Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript என் முதல் விமானப் பயணம் | SudhaRaviNovels

என் முதல் விமானப் பயணம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113

என் முதல் விமானப் பயணம்


நான் முதல் முதலா விண்ணில் பறந்த கதையை கேட்க ஆர்வமா இருக்கீங்களா?

நாம தான் ஸ்பெஷல் டிசைன் ஆச்சே...எது செஞ்சாலும் நம்மை பற்றி சரித்திரத்தில் வரணும் அப்படின்றதில் பிடிவாதமா இருக்கிற ஆள்..

சென்னை மாநகரின் வீதிகளில் கூட கருப்பு பூனைகளின்(அதாங்க எங்க வீட்டு ஆட்களின் ) பாதுக்காப்போடு சுற்றி திரிந்த நான், முதன் முதலாக என் கணவர் வேலைக்காக சென்ற கத்தார் நாட்டின் தலை நகர் தோஹாவிற்கு தன்னந்தனியாக விமானத்தில் பறந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்து இருக்கிறேன்.

அப்படி என்னத்தை புதுசா சொல்ல போறான்னு நினைக்கிறீங்களா? அது ஒன்னும் இல்லங்க நான் என் கல்யாணத்துக்கு முன்னாடி எங்கேயுமே அதாவது பக்கத்துல இருக்கிற பெட்டி கடைக்கு கூட பாடிகார்ட் போட்டு போனவ. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அப்படின்ற பழமொழிக்கேற்ப எங்க அப்பாவுக்கு தன் பெண்ணை ஐஸ்வர்யா ராய் அளவிற்கு நினைசிருந்தாங்க......

(நேர்ல பார்த்தா தானே தெரியும் உலக அழகியா உள்ளூர் கிழவியான்றது அப்படின்னு நீங்க மனசுக்குள்ள தாளிக்கிறது எனக்கு கேட்டுடுச்சு...).அப்படியாக பட்டவளை ஒரு நாலு வயசு குழந்தைக்கு அம்மாவை உள்ளூர் பெட்டி கடைக்கு கூட தனியாக போகாதவளை வெளிநாட்டிற்கு தனியா அனுப்புறாங்க.

ஒரு பத்து நாளைக்கு முன்னமே ஊர் கூடிருச்சு சுதா தனியா போறாலாமே அவளுக்கு என்ன தைரியசாலி சமாளிசிடுவா அப்படின்னு சொல்லியே தண்டவாளத்துல கொண்டு தள்ளிடுவாங்க. நமக்கு தானே தெரியும் பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக் என்கிறது..

அக்கம்பக்கம் இருக்குறவங்க எல்லாம் வந்து பொண்ணை பார்த்து பத்திரமா அழைச்சிட்டு போ நீ சமாளிசிடுவே குழந்தைக்கு தெரியாது ஒரே அட்வைஸ் மழை........அவ என் கிட்ட வந்து அவங்களுக்கு எல்லாம் தெரியாது நான் தான் உன்னை கூட்டிட்டு போகணும்ன்னு என்ன செய்ய எல்லாம் என் தலை எழுத்து அப்படின்றா.....ஷ்..ஷ்...ஷப்பா...இப்பவே கண்ணை கட்டுதேன்னு இருந்துச்சு.

அந்த நாளும் வந்துச்சு எப்படின்னா விடிய காலையில் நாலு மணிக்கு விமானம். என்னை வழியனுப்ப வந்த கூட்டம் முதல் நாள் இரவு நல்லா புல் கட்டு கட்டிட்டு கையை காலை நீட்டி போட்டு உட்கார்ந்து ஊர் கதை உலகத்து கதை உலக அரசியல் இப்படி ஒன்னு விடாம பேசி என்னவோ அன்னைக்கே உலகம் அழிய போற மாதிரி பேசுறாங்க பேசுறாங்க பேசி கொண்டே இருந்தாங்க...

எனக்கு ஒரே பயம் பஸ்சில் கூட தனியா போனது இல்ல இதுவரைக்கும். இப்படி நேரடியா விமானத்துல கொண்டு ஏத்துராங்கலேன்னு உள்ளுக்குள்ள உதறல்.என்ன செய்ய இதுல ஆளாளுக்கு சாமானை நிறைய எடுக்காதே கொஞ்சமா வை அப்படின்றாங்க.சிலர் அதை உள்ளே வைன்றாங்க சிலர் எடுன்றாங்க ஒரே குழப்பம்..

