Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரத்தின் தொடர்ச்சியாக வழக்கம்போலவே பலரும் அறிவுரைகளையும் ஆலோசனையையும் வாரி வழங்கத் தவறவில்லை. பெரும்பாலானவை பெண்களை நோக்கி, பெண்களின் ‘பாதுகாப்புக்காக’ உதிர்க்கப்பட்ட முத்துக்கள்.
பெண்ணின் உடலைக் களமாக்கி வன்முறை நிகழ்த்தப்படும்போதெல்லாம், பெண்களின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுக்கப் படுகின்றன. அவர்கள் புழங்கும் வெளியை இறுக்கிப் பிடித்துச் சுருக்கத் தொடங்குவோம். இப்போதும் அதுவே நடந்துவருகிறது.
யாரையும் நம்பாதே, அறிமுகமில்லாத நபர்களை நம்பி வெளியே போகாதே, ஆண்களிடம் பேசாதே, ஃபேஸ்புக் கணக்கை மூடிவிடு, வாட்ஸ் அப்பை முடக்கிவிடு, ஸ்மார்ட் போனைக் கண்டால் பயந்து ஒதுங்கு - என முடிவில்லாமல் நீள்கிறது அந்தப் பட்டியல். எல்லாமே பெண்களின் தற்காப்புக்காகத்தான் என்று அதற்கு விளக்கமும் சொல்லப்படுகிறது.
பெண்களை இப்படி முடங்கச் சொல்லும் யாரும், அவர்கள் மீது வன்முறையை நிகழ்த்துகிற ஆண்களுக்கு எந்த அறிவுரையையும் சொல்வதில்லை. ஆண்கள் கண்ணியமாக நடந்துகொள்ளும் சமூகத்தில் பெண்ணின் தற்காப்புக்கு என்ன தேவை?
பாதிக்கப்பட்ட பெண்கள்?
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்புடைய செய்திகளில், ‘பாதிக்கப்பட்ட’ பெண்கள் என்ற சொல் தவறாமல் இடம்பெறுகிறது. ‘பாதிக்கப்பட்ட’ என்பதை என்ன பொருளில் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் எதை இழந்து பாதிப்புக்குள்ளானார்கள்? காலம் காலமாக இந்தச் சமூகம் பெண்கள் மீது ஏற்றிவைத்திருக்கும் கற்பு, மானம், கண்ணியம், குடும்ப கவுரவும் போன்றவற்றையா இழந்தனர்?
அதனால்தான் அவர்கள் ‘பாதிக்கப்பட்ட’ பெண்கள் ஆகிறார்களா? அப்படியென்றால் அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண்கள் அனைவரும் மாபெரும் சாகசத்தைச் செய்த வீரர்களா? அவர்களைப் பற்றிய முன்குறிப்புகளோ-பெயரடைகளோ (Adjective) எந்தச் செய்தியிலும் இல்லையே. அவர்களின் பராக்கிரமத்தைக் குறிப்பிடத் தகுந்த சொற்கள் மொழிகளில் இல்லையா?
அமுக்கப்படும் குரல்
நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கும் பொள்ளாச்சி கொடூரத்துக்கு மாநில அளவிலேயே போதிய கவனம் ஏற்படாதபோது, தேசிய அளவிலான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா? அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் முழங்கத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் அநீதி இழைக்கப்பட்ட பெண்களின் குரல் பொள்ளாச்சியைத் தாண்டி ஒலிக்குமா என்பதும் சந்தேகமே.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு எனப் பாராட்டத்தகுந்த அம்சங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வெளியிட்டிருக்கும் கட்சிகள்கூட பொள்ளாச்சி கொடூரம் குறித்துப் போதிய அக்கறை செலுத்தவில்லை.
எது கண்ணியம்?
