்னிகரற்ற வீராங்கனை. இத்தனைப் பெருமைகளையும் படைத்த அந்த வீராங்கனை, தீபிகா பள்ளிக்கல்.
கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட தீபிகா பள்ளிக்கல், சென்னையில் பிறந்தவர். அம்மா சூசன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடியவர். அம்மாபோல் தீபிகாவுக்கு கிரிக்கெட் மீதெல்லாம் ஆர்வம் பிறக்கவில்லை. ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அவர் வந்ததுகூட ஒரு விபத்துதான். பத்து வயதில் தோழி ஒருவர் மூலம் ஸ்குவாஷ் விளையாட்டு தீபிகாவுக்கு அறிமுகமானது. ஆனால், ஸ்குவாஷ் ராக்கெட்டைப் பிடித்த கையோடு, அடுத்த ஓராண்டில் தேசிய சாம்பியனாக தீபிகா உருவெடுத்ததெல்லாம் அதிசயம்!
தொழில்முறை ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையாக தீபிகா 2006-ல் அடியெடுத்துவைத்தார். தீபிகாவிடமிருந்த ஸ்குவாஷ் திறமை வெளிப்பட்டது 2008-ல்தான். சென்னை ஓபனில் தனது முழுத் திறமையையும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் தீபிகா.
அதே ஆண்டில் பிரிட்டிஷ் ஓபன் ஜூனியர் சாம்பியன் (இது விம்பிள்டன் ஜூனியருக்கு இணையானது) பிரிவிலும் பல சாதனைகளைப் படைத்தார். அதேவேளையில் தன்னை இன்னும் மெருகேற்றிக்கொள்வதற்காக எகிப்திலும் சில காலம் ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டார். பதின் பருவத்திலிருந்த தீபிகா, பெற்றோரைவிட்டுப் பிரிந்து பயிற்சியில் மூழ்கிக் கிடந்தார்.

பெருமையான தருணம்
ஒரு லட்சியத்தை அடைய விடாமுயற்சி வேண்டும் என்பதற்குச் சரியான உதாரணம் தீபிகா. ஸ்குவாஷில் ஜூனியர் அளவில் பெற்ற தொடர்ச்சியான வெற்றிகள், அவருக்குப் புதிய அடையாளத்தைத் தந்தன. 15 வயதுக்குட்பட்ட ஐரோப்பிய - ஆசிய ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபிகா பெற்றார். ஆனால், அதன் பின்னணியில் தீபிகாவின் பெரும் உழைப்பு உண்டு.
16 வயதில் அந்த வயதுக்கே உரிய விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்கு என எதிலும் தீபிகா ஈடுபாடு காட்டவில்லை. அவருடைய முழுக் கவனமும் ஸ்குவாஷ் மீது மட்டுமே குவிந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று எப்போதுமே பயிற்சியில் மூழ்கிக்கிடந்தார்.
வேண்டாம் சினிமா
ஃபேஷன் துறையிலும் தீபிகாவுக்கு ஈடுபாடு இருந்தது. தீபிகாவை ஸ்குவாஷ் விளையாட்டின் மரியா ஷரபோவா என அழைத்தவர்கள் ஏராளம்; இந்தியாவின் அழகுப் பொம்மை என்று வர்த்தணித்தவர்களும் அநேகர். அந்த வேளையில் அவருக்கு சினிமா அழைப்புகளும் வந்தன. அப்போது முடிவெடுப்பதில் தடுமாறும் வயதுதான் தீபிகாவுக்கு. ஆனால், தீர்க்கமாக முடிவெடுத்தார்.
“சினிமா எனக்குத் தேவையில்லை; ஸ்குவாஷ் விளையாட்டில் நம்பர் ஒன் வீராங்கனையாக வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய லட்சியம்” என்று வெளிப்படையாக அறிவித்து சினிமா அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.
தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வந்த தீபிகாவுக்கு வெற்றிகளும் குவியத் தொடங்கின. ஜெர்மன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், டச்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன், ஐரோப்பிய ஓபன் என ஜூனியர் நிலைகளில் பெரும் வெற்றிகளைப் பதிவுசெய்தார் தீபிகா. அதற்கு முன்புவரை ஆசியாவின் நம்பர் ஒன் ஜூனியர் ஸ்குவாஷ் வீராங்கனையாக மட்டுமே இருந்தார் தீபிகா.
தொடர் வெற்றிகளுக்குப் பிறகு 2012-ல் சர்வதேசத் தரவரிசையில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டார். சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் கால் பதித்தார் தீபிகா. அந்த வகையில் ஸ்குவாஷில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.
