அத்தியாயம் - 7
வேலைகளை முடித்துவிட்டு நாத்தனாருக்கு அருகில் வந்து அமர்ந்த வளர்மதி, “என்ன கற்பகம் வந்ததுல இருந்து பார்க்கறேன்… என்னவோ போல இருக்க?” என்று கேட்டார்.
தனது மனத்திலிருப்பதைச் சொல்லிப் புலம்ப ஆள் கிடைத்துவிட்டதில் ஆறுதல் அடைந்தவராக, மகளைப் பற்றிய கவலையை அவரிடம் கொட்டினார்.
“வைஷுவை நினைச்சாத்தான் கவலையா இருக்கு அண்ணி! கல்யாண பேச்சை எடுத்தாலே அவளோட இயல்பே மாறிடுது. தன் மனசுல என்ன இருக்குன்னும் சொல்ல மாட்டேன்றா. எவனையாவது லவ் பண்றியான்னும் கேட்டேன். அதுக்கும் முறைக்கிறா” என்றார் ஆற்றாமையுடன்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டபடி அருகில் வந்து அமர்ந்த ராஜேஷ், “அப்படியெல்லாம் ஏதாவது இருந்தா, அவளே உங்ககிட்டச் சொல்லிடுவா அத்தை! மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க” என்றான் அன்புடன்.
“சரியாகிடும் கற்பகம். எல்லா பொண்ணுங்களும், கல்யாணம்ன்னு சொன்னதும் சரின்னு சம்மதிச்சிடுறது இல்ல. அவளுக்கு ஏதாவது குழப்பமா கூட இருக்கலாம். அதோடு, எல்லாத்துக்கும் நேரம் காலம்ன்னு ஒண்ணு கூடி வரணும். நான் பேசிப் பார்க்கிறேன்” என்றார்.
“ம்ம், நீங்களே பேசுங்க. அப்படி ஏதாவது குழப்பம் இருந்தாலும், அவள் என்கிட்டப் பேசியிருக்கலாம். அதுக்கான சுதந்திரத்தோட தானே அவளை வளர்த்திருக்கோம்” என்றார்.
“ஆயிரம் தான் படிச்சிருந்தாலும், தைரியமா இருந்தாலும் எல்லாத்தையும் பிள்ளைங்க பெத்தவங்ககிட்டச் சொல்லிடுறது கிடையாது. பர்ஸனல் ஸ்பேஸ், மண்ணாங்கட்டின்னு அவங்களுக்குள்ள ஒரு வட்டத்தைப் போட்டுக்கிட்டு, பெத்தவங்களை அதில் விடமாட்டாங்க” என்றார் மதி.
“நாமெல்லாம் கல்யாணம் செய்துக்கலையா? குடும்பம் நடத்தலையா? என்னமோ! இந்தப் பிள்ளைங்க மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சிக்கவே முடியல. எல்லாத்தையும் உன் காலடில வச்சிடுறேன் கடவுளேன்னு நினைச்சிக்கிட்டாலும், இவளை நினைச்சாலே பயம்தான் வருது” என்று தன் மனத்திலிருக்கும் அச்சத்தின் வெளிப்பாடாக அவரது குரல் ஒலித்தது.
நாத்தனாரின் கவலையில் பங்குகொண்டிருந்த வளர்மதிக்கு, “நேரம் காலம் வந்தா, தானா தகையும். அதையே நினைச்சிட்டு இருக்காம நிம்மதியா இரு” என்றார்.
மனத்தில் இருந்ததைக் கொட்டியதில் கற்பகத்திற்கு சற்று ஆறுதலாக இருக்க, “சரிங்க அண்ணி! நான் போய்ப் படுக்கறேன். இல்லனா, கொஞ்ச நேரத்துல எனக்கு அழைப்பு வந்திடும்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “கற்பகம் நேரமாகுதே தூங்க வரலயா?” என்று சோமநாதனின் குரல் வர, பெண்கள் இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.
கற்பகம் சென்றதும், “உன் அத்தையும், மாமாவும் ரொம்பப் பாவம். கற்பகம் புலம்பிட்டா. அண்ணன் மனசுக்குள்ளயே வச்சிட்டு அல்லாடுறார். அவங்களுக்காகவாவது இந்த வைஷுவை எப்படியாவது பிடிச்சி உட்கார வச்சிப் பேசணும்” என்ற வளர்மதியின் வார்த்தையில் உறுதி தெரிந்தது.
