Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் – 1

மேகங்கள் கூடி கருகருவென வானம் கும்மிருட்டாக இருக்க, லேசான தூறலுடன் சிலுசிலுவென்ற காற்றும் வீச, அதை ரசித்தபடி இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தாள்.

வாழ்வில் தேவை என்ற ஒன்றை அறியாது அனைத்தும் கிடைத்திருக்க, சின்னஞ்சிறு விஷயங்களைக் கூட ரசிக்கும் மனதுடன் வாழ்ந்து வருபவள் தர்ஷனா.

ஒரு ஐடி கம்பனியில் வேலை செய்யும் அவளுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை. வாழ்க்கைப் போகும் பாதையில் சென்று கொண்டிருப்பவள்.

மனதில் உற்சாகத்துடன் அலுவலகத்திற்கு வந்திறங்கினாள். டூவீலரை நிறுத்தி வைத்துவிட்டு லிப்டில் மூன்றாவது தளத்தை அழுத்திவிட்டு நிற்கும் சமயம், லிப்டின் கதவை திறந்து மாறன் உள்ளே நுழைந்தான்.

அவனைப் பார்த்ததும் சூரியனைக் கண்ட சூரியகாந்திபூ போல முகம் மலர்ந்தது.
அவனும் அவளைக் கண்டு “குட் மோர்னிங் தர்ஷனா” என்றான் இதழில் புன்னகையுடன்.

“குட் மோர்னிங் மாறன். இன்னைக்கு செம கிளைமேட் இல்ல. என்ஜாய் பண்ணிட்டே வந்தேன்”.

“ம்ம்...எஸ் நானும்” என்றவனது பார்வை அவளை வருடிச் சென்றது.

அவனுடைய பார்வையை உணர்ந்தவளுக்கு மனம் சில்லென்று மாறியது. இருவருக்குள்ளும் மெல்லிய உணர்வு ஓடிக் கொண்டிருந்தது. யார் தங்களை முதலில் வெளிப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் இருந்தனர்.

அவர்களின் தளம் வந்ததும் இருவரும் இறங்கி மெல்ல நடந்தனர். மாறன் தான் அவளின் டீம் லீடர். அதனால் இருவரும் ஒன்றாகவே உள்ளே செல்வதை பார்த்ததும், மாறனின் நண்பர்களின் பார்வையில் லேசான கேலி தெரிந்தது.

அதை உணர்ந்தவன் கண்களாலேயே கண்டித்து விட்டு தன் இருக்கைக்குச் சென்றான்.

கடந்த ஒரு வருடமாக இவர்களின் காதல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே வளர்ந்து கொண்டிருந்தது. இருவரின் மனமும் நீ சொல்லேன் என்று எதிர்பார்த்து காத்திருந்தது. அது தயக்கமா? பயமா? எது அவர்களை தடுத்துக் கொண்டிருந்தது என்பதை இருவரும் அறியவில்லை.

கணினியின் முன் அமர்ந்ததும் அவளுக்கு அனைத்தும் மறந்து போனது. அன்று முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்க, மொத்தமாக அதில் மூழ்கிப் போனாள்.

“தர்ஷு! லஞ்ச் டைம். இன்னும் என்ன பண்ற?” என்று வந்து நின்றாள் ஆர்த்தி.

“ஒ...டைம் ஆச்சா? இதோ ஒன் மினிட் வெயிட் பண்ணு வந்துடுறேன்”.

கணினியை மூடி வைத்துவிட்டு லஞ்ச் பாக்சுடன் கிளம்பியவள், ஆர்த்தியுடன் பேசிக் கொண்டே கேண்டீனுக்கு சென்றார்கள்.

அங்கே இருவரும் ஒரு மேஜையில் அமர, அவர்களுடன் விஷால், காவ்யா மற்றும் ஷ்யாம் இணைந்து கொண்டார்கள்.

“அப்புறம் காதல் கோட்டை எப்படிப்போகுது?” என்றாள் காவ்யா தர்ஷுவை பார்த்து.

“என்ன சொல்ற காவ்யா?”

“பார்க்காமலே காதல் பேசாமலே காதல் எல்லாம் பார்க்க இண்ட்ரெஸ்ட்டிங் ஆக இருக்கு” என்றாள் கண்களை சிமிட்டி.

அவளின் பேச்சில் லேசாக படபடப்பு ஏற்பட “என் கண்ணுக்கு எதுவுமே தெரியலையே?” என்றதும் அவர்கள் அனைவரும் “அதைத் தான் சொல்றோம். உன் கண்ணுக்கு வேற எதுவுமே தெரியல” என்றனர் கிண்டலாக.