நம்மூர்ல அட்வைஸ் இலவசமா கிடைக்கும் பாருங்க அதுவும் ஒருத்தருக்கு அனுபவம் இல்லேன்னு சொல்றப்போ தனக்கு அனுபவம் இருக்கோ இல்லையோ அரைகுறையா தெரிஞ்சதை வைச்சு அட்வைஸ் என்கிற பேர்ல காதுல ரத்தம் வர வச்சிடுவாங்க.

அப்படி இப்படின்னு ஒரு வழியா பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் நூறு தடவை பார்த்து வீட்டை விட்டு கிளம்பி வண்டில ஏறுனோம். முன்னே ஒரு வண்டி போக பின்னாடியே என்னை வழியனுப்ப வந்த கூட்டம் ஒரு மினி வேனில்.

ஏர்போர்ட் போய் இறங்கினதும் கதவை திறந்தவுடனே பொத்து பொத்துன்னு உள்ளே இருந்த ஆளுங்க எல்லாம் வந்து விழுது.....உடனே அங்கே இருந்த ஏர்போர்ட் ஸ்டாப் ஓடி வந்து எந்த டூர் ஆப்ரேட்டர் அப்படின்னு கேட்டார் எங்களுக்கு ஒன்னும் புரியல. அப்புறம் பார்த்தா அவர் நினைச்சிட்டார் என் கூட வந்தவங்க எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமா போறோம் போலன்னு .

அது தான் எந்த டூர் ஆப்ரேட்டர்ன்னு கேட்டுருகார். என் அப்பா சொல்றாங்க இல்ல இவங்களும் குழந்தையும் தான் போறாங்க நாங்க எல்லாம் வழி அனுப்ப வந்தவங்கன்னு. அவர் ஒரு பார்வை பார்த்திட்டு போனார் பாருங்க சத்தியமா எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க முடியாதுங்க.

நானும் என் பொண்ணும் ட்ரோலியை எடுத்து சாமான் எல்லாம் எடுத்து வச்சு கிட்டு உள்ளே போனோம். எங்க அப்பா வந்திருந்த கூட்டத்துக்கெல்லாம் விசிட்டர் பாஸ் வாங்கினாங்க ஒரு விமான டிக்கெட் அளவிற்கு..........

உள்ளே போனவுடனே கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரியா இருந்துச்சு....முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியும் என்கிற மாதிரி ஒண்ணுமே புரியல. மெதுவா அங்கே இருந்த ஒருத்தர் கிட்ட நான் முதல் முறை விமானத்தில் போறேன் எனக்கு என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்கன்னு கேட்டேன்.

பாவம் நல்ல மனுஷன் என்னென்ன பண்ணனும்ன்னு சொல்லிட்டு போனார். சரின்னு நானும் ட்ரோலியை எடுத்து கிட்டு போய் என் சாமான்களை எல்லாம் எடை போட்டுட்டு என் கையில் இருந்த டிக்கெட்டை அங்க உட்கார்ந்திருந்த பொண்ணு கிட்ட குடுத்தேன்.

என் வீட்டுகாரர் ஊரில் இருந்தே ஒரே மிரட்டல் அவங்க என்ன கேட்க்குராங்கன்னு ஒழுங்கா கவனிச்சு பதில் சொல்லு எப்பவும் போல உன் திருட்டு முழிய அங்கே காட்டினே என்னவோ ஏதோன்னு நிறுத்தி வச்சிடுவாங்கன்னு சொன்னார்.

கவுன்ட்டரில் இருந்த பொண்ணு டிக்கெட்டை வாங்கிட்டு “hai mam, are you going to join with your husband?” அப்படின்னு கேட்டுச்சு. நான் உடனே என் முப்பத்திரண்டு பல்லையும் காண்பிச்சு எஸ் அப்படின்னு சொல்லிட்டு உள்ளுக்குள்ள வேற எதுவும் கேட்றாதடி அப்படின்னு சாமிக்கு தோப்புகரணம் போட்டுட்டு இருந்தேன்.