“அம்மா! எனக்கு ஒரு யோசனை… சொன்னா நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியல?” என்றான் தயக்கத்துடன்.
“முதல்ல விஷயத்தைச் சொல்லு” என்றார் அவர்.
“வைஷுவை நம்ம ஸ்ரீக்குப் பார்க்கலாமா?” என்றான்.
விழிகள் மின்ன மகனைப் பார்த்த வளர்மதி, “நானும், உன் அப்பாவும் கூட இதைப் பத்தி ஒரு தடவை பேசினோம். ஆனா, அவள்தான் பிடி கொடுக்கவே மாட்டேன்றாளே!” என்று சிறு தாங்கலுடன் சொன்னவர், “ஆனா…” என்று இழுத்தார்.
“அம்மா! நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? இப்போலாம் உலகம் ரொம்ப முன்னேறிடுச்சி. இண்டட்காஸ்ட் மேரேஜ்லாம் சர்வ சாதாரணம். அங்கிளும், ஆண்ட்டியும் அவனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாமே கூடி வருது. ஜனனி வளைகாப்புக்கு அவங்க வரேன்னு சொல்லியிருக்காங்க. வைஷுவைப் பார்த்தால் அவங்க நிச்சயம் மறுக்கப் போறது இல்ல. அதுவும், அவனை மாதிரி ஒருத்தன் நம்ம வைஷுக்கு லைஃப் பார்ட்னராக வந்தால், ரொம்ப நல்லா இருக்கும்” என்றான் ஆத்மார்த்தமான அன்புடன்.
யோசனையுடன், “எல்லாம் சரி. சுந்தரம் அண்ணனைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா, ஜெயந்தியை நினைச்சா தான்… படபடன்னு பொரிஞ்சிட்டுத் தானே அவள் பேசினதைப் பத்தி யோசிப்பா!” என்றார்.
“இதெல்லாம் ஒரு காரணமாம்மா! உலகத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா தான் இருப்பாங்க. எல்லோரையும் எதாவது ஒரு விதத்தில் சமாளிச்சித் தானே வாழ்க்கையை ஓட்டணும்” என்றான்.
“ம்ம், கடவுள் புதுசா அவளுக்காக ஒருத்தனைக் கொண்டு வரப்போறதில்ல. விசேஷம் முடியட்டும். நல்லதை நினைச்சித் தான் ஆரம்பிக்கிறோம். எல்லாம் நல்லபடியா நடக்கணும்” என்றபடி வளர்மதி எழ, ராஜேஷின் செல்போன் ஒலித்தது.
‘ஸ்ரீ’ என்று ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் அவனது விழிகள் அன்னையிடம் ஓடின. வளர்மதியின் உதடுகளும் முறுவலித்தன.
“சொல்லுடா மாப்பிள்ளை! எப்படி இருக்க?” என்றான் சிரிப்புடன்.
“இந்த விஷயத்துல நீதான்ப்பா சீனியர்” என்று அவனும் உற்சாகமாக பதிலுரைத்தான்.
“சரிப்பா! சீனியர், ஜூனியர் வேணாம். நாம் ரெண்டு பேருமே ஒரே ஸ்டேஜ்ல தான் இருக்கோம்” என்று சமாதானத்திற்கு இறங்கினான் ராஜேஷ்.
“ம்ம்...” என்று சிரித்தவன், எல்லோரையும் நலம் விசாரித்தான்.
“அம்மா, பக்கத்தில் தான் இருக்காங்க. பேசு” என்று அன்னையிடம் போனைக் கொடுத்தான்.
அவரும், அவனையும், அவனது குடும்பத்தினரையும் விசாரித்துவிட்டு, “நீயும் விசேஷத்துக்கு வரலாமே ஸ்ரீ. உன்னைப் பார்த்து மூணு வருஷம் ஆகிடுச்சே” என்றார் அன்புடன்.
“அவ்வளவு தானே கட்டாயம் வந்திடுறேன்” என்று சிரித்தான்.
“ஆமாம். இப்படித் தான் சொல்ற. ஆனா, ஹரிணி, ஜனனி ரெண்டு பேரோட கல்யாணத்துக்குமே நீ வரல. சரியான ஏமாத்துக்காரன்டா நீ” என்றார் செல்லமான கோபத்துடன்.
“என்னம்மா நீங்க? பொய் சொன்னபோதெல்லாம் நம்புனீங்க. இப்போ வரேன்னு உண்மையைச் சொல்றேன் நம்ப மாட்டேங்கறீங்களே” என்று போலியாக அலுத்துக்கொண்டான் ஸ்ரீநிவாஸ்.