“ஏன் அந்தப் பெண்கள் ஆரம்பத்திலேயே இதைப் பற்றித் தங்கள் வீட்டில் சொல்ல வில்லை?” என்று கேட்கிற பலரும், தங்கள் வீட்டுப் பெண் இப்படியொரு சம்பவம் தனக்கு நடந்ததாகச் சொன்னால் எப்படி அணுகு வோம் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். “ஊர், பேர் தெரியாதவனை நம்பி, நீ ஏன் சென்றாய்?” என்பதுதான், அந்தப் பெண்களிடம் முதல் கேள்வி யாகக் கேட்கப்பட்டிருக்கும்.
தீங்கிழைக்கப் பட்டவரையே குற்றவாளியாக்கும் திறமை நம் சமூகத்திடம் கொட்டிக் கிடக்கிறது. அதுதான், ‘பெண்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று மாநில மகளிர் ஆணையத் தலைவியையே சொல்லவைக்கிறது. நம் சமூகத்தைப் பொறுத்தவரை எது கண்ணியம் என்பதே சரியாக வகைப்படுத்தப்படவில்லை.
ஒரு பெண் தனக்கு விருப்பமான நபருடன் பழகுவதால் குறைந்துவிடுகிற கண்ணியம், அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தை அவளுடைய அனுமதியில்லாமல் பொதுவெளியில் காட்சிப் படுத்தும் ஆணின் செயலால் மேன்மையடைகிறதா? இல்லை நம் சமூகத்தில் ஆணுக்குக் கண்ணியத் தேவை ஏதுமில்லையா? ஆணாகப் பிறந்ததே அரும்பெரும் கண்ணியச் செயலா?
நான்கு பேரில் ஒருவர்
இதில் கவனிக்கத்தகுந்த இன்னொரு கோணமும் இருக்கிறது. நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற பயத்தாலும்தான் அந்தப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்லவில்லை. அவர்களை அச்சுறுத்திய அந்த நான்கு பேரில் நாமும் அடக்கம். எப்போதும் பிறரது செயல்பாடுகளைக் குறிப்பாகப் பெண்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதையும் கலாச்சாரக் காவல் புரிவதையுமே பலரும் முழுநேர வேலையாக வைத்திருக்கிறோம்.
கல்லூரி முடித்துவிட்டு ஒரு பெண் தாமதமாக வீடு திரும்பினால் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைவிட, சுற்றியிருப்பவர்கள்தாம் அதிக ஆர்வத்துடன் விசாரிப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, அந்தரங்க வீடியோக்களில் இடம்பெற்ற பெண்ணை அவ்வளவு எளிதாக இச்சமூகம் விட்டு வைப்பதில்லை.
பார்வையால் கொன்றுவிட்டு, வார்த்தைகளால் கூறுபோட்டுவிடத் துடிக்கிறது. அந்தப் பெண்களைப் பற்றிப் பேசிப்பேசியே அவர்களை உருக்குலைத்துவிடுவதில் போய் முடிகிறது.
‘என் வீட்டுப் பொண்ணா இருந்தா வெட்டிப் போட்டிருப்பேன். பொண்ணை வளர்த்திருக்கற லட்சணத்தைப் பாரு’ என்று பெண்ணைப் பெற்றவர்களைப் பார்த்துக் கொக்கரிக்கும் பலரும் பெண்களை வஞ்சித்து, குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண் களின் பெற்றோரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. போனால் போகிறதென்று யாருக்கும் வலிக்காமல் இரண்டொரு சொல் வீசப்படுகிறது. சாண் பிள்ளையாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஆண் பிள்ளை என்றுதானே இச்சமூகம் போற்றுகிறது.
அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நியாயம் கிடைத்துவிடும், அந்தப் பெண்களின் அடையாளம் காக்கப்படும், துயரிலிருந்து மீண்டு எழ அந்தப் பெண்களுக்கு வழிவகை செய்துதரப்படும், குற்றமிழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுவிடும், அந்தத் தண்டனைதான் குற்றம் புரிய நினைக்கிறவர்களைத் தடுக்கும் என்பது போன்ற பகல் கனவுகளுக்கு நாம் பழகிவிட்டோம்.
