“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460
அத்தியாயம் - 7
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460
அத்தியாயம் - 7
“த பாருப்பா...என்னோட நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டவன் நீ ஒருத்தன் தான்!...அதே மாதிரி...என் கிட்ட உண்மையான விசுவாசத்தோட இருக்கறவனும் நீ ஒருத்தன் தான்!...அதனாலதான் உன் கிட்ட உரிமையோட கேட்டேன்!...உனக்கு விருப்பமில்லேன்னா...விட்டுடுப்பா” தொய்வானார் ஒய்.ராஜகோபால்.
மிரண்டு போனார் வெள்ளிங்கிரி, “ஆஹா...சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா இந்தக் கிழவன் உடனே “விருப்பமில்லேன்னா...விட்டுடுப்பா”ன்னுட்டானே?...அதுக்கா நான் இத்தனை நாள் இத்தனை திட்டம் போட்டேன்?...”
“அய்யா...என்னடா இவன் நாம சொல்றதை மறுத்துப் பேசறான்!னு நினைக்காதீங்க அய்யா!...உங்க மகளோட வயசு...என் வயசுல சரி பாதி!...அதான் யோசிக்கறேன்!” வெள்ளிங்கிரி சொல்ல,
“அதைப் பத்தி நீ கவலைப் படாதே!...நீ “சரி”ன்னு ஒரு வார்த்தை சொல்லு போதும்!...உன்னை என் மருமகனாக்கி என் மொத்த ஆஸ்திக்கும் உன்னை வாரிசாக்கறேன்”
“அய்யா...ஆஸ்தி...சொத்து...இதெல்லாம் எனக்குப் பெரிசில்லைங்க அய்யா!...எனக்குத் தேவை...நீங்க மனசு வேதனைப் படாம இருக்கணும்!...சிங்கம் சிங்கமாகவே இருக்கணும்!...அதான்” என்று சொல்லி விட்டு, “நான் சம்மதிக்கறேன் அய்யா!...உங்களுக்காக...உங்களை மகளைக் கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்கறேன் அய்யா” உடனே சொன்னார் வெள்ளிங்கிரி.
வேகமாய் வந்து அவரைக் கட்டிக் கொண்டு, “வெள்ளிங்கிரி...நீ என்னோட கௌரவத்தை மட்டும் காப்பாத்தலை...என் மகளோட உசுரையும் காப்பாத்திட்டே!” என்றார் ஒய்.ராஜகோபால் மகிழ்ச்சியுடன்.
“அய்யா...என் கிட்டக் கேட்ட மாதிரி உங்க மகள் கிட்டேயும் கேட்டு...அவளோட சம்மத்தையும் வாங்குங்க!...ஏன்னா...அவ சம்மதமில்லாம இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது!ன்னு நான் நினைக்கறேன்!” உலக மகா உத்தமன் போலப் பேசினார் வெள்ளிங்கிரி.
“அவ இப்ப இருக்கற நிலைமைல நிச்சயம் அவ ஒத்துக்குவா!...”
“எப்படியோ எல்லாம் நல்லபடியா நடக்கணும்!...நீங்க பழைய நிம்மதியைப் பெறணும்” சொல்லி விட்டு அங்கிருந்து சென்ற வெள்ளிங்கிரியை கண்களில் நீர் மல்கப் பார்த்தார் ஒய்.ராஜகோபால்.
தன் எண்ணம் முழுவதுமாய் ஈடேறிப் போன உற்சாகத்தில் “நினைத்ததை நடத்தியே முடிப்பவன்...நான்...நான்...நான்!” என்று சன்னமாய்ப் பாடிக் கொண்டே வீட்டை அடைந்தார் வெள்ளிங்கிரி.
அன்று இரவே மகளிடம் அந்த விஷயத்தைப் பற்றி, மிக மிக நிதானமாய்ப் பேசினார் ஒய்.ராஜகோபால்.
“இருபத்திரெண்டே வயதே ஆன எனக்கு....ஒரு நாற்பத்திஆறு வயசுக்காரனைக் கட்டி வைக்கப் பார்க்கிறீர்களே?...நீங்களெல்லாம் ஒரு தந்தையா?...என் அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தா இப்படியொரு காரியத்தைச் செய்யும் துணிவு வருமா உங்களுக்கு?....” என்றெல்லாம் கத்திப் பேசி, மாபெரும் களேபரத்தையே உண்டாக்குவாள், என்று எதிர்பார்த்திருந்த ஒய்.ராஜகோபாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாய்,
“நீங்க எது செய்தாலும் எனக்கு சம்மதம் டாடி” என்று அமைதியாய், ஒரே வார்த்தையில் பதில் சொல்லி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் கனிஷ்கா.