என்னை பார்த்து என்ன நினைச்சுதோ பொழைச்சு போகட்டும்ன்னு சொல்லி மேடம் போர்டிங் பாஸ் இதில் இருக்கு லக்கேஜ்க்கு இதில ஸ்டிக்கர் ஒட்டி இருக்கேன்னு கொடுத்திச்சு.

அதை வாங்கின உடனே என்னடா இது நாம தான் நம்ம வீட்டுகாரர் வாடகைக்கு எடுத்திருக்கிற வீட்டில் தங்க போறோமே இந்த பொண்ணு வேற எதுக்கு ஹோட்டலுக்கு ஏற்பாடு பண்ணி இருக்குன்னு நினைச்சு என் பொண்ணு கிட்ட கேட்டேன்.

இதை பார்த்துகிட்டே என் பின்னாடி நின்னவங்க அது ஹோட்டல் இல்ல விமான டிக்கெட் தான் அப்படி சொல்வாங்கன்னாரு.....ஹி...ஹி......ன்னு ஒரு அசட்டு சிரிப்பை சிரிச்சிட்டு நாம என்னத்தை கண்டோம் பஸ்ல போறப்ப போர்டிங் அண்ட் லாட்ஜிங் படிப்போம்ல அது தான் நினைச்சேன் அப்படின்னு சொல்லி அவருக்கு ஒரு ஷாக் கொடுத்திட்டு நகர்ந்தோம்.

அடுத்து நம்ம என் கவுன்ட்டர் ஏகாம்பரத்தை நோக்கி போனோம் அதுதாங்க “immigration officer”. அங்கே போய் அவரு கிட்ட பாஸ்போர்ட்டை கொடுத்திட்டு நின்னோம். அவர் என்னை பார்த்து திரும்பி நில்லுங்கன்னார்.

ஆத்தி என்ற மாமா கூட இப்படி கோவம் வந்தா கூட முறைச்சது இல்லீங்க அப்படி முறைச்சு பார்த்தார். எனக்கு அழுகையா வந்துச்சு என்ன செய்ய வெளிநாட்டுக்கு வரதுக்காக யார் யாரையோ முறைசிக்க வேண்டியதா இருக்குன்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.

அடுத்து “security check” அங்கே ஒன்னும் அதிசயமா விவகாரம் ஆகல. அதை முடிச்சிட்டு கேட்ல போய் உட்கார்ந்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு எல்லோரும் போய் வரிசையில நின்னாங்க. என் பொண்ணு சொன்னா அம்மா நாம இப்போ பிளேன்நுக்குள்ள போக போறோம்ன்னா.

வரிசையா ஒவ்வொருத்தரா கேட்டுக்கு வெளில அனுப்பினாங்க. நானும் என் பொண்ணும் போனோம் அங்கே பார்த்த ஒரு பஸ் நிக்கிது .நான் என் பொண்ணு கிட்ட கேட்டேன் என்ன இது நீ பிளேன்னுக்கு போறோம்ன்னு சொன்னே பஸ் நிக்கிதுன்னு.

அவ பதில் சொல்றதுக்குள்ள அடுத்த அடுத்த ஆளுங்க வந்ததால அவளும் நானும் தள்ளி தள்ளி நின்னோம். எனக்கு மனசுக்குள்ள பிளேன்னுக்கு டிக்கெட் வாங்கிட்டு இப்படி பஸ்ல போறோமேன்னு ஒரே வருத்தம். அதுவும் இப்படி ஸ்டான்டிங்ல வேற போறோம் உட்கார்ந்து இருந்தாலாவது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமேன்னு நினைச்சு சோர்ந்து போயிட்டேன்.

திடீர்ன்னு பஸ் ஒரு இடத்தில நின்னுச்சு அங்கே பார்த்தா பெரிய பிளேன் நிக்குது. நல்ல வேலை பொண்ணு கிட்ட கேட்க்காம போனோம் கேட்ருந்தா விழுந்து புரண்டு சிரிச்சு இருப்பா அப்படின்னு நின்னைச்சு கிட்டு வாயை மூடிக்கிட்டேன்.