அதேபோல் எது நடந்தாலும் களப் போராளிகளோ பெண்ணிய அமைப்புகளோ பார்த்துக்கொள்வார்கள் எனப் பொதுச் சமூகம் ஒதுங்கிக்கொள்கிறது. நம்முடைய அதிகபட்ச செயல்பாடு, பாதுகாப்பான இடத்தில் நின்றுகொண்டு கருத்துக் களமாடுவதாகவே இருக்கிறது.


இதையும் கடந்து வருவோம்
ஆணையும் பெண்ணையும் சமமாக வளர்ப்போம் என்று சொல்லிக்கொண்டிருப்பதால் மட்டுமே எந்தப் பலனும் விளைந்துவிடப் போவதில்லை. ஆண் மையச் சிந்தனையிலிருந்து ஆண்களோடு பெண்களும் சேர்ந்தே வெளிவரும்போதுதான் சமத்துவ வளர்ப்பு சாத்தியப்படும். அது இல்லாதபோது பெண்கள், ஆண்கள் நுகர வேண்டிய பண்டங்களாக மட்டுமே நடத்தப்படுவார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதற்கான அத்தனை சாத்தியங்களை யும் இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இப்படியான சமூகத்தில் நம் வீட்டுப் பெண்களை அடங்கி இரு, ஒடுங்கி இரு எனக் கண்டிப்பதைவிட எந்தச் சூழலையும் எதிர்கொள்ள அவர்களைப் பழக்குவதுதான் இன்றைய அவசியத் தேவை. நெருக்கடியான சூழலை எதிர் கொள்வதற்கான மனோதிடம் முதலில் நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்டுக்கொள்வோம்.
பெண்ணின் உடலில்தான் அனைத்துமே அடங்கியிருக்கிறது என்ற மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அப்படியொரு தெளிவு இருந்திருந்தால் வீடியோவைக் காட்டி மிரட்டப்பட்டபோதே, அந்தப் பெண்கள் துணிந்து அனைத்தையும் தங்கள் குடும்பத் திடம் சொல்லியிருப்பார்கள்.
ஆனால், நம் சமூகம் அப்படிப்பட்ட பரந்துபட்ட பார்வையோடு குழந்தைகளை வளர்ப்பதில்லை. உடலில்தான் மானம் இருக்கிறது; ‘மானம் போனால் எல்லாமே போச்சு' என்ற பிற்போக்குச் சிந்தனையை ஊற்றி வளர்க்கிறது. அதிலிருந்துதான் குற்றங்கள் தொடங்குகின்றன.
சமூகத்துக்குக் கொடுத்த பதிலடி
அறிவுரை சொல்வது எளிது; அந்த நிலையில் இருப்பவர்களுக்குத்தானே அந்த வேதனை புரியும் என்பதெல்லாம் கட்டுக்கதை. அதை ஏன் வேதனையாக நினைக்க வேண்டும் என்பதுதான் இங்கே கேள்வி. டேனிஷ் பெண் பத்திரிகையாளர் எம்மா ஹோல்டன், தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை அப்படித்தான் கடந்துவந்தார். அவரது நிர்வாணப் படங்களை யாரோ சிலர் திருடி, இணையத்தில் உலவவிட்டனர்.
அவற்றுக்குக் கீழே கொச்சையான கருத்துகளைப் பதிவிட்டனர். எம்மாவும் முதலில் உடைந்துதான் போனார். ஆனால், தன் பங்கு எதுவுமே இல்லாத அந்தச் செயலுக்குத் தான் ஏன் வருந்த வேண்டும் என நினைத்தார். தொழில்முறை பெண் புகைப்படக் கலைஞரை அழைத்தார்.