அவளது அந்தச் செயலால் மிகவும் மனம் நெகிழ்ந்து போன ஒய்.ராஜகோபால், அவராகவே கேட்டார், “என்னடா அப்பன் ஒரு அரைக் கிழவனைக் கட்டிக்கச் சொல்றானே?”ன்னு சங்கடப்படறியா கனிஷ்கா?”
“சத்தியமா இல்லை டாடி!...ஏன்னா?...நான் இருக்கும் நிலை அப்படி!...“எப்ப கறை பட்டோம்?...எப்படிக் கறை பட்டோம்?”ன்னே தெரியாம கறை பட்டுட்ட நான்....எதையும் பேசவோ...கேட்கவோ தகுதி இல்லாதவளாயிட்டேன்!...” சொல்லும் போது கனிஷ்கா தன்னையுமறியாமல் கண்ணீர் விட,
ஒய்.ராஜகோபாலும் அழுது விட்டார்.
ஆனாலும், தன்னுடைய அழுகை மகளின் மனதை மேலும் நோகடித்து விடக் கூடாது என்கிற எண்ணத்தில், அவசர அவசரமாய்த் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “அம்மா...வெள்ளிங்கிரி ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்ம்மா!...உண்மையைச் சொல்லணும்னா...என்னை விட அவர்தான் உன்னைய நல்லவிதமாய்ப் பார்த்துக்குவார்ம்மா!...நான் கூட ஹார்பர் வேலை...அதுஇதுன்னு உன் கூட உட்கார்ந்து பேசாமல் எந்நேரமும் வெளியிலேயே திரிஞ்சிட்டிருப்பேன்!...ஆனா வெள்ளிங்கிரி அப்படியில்லை...உன்னைத் தன் உள்ளங்கையிலேயே வெச்சுக் கவனிச்சிட்டிருப்பார்!...” புன்னகையோடு சொன்னார் ஒய்.ராஜகோபால்.
தந்தையை திருப்திப் படுத்தும் விதமாய் தானும் புன்னகைத்தாள் கனிஷ்கா. அந்தப் புன்னகையில் மகிழ்ச்சியின் விகிதத்தை விட சோகத்தின் விகிதமே அதிகம் இருந்தது.
****
வயிற்றில் சிசுவைத் தாங்கிக் கொண்டிருக்கும் மகளுக்கு, எவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து முடிக்க முடியுமோ, எவ்வளவு சீக்கிரத்தில் செய்து முடித்து விட வேண்டும், என்கிற ஆவேசத்தில் அடுத்த வந்த சுபமுகூர்த்த தினத்திலேயே கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணினார் ஒய்.ராஜகோபால்.
“பெரியவாள் நான் சொல்றேன்னு தப்பா நினைக்கக் கூடாது!... ‘விவாகம்’ன்றது ரொம்பப் பெரிய விஷயம்...ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்...நீங்க என்னடான்னா அடுத்த முகூர்த்த தேதியையே குறிக்கச் சொல்லுறீங்கோ...நடுவுல அஞ்சு நாள்தான் இருக்கு....உங்களுக்கு சாத்தியப்படுமோ?”
நாள் குறித்த ஜோதிடரே சந்தேகத்தோடு கேட்க,
“ஹும்...என்னால் நாளைக்கே கூட கல்யாணத்தை நடத்த முடியும்...”என்று கம்பீரமாய்ச் சொன்னார் ஒய்.ராஜகோபால்.
பண பலமும், ஆள் பலமும் கொண்ட அவர், தான் குறித்த அந்த முகூர்த்தத்திலேயே கனிஷ்கா-வெள்ளிங்கிரி திருமணத்தை வெகு விமரிசையாக செய்தும் காட்டினார்.
திருமணமாகி சில மாதங்கள் வரை சந்தோஷமாகவும், சாதூர்யமாகவும் இல்லறத்தை நடத்திக் கொண்டு சென்ற வெள்ளிங்கிரி, மெல்ல மெல்ல நிறம் மாறத் துவங்கினார். தன் இலக்கை நோக்கிக் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
“ஆமாம்...புதையலை பூதம் காக்கற மாதிரி உங்கப்பன் ஏன் இன்னமும் சொத்தையெல்லாம் தன் பேரிலேயே வெச்சிருக்கான்?...அதான் மாப்பிள்ளை நான் வந்தாச்சே?...என் பேரில் மாத்திட வேண்டியதுதானே?”