அவர்களின் மேஜையில் பேச்சும் சிரிப்புமாக இருக்க, மற்றொரு மேஜையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த மாறனும் மெல்லிய சிரிப்புடன் அவர்களைத் தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகே இருந்த நெருங்கிய நண்பன் வருண் “எத்தனை நாளைக்கு எட்டி இருந்தே ரசிக்கப் போகிறாய்? அந்தப் பக்கமும் ஆர்வம் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு இன்னும் எதுக்கு வெயிட் பண்ற?”

அவனைத் திரும்பி பார்த்துச் சிரித்தவன் “இதுவொரு பீல் வருண். சட்டுன்னு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து எல்லாமே உடனே உடனே நடப்பதுல என்ன இருக்கு? கல்யாணத்துக்குப் பிறகு நாம என்ன நினைத்தாலும் இந்த பீல் எல்லாம் கிடைக்கவே கிடைக்காது”.

“நீ சொல்றது எல்லாம் ஓகே. அதற்கு நீங்க ரெண்டு பேரும் காதலை பகிர்ந்து கொள்ளனும்மில்லையா? அதை ஏன் தள்ளிப் போடுற?”


இப்பொழுதும் அவன் முகத்தில் புன்னகை “அது தான் சொன்னேனே இந்த பீல்...அவள் பார்க்காத போது நான் பார்ப்பதும், நான் பார்க்காத போது அவள் பார்ப்பதும்...இன்றைக்கு அவள் சொல்வாளா? இல்ல நாம சொல்லிடலாமா?” என்று யோசிப்பது எல்லாம் தனி சுகம்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
“இரண்டு பேரும் யோசிச்சிட்டு இருக்கும் போது எவனாவது புகுந்து ஆட்டத்தைக் கலைச்சிடப் போறான். பார்த்து இருங்க” என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டான்.

அவன் பேசியதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னவளைக் கண்டும் காணாது பார்த்தபடி சாப்பிட்டு முடித்தான். கை கழுவிவிட்டு அவர்கள் இருந்த இடத்தை அவன் கடந்து சென்றதும், அவள் இருந்த மேஜையில் இருந்து ‘ஒ’ வென்ற சத்தம் எழுந்தது.

அவர்கள் அப்படி சத்தம் போட்டு சிரிக்கவும் தானும் சிரித்துக் கொண்டே தனது இடத்திற்கு சென்றமர்ந்தான். ஓரளவிற்கு அலுவலகம் முழுவதும் இவர்களைப் பற்றி அறிந்திருந்தார்கள்.

உணவருந்திவிட்டு அவரவர் வேலையை ஆரம்பித்து விட, மாலை நெருங்கி இருந்தது. சுமார் ஐந்து மணிக்கு இருட்டிக் கொண்டு அடை மழை பெய்யப் போவது போல மிரட்டலாக இருந்தது வானம்.
அதைக் கண்டு அலுவலகத்தில் இருந்த பெண்களை எல்லாம் உடனே கிளம்ப சொல்லி விட்டனர்.

தர்ஷனாவும் தனது வேலையை முடித்துக் கொண்டு பார்கிங்கிற்கு வந்து விட்டாள்.

ஐந்து மணிக்கே அத்தனை இருளாக இருந்தது வானம். வண்டியை எடுத்து கிக் ஸ்டார்ட் செய்ய அதுவோ சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. அவளுடன் வந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக கிளம்பி சென்றிருக்க, அவளது வண்டி கிளம்புவேனா என்று சதி செய்தது. வியர்க்க விறுவிறுக்க டூ வலரை நகர்த்திச் சென்று ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு, ஊபரில் போகலாம் என்று நினைக்கும் நேரம் அவள் அருகே கார் வந்து நின்றது.

“மேடம்! கார் புக் பண்ணி இருந்தீங்களா?”

அவளோ இல்லை என்று மறுக்கலாம் என்று நிமிர்ந்தவளின் பார்வையில் மாறன் பட, அவனோ கையசைத்து போய் வா என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் தனது வண்டியில் சென்றான். அவன் தான் தனக்காக காரை ஏற்பாடு செய்திருக்கிறான் என்கிற உற்சாகத்தோடு காரில் ஏறி விட்டாள்.

வீடு சென்று சேரும் வரை மனம் உற்சாகத்தில் கரை புரண்டோடிக் கொண்டிருந்தது. தனது தேவையை கவனிக்கிறான் அதுவும் தன்னுடன் வா என்று அழைக்காமல் கண்ணியமாக கார் புக் செய்து கொடுத்திருக்கிறான். ஒரு பெண்ணிற்கு வேறு என்ன வேண்டும்?

மனதில் ஒருவித சந்தோஷம். காரில் பயணிக்கும் போது மாறனை நினைத்தபடியே மகிழ்வான மனநிலையோடு பயணித்தாள். வீடு சென்று சேர்ந்த பின்னும் அவள் இதழில் மெல்லியப் புன்னகை மலர்ந்திருக்க, ஒருவித மோன நிலையுடனே அமர்ந்திருந்தாள்.