ஆண்களின் கண்களுக்கு விருந்தாக இல்லாமல் பெண்ணின் வலியைப் பேசும் விதத்தில் தன்னை நிர்வாணமாகப் படமெடுக்கச் சொன்னார். அவற்றை அவரே இணையத்தில் பதிவிட்டார். தன்னுடலைக் கொத்தித் தின்ற சமூகத்துக்குத் தன் செயல்மூலம் பதிலடி கொடுத்தார் எம்மா. இது நடந்து மூன்று ஆண்டுகளாகின்றன.
ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் பெண்கள் தங்கள் அந்தரங்கத்தை ஆண்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த நம்பிக்கையை ஆண்கள் சிதைத்தால் அது ஆண்களின் குற்றமே தவிர, பெண்கள் அதனால் குற்றவுணர்வுக்கு ஆளாகத் தேவையே இல்லை. இதைப் பெண்கள் மட்டுமல்ல; பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமல்ல; ஆண்களும் ஆண்களைப் பெற்றவர்களும் உணர வேண்டும்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை இன்று நீந்தி கடக்கும் தேனி தனியார் பள்ளி மாணவர்




தேனியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஆர். ஜெய் ஜஸ்வந்த் சுமார் 30 கி.மீ தூரம் கொண்ட தலைமன்னார்- தனுஷ்கோடி இடையிலான பாக் ஜலசந்தி கடற் பகுதியை இன்று நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார்.
தேனி மாவட்டம் அல்லி நகரைச் சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஆர். ஜெய் ஜஸ்வந்த் (10). நீச்சல் வீரரான இவர் 2016-ம் ஆண்டிலிருந்து மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மாணவர் ஜெய் ஜஸ்வந்த் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை இன்று (வியாழக்கிழமை) நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார்.
இதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு விசைப்படகு, ஒரு நாட்டுப்படகில் மாணவர் ஆர். ஜெய் ஜஸ்வந்த், அவருடன் மீனவர்கள் மற்றும் பயிற்சியாளர் எம். விஜயக்குமார் ஆகியோர் நேற்று மதியம் தலைமன்னாருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இன்று அதிகாலை இலங்கை யிலுள்ள தலைமன்னாரில் இருந்து நீந்தத் தொடங்கி இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான 30 கி.மீ. தூர பாக். ஜலசந்தி கடலை நீந்தி இன்று பிற்பகல் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இதற்காக இந்தியா மற்றும் இலங்கை அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளார். இந்தச் சாதனையை செய்தால் மிகக் குறைந்த வயதில் பாக். ஜலசந்தி கடலை நீந்திக் கடந்தவர் என்ற சாதனையைப் படைக்க முடியும்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


பேராவூரணி அருகே தெற்குக்காட்டில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார் டாக்டர் ஒருவர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெரிய தெற்குக்காட்டில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றவர் டாக்டர் து.நீலகண்டன். பிரபல எலும்பு முறிவு மருத்துவரான இவர், தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார். இவரது மனைவி புவனேஸ்வரி, தன் கணவரின் கனவை நனவாக்க ஒத்துழைப்பு தந்தார். புவனேஸ்வரியின் மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்தில் பள்ளி வகுப்பறையை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் முடிவடைந்து சீரமைக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளியைத் தத்தெடுத்து, சீரமைக்கப்பட்ட வகுப்பறையை திறந்துவைத்த டாக்டர் நீலகண்டன், ரூ.2 லட்சம் செலவில் மாணவர்களுக்காக ஸ்மார்ட் கிளாஸ், மேஜைகள், நாற்காலிகள், வகுப்பறைக்கு டைல்ஸ், நூலகத்தில் புத்தகங்களை வைக்க அலமாரி, கணினி ஆகியவற்றை வழங்கினார். வரும் ஆண்டுகளில் இதர வகுப்பறைகளை சீரமைத்துத் தருவதாக அவர் தெரிவித்தார்.
திறப்பு விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வீரம்மாள் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, துர்காதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ஆசிரியர் செ.ராமநாதன் நன்றி கூறினார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் பயன்படுத்திய துப்பாக்கி சுமார் ரூ.55 லட்சத்துக்கு லண்டனில் ஏலம் விடப்பட்டது.