வெள்ளிங்கிரியின் அந்தப் புதுப் பேச்சு, கனிஷ்காவுக்கு வியப்பைத் தர, “என்னங்க நீங்க?...சொத்து அவர் பேரில் இருந்தால் என்ன?...உங்க பேரில் இருந்தால் என்ன?...அவரோட ஒரே மாப்பிள்ளை நீங்க...எப்படியும் அதெல்லாமே உங்களுக்குத் தானே வந்து சேரப் போகுது?” சாதாரணமாய்ச் சொன்னாள்.
“அப்ப...அதுவா வர்ற வரைக்கும் நான் அவர் எதிரிலேயும்...உன் எதிரிலேயே ஒரு வேலைக்காரனாவே கை கட்டி நிக்கணும்?...நீங்க அதட்டினாலும்...உருட்டினாலும்...மிரட்டினாலும் பொறுத்துக்கணும்!....அப்படித்தானே?”
“ச்சீய்...ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?...நாங்க எப்ப உங்களை எங்க வேலைக்காரனா நினைச்சிருக்கோம்?....உங்களுக்கு இங்க எல்லா உரிமையும் குடுத்திருக்கே?” கனிஷ்கா கோபமானாள்.
“என்ன உரிமை குடுத்திருக்கீங்க...பெரிய உரிமை?...என்னால பேங்க்ல இருந்து ஒரு பத்துக் காசு எடுக்க முடியுமா?...செலவுக்கும் பணம் வேணும்ன்னா முதல்ல உன்னைக் கேட்கணும்...நீ போய் உன் அப்பன்கிட்டக் கேட்பே...அவன் “போனாப் போகுது குடுத்துத் தொலை”ன்னு ஏதோ கொஞ்சத்தை வீசுவான்!...அதை நான் பொறுக்கிக்கணும்!”
“நீங்க எதுக்குங்க பொறுக்கணும்?...உங்களுக்கு எவ்வளவு வேணும்னு சொன்னா...நாங்க காரண...காரியம் கூடக் கேட்காம எடுத்துத் தர்றோமே?”
“ஏன்...ஏன்...அப்படி?...மாப்பிள்ளை மேல் நம்பிக்கை இல்லையா?...”
அவர் அப்படிக் கேட்டதும் சில நிமிடங்கள் அவர் முகத்தையே கூர்ந்து பார்த்த கனிஷ்கா, “ஓ.கே...அப்பா கிட்ட இதைப் பத்திப் பேசறேன்...உங்க ஆசை அதுதானே?...நிறைவேத்திடலாம்” என்று கணவனுக்கு வாக்குக் கொடுத்த கனிஷ்காவால் அந்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போனது.
காரணம், ஒரு மதிய நேரத்தில் ஹார்பரிலிருந்து வந்த தொலைபேசிச் செய்தி.
“ம்ம்...சொல்லுங்க நான் கனிஷ்காதான் பேசறேன்!”
“அம்மா...அங்க வெள்ளிங்கிரி அய்யா இருக்காருங்களா?”
“இல்லையே?...அவரு அங்கதானே வந்தார்?...ஏன் என்ன விஷயம்?”
“அம்மா...வந்து...வந்து...நம்ம பெரிய அய்யா திடீர்னு மயங்கி விழுந்திட்டாரும்மா...இங்க ஹார்பரில் இருக்கற ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம் அம்மா!...அவங்க செக் பண்ணிப் பார்த்துட்டு...பார்த்துட்டு...” எதிர் முனை தயங்க,
“சொல்லுங்க...செக் பண்ணிப் பார்த்திட்டு என்ன சொன்னாங்க?” பரபரப்பானாள் கனிஷ்கா. போனைப் பிடித்திருந்த அவள் கை நடுங்கியது.
“நம்ம பெரிய அய்யா...பெரிய அய்யா...நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாரும்மா” எதிர் முனையில் ஒரு பெரிய கதறல்.
அந்த அதிர்ச்சித் தகவலைத் தர, “அய்யோ....”என்று கதறியபடி அப்படியே தரையில் சாய்ந்தாள் கனிஷ்கா.