எதிரே டிவி ஓடிக் கொண்டிருந்தாலும் அவள் மனம் அவனிடத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தது.

“என்ன பண்ற தர்ஷு?” என்று கேட்டபடி அவள் அருகே வந்தமர்ந்தார் அன்னை காயத்ரி.

தன்னை மீட்டுக் கொண்டவள் “சும்மா டிவி பார்த்திட்டு இருக்கேன்மா”.

“மாமா போன் பண்ணி இருந்தாங்க. உன்னைக் கேட்டு நிறைய வரன் வருதாம். என்ன சொல்ல என்று கேட்டாங்க”.

அவர் திடீரென்று திருமணத்தைப் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்காதவள் அதிர்ந்து “எ..என்ன இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே” என்றாள் மெல்லிய குரலில்.

அப்போது அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே அங்கு வந்தமர்ந்த கல்யாணராமன் “படிப்பு முடிச்சதும் கொஞ்ச நாள் வேலைக்கு போகணும்னு சொன்ன. நீ வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம் ஆச்சுன்னு நினைக்கிறேன். இன்னும் எத்தனை நாள் தள்ளிப் போடுவ?” என்றார் ஆழ்ந்த குரலில்.

தந்தை கறாராக கேள்வி கேட்டதும் அவளால் பதில் பேச முடியவில்லை. அங்கு அவள் வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம். யாருக்கும் எந்த முடிவு எடுப்பதற்கும் உரிமை கொடுத்தது இல்லை. அவர் ஒன்றை நினைத்து விட்டால் அதை மீறி எதுவும் நடந்தது இல்லை.

காயத்ரி அவரை திரும்பி பார்த்து “எதுக்கு இப்படி மிரட்டுற மாதிரி கேட்குறீங்க? அவ பயப்படுறா பாருங்க”.

மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இதுக்கு மேல தள்ளிப்போட முடியாது தர்ஷு. நான் தரகர் கிட்ட உன் ஜாதகத்தை கொடுக்கப் போறேன். ஏதாவது வரன் கூடி வந்தால் கல்யாணத்துக்கு தயாரா இருக்கணும் புரியுதா?” என்றார் அழுத்தமாக.

“என்னங்க நீங்க! மற்ற விஷயமெல்லாம் நீங்க முடிவெடுத்தா நாங்க கேட்டுக்கிறோம்.

கல்யாணம் பண்ணிக்க போறது அவள். அவளுடைய விருப்பம், ஆசை எல்லாம் நாம தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்றார் கோபமாக.

“நம்மளை எல்லாம் கேட்டா பண்ணினாங்க? ஏன் நாம நல்லா வாழ்ந்திடலையா?”

அவரின் கேள்வியில் கடுப்பான காயத்ரி ‘க்கும்...நீங்க வாழ்ந்தீங்க!’ என்று முணுமுணுத்துக் கொண்டார்.

அப்போது அங்கே வந்த அஞ்சனா “தர்ஷு யாரையாவது லவ் பண்ணினா என்ன பண்ணுவீங்க?” என்று விட்டாள்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அஞ்சனாவிற்கு தைரியம் அதிகம். தர்ஷு மாதிரி இல்லாமல் தந்தையை நேரடியாக கேட்டு விடுவாள் எந்த விஷயமாக இருந்தாலும். அவரின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாகும் அவள் அதைப் பற்றி கண்டு கொள்ளவும் மாட்டாள்.

“என்ன உளர்ற? லவ்வுக்கு எல்லாம் இந்த வீட்டில் இடமில்லை” என்று உறுமினார்.

அதைக் கேட்டதும் தர்ஷனாவின் கண்கள் கலங்கி விட்டது. அவன் மீதான நேசம் வந்த போது இதை எப்படி மறந்தேன். தந்தையை மீறி தன்னால் எதுவும் கேட்டு பெற்று விட முடியுமா?

“அப்பா! அமைதி! அமைதி! நானாவது ஏதாவது முயற்சி செய்தால் உண்டு. அக்கா அதற்கெல்லாம் சரி வர மாட்டாள்”.

அவளை நோக்கி “கொன்னுடுவேன்!” என்றார் கடுப்புடன்.

“நல்ல விஷயம் பேசும்போது எதுக்கு இந்த வேண்டாத வேலை. அஞ்சனா நீ எழுந்து உள்ளே போ” என்று விரட்டி விட்டு பெரிய மகளிடம் திரும்பியவர் “உன் மனசுல எதுவும் ஆசை இருந்தா சொல்லுடா. அதற்கேற்றார் போல பார்க்கலாம்” என்றார்.