18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து மைசூர் மண்ணிலிருந்து குரல் கொடுத்த தீரமிக்க ஆட்சியாளர் இவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில் 1799-ல் நடைபெற்ற போரின்போது இவர் மாண்டார்.
இவர் பயன்படுத்திய பொருட்கள் ஆங்கிலேய பிரபுக்கள், அதிகாரிகளால் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்தின் பெர்க்சையர் மாகாணத்திலுள்ள ஒரு தம்பதியர் தங்களது பழைய வீட்டை சுத்தம் செய்தபோது அதில் திப்பு சுல்தான் பயன்படுத்திய துப்பாக்கி, வாள் உள்ளிட்ட 8 அரிய வகை கலைப்பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தார். இவற்றை லண்டனிலுள்ள ஆன்டனி கிரிப் ஆர்ம்ஸ் அண்ட் ஆர்மர் ஆக் ஷன் எனப்படும் ஏல நிறுவனத்திடம் அவர்கள் ஒப் படைத்தனர்.
இந்நிலையில் அந்த பொருட்கள் அண்மையில் ஏலம் விடப்பட்டன. இதில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வெள்ளிப் பூண் போட்ட துப்பாக்கி 60 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.55 லட்சமாகும். 20 போர் பிளின்ட்லாக் என்ற வகையிலான துப்பாக்கியாகும் அது.
மைசூர் அருகேயுள்ள ஸ்ரீரங்கப் பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்பு கொல்லப்பட்டார். அப்போது மைசூரும், ஸ்ரீரங்கப்பட்டணமும் சூறையாடப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தப் பொருட்கள் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28




வங்க தேசத்தின் நவீனச் சிற்பக் கலையின் முன்னோடி நோவீரா அஹமத். மேற்கத்திய நாகரிகமும் நாட்டுப்புறக் கலையும் புத்த மத தத்துவமும் இணைந்து உருவானவையே அவரது சிற்ப வடிவங்கள். அவை பெண்களின் வாழ்வையும் அனுபவத்தையும் பிரதிபலித்தன. 1939-ல் கங்கையின் மிகப் பெரும் சதுப்புநிலக் காட்டில், கடல் நண்டு வேட்டைக்கு அவர் குடும்பம் சென்றபோது நோவீரா அஹமத் பிறந்தார்.

களிமண்ணில் வீடுகளையும் பொம்மைகளையும் உருவாக்கிய தாயைப் பார்த்து, சிறுவயதிலேயே சிற்பக் கலையின் மீது காதல் கொண்டார். அவருக்கு மணம் முடித்து வைக்கத் தந்தை முயன்றபோது, அதை உறுதியாக மறுத்து, சிற்பக் கலைஞராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் துணிவுடன் தொடங்கினார்.
லண்டனில் உள்ள ‘காம்பெர்வெல் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்டி’ல் சிற்ப வடிவமைப்பு பற்றிப் படித்து, 1955-ல் பட்டம் பெற்றார். அதன்பின் ஆஸ்திரியாவின் வியன்னா, இத்தாலியின் புளோரன்ஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணித்து, சிற்பக் கலையை மெருகேற்றிக்கொண்டார். 1960-ல் inner gaze எனும் சிற்பக் கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைஞரானார்.
1952-ல் நடந்த மொழிப் போராட்டத்தின் நினைவாக வங்க தேசத்தில் எழுப்பப்பட்டு இருக்கும் ஷாஹித் மினாரை வடிவமைத்து உருவாக்கியவர் இவரே. வங்கதேசத்தின் மிகப்பெரும் விருதான ‘Ekushey Padak’ விருதைப் பெற்ற இரண்டாவது வங்கதேசத்தவரும் இவரே. அவரது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக மார்ச் 29 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
உயிரைப் பறிக்கின்றனவா ரத்த வங்கிகள்?
தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சீனியர் மருத்துவர்கள், மருத்துவத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு உட்பட்ட ரத்த வங்கிகள் முறையாகப் பராமரிக்கப்படாத ரத்தத்துக்கு நல்ல நிலையில் உள்ள ரத்தம் எனச் சான்று வழங்கியிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
முறையாகப் பராமரிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்டதால் தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவமனைகளில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 15 பெண்கள் உயிரிழந்து இருப்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதற்குக் காரணமான ரத்த வங்கியின் அதிகாரிகளான மருத்துவர் எம். சந்திரசேகர், மருத்துவர் நாராயணசாமி, மருத்துவர் சுகந்தா ஆகியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது. இப்போது கெட்டுப்போன ரத்தத்தால் 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இனியாவது அரசு விழித்துக்கொள்ளுமா?


ஆடைப் பற்றாக்குறையால் தடைபட்ட விண்வெளிப் பயணம்
பெண் விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஆனி மெக்கிளேன் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே சென்று மின்கலங்களைப் பொருத்த வேண்டுமெனத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு அந்த விண்வெளி வீராங்கனைகள் அணிகிற நடுத்தர அளவிலான விண்வெளி உடைகள் இரண்டு தேவைப்பட்டன. ஆனால், இருந்ததோ ஒன்றுதான். எனவே, ஆண் விண்வெளி வீரர் நிக் ஹேக்கோடு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கோச் மட்டும் வெளியேறி இந்தப் பணியைச் செய்திருக்கிறார்.
மெக்கிளேனால் பயன்படுத்தப்பட்ட விண்வெளி உடையை அணிந்துகொண்டு கோச், ஹேக்கோடு கடந்த வாரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லை என வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நாசா ரத்து செய்திருப்பது வருந்தத்தக்கதே.
இன்னும் ஓர் உயிரா?
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் படித்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்தச் சிறுமி, வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் காணாமல் போனார்.
குழந்தையைத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் துறையும் உறவினர்களும் இணைந்து குழந்தையைத் தேடிவந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் தன் வீட்டருகே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இன்னும் இப்படி எத்தனை சிறுமிகளைப் பலிகொடுக்கப் போகிறோமோ?

எண்ணமும் சொல்லும்: ராதாரவியின் குடும்பப் பெண்களை நினைத்து வருந்துகிறேன்.
ராதாரவியின் ஆணாதிக்கமும் வக்கிரமும் நிறைந்த பேச்சைக் காட்டிலும் மேலான அதிர்ச்சியை அங்கிருந்த பார்வையாளர்களின் உற்சாகமான கைதட்டல் ஏற்படுத்தியது. உங்களுடைய கைதட்டல் ராதாரவி போன்ற பேச்சாளர்களுக்கு, நகைச்சுவை என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக வக்கிர எண்ணங்களைக் கொட்டும் துணிவை அளிக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
விகார மனங்கொண்ட மனிதர்களின் இழிவான பேச்சை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள். என்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த ராதாரவியை விசாரிக்க நடிகர் சங்கம் குழு அமைக்க வேண்டும். மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும்.
திரைப்படத்தில் வாய்ப்புக் கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாகப் பேசி பிரபலமடையும் ராதாரவிக்கு, அவருடைய தாயும் ஒரு பெண்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். தொடர்ச்சியாக மேடைகளில் நடிகைகளைப் பற்றி இழிவாகப் பேசும் ராதரவியின் குடும்பப் பெண்கள் மீது பச்சாதாபப்படுகிறேன்.
கடவுள் கொடுத்த வரத்தால் திரையுலகில் எனக்குச் சிறப்பான இடம் கிடைத்துள்ளது. சீதையாகவும் கடவுளாகவும் தோழியாகவும் காதலியாகவும் மனைவியாகவும் நான் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் இனியாவது நடவடிக்கை எடுக்குமா?
- நயன்தாரா, நடிகை.