கண்கள் மின்ன, “உண்மையாகவா சொல்ற?” என்ற வளர்மதிக்கு, மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.
“உண்மை. உண்மை, உண்மை. இந்த முறை பத்து நாள் உங்களோடு தங்கிட்டு, ஊரைச் சுத்திட்டு, நல்லா விருந்து சாப்பிட்டுட்டு அப்புறம் தான் கிளம்புவேன் போதுமா!” என்றான்.
“விருந்து என்ன விருந்து? உனக்குக் கல்யாணச் சாப்பாடே போடுறேன்” என்று வளர்மதியும் சொன்னார்.
“அப்போ நாளையிலிருந்தே வயிரைக் காலியா வச்சிக்கணும். அப்போதான் உங்க உபசரிப்புக்கு நம்மால ஈடுகொடுக்க முடியும்” என்றான்.
“சரிப்பா! நீ வர்றது ரொம்பச் சந்தோஷம். ராஜேஷ்கிட்டக் கொடுக்கறேன்” என்று செல்லை மகனிடம் கொடுத்த வளர்மதி, மானசீகமாக கடவுளிடம் ஏதோ பேசிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டார்.
சிரித்த ராஜேஷ், நண்பனிடம் பேசிவிட்டு அன்னையைப் பார்த்தான்.
“நாளன்னைக்குக் காலைல பாட்டி, தாத்தாவோடு வந்திடுவான்ம்மா! அங்கிள் ஆன்ட்டி இன்னொரு ஃபங்க்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு வருவாங்க” என்றான்.
“அப்போ, நாளைக்கு உன் மாமா, அத்தை காதில் விஷயத்தைப் போட்டு வச்சிடுவோம். வைஷு என்னைக்கு வர்றா?” என்று கேட்டார்.
“ஃபங்க்ஷன் அன்னைக்குக் காலைல தான் அவள் வருவா!” என்றான்.
“வரட்டும் வரட்டும்” என்ற வளர்மதி முகம் மலர தங்கள் அறையை நோக்கி நடந்தார்.
“டேய் ஸ்ரீ! உனக்குப் பெரிய டாஸ்க் காத்துட்டு இருக்கு. உன்னோட சாமர்த்தியம்” என்று சிரித்துக் கொண்டான்.
முன்தினமே தயாளன் தனது நண்பரான சுந்தரத்தைப் பற்றி மைத்துனரிடம் சொல்லியிருந்தார். கற்பகம் அவர்களை ஓரிரு முறை சந்தித்திருந்தாலும், அந்தளவிற்குப் பரிச்சயம் இல்லை.
ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு ஒரே பிள்ளை. நேவியில் வேலை பார்க்கிறான். பார்க்கவும் நன்றாக இருப்பான். அவனது பெற்றோர் வேலை காரணமாக சிங்கபெருமாள் கோவிலில் இருப்பதாகவும். இவன், தனது தாத்தா, பாட்டியுடன் விசாகப்பட்டினத்தில் இருக்கிறான் என்று பொதுவாகச் சொல்லியிருந்தார்.
ஸ்ரீநிவாஸ் வந்து இறங்கிய போது, வீடே ஒன்றுகூடி வரவேற்றது.
அவனை நேரில் கண்ட கற்பகத்திற்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது. அவனுடன் பேசிக்கொண்டிருந்த சோமநாதனும், பையன் ரொம்ப ஷார்ப் என்று நற்சான்றிதழையும் சொன்னார். அவனது கலகலப்பான சுபாவமும், அனைவரிடம் சுலபமாகப் பழகும் பாங்கும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
“ராஜேஷுக்கு, அத்தை, மாமான்னா எனக்கும் அத்தை, மாமா தான்” என்று அவன் அவர்களை முறைவைத்து அழைத்தது, கற்பகத்திற்கு அவனை வெகுவாகப் பிடித்துப் போனது.
எப்படியாவது இந்த வரனை முடித்துவிட வேண்டும் என்ற வேகம் எழுந்தது. அதேநேரம் மகள் என்ன சொல்வாளோ என்ற எண்ணமும் எழுந்தது.
ஆனால், அதையெல்லாம் எந்தவொரு சிரமமும் இல்லாமல், நடத்திக் கொள்ளும் சாமர்த்தியக்காரன் இங்கே வந்திருக்கிறான் என்பதை அறியாமல் அவரது மனம் மகளின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.