தனது நீண்ட வரலாற்றை மொத்தமாய்ச் சொல்லி முடித்த அந்தப் பெண்மணி, “நீங்க கேட்ட இந்தக் கதைல வர்ற...அந்த கனிஷ்கா...நான்தான்!...இது என்னோட மகள் சில்பா!...உன்னோட தங்கை” என்றாள்.
பொறுமையாய் அனைத்தையும் கேட்ட தியாகு, சில நிமிடங்கள் தரையையே பார்த்தபடி அமர்ந்திருந்து விட்டு, மெல்லக் கேட்டான். “இருபத்திரெண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் இங்க திரும்பி வர என்ன காரணம்?...எங்கள் மீதுள்ள பாசத்தால் வந்தாரா?...இல்லை அங்க ஏதாவது பிரச்சினையைப் பண்ணிட்டு...அதிலிருந்து தப்பிக்க இங்க வந்தாரா?”
“உண்மையைச் சொல்லணும்னா...அவர் பல பிரச்சினைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் இங்க ஓடி வந்திட்டார்” கனிஷ்கா என்னும் அந்தப் பெண்மணி சொல்ல,
“அப்படியென்ன பிரச்சினை அவருக்கு?”
“எங்கப்பா இறந்து அவரோட காரியங்கள் நடந்திட்டிருக்கும் போதே உங்கப்பா...அதாவது என் கணவர்....என்னை அரிக்க ஆரம்பிச்சிட்டார்”
“த பாரு...உங்கப்பாவுக்கு ஒரே பொண்ணு நீ?...அதனால மொத்தச் சொத்தும் ஆட்டோமாடிக்கா உனக்கு வந்திடும்!...நீ என்ன பண்றே?...அதையெல்லாம் கையோட என் பேருக்கு மாத்திடு...அதுதான் சரி”
“எங்கப்பா போன பிறகு அந்தச் சிங்கப்பூரில் உறவுன்னு சொல்லிக்க உங்க அப்பாவைத் தவிர வேறு யாருமே இல்லை என்கிற காரணத்தாலும், எனக்கு வாழ்க்கை குடுத்த நல்ல மனிதர் என்கிற காரணத்தாலும் உடனே மொத்தச் சொத்துக்கும் அவரையே அதிபதியாக்கினேன்!...“எங்கப்பா செய்த அதே தொழிலை தான் எடுத்துச் செய்வார்... கடுமையா உழைச்சு..தன் கைக்கு வந்த சொத்தை இன்னும் பன் மடங்கு பெருக்குவார்!”ன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன்!...ஆனா உங்கப்பா என்னை ஏமாத்திட்டார்”
புருவங்களை நெரித்துக் கொண்டு தியாகு பார்க்க,
“அவர் ஹார்பர் பக்கமே போகலை..அதுக்குப் பதிலா மலேஷியா பக்கமும், பாங்காக் பக்கமும்தான் அதிகம் போனார்!...எதுக்கு?....குடியும் கூத்துமாய் ஜாலியாய் இருக்க!...எங்கப்பா கிட்ட வேலை பார்த்த காண்ட்ராக்ட் லேபர்களுக்கு சம்பளமே குடுக்கறதில்லை!...அவங்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி, வேற காண்ட்ராக்டர் கிட்டப் போய்ச் சேர்ந்திட்டாங்க!...அதே மாதிரி கண்டெய்னர் பாராமரிப்பிற்கான மெட்டீரியல் சப்ளை செய்த பார்ட்டிகளுக்கு பணம் போய்ச் சேரவேயில்லை!...எல்லோரும் என்னை வந்து நெருக்க ஆரம்பிச்சாங்க!...ஆண்டாண்டு காலமா என் அப்பா கையிலிருந்த அந்த ஹார்பர் கண்டெய்னர் பராமரிப்பு காண்ட்ராக்ட் முதன் முறையாக அடுத்த காண்ட்ராக்டருக்குப் போனது!”
“ஓ..” என்று மேவாயைத் தடவியபடி யோசித்த தியாகு, “நீங்க அவரோட மனைவிதானே?. நீங்கதானே அவருக்கு எடுத்துச் சொல்லித் திருத்தணும்?” பழியை அந்தப் பெண் மீதே ஏவினான் தியாகு.
