அகிலாவின் அமெரிக்க பயணம்
"தாரமர் கொன்றையும் சண்பகமாலையும்
சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே!
அபிராமி அந்தாதியை தன்னுடைய உரத்த குரலில் மிக்ஸியிலிட்ட சட்னியுடன் சேர்த்து அரைத்து கொண்டிருந்த அகிலாவிற்கு அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து வரப்போகும் கணவனை நினைத்து அல்லு கிளம்பியது.
" அபிராமி டெய்லி உன்னை கூப்பிட்டு அப்பப்ப சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் பண்ற காரணத்துக்காவச்சும் என் அருமை புருஷர்கிட்ட இருந்து இந்த வருசமும் காப்பாத்திடு. உனக்கு வாரத்துல நாலு நாளைக்கு அதே சர்க்கரை பொங்கலை ஆவின் நெய்ல செய்யாம அம்மா வீட்டுல இருந்து ஆட்டைய போட்டுட்டு வந்த நெய்ல செஞ்சு படைக்கிறேன்", என்று தனக்கு தானே புலம்பி கொண்டிருந்த அகிலாவை "மாம் கொஞ்சமா இப்படி உங்க முகத்தை காட்டுங்க .வீடியோல குரல் மட்டும் வந்த நல்லாருக்காது", என்று கூறிய இளைய மகன் நிவாஸ் அகிலாவின் அதிர்ந்த முகத்தையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.
" டேய் டேய் நிவாஸு உங்கப்பாக்கு அனுப்பிடாதடா. மனுசன் மருதமலை முருகனை விட ஓவரா சீனை போடுவார்", என்று கெஞ்சி கொண்டே நிவாஸின் பின்னே ஓடிய அகிலா "அகி பிக் மை கால்" என்ற மொபைலின் ரிங் டோனில் தன்னுடைய இரு கைகளையும் பிசைந்தவாறு பேஸ்தடித்து போய் நின்றுவிட்டாள்.
அகிலா அசையாமல் நின்ற பொழுதும் அவளது காதில் "இங்கிலீஷ் பேச ட்ரெயினிங் எடுக்க சொன்னா அபிராமிகிட்டயே அல்வா கொடுக்க பேரம் பேசியிருக்க!", என்ற அகிலாவின் அகிலமான ஆனந்தின் குரல் மிகவும் துல்லியமாக கேட்டதில் பதறியடித்து பார்த்ததில் மூத்த மகன் முகுந்தன் அன்னையின் காதில் மிகவும் அக்கறையாக மொபைலை பிடித்து நின்று கொண்டிருந்தான்.
" இல்லீங்க", என்று அகிலா முழுதாக கூறி முடிக்கும் முன் "லெட்ஸ் சி நெக்ஸ்ட் வீக்", என்று கூறி எதிர் முனை நிசப்தமாகியிருந்தது ."ஏன்டா முகுந்தா மனுஷன் கடைசியா ஏதோ இங்கிலீஷுல கத்துனாரே !அதுக்கு அர்த்தம் என்ன?", என்று அப்பாவியாக கேட்ட அம்மாவை அய்யோ பாவம் என்றொரு லுக்கை விட்ட முகுந்தன் "அடுத்த வாரம் வந்து அப்பாவே சொல்லுவார்மா. நீங்க இப்ப உங்க வேலையை போய் பாருங்க", என திசை திருப்பி விட்டான்.
பெற்றவர்களுக்கு ஒரே பெண்ணான அகிலாவை அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஆனந்த்க்கு திருமணம் செய்து வைத்தனர் .அமிஞ்சிக்கரையை தாண்டாத அகிலாவிற்கு அமெரிக்கா செல்வதற்கு இஷ்டமில்லை.
அதனால் முதல் குழந்தை பிறப்பு, இரண்டாம் குழந்தை பிறப்பு, அவர்களை வளர்க்க என பன்னிரெண்டு வருடங்களை கடத்திவிட்ட அகிலாவை இனியும் இந்தியாவில் விட்டு வைக்க ஆனந்த் விரும்பவில்லை.
இந்த முறை அமெரிக்க விசாவிற்கு அப்ளை செய்து இன்டெர்வியூ செல்வதற்கான நாளும் வந்துவிட்டது. ஆனால் அகிலாவினால் தான் இங்கிலீஷ் என்பதையே சரியாக உச்சரிக்க முடியவில்லை.
" விட்டது விதிவழினு வேலையை பார்ப்போம். மனுஷர் வந்து மாட்டுக்கு கழனி தண்ணி காட்டுற மாதிரி அந்த இருபத்தாறு எழுத்தையும் இப்படிக்கா, அப்படிக்கா திருப்பி திருப்பி காமிப்பார் அப்ப படிச்சுக்கலாம்", என்று தன்னைத்தானே தேற்றி கொண்டு வேலைகளை பார்க்க சென்ற அகிலாவிற்கு தெரியவில்லை தனக்கு சொல்லி கொடுத்தே இங்கிலீஷ் பேசுவதையே ஆனந்த் வெறுத்து விடப்போவதை.