ஒரு வழியா எல்லோரும் ஏறி உட்கார்ந்தாச்சு. என் பொண்ணு ஏறினவுடனே பெல்ட் போட்டுட்டு சமத்தா உட்கார்ந்துட்டா.....நான் அதை கவனிக்காம பராக்கு பார்த்திட்டு உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு வந்த ஏர்ஹோஸ்டஸ் மேடம் பெல்ட் போடுங்கன்னா.

எனக்கு அதை எப்படி போடறதுன்னு தெரியாம அவகிட்ட கேட்க வாயை திறந்தேன். திறந்தா தேவர் மகன் ரேவதி மாதிரி வெறும் காத்து தாங்க வருது.அதை பார்த்து அவ என்ன நினைச்சாலோ தெரியல உடனே கால் the டாக்டர்ன்னு சத்தம் போட்டா.

மேடம் பயபடாதீங்க மூச்சை நல்லா இழுத்து விடுங்கன்னு நெஞ்செல்லாம் தடவி விடுறா. அப்போ தான் புரிஞ்சுது அடராமா நமக்கு நெஞ்சு வலின்னு நினைசிடுச்சு போல பயபுள்ளன்னு எனக்கு சிரிப்பு வந்துது.

அப்புறம் விஷயத்தை சொன்னவுடனே அவ என்னை பார்த்து சிரிக்க நான் அவளை பார்த்து சிரிக்க இப்படி சிரிப்பா போச்சு என் பொழைப்பு. பெல்ட் எல்லாம் போட்டு உட்கார்ந்துடேங்க. பிளேன் டேக் ஆப் ஆக போகுதுன்னாங்க நான் என் கண்ணை இறுக்கி மூடிகிட்டு உட்கார்ந்து கிட்டேன்.

என் பொண்ணு இதை எல்லாம் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சு கிட்டு உட்கார்ந்து இருக்கா. அந்த பக்கம் வந்த ஏர்ஹோஸ்டஸ் என் பொண்ணு கிட்ட ஒன்னும் பயம் இல்லையே அம்மா நல்லா தானே இருக்காங்கன்னு கேட்டுட்டு போனா.

டேக் ஆப் ஆகி கொஞ்ச நேரம் ஜாலியா டிவில எதோ விளையாடிட்டு இருந்தேன். சாப்பாடு கொடுத்தாங்க அது என்னன்னு பார்த்தா தெரியல தோசையும் இல்லாம இட்லியும் இல்லாம நடுவுல ஒன்னு...சரின்னு சாப்பிட்டு முடிச்சு கொஞ்ச நேரத்திலேயே கீழே இறங்க போறோம்ன்னாங்க.

நல்லபடியா லேன்டிங் ஆனுச்சு அதுக்குள்ளே எனக்கு நல்ல தைரியம் வந்துச்சு. இனி எனக்கு பயம் இல்ல அப்புறம் அங்கே இறங்கி அங்க உள்ள என்கவுன்ட்டர் ஏகாமபரத்தை பார்க்க போனோம் அவரும் என்னை முறைச்சு பார்த்தார். இப்போ கொஞ்சம் தெளிவாகிட்டேன்.

கடைசியா லக்கஜ் எடுத்து கிட்டு வெளில வந்து எங்க வீட்டுகாரரை பார்த்ததும் தாங்க உயிரே வந்துச்சு. அவர் கிட்ட சொன்னேன் என்னங்க நான் இங்கே வரது மெட்ராஸ் ஏர்போர்ட்ல ஒருத்தருக்கு பிடிக்கல இப்போ பார்த்தா இங்கேயும் ஒருத்தர் என்னை முறைச்சு பார்த்தார்ந்னு சொன்னேன்.

அவர் தலையில் அடிச்சு கிட்டு உன்னை எல்லாம் வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு வந்து அவன் அவன் ரெண்டு மூணு கட்டியே நிம்மதியா இருக்கான் உன்னை கட்டிட்டு நான் படுற பாடு இருக்கே.

இப்படியாக என்னுடைய முதல் விமான பயணம் அற்புதமாக அமைந்தது.
 
Last edited:

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
Sudhama iniku varaikum en ponnu flight erurapalam kekkura ore question andha aunty epade payandangamanu than.....