“காயத்ரி! இப்படி அவள் மனசை கெடுக்காதே! நாம பார்த்து வைக்கும் பையனை அவள் கல்யாணம் செய்துப்பா. அனாவசியமா பிள்ளைகள் மனசை கெடுக்காதே” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

காயத்ரி அவளது தலையை வருடிக் கொடுத்து விட்டு “அப்பா அப்படித்தான் கடுமையா பேசுவாங்க. ஆனா உன் நல்லதுக்கு தான் சொல்வாங்க. நீ ஒன்றும் கவலைப்படாதே தர்ஷு” என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு சமயலறைக்குச் சென்று விட்டார்.

மனதில் எழுந்த சோர்வுடன் தங்கள் அறைக்குச் சென்றவளை அஞ்சனா பிடித்துக் கொண்டாள்.

“அக்கா! நானெல்லாம் அப்பா கிட்ட நேரடியாவே சொல்லி இருப்பேன். உங்களை மாதிரி டாமினேடிங் ஆக இருப்பவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு. நீ ஏன் தான் பயப்படுறியோ” என்று கூறி தன்னருகே அமர வைத்துக் கொண்டாள்.

“அப்பாவை எதிர்த்து என்னால பேச முடியாது அஞ்சு”.

“இப்படி இருக்காதே அக்கா. நமக்கு வேண்டியதை நாம தான் கேட்டு வாங்கணும். சரி அதை விடு! உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும் சொல்லு”.

தங்கை அப்படிக் கேட்டதும் அவளுக்கு மாறனின் நினைவு வர, அவள் முகம் கனிந்து மெல்லிய சிரிப்புடன் “என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறவரா இருக்கணும் அஞ்சனா”.

“ம்ம்...அப்புறம்?”

“என்னுடைய தேவை இது தான் என்று சொல்லாமலே அவராகவே புரிஞ்சுகிட்டு செய்யணும்”.

கன்னத்தில் கை வைத்தபடி “அப்புறம்” என்றாள் குறும்போடு.

“சின்ன விஷயத்தில் கூட என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கணும். எனக்கு விருப்பமில்லாமல் ஒரு விஷயத்தை செய்யவோ நினைக்கவோ கூடாது”.

“அடேங்கப்பா! கண்டிஷன் எல்லாம் பலமா இருக்கே அக்கா?”

“இது கண்டிஷன் இல்லை அஞ்சனா. நம்முடைய உணர்வுகளுக்கு மதிப்பு வேண்டும் என்று கேட்கிறேன் அவ்வளவு தான்”.

“அப்பா இதெல்லாம் கேட்டா நிச்சயம் ஹார்ட் அட்டாக் தான். அவர் தனக்கு வருகிற மாப்பிள்ளையும் தன்னை மாதிரியே மிரட்டி உருட்டுகிறவரா தான் எதிர்பார்ப்பார்”.

“எனக்கு நம்பிக்கை இருக்கு அஞ்சு. நிச்சயமா அப்பா மாதிரி ஒருத்தர் எனக்கு மாப்பிள்ளையா வர மாட்டார்”.

“குட்! பெண் பார்க்க வருகிற ஆள் அப்படி இருந்தா வேண்டாம்னு சொல்லிடு அக்கா.

அப்பாவுக்காக எல்லாம் யோசிக்காதே. காலம் முழுவதும் அம்மா மாதிரி நீ எல்லாவற்றுக்கும் பணிஞ்சு போகிற மாதிரி ஆகிடும்”.

“நான் சொல்ல வேண்டிய அவசியம் வராது அஞ்சு. என்னை புரிஞ்சுக்கிற ஒருவர் தான் எனக்கு கணவரா வருவார்” என்றாள் தங்கையைப் பார்த்து கண்சிமிட்டி.

அக்காவின் கன்னங்களைப் பிடித்து இழுத்து கொஞ்சியவள் “நீ சந்தோஷமாகவும் தைரியமாகவும் இருக்கணும் தர்ஷுக்கா. கண்டிப்பாக நீ நினைத்த வாழ்க்கை உனக்கு அமையும்”.

அதைக் கேட்டதும் மீண்டும் மாறனின் நினைவுகள் இதயத்தில் வந்தமர்ந்துவிட, “ம்ம்...கண்டிப்பா” என்றபடி ஜன்னலின் அருகே சென்றமர்ந்து விட்டாள்.

மழையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தவளின் மனம் அவனுக்காக ஏங்க ஆரம்பித்தது. எப்படியாவது அவனிடம் தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதை கூறிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
 

Kothai suresh

Member
Jan 26, 2022
66
23
18
லவ்வயே சொல்லலையே, அஅதுக்குள்ள அவ வீட்ல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிக்கறாங்க
 
  • Haha
Reactions: SudhaRavi50

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
லவ்வயே சொல்லலையே, அஅதுக்குள்ள அவ வீட்ல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிக்கறாங்க
நன்றி அக்கா.........................