நாட்டுக்காகப் பதக்கங்கள்
ஸ்குவாஷ் விளையாட்டில் மைல் கல் தருணத்தை அடைந்தபோதும், அந்தப் பெருமை தன்னுடைய தலைக்கு ஏறாமல் தொடர்ந்து விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். அது அவருக்கு இன்னும் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது. சீனாவில் நடந்த மக்காவ் ஓபன் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரேச்சல் கிரின்ஹாமை வீழ்த்தி தீபிகா பட்டம் வென்றது அவருடைய திறமைக்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்தது. 2015-ம் ஆண்டில் கனடா ஓபனிலும் வெற்றி பெற்று அசத்தினார்.
வெறுமனே தொழில்முறைப் போட்டியாளராக மட்டுமல்லாமல், நாட்டுக்காகவும் பல்வேறு தொடர்களில் பங்கேற்று முத்திரை பதித்தவர் தீபிகா. 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையர் போட்டியில் ஜோஸ்னாவுடன் இணைந்து விளையாடி, தங்கப் பதக்கத்தை தீபிகா வென்றார். இதேபோல 2014 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் அணி சார்பில் வெள்ளிப் பதக்கத்தையும் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தீபிகா வென்றார்.
கடந்த ஆண்டு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜோஸ்னாவுடன் இணைந்து விளையாடி வெள்ளிப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று நாடு திரும்பினார். கடந்த ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.


ஒரே லட்சியம்
ஸ்குவாஷ் விளையாட்டில் தொடர்ச்சியாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள தீபிகாவின் ஃபிட்னஸும் ஒரு முக்கியக் காரணம். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை ஸ்குவாஷ் பயிற்சியில்தான் கழிப்பார் தீபிகா. விளையாட்டில் அவர் காட்டும் வேகமும் துடிப்பும் அவரைச் சிறந்த ஷாட் மேக்கராக மாற்றின. இந்த விஷயத்தில் சக போட்டியாளர் ஜோஸ்னாவோடு தீபிகாவுக்கு ஆரோக்கியமான போட்டி நிலவியது.
பல சந்தப்பங்களில் இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொண்டும் விளையாடி இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும், விளையாட்டு என்ற அந்த எல்லையைத் தாண்டி சிறந்த நட்பையும் ஜோஸ்னாவுடன் தீபிகா கடைப்பிடித்தார்.
ஸ்குவாஷில் உச்சம்தொட்ட 2012-ம் ஆண்டில் தீபிகாவுக்கு அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. கிரிக்கெட்டே பிடிக்காமல் இருந்த தீபிகா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை 2015-ல் காதல் மணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஸ்குவாஷில் இன்னொரு ரவுண்டு வரும் முயற்சியோடு தீவிரமாகக் களமாடிவருகிறார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள தீபிகாவுக்கு, ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் விளையாட்டு இல்லையே என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே உண்டு.
அந்தக் குறையைப் போக்கிக்கொள்ளச் சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதே இந்த ஸ்குவாஷ் புயலின் தற்போதைய உயர்ந்த லட்சியம்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை அனிதா. மாணவிகளுக்குச் சமூக அறிவியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர், சமூக நீதியைச் செயல்படுத்துவதற்குரிய பொறுப்பை ஏற்கவிருக்கிறார். இவர் தமிழக அரசின் குரூப் 1 தேர்வில் தமிழ்வழிக் கல்வி ஒதுக்கீட்டில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, துணை ஆட்சியர் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.
அரசுத் துறையில் உயரிய பதவிக்குச் செல்ல வேண்டும் என்பது அனிதாவின் ஆசை. 2012-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை ஆசிரியருக்கான தேர்வை எழுதினார். அதில் இரண்டு மதிப்பெண்களில் வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனால், எப்படியும் ஆரிசியர் ஆகிவிடுவது என்ற தன் முயற்சியில் உறுதியாக இருந்தார்.
அந்த உறுதிதான் 2014-ல் நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் அனிதாவை வெற்றிபெற வைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்த முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தார். அதே ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்கான தேர்விலும் முதல் நிலையில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தார்.
லட்சியப் பாதையில்
அரசுப் பணியில் சேர்ந்துவிடும் லட்சியத்தோடு இருந்த அனிதாவின் ஆர்வத்தை அவருடைய கணவர் அருள்காந்தராஜ் புரிந்துகொண்டார். ‘கோவில்பட்டி கல்விப் பயிலும் குழு’ நடத்திவந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும்படி அனிதாவிடம் சொன்னார். அனிதாவும் சில மாதங்கள் அங்கே பயிற்சிபெற்றார். ஆட்சிப் பணியில் இருந்த அதிகாரிகளும் கல்வியாளர்களும் அங்கே பயிற்சியளித்தனர். அனிதாவின் லட்சியம் வலுப்பெறத் தொடங்கியது.