“சொல்லாமல் இருப்பேனா?...சொன்னேன்...அதுக்கு அவர் சொன்ன பதில் என் ஈரக் குலையையே நடுங்க வெச்சிடுச்சுப்பா!...“த பாருடி...நான் உன்னைக் கெடுத்தது...அதுக்கப்புறம் தியாகி மாதிரி நானே உனக்கு வாழ்வு குடுத்தது...எல்லாம் எதுக்கு?...இந்த...இந்த சொத்து மொத்த்த்தையும் நானே அடையணும்!...அதை வைத்து உலகத்தின் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கணும்!...அதுக்குத்தான்”
“என்ன...என்ன சொன்னீங்க?...என்னைக் கெடுத்தது...நீ...நீங்களா?” அப்போதுதான் அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட கனிஷ்கா நொறுங்கிப் போனாள்.
“பின்னே?...முதல் நாள் உங்கப்பா “என் மகள் உச்ச பட்ச போதைல ஏதோவொரு கிளப்புல கிடக்கறா...அவளை அள்ளிக் கொண்டு போய் வீட்டுல போட்டுடப்பா”ன்னு கெஞ்சினார் அல்ல?....அன்னிக்கே நான் திட்டம் போட்டுட்டேன்!...அந்த திட்டத்தின் முதல் காரியமா..வீட்டுக்குக் கொண்டு போகும் வழியிலேயே...காரிலேயே வைத்து...உன்னை...உன்னை...”
சன்னமாய் அழுது விட்டு மேலே தொடர்ந்தாள் அந்தப் பெண்மணி.
“இருக்கற சொத்தை அழிக்கறது பத்தாதுன்னு...வெளிய பல இடங்கள்ல கடனையும் வாங்கிக் குவித்தார்....ஒரு கட்டத்துல கடன் குடுத்தவங்க...மெட்டீரியல் குடுத்தவங்க...எல்லோரும் அவரை சுற்றி வளைக்க ஆரம்பித்ததும்...சொத்துப் பத்திரங்கள் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு சொந்த நாட்டுக்கு ஓடி வந்திட்டார்” கனிஷ்கா சொல்ல,
“இப்ப....அவரைத் தேடிக் கண்டுபிடிச்சு...அந்த சொத்தையெல்லாம் திருப்பி வாங்கிட்டுப் போக நீங்களும் கிளம்பி வந்திட்டீங்க!...அப்படித்தானே?” தியாகு ஒரு வித எரிச்சலோடு கேட்டான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதில் அவனுக்குள் ஒரு இயலாமைக் கோபம்.
“இல்லைப்பா...நான்...அவர் வேணுமின்னோ...அவரோட சொத்து வேணுமின்னோ...இங்க வரலை!...நானும் என் மகளும் சிங்கப்பூர்ல நிம்மதியா...ஒழுக்கமா.. வாழ முடியாத அளவுக்கு கடன்காரங்க எங்களைத் தொந்தரவு பண்றாங்க!...என்கிட்டே அவ்வளவு பெரிய தொகை இல்லை!...இருந்திருந்தா நானே கடனையெல்லாம் அடைச்சிருப்பேன்!..இங்க வந்திருக்கவே மாட்டேன்!..என்னோட தேவையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்...மலை போல் அவர் வாங்கிக் குவிச்சு வெச்சிருக்கற அந்தக் கடன்களை மட்டும் அவர் அடைச்சுக் குடுத்திட்டார்!ன்னா...நான் பாட்டுக்கு என் வழில போயிட்டேயிருப்பேன்!...அங்க போயி...ஏதோ என்னால முடிஞ்ச வேலையைச் செய்து என் மகளை வளர்த்துக்குவேன்!”
எப்போதுமே, காசு...பணம்...வட்டி...அசல்...தவணைத்தொகை...என்று அதே எண்ணத்தில் திரிந்து கொண்டிருந்த தியாகுவின் மனதில் முதன் முதலாய் ஒரு நெகிழ்ச்சி உண்டானது. தலையைத் தூக்கி அந்தப் பெண்மணியை நிதானமாய்ப் பார்த்தான்.
இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே தவிப்போடுதானே தன் தாயும் நின்றிருப்பாள்?...என்கிற எண்ணம் அவனை உலுக்கியது. அவன் மனத்தை நெகிழ்த்தியது. தன் தாயை எதிரில் பார்ப்பது போலவே உணர்ந்தான்.
