Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதல் கஃபே | SudhaRaviNovels

காதல் கஃபே

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
காதல் கஃபே

கலாச்சாரங்கள் கண்டங்களில் வேறுபட்டாலும் காதலின் சுவடுகள் காலம் கடந்தாலும் வேறுபடாது என்பதை மிகவும் எளிய முறையில் அழகிய நடையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளருக்கு பாராட்டுகள்.

சித்தார்த்தின் சித்தாந்தமும், ஜெனியின் ஜெகஜால வாயும் பாலாடைக்கட்டியை பனித்துளியாக உருக செய்திடும் மையல் மிகவும் அருமை.

கௌரியும் ,சதாவும் பெற்றோரின் புரிந்துணர்வை பக்கம் பக்கமாக பேசாமல் மிகவும் அருமையாக உணர்த்தியுள்ளார்கள்.

சீஸ் தயாரிப்பும், பிரெஞ்ச் உணவுகளும் பிரான்ஸ் சென்று வந்த உணர்வை அளித்தன என்றால் மிகையாகாது.

அழுத்தமான விசயத்தை அழுத்தமில்லாமல் அழுகையில்லாமல் கூறிய அழகே "காதல் கஃபே "
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
காதல் கபே – ஹேமா ஜே
பாண்டிச்சேரி என்றாலே பிரெஞ்சு கலாச்சாரம் நம்மை கவர்ந்திழுக்கும். நகர அமைப்பிலிருந்து அங்குள்ள தேவாலயங்கள் மற்றும் குடியிருப்புகள் கூட அவர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும்.

ஒவ்வொரு கலாச்சாரமும் நமக்கு பல்வேறுவிதமான வாழ்வியலை எடுத்துக் கூறும். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடும். இங்கே கதையின் நாயக, நாயகி இருவருமே பிரெஞ்சு கலாச்சாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள்.

பேக்கரி நடத்தும் ஜெனியால் நிறைய பிரெஞ்சு உணவு வகைகளைப் பற்றியும், சித்தார்த்தின் சீஸ் நிறுவனத்தின் மூலம் அது எப்படி எல்லாம் தயாராகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதோடு பிரெஞ்சு இன மக்களின் பழக்க வழக்கங்கள் என அறிந்து கொள்ள நிறைய விஷயங்களை அள்ளித் தந்திருக்கிறார்.

ஜெனி துருதுரு நாயகி. பாண்டிச்சேரியில் பேக்கிரி வைத்து நடத்துபவள். தேவதை பெண்ணான அவளுக்கு கடவுள் சற்றே பெரிய வாயை கொடுத்து விட்டார். (இதை நான் சொல்லவில்லை. நாயகன் தான் இப்படி அடிக்கடி சொல்கிறார். நான் அதை வழிமொழிகிறேன்) தனது முக்கிய உறவுகளை பிரிந்து பேக்கரியை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவளின் வாழ்க்கையில் நுழைக்கிறான் சித்தார்த்.

பாண்டிச்சேரியில் ‘மியம்’ என்கிற பெயரில் சீஸ் தயாரிக்கும் நிறுவனமொன்றை நடத்தி வருபவன். எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே அவனது மனம் கவர்கிறாள் ஜெனி.

அவளோ அவனது ஈர்ப்பை ஏற்காமல் மறுக்கிறாள். அதற்கான அவன் அரிய நேரும் போது முதலில் அதிர்ந்து, பின் தடுமாறி தனக்கான தேவை என்ன என்று உணர்ந்து அவளையும் உணர வைக்கிறான். மிக அழுத்தமான கரு. அதை யாரையும் கலங்க வைக்காமல் நல்ல உணர்வு பூர்வமான வசனங்களுடன் அழகாக கையாண்டிருக்கிறார்.

உதாரணத்திற்கு இந்த வசனம் என்னை ரொம்பவே கவர்ந்தது.

“நம்ம அம்மா அப்பா வாழ்க்கைல நாம கெஸ்ட். அடுத்த ஜெனரேஷன் கெஸ்ட்டா வந்து, வளர்ந்து படிச்சு முடிச்சு அவங்களோட வாழ்க்கையைத் தேடி ஓடுவாங்க..”

ஹேமா சொன்ன இந்த வரிகள் நிதர்சனம். தாம்பத்தியம் என்பது குழந்தையில் தான் முடிய வேண்டும் என்று எழுதப்படாத விதியாக்கி இருக்கிறது நம் சமூகம். குழந்தை இல்லாதவர்களை தனது நாக்கு எனும் ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தி அவர்களை வாழவே தகுதி இல்லாதவர்களாக்கி ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது.

இக்கதையின் மூலம் சித்தார்த் போன்றவர்கள் அவ்விதியை உடைக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்காங்க. இது காதல்! அவளின் குறையை குறையாக எண்ணாமல் அவளுள் இருந்த அழுத்தத்தைப் போக்கி தன்னவளாக ஆக்கிக் கொள்கிறான்.

மிக அருமையான கதை...நிறைய விஷயங்களை சொல்லி இருக்காங்க. ஜெனி, சித்தார்த் இடையே மலரும் அந்த காதல் அத்தனை அழகு..இருவரும் பேசிக் கொள்ளும் இடங்கள் மிகவும் ரசித்தேன்...மெல்லிய ஊடலுடன் கூடிய வசனங்கள்...மொத்தத்தில் அருமையான காதல் கதை....மிஸ் பண்ணாம படிங்க..

வாழ்த்துக்கள் ஹேமா!