2016-ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றார். தூத்துக்குடியில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றில் பயிற்சிபெற்றார். அப்போது அவருடைய மகள் எட்டு மாதக் குழந்தை. குழந்தையை அனிதாவின் கணவரும் மாமனார் மிக்கேல் வியாகப்பனும் கவனித்துக்கொண்டனர்.
வார இறுதி நாட்களில் பயிற்சிக்குச் சென்றுவந்த அனிதா, இதற்காக ஒரு மாதம் விடுப்பும் எடுத்துப் படித்துள்ளார். இதில், தமிழ்வழிக் கல்வி பொதுப்பிரிவில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து, தான் நினைத்த மாதிரியே துணை ஆட்சியர் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.
கொள்கையில் உறுதி
அனிதாவின் தந்தை எம்.தர்மராஜ், தாய் டி.சண்முகக்கனி. இவர்களுக்கு எட்டயபுரம் சொந்த ஊர். அனிதாவின் சிறு வயதிலேயே அவருடைய தந்தை இறந்துவிட, அவரது படிப்புக்கு சித்தப்பா பஞ்சவர்ணம் உதவியிருக்கிறார். 10, 12-ம் வகுப்புகளில் பள்ளி அளவில் அனிதா முதலிடம் பெற்றார்.
அப்போது ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அனிதாவுக்கு மேல் படிப்பில் ஆர்வம் இருந்தாலும், எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது, அதற்குத் தேவையான செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் வீட்டில் இருந்தார். முதல் மாணவியாகத் திகழ்ந்தபோது போற்றிய சுற்றத்தார், மேல்படிப்பில் சேராமல் வீட்டிலேயே இருந்த அனிதாவைத் தூற்றினர்.
இந்தப் பெண்ணின் எதிர்காலம் முடிந்துவிட்டது என்று தன் காதுபடவே பேசியவர்களை அனிதா கண்டுகொள்ளவில்லை. தனக்குள் வகுத்துக்கொண்ட லட்சியம் அவரைப் பக்குவப்படுத்தியிருந்தது. எதையும் நினைத்து மறுகிக்கிடக்காமல் தன் பகுதியில் உள்ள மாரியப்ப தர்மவித்யாசாலை நடுநிலைப்பள்ளியில் தற்காலிகப் பணியில் சேர்ந்தார். அனிதா பட்டப் படிப்பைப் படிக்க அங்கிருந்த ஆசிரியர் ரெஜினால்டு சேவியர் உந்துதலாக இருந்துள்ளார்.

மாணவிகளுக்கு ஆலோசனை
அண்ணாமலை பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., எம்.ஏ., வரலாறு படித்தார். இந்திரா காந்தி தேசிய தொலைநிலைக் கல்வியில் பி.எட்., படிப்பை முடித்தார். படிப்புச் செலவுக்கு அனிதாவின் சித்தப்பா உதவியிருக்கிறார். “எங்க அம்மா தீப்பெட்டி கம்பெனியில வேலை செய்தாங்க. அவங்க வாங்கிட்டு வரும் வருமானத்திலும் நான் பகுதி நேரமாக டியூஷன் எடுத்ததால் கிடைத்த பணத்தையும் வைத்து படிப்புச் செலவைச் சமாளிக்க முடிந்தது.
கஷ்டப்படுற குடும்பத்தில் இருந்து வரும் மாணவிகள் பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்புச் செலவுகளை நினைத்தே சோர்ந்துவிடுகின்றனர். இதனால், நான் வகுப்பு எடுக்கும்போது, அரசு சலுகைகள் பற்றி மாணவிகளுக்கு எடுத்துச் சொல்வேன். நான் இப்படிச் சொல்வது என் வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே போய்ச்சேரும். ஆனால், அரசு உயர் பதவியில் இருந்தால் கஷ்டப்படும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எடுத்துச்செல்லலாம் என நினைத்தேன்.
அதுதான் என்னை ஆர்வத்துடன் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகச் செய்தது. முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். குடும்பச் சூழல் ஒரு தடையில்லை. அரசுப் பள்ளிக்கு நிகரான பள்ளி இங்கு எதுவுமில்லை” என்று சொல்லும் அனிதா, அந்த வார்த்தைகளுக்கு அவரே சாட்சியாகவும் விளங்குகிறார்.
தான் ஏற்கவிருக்கும் பணியில் கல்வி, கிராம மேம்பாடு, கிராமப்புறப் பெண் குழந்தைகளின் மேம்பாடு, சுகாதாரம் போன்றவற்றுக்கு முதலிடம் கொடுக்கவிருப்பதாகச் சொல்கிறார் அனிதா. பொறுப்பையும் சமூகநீதியையும் உணர்ந்தவர்களுக்குத் தரப்படும் பதவி, அதற்கான நியாயத்தை நிச்சயம் செய்யும்.