“இவளும் ஒரு வகையில் எனக்குத் தாய்தானே?...இவளை நான் தவிக்க விடலாமா?...கூடாது!...இந்தப் பெண்ணை ஏமாற்றி என் அப்பா கொண்டு வந்திருக்கும் அந்தப் பாவச் சொத்தில் ஒரு பைசாவைக் கூட நான் தொடக் கூடாது!...அவரை வரவழைத்து மொத்த சொத்தையும் அவரிடமிருந்து பறித்து இந்தப் பெண்மணியிடம் ஒப்படைக்கணும்!...அதுதான் என்னைப் பெற்று...வளர்த்த தாய்க்கு நான் செய்யற பிரதியுபகாரம்”
“தம்பி....நீங்கதான் அவர் கிட்டப் பேசி...இதைச் செய்து குடுக்கணும்!...நான் அந்தச் சொத்தை எனக்காக கேட்கலை!...என்னை நிம்மதியாய் வாழ விடாமல் தொடர்ந்து கேவலமான முறைகள்ல எங்களை டார்ச்சர் பண்ணிட்டிருக்கற அந்தக் கடன்காரர்களின் வாயை அடைக்கத்தான் கேட்கிறேன்!” இரு கைகளையும் நீட்டி பிச்சை கேட்பது போல் கேட்ட அந்தப் பெண்மணியைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது தியாகுவிற்கு.
“அ...ம்...மா...” என்று முதல் முறையாக தன் வாயால் அந்தப் பெண்ணை அவன் அப்படி அழைக்க, கனிஷ்கா “பட்”டென்று அவன் கையைப் பற்றித் தன் முகத்தில் அழுத்திக் கொண்டு குமுறினாள்.
“அழாதீங்கம்மா!...நான் இருக்கேன்!....உங்க சொத்தை மீட்டு...உங்க கைல ஒப்படைச்சிட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போறேன்” என்ற தியாகு தலையைத் திருப்பி, அந்தச் சிறுமியைப் பார்த்தான். தன் தந்தையின் அகல முகம் அச்சிறுமியிடம் ஒட்டியிருந்தது.
இது நாள் வரையில் தன்னை விட வயதில் மூத்த சகோதரிகளின் அன்பை மட்டுமே பார்த்து வளர்ந்திருந்த தியாகுவிற்கு தனது குட்டித் தங்கச்சியைப் பார்க்க ஆனந்தமாயிருந்தது.
அவன் உணர்வைப் புரிந்து கொண்ட அந்தப் பெண்மணி, “சில்பா...வாம்மா...இவரு உன்னோட அண்ணாதான்..”என்றாள்.
அவள் நிமிர்ந்து தியாகுவை மிரட்சியோடு பார்க்க, தன் கையை நீட்டி அவளை அருகே அழைத்து கட்டிக் கொண்டான்.
அவனுக்குள்ளிருந்த பணத்தாசை...சொத்தாசை...வட்டி ஆசை...எல்லா ஆசைகளுமே அந்தச் சிறுமியின் இதமான மேனிச்சூட்டில் கருகிப் போயின.
“அப்ப நான் கிளம்பறேன்மா!...நான் இங்க வந்ததையோ...உங்களைப் பார்த்துப் பேசியதையோ நீங்க எங்க அப்பா கிட்டச் சொல்ல வேண்டாம்!...ம்ம்ம்...அப்படியே உங்களோட மொபைல் நெம்பரைக் குடுங்க நான் வரச் சொல்லும் போது...சொல்ற இடத்துக்கு உங்க மகளையும் கூட்டிக்கிட்டு வாங்க” என்றான்.
“சரிப்பா”
அந்த அறையிலிருந்து வெளியேறிய தியாகு, அடுத்த ஐந்தாவது நிமிடம் தனது அறையைக் காலி செய்து விட்டுக் கிளம்பினான்.
****
அதே நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறிய வெள்ளிங்கிரி, நேரே அலுவலகத்திற்குச் செல்லாமல், சற்றுத் தள்ளியிருந்த ஒரு மது பாருக்குள் நுழைந்தார். அவர் மூளை பரபரவென்று இயங்கியது. “ச்சே...சொந்த நாட்டுக்கு வந்து பெத்த மகனோடும், மகள்களோடும் சந்தோஷமா வாழலாம்!னு பார்த்தா இவ வேற வெது இறங்கிட்டாளே?...ம்ம்ம்...இவளை எப்படி அகற்றுவது?...ஆபீஸ் வரைக்கும் வந்தவள்...நாளைக்கு வீட்டிற்கே வந்து தியாகுவைச் சந்தித்துப் பேச மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?...ம்ஹூம்...வேற வழியே இல்லை!...அந்தக் கனிஷ்காவையும்...அவ மகளையும் முடிச்சிட வேண்டியதுதான்” உள்ளே சென்ற சரக்கு விபரீத எண்ணங்களைத் தூண்டி விட,
இது நாள் வரையில், நம்பிக்கை துரோகம் செய்வது, அடுத்தவர் சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பது, போன்ற குற்றங்களைச் செய்து கொண்டிருந்த வெள்ளிங்கிரியின் மனத்தில் முதன் முதலாய் கொலைக் குற்றத்திற்கான வித்து விழுந்தது.
“இந்த ஹோட்டலை விட்டு அவங்க வெளியே போகக் கூடாது...இதுக்குள்ளார வெச்சே அவங்க கணக்கை முடிக்கணும்!...அதுக்கான வேலையை இப்பவே ஆரம்பிக்கணும்!...என்ன செய்யலாம்?”
“கனிஷ்கா ஒரு காலத்துல போதை மாத்திரைகளுக்கும், மதுவுக்கும் அடிமையாகிக் கிடந்தவள்தான்!...இப்ப அவ அந்தப் பழக்கங்களிலிருந்து விடுபட்டிருந்தாலும்...அவ கிட்ட பேசற விதத்துல பேசி அவளை மது பருக வைக்கணும்!...அந்த மதுவுல அதுக்கு முன்னாடியே விஷத்தைக் கலக்கி வெச்சிடணும்!...அவ போதைல விழுந்ததும் அவ மகள் வாய்ல பலவந்தமாய் மதுவைப் புகட்டி அதையும் முடிச்சிடணும்!...போலீஸ் வந்தா அவ ஏற்கனவே “போதை அடிமை” என்கிற ஒரு பிடி போதும்...நாம தப்பிச்சுக்கலாம்” தந்திரவாதியானார் வெள்ளிங்கிரி.
திட்டத்தை செயல் படுத்தும் விதமாய் அந்த பாரிலேயே, கனிஷ்காவிற்கு மிகவும் பிடித்த பிராண்டில் ஒரு மது பாட்டிலை வாங்கி, தன் பாண்ட் பாக்கெட்டினுள் மறைத்து வைத்தார்.
அங்கிருந்து வெளியேறி, ஒரு பூச்சி மருந்துக் கடையை அடைந்து, அதீத வீரியமுள்ள ஒரு பூச்சி மருந்து பாட்டிலையும் வாங்கிக் கொண்டார்.
ஒரு ஒதுக்குப் புறமான தெருவிற்குள் நுழைந்து, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, நிதானமாய் மது பாட்டிலின் மூடி மீதிருந்த ஸ்டிக்கரைப் எடுத்தார். பின்னர் மூடியைத் திறந்து. மெல்லச் சாய்த்து அதனுள்ளிருந்த மதுவைக் கொஞ்சமாய்க் கீழே கொட்டினார்.
மீண்டுமொரு முறை தெருவை ஆராய்ந்து விட்டு, அந்த கொடிய விஷத்தை மது பாட்டிலினுள் கொட்டி நன்கு கலக்கினார். பின்னர், அதை ஓப்பன் செய்த சுவடே தெரியாத அளவிற்கு இறுக மூடி, முன்பு இருந்ததைப் போலவே மூடி மீது ஸ்டிக்கரை ஒட்டினார். “ஹா...ஹா...சூப்பர்டா வெள்ளிங்கிரி...இதைப் பார்த்தா யாருமே புது பாட்டில்னு அடிச்சுச் சொல்வாங்க!” என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு, மது பாட்டிலை மீண்டும் பாண்ட் பாக்கெட்டினுள் வைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தார்.
மறுபடியும் ஹோட்டலுக்குச் சென்று, கனிஷ்காவைச் சந்தித்து, மிகவும் மென்மையாக, அன்பொழுகப் பேசினார் வெள்ளிங்கிரி.
அவர் மது அருந்தி விட்டு வந்திருக்கின்றார், என்பதைப் புரிந்து கொண்ட கனிஷ்கா அவருடன் அதிகம் பேசுவதைத் தவிர்த்தாள்.
(தொடரும்)